Thursday, September 30, 2010

பிதற்றல்கள் - 9/30/2010

இன்று பாபர் மசூதி/ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எந்தக் கலவரமும் வெடிக்காமல் அமைதியாக முடிய அல்லாவையும் ராமரையும் வேண்டிக் கொள்கிறேன்.

***********************************************************************

நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?

ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.

*****************************************************************************

கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.

தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.

இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.

******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.

எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.

********************************************************************************

முகிலன் அப்டேட்ஸ்:

ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.

பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.

முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும்.  தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..

இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.

என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).

தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார்.  கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.

Wednesday, September 29, 2010

டைமண்ட்-2 (சவால் சிறுகதை)

காமினி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கில் துளிர்த்திருந்த நீர்த்திவலைகள் அவள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுக்க வயர்கள் பொருத்தப்பட்டு மானிட்டர்கள் பீப்பிக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் டாக்டர்கள். தலை முழுக்க சில்வர் பெயிண்ட் அடித்தது போல இருந்த அந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

“நோ மோர் ஹோப். சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிட்ற வேண்டியதுதான்” விலகி நடந்தார்.

அனைவரும் அவரைப் பின் தொடர, ஒரு டாக்டர் மட்டும் நின்று காமினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். திறந்திருந்த அவள் கண்கள் அவரைப் பார்த்துக் கெஞ்சுவது போல இருந்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு விலகி நடந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

பதினான்காவது மாடியில் இருந்து விழுந்த அவள் கீழேஏஏஏ போய்க் கொண்டே இருந்தாள்.

திடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள். முகமெல்லாம் வேர்த்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். நாளை செய்யப் போகும் காரியத்தை நினைத்தால் அவள் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

அதற்கு மேல் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

*****************************************************************************

சிவா பேட்டிங் க்ரீஸில் இடது காலை லெக் ஸ்டம்பிலும் வலது காலை ஆஃப் ஸ்டம்பிலும் வைத்து கோணலாக நின்று கொண்டிருந்தான்.

எதிர்ப்புறம் இடது கை பவுலர் ஓவர் த விக்கெட்டில் பந்து போட ஓடி வந்து கொண்டிருந்தான். “சிவா சிவா சிவா” என்ற கோஷம் ஃபோர் லைனில் உட்கார்ந்திருந்த அவன் அணி ஆட்டக்காரர்களிடம் இருந்து பலமாக வந்து கொண்டிருந்தது.

யார்க்கர் லெங்க்த்தில் இடது புறம் வீசப்பட்ட பந்தை அல்ரெடி க்ரீஸில் டீப்பாக நின்று கொண்டிருந்த படியால் ஃபுல் டாஸாக எதிர்கொண்டு மட்டையை சுழற்றி அடித்தான். பந்து மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு ஃபோர்லைனைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது. அணியின் மற்ற வீரர்கள் எழுந்து பிட்சை நோக்கி ஓடி வந்தார்கள். இருவர் அலேக்காக சிவாவைத் தலைக்கு மேல் தூக்கி சுற்றினார்கள். அவர்களின் தோளில் உட்கார்ந்திருந்த சிவா தூரத்தில் வந்து கொண்டிருந்த காமினியைத் தெளிவாகப் பார்த்தான். மெதுவாக இறங்கி நண்பர்களை விட்டு விலகி காமினியை நோக்கி நடந்தான்.

*******************************************************************************

“என்ன காமினி? பரந்தாமன் சார் கிட்ட பேசிட்டியா?” கையில் மாட்டியிருந்த கிளவுஸைக் கழட்டிக் கொண்டே கேட்டான் சிவா.

“பேசிட்டேண்டா. ஆனா எனக்கு பயமா இருக்கு...”

“பயப்படாத காமினி. பெர்ஃபெக்ட் ப்ளான். போலீஸை ஏமாத்துறதுக்கும் ரெடி பண்ணியாச்சி. நீ இப்போ போய் பயப்பட்டா எப்பிடி?”

“நீ என்ன ஈஸியா சொல்லிட்ட. ஆனா டயமண்ட எடுத்துட்டு வரப்போறது நான் தான?”

மெதுவாக பைக்குள்ளிருந்து கையை வெளியே எடுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

“ஹேய் என்ன இது?” என்று அவன் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிப் பார்த்தாள்.

“போலிஸை ஏமாத்துற திட்டத்துல இதுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கு”

“எல்லாம் நல்லபடியா நடந்தா சரி” காமினி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.

