Sunday, April 28, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 4


jigsaw_puzzle

அருண் டென்னிஸ் முடித்து ஸ்விம்மிங் பூலில் பத்து ரவுண்ட் அடித்து ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான். அருணின் லாக்கர் அருகே இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ஒருவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. க்ளப் ஜிம்மில் வேலை செய்யும் இளைஞன். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இன்னொரு இளைஞன் புதியவனாய் இருந்தான். எக்ஸர்ஸைஸ் செய்யவோ குளிக்கவோ வந்தவன் போலத் தெரியவில்லை. ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்து இன் செய்திருந்தான். அருணின் தலை தெரிந்ததும் இருவரின் உடலிலும் ஒரு விறைப்பு. அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் போல.

அருண் கேள்வியாகப் பார்த்தான். ஜிம் அஸிஸ்டன்ட் உதடுகளைப் பிரித்தான். “சார் வணக்கம் சார்”

அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது. “என்ன விஸ்வா? எனக்காகவா வெயிட் பண்றீங்க? என்ன விசயம்?”

“சார் இவன் என்னோட ஃப்ரண்ட். பேர் மகேஷ். ஒரு கேஸ் விசயமா உங்கக்கிட்ட”

“நான் இப்போ டிப்பார்மெண்ட்ல இல்லைன்னு உனக்குத் தெரியும் தானே? என்னால என்ன உதவி செய்ய முடியும்னு தெரியலையே” மகேஷின் கண்கள் லேசாகக் கலங்கத் துவங்கியது தெரிந்தது.

“சார். இவங்கப்பா ரயில்வேஸ்ல டிடிஆரா இருந்தாரு சார். ரெண்டு நாள் முன்னாடி கோயமுத்தூர் ட்ரெயின்ல டியூட்டிக்குப் போகும்போது இறந்துட்டாரு சார். போலீஸ் அது ஹார்ட் அட்டாக்னு கேஸை மூடிட்டாங்க சார். ஆனா இவன் சந்தேகப் படுறான். அதான்”

அருண் மகேஷைப் பார்த்தான். இரண்டு நாள் தாடி முகத்தில். தலை கலைந்திருந்தது. கண்கள் அழுததாலோ என்னவோ சிறியதாகியிருந்தன. கண்ணாடி போடுவான் போல மூக்கின் மீது தழும்பு ஒன்றை உருவாக்கியிருந்தது.

“உங்களுக்கு என்ன சந்தேகம் மகேஷ்?”

“சார் நான் பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். கொஞ்சம் மெடிக்கல் தெரியும். சில பாய்ஸன்ஸ்ல கூட ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் இருக்கும் சார். எங்கப்பா நல்ல ஹெல்த்தி ஆள் சார். அவருக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸே இல்லை”

சத்தமில்லாம பேசிக் கொண்டிருந்தாலும் மூவரும் அங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதை மற்ற கிளப் உறுப்பினர்கள் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அருண், “சரி வாங்க போய்ட்டே பேசலாம்”

“எப்பிடி வந்தீங்க மகேஷ்?”

“ஆட்டோல தான் சார்”

“ஓக்கே. என் கார்ல போயிட்டே பேசலாம் அப்போ”

காரில் போகும்போது “அப்பா உடம்பு இன்னமும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு?”

“ஆமா சார். ரயில்வே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு. இன்னைக்குக் காலைல 10 மணிக்கு எடுத்துட்டுப் போக வரச் சொல்லியிருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை சார். அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எதுக்கு உடம்பை அறுக்கணும்னு தடுத்துட்டாங்க. நீங்க தான் உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி போஸ்ட் மார்ட்டம் பண்ணச் சொல்லணும் சார்”

“வெயிட் வெயிட். நீங்க இன்னும் என்ன காரணத்துக்காக உங்க அப்பா சாவு கொலையா இருக்கலாம்னு சந்தேகப்படுறேன்னு சொல்லலையே?”

“அப்பாவுக்கு கேம்ப்ளிங் ப்ராப்ளம் உண்டு சார். சீட்டு, ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் கூட செஞ்சிருக்காரு. ட்ரெயின்ல போகும்போது பேஸஞ்சர்ஸ் கூடக்கூட சீட்டாடுவாரு. சண்டே ஆச்சின்னா ரேஸ்க்குப் போயிருவாரு. அக்கா லவ் மேரேஜ் பண்ணிண்டு போயிட்டா. அவ கல்யாணத்துக்கு அம்மா சேத்து வச்ச பணத்தை எடுத்து அவட்ட குடுத்துட்டு வந்துர்றேன்னு போனவரு அவ்வளவு காசையும் ரேஸ்ல விட்டுட்டு வந்துட்டாரு. அம்மாவுக்குக் கூட இது தெரியாது. ஒரு நாள் தண்ணியடிச்சிட்டு என்னைக் கூப்புட்டு அழுதுண்டே சொன்னாரு. நிறைய கடன் வேற வாங்கி வச்சிருக்காரு. பி.எஃப் காசு எல்லாம் லோன் போட்டு எடுத்துட்டாரு. இதெல்லாம் இருக்க போன மாசம் திடீர்னு வந்து வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுக்கப் போறேன்னு சொன்னாரு. எனக்கு ஷாக். ஏன்ப்பான்னு கேட்டா நீ வேலைக்குப் போகப் போற இனிமே அம்மாவுக்குத் துணையா நான் இருக்கப் போறேன்னு சொன்னாரு. கடன்லாம் என்ன பண்ணப் போறேனு கேட்டதுக்கு ஒரு திட்டம் இருக்குடா. நான் நினைச்சபடி நடந்துட்டா நாம் கோடிஸ்வரங்களாயிடலாம்னு சொன்னாரு. எனக்கென்னவோ தப்பாப் போறாரோன்னு பட்டது. கொஞ்ச நாளா அவரோட ப்ரீஃப் கேஸை ரொம்ப ப்ரொடெக்ட் பண்ணிண்டிருந்தாரு. அன்னைக்கு ட்யூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அவரு குளிக்கும்போது திறந்து பார்த்தேன். ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ். அவர் ப்ரீஃப்கேஸ் முழுக்க இருந்தது. அவரை ஸ்டேஷன்ல விடப் போகும்போது கேக்கலாம்னு இருந்தேன். ஆனா அவரு ஆட்டோல ஏறிப் போயிட்டாரு. திரும்பி வந்த பின்னால கேக்கலாம்னு நினைச்சா..” விசும்பினான்.

“ஸோ?”

“இப்ப அவரோட ப்ரீஃப்கேஸ்ல அந்த டாகுமெண்ட்ஸ் இல்லை. அதான்..”

“ஓக்கே. அந்த டாகுமெண்ட்ஸ்காக யாரும் அவரைக் கொலை செஞ்சிருக்கலாம்னு சந்தேகப் படுறீங்க. இல்லையா?”

“ஆமா சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். ஒரு வேளை இது கொலையா இருந்தா அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்கவும் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“ஓக்கே மகேஷ். என்னால முடிஞ்சதை செய்யறேன். கமிஷனர் என்னோட ஃப்ரண்ட் தான். அவர்கிட்ட சொல்லி உங்கப்பா பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு பண்றேன். பட் நீங்க ஒரு அஃபிஷியல் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும். அப்போதான் போஸ்ட் மார்ட்டம் பண்ண முடியும்?”

“குடுக்குறேன் சார்”

அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். 8:30. “உங்களுக்கு வேற வேலை இப்போ இல்லைன்னா இப்பவே கமிஷனர் ஆஃபிஸ் போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு வந்துடலாமா?”

“ஓக்கே சார்”

காரை எக்மோர் நோக்கித் திருப்பினான். செல்ஃபோனில் நம்பரைத் தேடி அழைத்தான்.

“அருண் சொல்றா. நானே கூப்புடணும்னு இருந்தேன்”

“கார்த்தி. ஒரு டி.டி.ஆர் கோயமுத்தூர் ட்ரெயின்ல ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு ரயில்வே ஹாஸ்பிட்டல்ல பாடிய வச்சிருக்காங்க. ஹார்ட் அட்டாக்ங்கிறதால போஸ்ட் மார்ட்டம் பண்ணலை போல. பட் அவர் பையன் இது கொலையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாரு. அதான் கம்ப்ளெயிண்ட் வாங்கிட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”

“செஞ்சிடலாம்டா. நம்ம ஆஃபிஸ்ல ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் குடுக்கச் சொல்லிடு. அப்புறம் வேளச்சேரியில ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு கொலைக்கேஸ். அதுல உன் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் வேணும். கொஞ்சம் ஆஃபிஸ் வரைக்கும் வர முடியுமா?”

“ஆக்சுவலி அங்க தான் வந்துட்டே இருக்கேன்”

“க்ரேட். சீக்கிரம் வா. மீட் பண்ணலாம்”

**********************************************************

கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு, மகேஷை ரைட்டரிடம் ஒப்படைத்துவிட்டு கமிஷனர் அறைக்குள் நுழைந்தான்.

“வாடா. சாப்ட்டியா?”

“இன்னும் இல்லைடா. க்ளப் போயிருந்தேன். அங்க இந்தப் பையன் பார்த்து விஷயத்தைச் சொல்லி ஹெல்ப் கேட்டான். சரின்னு நேரா இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போய் தான் சாப்பிடணும்.”

“சரிடா நீ அப்போ வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வெயிட் பண்ணு. நான் இன்ஸ்பெக்டர் சிவாவை அனுப்பி வைக்கிறேன். உன்னை வீட்ல பிக்கப் செஞ்சிட்டு கிரைம் சீனுக்குக் கூட்டிட்டுப் போவாரு”

“ஓக்கேய்” கிளம்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்தான். சிவா வந்து அழைத்துக் கொண்டு போனார்.

*********************************************************

அது சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு அப்பார்ட்மெண்ட். உள்ளே போக வெளியே வர என இரண்டு வழிகள். இரண்டு வழிகளுக்கும் நடுவில் ஒரு ஸ்டூலில் வாட்ச்மேன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். போலிஸ் ஜீப்பைப் பார்த்ததும் எழுந்து விஷ் செய்தார். உள்ளே பார்க்கிங் ஏரியாவில் ஃபாரன்ஸிக் வேனும், இன்னுமொரு போலிஸ் ஜீப்பும் ஆம்புலன்ஸும் நின்றிருந்தன. சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் சிவாவைப் பார்தததும் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு சல்யூட் ஒன்றைப் போட்டார். படியேறி அந்த வீட்டுக்குள் வந்தனர். கழுத்து அறுபட்டு ரத்தம் வெளியேறி கை விரல் ரத்தத்தால் “S A R A V" என எதையே எழுதத் தொடங்கி முடிக்காமலே செத்துப் போயிருந்தான்.

Friday, April 19, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 3


jigsaw_puzzle

அடையார் க்ளோபஸ் வாசலில் நகம் கடித்தபடி நின்றிருந்தாள் மீனா. பின்க்கும் வெள்ளையும் கலந்த சுடிதார் போட்டு துப்பட்டாவை குறுக்காகக் கட்டியிருந்தாள். தோளில் ஒரு சிவப்பு நிறை கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த கர்சீஃபால் நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அடிக்கொரு முறை மணி பார்த்துக் கொண்டாள். யாருக்கோ காத்திருக்கிறாள் என்பதை யாரும் புரிந்து கொள்வார்கள்.

தூரத்தில் கோயமுத்தூர் ரெஜிஸ்ட்ரேஷன் கறுப்பு பல்சரில் சிவாவின் தலை தெரிந்ததும் அவள் முகம் மலர்ந்தது. உதட்டோரத்தில் ஒரு புன்னகை பூத்தது. வந்து அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். உடலைப் பிடிக்கும் இளமஞ்சள் டீஷர்ட்டும் கருநீல ஜீன்ஸும் அணிந்திருந்தான். காலில் ரீபாக் ஷூ. கண்களில் கூலிங் கிளாஸ்.

பைக்கில் ஏறி இரண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாள். கியரை மாற்றி ரோட்டில் சீறினான்.

“ஏய் உன்னை ஹெல்மெட் போடாம பை ஓட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?” அடுத்த சிக்னலில் யு-டர்ன் எடுக்க நிற்கும்போது கேட்டாள்.

“ஹெல்மெட் போட்டா சைட் அடிக்க முடியாதுல?”

“ஏன், கண்ணு தெரியாதா?”