“காமினி நீ கவலைப் படாம போ. நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும். நான் இப்போ பசங்க கூட போறேன். மேட்ச் ஜெயிச்சதைக் கொண்டாடணும்னு நினைப்பாங்க”

“சரிடா. ஈவினிங் நாலு மணி மறந்துடாத..”

“ஓக்கே ஓக்கே” துப்பாக்கியை மறுபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நண்பர்களை நோக்கி ஓடினான் சிவா.

******************************************************************************

டிங் டாங்..

வாசலில் மணி. கதவைத் திறந்த பரந்தாமனின் முன் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள் காமினி. அவள் கையில் துண்டால் சுற்றப் பட்டு ஏதோ இருந்தது.

“உள்ள வா காமினி” இரு கதவுகளையும் அகலத் திறந்தார் பரந்தாமன்.

காமினி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

துண்டை விலக்கினாள் காமினி.

"காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

“அதை ஏன் சார் கேக்கறீங்க. கொண்டு வரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துருச்சி”

“எப்பிடி போலீஸை ஏமாத்தின?”

காமினி ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் டோர் பெல் மீண்டும் ஒலித்தது.

பரந்தாமனே போய் கதவைத் திறந்தார். வெளியே சிவா, பாஸ்கர், கோபி நின்றிருந்தனர்.

“வாங்கப்பா. வாங்க”

உள்ளே நுழைந்த மூவரும் காமினியைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடா சிரிக்கிறீங்க?” காமினி முறைத்தாள்.

“பின்ன என்ன காமினி ஒரு சின்ன மேட்டருக்குப் போய் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்ட?”

“உங்களுக்குச் சின்ன மேட்டர்டா. எனக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா?”

“அதெல்லாம் இருக்கட்டும்பா. எப்பிடி செஞ்சிங்க இதை?” பரந்தாமன் இடைமறித்தார்.

“நான் சொல்றேன்”

“நான் சொல்றேன்” பாஸ்கரும் சிவாவும் சண்டை போட்டனர்.

“யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா”

“நானும் பாஸ்கரும் போலிஸ் பக்கத்துல நின்னுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுற மாதிரி பாவலா பண்ணினோம். அப்போ போலிஸ் பக்கத்துல வந்து என்னடா சண்டை போடுறீங்கன்னு கேட்டான்” சிவா ஆரம்பித்தான்.

“அப்போ கோபி வந்து சிவாவுக்கு சப்போர்ட் செய்யற மாதிரிப் பேசவும் சண்டை பெருசாச்சி. எதுக்கு சண்டை போடுறோம்னே சொல்லாம மூணு பேரும் மாறி மாறி பேசிட்டே இருந்தோம்” பாஸ்கர் தொடர்ந்தான்.

“நிறுத்துங்கடா மூணு பேரும் சண்டைய. முதல்ல எதுக்கு சண்டை போடுறீங்கன்னு சொல்லுங்கன்னு போலீஸ் கத்தவும், சிவா பையில இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான்” இது கோபி.

“துப்பாக்கியைப் பாத்ததும் போலீஸ் கண்ணு பல்பு போட்டா மாதிரி பளிச்சுனு ஆயிருச்சி. என் கையில இருந்து பிடுங்கப் பார்த்தான். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு அவன் கையில குடுத்து பாக்க வச்சோம்”

“இந்த கேப்ல காமினி ஒரு துணியால டைமண்ட மூடி இங்க கொண்டு வந்துட்டா. போலீஸ் தான் துப்பாக்கியப் பிடுங்கிட்டுப் போயிட்டான்” பாஸ்கரின் முகத்தில் உண்மையிலேயே கவலை.

“டாக்டர் சார். இந்தக் கதையைக் கேட்டுட்டு நேரம் வேஸ்ட் பண்ணாம இந்த டைமண்டைக் கொஞ்சம் பாருங்க” காமினி பரந்தாமனை நினைவுக்குக் கொண்டுவந்தாள்.

பரந்தாமன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த டைமண்டைப் பார்த்தார். இயல்பிலிருந்து மிகவும் மாறி இருந்தது. வழக்கமான டைமண்ட் போலவே இல்லை. மெதுவாக இரண்டு விரல்களால் வருடினார். கையை சிறிது நேரம் டைமண்டின் மீதே வைத்துக் கொண்டிருந்தார்.