“அய்யே, நான் அடிக்கிறதைச் சொல்லலை. ரோட்டுல போற பொண்ணுங்களால என்னை சைட் அடிக்க முடியாதுல்ல, அதான்”

“பரதேசி அலையுது பாரு” முஷ்டியை மடக்கி முதுகில் குத்தினாள்.

பைக் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்தது. பார்க் செய்துவிட்டு லிஃப்ட் பிடித்து ஃபுட் கோர்ட் போனார்கள்.

“இருடா, என்கிட்ட கார்ட் இருக்கு. இதை லோட் பண்ணிக்கோ. புது கார்ட் வாங்க வேண்டாம். அதுக்கு ட்வெண்டி ருப்பீஸ் சார்ஜ் பண்ணுவான்”

“கேபிள் சங்கர்னு ஒரு ப்ளாக்கர் இருக்காருப்பா. கேட்டால் கிடைக்கும்னு ஒரு மூவ்மெண்ட் நடத்திட்டு இருக்காரு. இந்த மாதிரி அநியாயக் கொள்ளை அடிக்கிற இடத்துல எல்லாம் ஆர்க்யூ பண்ணி எக்ஸ்ட்ரா காசு கேக்காம, மிச்சம் இருக்கிற காசையும் திருப்பி வாங்கிட்டு வந்துடுறாங்க அவங்க குரூப்ல தெரியுமா?”

“அடப் போடா, மிஞ்சிப் போனா அஞ்சு ரூபா மிச்சமிருக்கும். அதைப் போய்க் கேட்டுட்டு நிக்கலாமா? அதான் கார்ட் பத்திரமா வச்சிருக்கேனே. நெக்ஸ்ட் டைம் வரும்போது வாங்கிட்டுப் போறேன்”

“நீ வாங்கிட்டுப் போவ, வெளியூர்ல இருந்து வந்தவன் இதுக்காக இன்னொரு தடவை சென்னை வரமுடியுமா? அவங்கள்லாம் வேஸ்ட் தானே செய்வாங்க”

“அட ஆமா. சரி எங்க நீ போய் நமக்கு ஏதாச்சும் வாங்கிட்டு மீதிக் காசை கேட்டு வாங்கிட்டு வா பார்ப்போம்?”

“ஹி ஹி.அதெல்லாம் படிக்க மட்டும் தான் செய்வோம். கேக்கல்லாம் நம்மால முடியாது. சரி உனக்கு என்ன வேணும்?”

“நளாஸ்ல ஆப்பம் சிக்கன் கறி”

பணத்தைக் கொடுத்து கார்டில் லோட் செய்து கொண்டு ஆப்பமும் சிக்கன் கறியும் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.

“சரி காலைல ஃபோன்ல என்னவோ சொன்னியே? நிஜமாத்தான் சொன்னியா? இல்ல வழக்கம்போல விளையாடினியா?”

“இல்லடி நிஜமாத்தான். இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல காலேஜ் விட்டு நின்னுடப் போறேன்”

“டேய் செகண்ட் இயர்தாண்டா படிக்கிறோம். உங்கப்பா ஆர்.டி.ஓவா இருக்கலாம். ஆனா படிக்காம வீட்டுல கிடந்தா அடிச்சித் தொரத்திருவாரு”

“எங்கப்பா கையை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டியதே இல்லை”

“என்னடா சொல்ற ஒண்ணும் புரியல”

பாக்கெட்டுக்குள் கையை விட்டு பைக் சாவியை எடுத்தான். அதில் கோர்த்திருந்த ஒரு சிறிய சாவியை எடுத்துக் காட்டினான். குரலை தணித்துக் கொண்டு, “இந்த சாவியைப் பாரு. இதோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி. இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல அந்தப் பணம் என் கைக்கு வந்துடும். அப்புறம் என்ன மஜா தான்”

“டேய் எதுவும் தப்புக் காரியம் பண்றியா? பயமா இருக்குடா?”

“பயப்படாத மீனா. நான் செய்யறது எல்லாம் நல்ல காரியம் தான். இப்போதைக்கு என்னால வெளிய சொல்ல முடியாது. கைல காசு வரட்டும் அப்புறமா சொல்றேன். ஓக்கே”

அவள் முகத்தில் கலவரம் குறையவில்லை. மருண்ட விழிகளால் அவனையே பார்த்தவாறு இருந்தாள்.

அவள் மூடை மாற்றுவதற்காகக் கேட்டான், “படத்துக்குப் போலாமா?”

“என்ன படத்துக்கு?”

“கேபிகேஆர்?”

“போன வாரம் தானடா பார்த்தோம். திரும்பவும் பாக்க அந்தப் படத்துல என்ன இருக்கு?”

“அந்தப் படத்துக்கு தாண்டி கூட்டமே இருக்காது”

“ச்சீ போடா. நீ ரொம்ப மோசம்”

“ஆமா வெளிச்சத்துல எல்லாப் பொண்ணுங்களும் அப்பாவி மாதிரிதான் பேசுறீங்க. இருட்டுக்குப் போயிட்டா அப்பாவிகள் எல்லாம் அடப்பாவிகளாயிடுறீங்க”

“நல்லா பேசுடா? சரி போய் டிக்கெட் எடுத்துட்டு வா. நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி லேட்டாகும்னு சொல்லிடுறேன்”

**********************************

படம் முடிந்து அவள் வீட்டுத் தெருமுனையில் இறக்கி விட்டு அவள் வீட்டுப் படியேறும் வரை பார்த்திருந்து விட்டு வேளச்சேரியை நோக்கி விரட்டினான். விஜயநகரத்தைத் தாண்டி தாம்பரம் போகும் சாலையில் திரும்பி மடிப்பாக்கம் விலக்கத்துக்கு சற்று முன்னால் இருக்கும் அப்பார்மெண்டில் பைக்கைப் பார்க் செய்துவிட்டு வாட்ச்மேனைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டுப் படியேறினான். கதவில் சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே நுழைந்து லைட்டைப் போட்டான். ஷெல்ஃப்கள் எல்லாம் திறந்து கிடந்தன. வீட்டை அதிகமாகக் கலைக்காமல் யாரோ எதையோ தேடியிருப்பது புரிந்தது. மெதுவாக அடி எடுத்து பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தான். அங்கேயும் ஷெல்ஃப்கள் திறந்து கிடந்தன. அதை காலேஜ் லாக்கரில் வைத்துப் பூட்டியது நல்லதாகப் போய் விட்டது. ஆனால் அது என்னிடம் இருப்பது வேறு யாருக்கும் தெரியாதே?? ஒரு வேளை வேறு யாராவது பெட்டித் திருடனாக இருக்குமோ? ஆனால் அப்படி வந்தவன் ஏன் கலைத்துப் போடாமல் தேடியிருக்க வேண்டும்? ஒன்றும் புரியாமல் வலது கையால் தலையைக் கலைத்துக் கொண்டான். திறந்திருந்த ஷெல்ஃப் எல்லாம் மூடி விட்டு ஜீன்ஸையும் டி ஷர்ட்டையும் கழற்றி மூலையில் வீசினான்.