திரும்பி உள்ளே போனவர் கையில் ஒரு ஊசியோடு வந்தார். சிவப்பு வண்ணத்தில் ஒரு மருந்தை அதில் ஏற்றியவர் “ஏந்தான் இந்த போலீஸ் பய இப்பிடி இருக்கானோ? ஆமா அவனுக்கு ஏன் போலிஸ்னு பேரு வந்திச்சி?”

“அவன் போலீஸ் ஆகனும்னு ரொம்ப கஷ்டப்பட்டு பிராக்டிஸ் எல்லாம் செஞ்சான் சார். கடைசியில ஒரு நாய் கடிச்சி தப்பிச்சி ஓடும்போது கீழ விழுந்து கால் ஒடிஞ்சதால போலீஸ்ல சேர முடியாமப் போயிடுச்சி. அதனால பைத்தியமாயிட்டான். தெருவுல போற ஒரு நாயை விடமாட்டான். போலீஸ் மாதிரி ஒரு விசில் வச்சி அடிச்சிக்கிட்டே இருக்கிறதால போலீஸ் போலீஸ்னு கூப்புடுறோம்” சிவா வரலாறை சொல்லி முடித்தான்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டைமண்டின் கழுத்துக்கீழ் ஊசியைக் குத்தி அந்த மருந்தை உள்ளே ஏற்றினார். காமினி சீராக டைமண்டின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க. இன்னும் ஒரு நாள் விட்டிருந்தா செத்தே போயிருக்கும். சின்னப் பசங்களா இருந்தாலும் பொறுப்பா தெரு நாய எல்லாம் காப்பாத்துறீங்க. பெருசானப்புறம் பெரிய சமூக சேவகர்களாவீங்க” கைகளைக் கழுவிக்கொண்டே பரந்தாமன் சொன்னார்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

Sunday, September 26, 2010

போராளிகளா? பூச்சாண்டிகளா?

முதலில்:
நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும், “நீ ரொம்ப ஒழுங்கா?” என்ற வாதங்களைத் தவிர்ப்பதற்காகவும். அவற்றைப் படிக்க விரும்பாதவர்கள் நேராக “இப்போது ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும்” என்ற பத்திக்குப் போய்விடலாம். 

எனக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன தொடர்பு?


SFI - Student Federation of India - இந்திய மாணவர் சங்கம். இது CPI(M) கட்சியைச் சார்ந்த ஒரு மாணவர் அமைப்பு (வெளியில் கட்சி சார்பற்றது என்றுதான் சொல்வார்கள்). சாதாரணமாக SFIல் தீவிரமாக ஈடுபடுபவர்கள் ஒன்று சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அல்லது தொழிற்சங்கத்தில்/கட்சியில் களப்பணியாற்றுபவர்களின் வாரிசுகளாக இருப்பார்கள். நான் நடுத்தர வர்க்கத்தில் தீவிர தி.மு.க ஆதரவாளரின் மகனாகப் பிறந்திருந்தும் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கின்ற காலத்தில் SFIல் தீவிர களப்பணி ஆற்றி வந்திருக்கிறேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். விருதுநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முக்கியமான பங்காற்றியிருக்கிறேன் (என் பங்கு என்ன என்பது அப்போதைய மாவட்ட செயலாளர் தேவா அவர்களுக்கும், மாநிலத் தலைவர் ராம்கி அவர்களுக்கும் தெரியும்).

அருப்புக்கோட்டை நகரப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பேருந்துகளில் ஏறி பேசி உண்டியல் குலுக்கி இருக்கிறேன். கடை கடையாக ஏறி வசூல் செய்திருக்கிறேன். நகரத் தெருக்களில் சகோதர இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், தர்ணாக்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். சிலவற்றில் உரையாற்றியும் இருக்கிறேன். மற்ற ஊர்களில் நடைபெறும் பேரணிகளிலும் (அது தொழிற்சங்கத்தின் மாநாடோ, இல்லை DYFI மாநாடோ) கலந்துகொண்டு வந்திருக்கிறேன்.

தெரு நாடகங்களில் நடித்திருக்கிறேன். த.மு.எ.ச மேடைகளில் நாடகங்கள் போட்டிருக்கிறேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? சாதரணமாக நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வெட்கப்படும் விடயங்கள் இவை. இவற்றைச் செய்ய நான் எப்போதும் தயங்கியது இல்லை.