ஜட்டியோடு நடந்து போய் பால்கனியில் துவைத்துப் போட்டிருந்த ஷார்ட்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து டிவியைப் போட்டான். போட்டதும் கரெண்ட் போனது. ச்சே என்று நொந்து கொண்டு மீண்டும் பால்கனியை நோக்கி நடையைப் போட்டான்.

உச்சந்தலையின் முடியை வலிக்குமாறு யாரோ பிடித்து பின்னால் இழுத்தார்கள். “ஆ” என்ற சத்தத்தை அனிச்சையாக எழுப்பிய அவன் தொண்டை மீது உலோகத்தில் சில்லிப்பு.

“கத்துன, கழுத்த அறுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்”

“யாரு நீ? உனக்கென்ன வேணும்? வீட்டுல என் கிட்ட பணமே இல்லை. என் லேப்டாப் செயின் மோதரம் வேணும்னா வாங்கிட்டுப் போ. என்னைய விட்டுடு”

கத்தி கழுத்தில் அழுத்தத்தை அதிகரிக்கவே லேசான வெட்டு விழுந்து ரத்தம் கோடாக வழிய ஆரம்பித்தது.

“எங்க வச்சிருக்க?”

“எதை?”

அழுத்தம் அதிகமானது. “தெரியாத மாதிரி கேக்காதடா. சொல்லு எங்க வச்சிருக்க?”

எச்சில் விழுங்கினான். உயிரா கோடியா? இரண்டு விநாடி யோசித்துவிட்டு “காலேஜ் லாக்கர்ல இருக்கு. சாவி என் பைக் சாவியோட இருக்கு”

முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே வந்து வாசல் கதவருகே இருந்த மெயின் சுவிட்ச் போர்டைத் திறந்து மெயினை ஆன் செய்தான். வீடு வெளிச்சமானது.

கழுத்தைத் திருப்பி பின்னால் நிற்பது யார் என்று பார்க்க முயன்றான் சிவா. கழுத்தை அசைக்கவும் வெட்டு ஆழமானது “அம்மா” என்ற கத்தலை வெளிப்படுத்திக் கொண்டு அசையாமல் நின்றான்.

சிவாவின் தலைக்குப் பின்னால் முகத்தை வைத்து மறைத்துக் கொண்டிருந்த அவன் ஹால் மேஜை மீதிருந்த பைக் சாவியை எடுத்து அதில் கோர்த்திருந்த சின்ன சாவியைப் பிரித்து சிவாவின் முகத்தின் முன் நீட்டினான்.

“இதுவா?”

“ஆ..ஆமா”

“லாக்கருக்கு நம்பர் இருக்கா?”

“என்னோட சீரியல் நம்பர்தான்”

“அதுதான் என்ன?”

“1437”

முடியைப் பிடித்திருந்த கையை கொஞ்சம் தளர்த்தினான். தூக்கியே இருந்த தலை கொஞ்சம் தாழ்ந்ததும் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் சிவாவின் முகமும் அவன் முகமும் தெரிந்தது. கழுத்தில் கத்தியை வைத்திருப்பவன் யாரென்று தெரிந்ததும் சிவாவின் முகம் அதிர்ச்சியை வாங்கியது.

“நீயா?” என்று வாய்விட்டுக் கேட்டதும் உணர்வுக்கு வந்த அவன் தன் பிடியை இன்னும் இறுக்கி தலையைப் பின்னால் இழுத்து கத்தியை கழுத்தில் ஆழமாக இறக்கினான்.

“ஹக்” என்ற ஓசையை மட்டுமே வெளிப்படுத்திவிட்டு சிவாவின் உடல் தொய்வாய் தரையில் விழுந்தது. லாக்கர் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு பைக் சாவிக் கொத்தை மீண்டும் டேபிளின் மீது வைத்து விட்டு கீழே துடித்துக் கொண்டிருந்த சிவாவின் உடலைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு அவன் வெளியேறினான்.

Thursday, April 18, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்- 2


jigsaw_puzzle
ஈரோடு பக்கம் கணக்கன்பாளையம் கிராமம். மொத்தமே 50 வீடுகள் மூன்று தெருக்கள் - மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு. இந்த ஊருக்கு ஒரு மந்தை. ஒரு காலத்தில் ஆடு மாடுகளைக் கட்டி வைத்திருந்த இடமாம். இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் அரசுப் பேருந்தும், ஐந்து முறை வரும் மினி பஸ்ஸும் நின்று போகும் இடமாகப் பயன்படுகிறது. அந்த ஊருக்கு டீக்கடையும் இல்லாமல் ஓட்டலும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக ஒரு கடை. டீ மாஸ்டர், செஃப், சர்வர், முதலாளி எல்லாம் ஒருவரே. அந்த டீக்கடையிலும் - மேலத் தெரு, நடுத்தெருக்காரர்களுக்கு ஒன்று, கீழத் தெருக்காரர்களுக்கு ஒன்றாக இரட்டைக் குவளைகள். போடப்பட்டிருந்த ஒரே ஒரு பெஞ்சில் காலை ஆட்டிக் கொண்டு தினத்தந்தியை மடித்து விசிறிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி. தோளில் துண்டு. முன்னந்தலையில் வழுக்கை. மாலை வெயிலுக்கு முத்து முத்தாக வேர்த்திருந்ததை துண்டால் அழுந்தத் துடைத்தார்.

“ஏனுங் டீ போட்ட்டுங்களா?”

“இல்லீங்ணா, சித்த போகுட்டு. இப்பதா சோறுண்ட்டு வாறன்!”

“நெம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கோணும்ண்ட்டே இருக்கணுங். இவிங்க செய்றதையெல்லாம் வாங்கிட்டுப் போய் என்னங் பண்ணுவீங்?”

“அல்லாமு வட நாட்டுக்குப் போவுதுங். அங்க சுத்திப் பாக்க வாற வெளிநாட்டுக்காரங்க மம்மேனியா வாங்கிட்டுப் போறாங்களாமா!”

“ஓ” தூக்குப்போசியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒரு பையன் சற்றுத் தொலைவில் நடந்து வந்தான். “ஏனுங், மணி அஞ்சாச்சுங்ளா?”

கையில் கட்டியிருந்த வாட்சைத் தூக்கிப் பிடித்து மணி பார்த்துவிட்டு, “அட ஆமாங். எதெப்படி கணக்காச் சொல்றீங்கோ?”

“அந்தா அங்க பையன் வந்துட்டானுங். அம்பிகாக்கா ஊட்டுப் பையன். அஞ்சு மணியாச்சுன்னா தூக்குப்போசியத் தூக்கீட்டு டீ வாங்க வந்துருவானுங்” சொல்லிவிட்டு டீ போட ஆரம்பித்தார்.

இந்தக் கணக்கம்பாளையம் ஒரு காலத்தில் செழிப்பான ஊராக இருந்தது. எல்லாரும் விவசாயம் பார்த்து கை நிறைய காசோடு வாய் நிறைய பல்லோடு இருந்தார்கள். இப்போது நிலம் காய்ந்து விவசாயம் செத்து ஒரு எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிக்கு பனை ஓலையால் பொருட்கள் செய்து தரும் கூலியாக வேலை பார்க்கிறார்கள். நமச்சிவாயம் அவர்களுக்கு ஏஜெண்ட். இவர்கள் செய்து தரும் பொருட்களை வாரம் ஒரு முறை வாங்கிக் கொண்டு போய் சென்னைக்கு லாரி ஏற்றி விடுவார். சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றி பாம்பே போய் அங்கிருந்து விமானம் ஏறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வெளிநாட்டுக்குப் போகும் விவகாரம் நமச்சிவாயத்துக்குக் கூட தெரியாது. இன்று கலெக்‌ஷன் தினம்.

காலையிலே வந்து விட்டார். காலையில் வீடு வீடாக ஒரு எட்டுப் போய் வேலை எவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார். மாலை ஏழு மணி கடைசி பஸ்ஸில் ஏற்றி ஈரோடு போய் லாரி பார்சல் சர்வீஸ் கம்பெனியில் போட்டு விட வேண்டும். ஏழு மணி பஸ்ஸை விட்டுவிட்டால் லாரி போய்விடும். சென்னையில் இருந்து கூப்பிட்டு காதில் ரத்தம் வரும் வரை திட்டுவார்கள். ரெண்டு நாளாக ஊரில் திருவிழா என்று யாரும் சரியாக வேலை செய்யவில்லை. காலையிலேயே வந்து அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார் நமச்சிவாயம்.

“அண்ணா, இன்னிக்கு டீ, பத்து வேணுமுங்க!:, பையன் தூக்குச்சட்டியை டீக்கடை மேஜை மீது வைத்தான்.

“அம்பிகாக்கா ஊட்டுக்குத்தான தம்பி?”

“ஆமாங்.”

“வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதாக்கு?”

“எல்லாம் நடக்குதுங். இன்னும் ரெண்டு மணி நேரத்துல அல்லா ஆயிருமுங்க”

“டீக்கடைக்காரண்ணா, டீக்குக் காசு நான் குடுத்துர்றனுங். பையங்கிட்ட வாங்க வேணாங்”

டீயை வாங்கிக் கொண்டு பையன் கிளம்பினான். “நாய்ப் பொழப்பு” மனதுக்குள் புலம்பியது வாயை விட்டு வந்து விட்டது. ‘இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தான். அதுக்குப் பொறவு இந்தக் கழிசடையை விட்டுப் போடோணும்’ பையில் வைத்திருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். ‘எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்னு சொன்னானே? இன்னும் வரலயே? ரெண்டு மூணு நாள் தள்ளிப் போவுதோ என்னவோ?’ அவருக்குள்ளாகப் பேசிக் கொண்டு எழுந்து புட்டத்தைத் தட்டிவிட்டு துண்டை ஒரு உதறி உதறி தோளில் போட்டுக் கொண்டார். “அண்ணா, நான் ஒரு எட்டு உள்ள போய் ஒரு விரட்டு விரட்டிட்டு வரேனுங்”

“சரிங்ணா. போயிட்டு வாங்க”

அம்பிகாக்கா என்பவர் தான் இந்த ஊரின் மகளிர் சுய உதவிக் குழு தலைவர். விவசாயம் இல்லாமல் நொடித்துப் போன போது சுய உதவிக் குழுவை ஏற்படுத்தி பெண்களை ஊக்கப் படுத்தி இந்தத் தொழிலை செய்ய வைத்தார். அவர் வீட்டின் பெரிய வராந்தாவில் தான் 20 பெண்கள் வரை உட்கார்ந்து ஓலை பொம்மை செய்வார்கள். சென்னையில் இருக்கும் கம்பெனிக்காரனே கிள்ளி தான் கொடுப்பான். அந்தப் பணத்திலும் கணிசமான பங்கு அம்பிகாக்காவுக்குத்தான் போகிறது.

வீட்டுக்குள் நுழைந்த நமச்சிவாயம், “எல்லாம் வெரசா நடக்குதாக்கு? ஏழு மணி பஸ்ஸுக்குப் போகோணும். தெரீந்தானொ?”

சற்றே உயரமாயிருந்த திண்ணையில் பாதி உட்கார்ந்தும் பாதி படுத்துமிருந்த அம்பிகாக்கா நமச்சிவாயத்தைப் பார்த்ததும் மாராப்பை சரி செய்துகொண்டாள். “அதெல்லாம் ஒண்ணும் ரோசனை வேண்டாங். புள்ளைங்க வெரசா ரெடி பண்ணிருவாளுக”

“நீங்க பயப்படாதீங்ண்ணா. ஏழு மணி பஸ்ஸை நிறுத்தி வச்சுப்போட்லாமுங்” கைகள் பனை ஓலையைப் பின்னிக் கொண்டிருக்க வாய் கேலி பேசியது ஒரு பெண்ணுக்கு.