SFI எனக்கு கம்யூனிசம் தவிர வேறு பல நல்ல பாடங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. Leadership, Personal Skills, Team Work, Planning, People Management - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சில சொந்தக் காரணங்களாலும் கொள்கை ரீதியாலும் SFIஐ விட்டு விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை. அதை இங்கே விளக்க விரும்பவில்லை.

பதிவர் சாந்தியுடன் எனக்கு என்ன பிரச்சனை?

பதிவர் சாந்தி தன் தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று பதிவெழுதிய போதே நான் அவருக்கு ஒரு பின்னூட்டம் வைத்தேன். அவர் அதை வெளியிடவில்லை. அந்தப் பதிவை பாலபாரதி கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த போது நான் அங்கே பதிவர் சென்ஷி மற்றும் தோழர் ஏழர அவர்களுடனான விவாதத்தில் என் பக்கத்தை எடுத்து வைத்தேன். பாலபாரதி பஸ்ஸைத் தூக்கிவிட்டார். பின்னர் வினவு அவர்களின் தளத்தில் பதிவர் சாந்தியின் கட்டுரையை வெளியிட்ட போது அதில் என் பக்க விளக்கத்தை பின்னூட்டினேன். அதை வினவு ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதோடு எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக பதிவெழுதிய பெண் பதிவரை ஆணாதிக்க அடிமை என்று அடுத்தொரு கட்டுரை எழுதி வெளியிட்டது வினவு.

அதனால் நான் அதைப் பற்றி எழுதாமல் அமைதி காத்து வந்தேன். என் நண்பர்கள் சிலரையும் தேவையில்லாமல் இழுத்து விட்டு அவர்களின் தளத்தில் பின்னூட்ட விவாதத்தை வைத்தும் அவர்களைத் திட்டி பதிவெழுதியும் சிலர் வம்பிழுத்த போதும் நான் அமைதி காத்தேன். உச்ச கட்டமாக செந்தழல் ரவி என்னை, என் குடும்பத்தாரை தரக்குறைவாக எழுதி, அதிலும் வானம்பாடிகள் அய்யா அவர்களை தேவையில்லாமல் தாக்கி எழுதிய போதும் நான் அமைதியாக இருந்தேன். என் நண்பர்கள் சிலருக்கு இதனால் என் மீது கோபம் வந்திருக்கலாம். இருந்தும் நான் என் தளத்தில் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இப்போது என் பக்கத்தை எடுத்து வைக்க ஒரு சந்தர்ப்பமாக இந்த இடுகையை உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.

ஜூலை 27 - பலா பட்டறை ஷங்கர், கலஹாரி இலக்கியம் என்று ஒரு மொக்கைப் பதிவெழுதி என்னைத் தொடர அழைத்தார். குழுமத்தில் அடிக்கும் கும்மியையும், மற்ற பதிவர்கள் அவர்கள் பதிவுகளில் எழுதியதையும் வைத்து புனையப்படும் மொக்கைதான் கலஹாரி இலக்கியம்.

ஆகஸ்டு 1 - நான் ஷங்கரைத் தொடர்ந்து அவர் உபயோகப் படுத்திய கதாபாத்திரங்களுடன் இன்னும் சிலரைச் சேர்த்து எனது இடுகையை வெளியிட்டேன். இதில் நான் ஜான்சி அக்கா என்று சொல்லியிருந்தது - ஷங்கர் தனது பதிவில் எழுதியிருந்தது போல - பதிவர் சாந்தியைத்தான். இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் வருத்தமும் இல்லை. இன்னொரு தாய்லாந்துப் பெண்ணாகவும் தன்னையே சுட்டுவதாக அவர் கோரியிருப்பதில் 0.000000001% கூட உண்மையில்லை.

இதைப் படித்துவிட்டு அரவிந்த் இதே கலஹாரி இலக்கியத்தைத் தொடர்ந்தார். அவரும் என் இடுகையில் இருந்த கதாபாத்திரங்களோடு இன்னும் சில பாத்திரங்களைச் சேர்த்துக் கொண்டார்.