“அது சரி. நீ இங்க பஸ்ஸை நிறுத்திப் போடுவ. ஈரோட்ல லாரியை நிறுத்துறது யாரு?” திண்ணையில் ஒரு ஓரமாக துண்டைப் போட்டு அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.

வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் வாயடித்துக் கொண்டே அவர்களுக்குக் களைப்புத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். சரியாக ஆறு முப்பதுக்கு எல்லா பொம்மைகளையும் பெட்டியில் போட்டு டேப் ஒட்டி மந்தைக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டார்கள். நமச்சிவாயம் வேட்டியை விலக்கு டவுசர் பைக்குள் கை விட்டு பணத்தை எடுத்து ஆறு தடவை எண்ணிவிட்டு அம்பிகாவிடம் நீட்டினார்.

“அடுத்த வாரம் இதே நாள் வந்துருவனுங். அடுத்த வாரத்துல இருந்து அம்பது உருப்படி கூடுதலா செய்யச் சொல்லியிருக்காங் கம்பெனியில. அஞ்சு ரூவா கூடக் குடுக்குறதா சொல்லியிருக்காங். சரிங்ளா?”

ஒரு விநாடி யோசித்துவிட்டு, “சரிங். புள்ளைங்ககிட்ட சொல்லிர்றனுங்” பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

டீக்கடையில் ஒரு டீயும் இரண்டு இட்லி சாம்பாரும் சாப்பிட்டு விட்டு ஏழு மணி பஸ்ஸின் கூரையில் பெட்டிகளை ஏற்றிவிட்டு கடைசி சீட்டில் உட்கார்ந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினார்.

**************************************
பஸ் ஈரோடு பஸ் ஸ்டேண்டுக்குள் நுழைந்தது. படியில் நின்று கொண்டே ராசுவைத் தேடியது நமச்சிவாயத்தின் கண்கள். ஓரமாக நின்று பீடி வலித்துக் கொண்டிருந்தவன் இவர் தலையைப் பார்த்ததும் பீடியைப் போட்டுவிட்டு ஓடி வந்தான். பஸ் ஓரம் கட்டி நின்றதும் விறுவிறுவென்று மேலே ஏறி பெட்டிகளைத் தூக்கி வந்து கீழே அடுக்கினான்.

“நாம்போய், என்ற மூணுசக்கர வண்டிய எடுத்துட்டு வந்துர்றனுங்ணா”

“ராசு, காலையில் உங்கிட்ட ஒரு பையக் குடுத்தனே? பத்தரமா வெச்சிருக்கிறயா??”

“ஆமாங்ணா. எங்கிட்ட பத்தரமாத்தானுங் இருக்குது!”

“அத மொதல்ல எடுத்தாந்துரு. அப்புறமாட்டு போய் உன்ற வண்டியக் கொண்டு வரலாம்.”

“சரிங்” ஓடிப் போய் பஸ் ஸ்டாண்ட் மூலையில் இருந்த டீக்கடையில் கொடுத்து வைத்திருந்த பையை வாங்கிக் கொண்டுவந்து நமச்சிவாயத்தின் கையில் கொடுத்தான். ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் என்று எழுதியிருந்த அந்தப் பையின் ஜிப்பைத் திறந்து எல்லாம் சரியாய் இருப்பதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“என்னாதா என்ற உடம்பு கணக்கம்பாளையத்துல இருந்தாலும் மனசெல்லாம் இந்தப் பையிலதா இருந்துச்சி. கைல வாங்கிப் பாத்தபிற்பாடுதேன் உசுரே வந்திருக்கு. சரி சரி ஓடிப் போய் உன்ற வண்டிய எடுத்தாந்துரு போ”

ட்ரை சைக்கிளில் பெட்டிகளை அடுக்கி, பக்கத்திலேயே அவரும் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டார். ராசு சட்டையக் கழட்டிவிட்டு பனியனோடு சைக்கிளை மிதித்தான். சி.என்.காலேஜ் பக்கத்திலிருக்கும் லாரி ஆஃபிஸில் கொண்டு சேர்க்கும்போது மணி 9:00ஆகியிருந்தது. டவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்து ராசுவுக்குக் கொடுத்து அனுப்பினார். லாரி ஆஃபிஸில் ஃபில்லப் செய்ய வேண்டிய பேப்பரை ஃபில்லப் செய்து ரசீதை வாங்கிக் கொண்டு செல்ஃபோனில் கம்பெனி ஆளை அழைத்து ரசீது நம்பரைக் கொடுத்தார். பக்கத்து ஜெராக்ஸ் கடையில் ரசீதை மூன்று காப்பி எடுத்துக் கொண்டு சென்னை ஆஃபிஸ்க்கு ஒரு காப்பியை அதே ஜெராக்ஸ் கடையில் இருந்த புரஃபெஷனல் கொரியர்ஸில் கொரியர் செய்தார்.

பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்தே சத்தி ரோட்டில் இருந்த ரோட்டுக் கடையில் நான்கு தோசை ரெண்டு ஆஃப் பாயில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் ஒன்றை வெளிப்படுத்திவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழக்கமாகப் போகும் பாதையில் இருந்த பொட்டல் வெளி இன்று இருட்டாக இருந்தது. எப்போது ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் அந்தப் பொட்டல் இருட்டாக இருக்கவும் ஒரு விநாடி தயங்கினார். டார்ச் இருந்த செல்ஃபோனை மகளிடம் கொடுத்துவிட்டு இந்த செல்ஃபோனை மாற்றியதற்கு நொந்து கொண்டார். செல்ஃபோனை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் குத்து மதிப்பாக பாதையை கணித்துக் கொண்டு நடந்தார். பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி செல்ஃபோனை நீட்டிப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனதில் லேசாக பயம் வந்தது. தூரத்தில் வீடுகளில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்துக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.

அவர் செல்ஃபோன் “கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை, கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?” என்று ஒலிக்கத் தொடங்கியது. சட்டைப் பையில் இருந்து எடுத்து காதைக் கொடுத்து “அலோ” என்றார். அடுத்த விநாடி அவரது கழுத்தில் அந்த அரிவாள் இறங்கியது.

Tuesday, April 16, 2013

ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்

jigsaw_puzzle
சதாசிவம் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவாறே உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்து மூடிய கண்களின் மீது அரை நிமிடம் வைத்துக் கொண்டார். “அம்மா, அப்பா எழுந்துட்டார்” குரல் கொடுத்தவாறு அறையின் மூலையில் இருந்த கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தான் மகேஷ்.

“அம்மாவை சுடுதண்ணி போடச் சொல்லுடா. நைட் டூட்டிக்குப் போகணும்” எழுந்து அவிழ்ந்திருந்த வேட்டியை இறுக்கிக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தார்.

வெளியே வந்தவர் சன் நியூஸைப் போட்டு உட்கார்ந்தார். பின்னால் நிழலாடுவது உணர்ந்து திரும்பினார்.

“சுடுதண்ணி பாத்ரூம்ல வச்சிருக்கு. விளாவிக்கோங்கோ”

“ம்ம்”

“கோயமுத்தூர்தானே போறேள்”

“ஆமா”

“நம்ம கொழந்தே அங்கே தானே இருக்கா? ஒரு எட்டு பாத்துட்டு வரப்டாதோ?”

“எதுக்கு? இல்ல எதுக்குங்கறேன்? என் பேச்சை மீறி வேத்து ஜாதிக்காரன் கையப் பிடிச்சுண்டு ஓடிப் போனா, அவ ஆத்து வாசல்ல நான் போய் நிக்கணுமா? ஏன் தோப்பனார் வாரத்துக்கு மூணு தரம் கோயமுத்தூர் வரேன்னு தெரியுமோன்னோ அவளுக்கு? அப்பிடிப் பாசம் இருக்கிறவளா இருந்தா ஸ்டேஷனுக்கு வந்து பாத்துருக்க மாட்டாளா?? இன்னொருக்கா அந்த ஓடுகாலி பேச்சை எடுத்துண்டு என் கிட்ட வராதே. சொல்லிட்டேன்” சேரின் கைப்பிடியில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

குளித்துவிட்டு வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் மாட்டிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்தார். சம்மணமிட்டு அமர்ந்து ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் சிம்ஹாசனேச்வரீ என்று ஆரம்பித்து லலிதா சகஸ்ஹரநாமத்தை சொல்லி முடித்து எழுந்தார். ப்ரீஃப் கேஸைத் திறந்து எதையோ சரிபார்த்தார். திருப்தி அடைந்த முகத்தோடு வெளியே வந்து கோட்டை மாட்டிக் கொண்டு சமையலறையைப் பார்த்து “பார்வதீ” என்று குரல் கொடுத்தார்.

பார்வதி இரண்டடுக்கு டிஃபன் கேரியரை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார். வாங்கிக்கொண்டு “போயிட்டு வர்றேன்”

“அப்பா ஸ்டேஷனுக்கு வந்து ட்ராப் பண்ணட்டுமா?”

“வேண்டாண்டா. உனக்கேன் வீண் சிரமம். ஆட்டோ பிடிச்சிண்டு போயிடுவேன்” சொன்ன படியே வெளியே வந்து ஆட்டோ பிடித்து பெரம்பூர் ஸ்டேஷன் வந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் இவரைப் பார்த்ததும் சினேகமாகப் புன்னகைக்க, பதிலுக்கு கையை உயர்த்திவிட்டு வந்து நின்ற எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏறினார். செண்ட்ரலில் இறங்கி பார்க் ஸ்டேஷன் நோக்கி நடந்தார். பார்க் ஸ்டேஷன் வாசலில் தான் இவர் வழக்கமாக பீடா வாங்கும் கடை இருக்கிறது.

சப்வேயில் இருந்து மேலே வந்ததும் எதிரே இருந்த பீடாக் கடை மாரி இவரைப் பார்த்து சிரித்தான். “வா சார். வயக்கம்போல ஜர்தா தானே?” தலையசைப்பைக் கூட கவனிக்காமல் பீடா மடிக்க ஆரம்பித்தான். பீடா மடிப்பதில் மாரி சூரன். ஒரு பெண்ணை கலவிக்கு தயார் படுத்துவதைப் போல இருக்கும் அவன் லாவகம். வெற்றிலையை எடுத்து அதன் முதுகுக் காம்பை நடுவிரலால் ஒரு நீவு நீவுவான். தேவையான தடிமனை விட அதிகமாய் இருப்பின் நீளமான அவன் கட்டை விரல் நகத்தையும் மோதிர விரல் நகத்தையும் வைத்து அளவுக்கதிகமான காம்பைக் கிள்ளி எறிவான். ஒரு பீடாவை மட்டும் அவன் மடித்ததை யாரும் பார்த்திருக்கவே முடியாது. குறைந்தது இரண்டு பீடாக்களையாவது சேர்த்துத்தான் மடிப்பான். இரண்டு இலைகளையும் முன்னால் வைத்துக்கொண்டு பீடாவின் வகைக்கேற்ப தேவையான பொருட்களை அவன் சேர்த்துக் கொண்டே வருவது ஒரு இசையமைப்பாளர் இசையைக் கோர்ப்பது போல இருக்கும்.

“சாருக்கு குல்கந்து கொஞ்சம் தூக்கலா வேணும்” பக்கத்தில் நின்றிருந்த அப்ரசண்டியிடம் பேசிக்கொண்டே இரண்டு கரண்டிகள் குல்கந்தை எடுத்து இலையில் கொட்டினான். எடுத்தது இரண்டு கரண்டி என்றாலும் எல்லாருக்கும் வைக்கும் அதே அளவு தான் விழுந்திருக்கும். அவன் நேக்கு அப்படி. வெற்றிலையை மடித்து கிராம்பு ஒன்றைக் குத்தி கொடுத்தான் என்றால் வாயில் போட்டு கடித்த பின் தான் உள்ளே இருப்பவை வெளியே வரும். அவ்வளவு கச்சிதம்.

“பார்சல் தானே?”

“ஆமா”

ஒரு சிறிய பாலித்தீன் பையில் போட்டு அவரிடம் நீட்டினான். வாங்கி சாப்பாடு வைத்திருந்த கூடைக்குள் வைத்துவிட்டு இருபது ரூபாயை நீட்டினார்.