என் இடுகையில் ஜானகிராமன் “தல, இப்படி போட்டு உடச்சிட்டீங்களே. உங்க புனைவுக்கு எதிர்புனைவு நாலாபக்கமும் ரெடியாயிட்டிருக்கு. சூதானமா இருந்துக்குங்க.” இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதற்குப் பதிலாக “நாங்க தடால்னு கால்ல விழுந்து மாப்பு கேட்ருவோம்ல என்று எழுதியிருந்தேன். ஆனால் அந்த இடுகையின் பின்னூட்டத்திலோ, குழுமத்திலோ, இல்லை தனிமடலிலோ தன் பெயரை எழுதியதற்கான எதிர்ப்பை பதிவர் சாந்தி வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்பைத் தெரிவித்து இடுகையிலிருந்த அவர் பெயரையும் நீக்கியிருப்பேன். அப்படி நீக்க மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரிடம் இருந்து எதிர்ப்பு வராதபோது அவரும் இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று தானே அர்த்தம்?

ஆகஸ்டு 11 - செந்தழல் ரவி மிஷனரிகள் பற்றிய ஒரு இடுகையை அவர் பதிவில் போட்டார். அதை நான் படித்த போது அங்கே பின்னூட்டங்கள் எதுவும் இல்லை. படித்துவிட்டு வந்துவிட்டேன். பின்னர் அந்த இடுகை குழுமத்தில் பகிரப்பட்டது. அதற்கு காட்டமாக பதிலுரைத்திருந்தார் பதிவர் சாந்தி. நான் மீண்டும் ரவியின் இடுகைக்குப் போய் சாந்தி அங்கே இட்டிருந்த பின்னூட்டங்களையும், அவர் ரவிக்கு வைத்திருந்த கேள்விகளையும் படித்தேன்.
அவர் ரவிக்குக் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்களை அளித்துவிட்டு, விவாதிக்க அழைத்திருந்த சாந்தியை விவாதம் தொடங்க அழைத்தேன். அவர் ரவிக்கு பின்னூட்டியாயிற்று. அதைப் பற்றி என்னிடம் பேச முடியாது என்று மறுத்துவிட்டார். நானும் கிரேட் எஸ்கேப் என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்சனையை முடித்துக் கொண்டேன். (இங்குதான் என் மீது அவருக்கு கோபம் வந்திருக்கிறது. இதை அவர் மற்ற பதிவர்களிடம் சாட்டில் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது)

ஆகஸ்டு 13- நான் ஆகஸ்டு 11 அன்று என் மகனது வீடியோ ஒன்றை என் தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதற்கு ஆகஸ்டு 13ம் தேதி பதிவர் சாந்தி (ரவியின் பதிவு பற்றிய என் கமெண்டுக்குப் பிறகு) ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார் -
குழந்தை படம் துணிவா போட்டிருக்கீங்க...

சுத்தி போடுங்க.. 

(குழந்தை விஷயம் சுய சொறிதலில் சேர்க்க மாட்டேன் பயப்படாதீங்க..:) )

இதில் அவர் வீடியோவை பாராட்டுவது போல எழுதியிருந்தாலும் சுயசொறிதல் என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். (நான் உடனே எதாவது வம்பிழுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம்).

ஆகஸ்டு 18 - புலவன் புலிகேசி தனது தளத்தில் எழுதியிருந்த எந்திரன் - ஏழைப் பங்காளன் என்ற கவிதைக்கு எதிர் வினை ஒன்றை என் தளத்தில் வைத்தேன். அதற்கு பதிவர் சாந்தி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
இதுவே ஒரு நல்ல செயல்தான் .. சில சுய சொறிதல்களை ஒப்பீடு செய்யும்போது..

எழுத்தினால் சமூகத்தில் மாற்றம் கண்டிப்பாக கொண்டு வரமுடியும்... 

நல்லது நம்மால் செய்ய முடியாவிட்டாலும் எள்ளாமல் இருப்பது சிறப்பு..
இதிலும் அவர் அந்த சுய சொறிதல் என்ற பதத்தை உபயோகப் படுத்துவதைப் பாருங்கள்.