“அஞ்சு ரூவா சில்லறை இல்லயே சார்”

“பரவாயில்ல. அடுத்த வாட்டி அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ” என்று திரும்பி நடந்தார். “அதான அய்யராவது சும்மா காசைத் தூக்கிக் குடுக்குறதாவது” அவன் பேசியது அவர் முதுகில் மோதியது. மீண்டும் சப்வேயில் நுழைந்து மறுபக்கம் போய் செண்டரலுக்குள் நுழைந்தார். டி.டி.ஈ ரூம் வந்து ப்ரீஃப் கேஸையும் சாப்பாடு கூடையையும் பத்திரமாக ஷெல்ஃபுக்குள் பூட்டி வைத்துவிட்டு சார்ட் வாங்க நடந்தார்.

சைன் ஆன் செய்து சார்ட்டை வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கும்போது சுந்தரம் எதிரில் வந்தார். “இருடா நானும் வாங்கிண்டு வந்துடறேன்” நீண்ட நாள் நண்பர். வா போ என்று ஒருமையில் அழைக்கும் உரிமை பெற்றவர்.

திரும்பி வந்தவர், “ஆமா வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுத்துட்டீயாமே? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“அட அதுக்குள்ள நியூஸ் வந்திருச்சா? ஆமாம்பா. பையன் கேம்பஸ்ல கிடைச்ச வேலைல அடுத்த மாசம் ஜாயின் பண்றான். குர்கான்ல. நானும் டியூட்டிக்கு வந்துட்டா வீட்டுல ஆம்படையா மட்டும் தனியா இருந்துண்டிருப்பால்லியோ. அதான் பேசாம ரிட்டையர்மெண்ட் குடுத்துட்டு அவ கூடவே இருக்கலாமேன்னு”

“உனக்கென்ன டா ஒரே பொண்ணையும் கைக் காசு ஒரு பைசா செலவில்லாம கட்டிக் குடுத்துட்ட. பேஷா ரிட்டயராயிட்டு ஆத்துல உக்காந்துண்டு சேத்து வச்ச பணத்தை செலவு செய்ய வேண்டியதுதான்”

“அட சும்மாருடா. நான் செஞ்சி வச்சிருந்தா எவ்வளவு செலவு செஞ்சிருப்பேனோ அந்தப் பணத்தை அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்னு நோக்குத் தெரியுமோன்னோ? நீயே இப்பிடி கேலி பேசலாமோ?”

“ஏய் சும்மா சொன்னேண்டா. உடனே கோச்சிண்டு சண்டைக்கு வராதே. என்ன ஏ.சிதானா இன்னைக்கும்?”

“ஆமாம்.”

“ம்ம்.. நீ அதிர்ஷ்டக்காரன். நீ சும்மாவே நல்ல கலரு. இதுல டெய்லி ஏசி கோச்ல போய் இன்னும் புது மாப்பிள்ளை மாதிரி ஷைன் ஆகிண்டே வர்ற. என்னையப் பாரு. நான் ஸ்லீப்பர் கோச்சுல பொசுங்கி கருப்பாகிண்டே போறன்.”

“அடச் சும்மாருடா. அவங்கவங்க கஷ்டம் அவங்களுக்கு. விஐபிஸ் வரதும், அவங்களைக் கால்ல விழாத குறையா தாங்குறதுமா ஓடிண்டிருக்கு நேக்கு. சரி நேரமாச்சு ப்ளாட்ஃபார்ம் போலாமா?”

மறக்காமல் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபார்ம் நோக்கி நடந்தார். ஸ்லீப்பர் கோச்சுகளின் பக்கத்தில் வந்ததும் சுந்தரத்தை ஆட்கள் சுற்றிவளைத்தார்கள். வெயிட்டிங் லிஸ்ட் கேஸ்களாக இருக்கும். மொய்க்கும் ஆட்களைப் பார்த்தால் சுந்தரத்துக்கு இன்று எப்படியும் கணிசமாகத் தேறும். இப்படி ஒரு நாளில் தானே... நினைத்துக் கொண்டே “நைட் டின்னர் சாப்புட என் சீட்டுக்கு வர்றியா?” கூட்டத்துக்கு நடுவில் தலையை மட்டும் ஆட்டி வைத்தார் சுந்தரம்.

எச்-1 பக்கத்தில் வந்ததும் இரண்டு பேர் வந்து டிக்கெட் நீட்டி, “சார் கன்ஃபர்ம் ஆயிடுச்சான்னு பாருங்க” என்றனர். கண்டிப்பாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் பார்த்திருப்பார்கள். அடுத்து என்ன கேட்பார்கள் என்றும் தெரியும். கையில் இருந்த சார்ட்டில் செக் செய்துவிட்டு, “இல்லைங்க. கன்ஃபர்ம் ஆவலை. வெயிட்டிங் லிஸ்ட் தான்”

“சார் எப்பிடியாவது..” தலையைச் சொறிந்தனர். லேசாக சபலம் தட்டியது. இன்னும் ஒரு மாதம் தான். அதற்குள் கறுப்புப் புள்ளி எதுவும் விழ வேண்டாம். “வேக்கன்ஸி இல்லாததால தான வெயிட்டிங் லிஸ்ட். அப்புறம் எப்பிடி? போங்க சார். போய் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு காசு வாங்கப் பாருங்க” பெட்டிக்குள் ஏறினார். தன் இருக்கையில் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டுப் பையையும் வைத்தார். ட்ரெயின் கிளம்பும் வரை காத்திருந்து விட்டு டிக்கெட் செக் செய்ய கிளம்பினார்.

டிக்கெட் எல்லாம் பரிசோதித்து விட்டு தன் இருக்கைக்குத் திரும்பினார். சுந்தரம் வந்து டின்னர் முடித்துவிட்டு தன் பெட்டிக்குத் திரும்பியபின், சாப்பாட்டுப் பையில் வைத்திருந்த பீடாவை எடுத்து வாயில் போட்டு மென்றுவிட்டு வாயைக் கொப்புளித்துவிட்டு வந்து படுத்தார்.

*****************************************************************

கோச் அட்டெண்டெண்ட் யாரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே வந்தார். டி.டி.ஈயின் சீட்டில் யாரோ படுத்திருப்பது போல் தெரியவே படுதாவை விலக்கிப் பார்த்தார். அங்கே சதாசிவம் செத்துப் போயிருந்தார்.