நான் இந்தப் பின்னூட்டத்தை குழுமத்துக்கு எடுத்துச் சென்று எந்திரன் பற்றிய விவாதம் ஒன்றை துவங்கும் எண்ணத்தில் ஒரு திரியைத் துவக்கினேன். ஆனால் சாந்தி அவர்கள் அதை திசை மாற்றி சுயசொறிதல் என்ற பதத்தைப் பிடித்துக் கொண்டு அதைப் பற்றியே விவாதித்து வந்தார். திரி 100ஐத் தொட்டும் அவர் எந்திரன் பற்றிப் பேச வராமல் விவாதத்தை முடித்துக் கொண்டார். அந்த விவாதத்தில் அவர் ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியான என் இடுகையைப் பற்றி பேசினார். அதன் பிறகு புலவன் புலிகேசி அவர்களது தளத்திலும் அவரைப் பற்றி நான் எழுதிய புனைவு என்று என் இடுகையைப் பற்றிப் பேசினார். பின்னர் தனி மடலிலும் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த இடுகை பகடியாக எழுதப்பட்டது மட்டுமே என்ற என் கருத்தில் உறுதியாக இருந்தேன். (உங்கள் மகனின் வீடியோவில் தெரியும் உங்கள் மனைவியின் உடையைப் பற்றி யாராவது எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கேள்வியும் எழுப்பினார்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நான் அவரைப் பற்றி என் தளத்திலோ இல்லை குழுமத்திலோ இல்லை மற்ற தளங்களிலோ நான் தரக்குறைவாகப் பேசியதில்லை.

ஆகஸ்டு 25 - அவரது தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று மூன்று பாகங்களாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில் என் மற்றும் அரவிந்தின் இடுகைகளில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட (ஜான்சி அக்கா) பகுதியை மட்டும் வெட்டி ஒட்டிப் போட்டதோடு அல்லாமல், யாரோ ஒரு ஆண் பதிவர் யாரோ ஒரு பெண் பதிவரை “படுக்க வர்றியா” என்று அழைத்த ஒரு சம்பவத்தையும் சேர்த்தெழுதி அதற்கும் எங்களுக்கும் எதோ சம்மந்தம் இருப்பது போன்ற ஒரு அவதூறை எழுப்பினார். நான் அவருக்குப் போட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடவில்லை. மாறாக தனி மடலில் வழக்குப் போடப்போவதாக மிரட்டினார். நானும் வழக்குப் போடுங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

அதன் பின்னர் அவர் மாதவராஜையோ வினவையோ நாடுவார் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் வினவும் மாதவராஜும் என்ன நடந்தது என்பதை விசாரித்துப் பதிவெழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம்.

நான் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை? அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடுகையை நீக்கவில்லை? 

என் இடுகை வெளிவந்தவுடன் அவர் என்னிடம் அது அவரைப் புண்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்திருந்தால், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்டுவிட்டு இடுகையில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட பகுதியை நீக்க நான் தயங்கியிருக்க மாட்டேன். ஆனால் அவர் காலம் தாழ்த்திச் செய்வது என் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவே என்பதால் அவருக்கு அடிபணிந்து போக நான் தயாராயில்லை.

மேலும் நான் எழுதிய இடுகையை வினவு வன்மத்துடன் புனையப்பட்ட வக்கிரத் துகிலுரிவு - என்ற அடைமொழியுடன் அழைத்தது. நான் அந்த இடுகையை எழுதிய போது எனக்கு சாந்தி அவர்களின் மீது வன்மமோ, என் மனதில் வக்கிரமோ, அவரைத் துகிலுரிய வேண்டும் என்ற எண்ணமோ இல்லாத போது நான் அந்த இடுகையை இப்போது நீக்கினால் வினவின் குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்வது போலாகிவிடும் என்பதாலும் நீக்கவில்லை. இனிமேலும் நீக்க மாட்டேன்.

வினவு
வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழுதி வருவது நான் பதிவுலகத்துக்கு வந்தது எனக்கு அறிமுகமானது. நான் சில கட்டுரைகளையும் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் ம.க.இ.கவின் ஆதரவுத் தளம் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்ததும் நான் அவர்களின் தளத்துக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். (அதற்குக் காரணம் எனக்கும் ம.க.இ.கவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை).

ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒரு பெரிய குறை, சமூகக் கட்டுரைகளை எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற்றே விலகி யாரையாவது அல்லது எந்த நிகழ்வையாவது தேவையில்லாமல் தாக்கிச் செல்வார்கள். இது அந்த நபரின் அல்லது அந்த நிகழ்வின் ரசிகர்/ஆதரவாளர்களுக்குக் கசப்பை உண்டாக்குவதுடன் கட்டுரையின் சாராம்சத்தை விட்டு விலகவோ புறக்கணிக்கவோ செய்துவிடும். அதே போல அவர்களின் தளத்திலேயே ஒரு கட்டுரையின் கருத்தில் விவாதம் வைத்தால் அதைப் பற்றி விவாதிக்காமல் அதைச் சுற்றி சல்லியடித்தே ஓட்டிவிடுவார்கள் அவர்களின் ஆதரவாளர்கள்.

மொத்தத்தில் சமூகப் போராளிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் வினவு, சமீப காலமாக பெண்ணியக் காவலர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். நல்லதுதான். ஆனால் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் முழு விபரங்களையும் விசாரித்து ஆதரவு தெரிவிப்பதில்லை. அதோடு குற்றம் சாட்டப்படுபவர்கள் அவர்களின் தோழர்களாக இருக்கும்பட்சத்தில் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடுநிலைப் பெண்ணியக் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் செய்யும் செயல் இல்லையே?

இப்போது நான் ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டும்? 


சமீபத்தில் பதிவர் மதார் எழுதிய ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அதில் பதிவர் சாந்தி ஒரு சக ஆண் பதிவரிடம் பேசிய சாட்டின் விபரம் பகிரப்பட்டிருந்தது. அதில் அவர், அந்த ஆண் பதிவரிடம் -


தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?

இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?

மதார் என்ன பாவம் செய்தார்? எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக ஒரு இடுகை எழுதினார் என்பதைத் தவிர? அதற்குத்தான் வினவுத் தளமே இன்னொரு இடுகையையும் போட்டு மதாரை வம்பிழுத்து விட்டதே? ஏன் இன்னும் வன்மம் கொண்டுத் திரிகிறார்? இப்படி ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பித் திரிவது எந்த ஆதிக்கத்தில் வரும்?

தோழர் மாதவராஜ் : இப்போது இந்தப் பதிவரசியலைப் பார்த்து எச்சில் துப்பப் போகிறீர்களா இல்லை வெட்கித் தலை குனியப் போகிறீர்களா?

பதிவர் சந்தனமுல்லை: நான் போலி முற்போக்காளனாக இருந்து விட்டுப் போகிறேன். ஒரு பெண்ணின் மீது ஏவப்படும் அவதூறு வன்முறையை நீங்கள் ஒரு முற்போக்கு சக பெண் பதிவராக என்ன செய்யப் போகிறீர்கள்?

வினவு: நீங்கள் முன்வைத்த கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன் - கொள்கைக்காக நட்பா? நட்புக்காக கொள்கையா? என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது நீங்கள் அமைதி காத்தால் என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே நீங்கள் யாருக்காவது நிகழ்ந்த ஆணாதிக்கச் செயலை எடுத்துக் கொண்டு வந்தால் இந்தப் பதிவுலகம் அப்போது உங்கள் பக்கம் நிற்காமல் போய்விடும் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு சொல்லிச் செல்ல ஆசைப்படுகிறேன். இணையப் போராளிகள் என்ற பெயர் போய் உங்களை பயமுறுத்தப் பயன்படும் ஒரு பூச்சாண்டியாக மாறிப் போய்விடாதீர்கள்.

எனக்கு ஆதரவாகப் பதிவெழுதிய ஒரு பெண்ணுக்கு அந்த ஒரே காரணத்துக்காக அநீதி நடக்கும்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் மனிதனே இல்லை. 


பதிவர் சாந்தியின் இந்தச் சாக்கடைச் செயலுக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். 

Thursday, September 23, 2010

டைமண்ட் (சவால் சிறுகதை)

எஸ்.பி.சற்குணபாண்டியனின் செல் அலறியது. தெரியாத நம்பர். பச்சைப் பொத்தானை ஒத்தி “ஹலோ” என்றான். எதிர்முனையின் பதட்டம் இவனைத் தொற்றிக் கொண்டது. ஃபோனை அணைத்ததும் 
எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, “கவுதம்...” கத்தினான்.

எஸ்.ஐ கவுதம் “யெஸ் சார்” என்று ஓடி வந்தான்.

“ஒரியெண்டல் ஹாஸ்பிடல்ஸ்ல யாரோ டயமண்ட் கடத்தலாம் அல்லது திருடலாம்னு ஒரு கால் வந்திருக்கு. என்னன்னு விசாரிங்களேன்?”

“பேசினது யாரு சார்?”

“மாரிமுத்துனு ஒரு வார்ட்பாய்”

“விசாரிக்கிறேன் சார்” விலகினான் கவுதம்.

**************************************************************************************  
கவுதமின் புல்லட் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. புல்லட்டை நிறுத்தியதும் நேராக சற்குணபாண்டியனின் அறைக்குள் சென்று விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தான். 

“என்ன கவுதம்?”

“சார் விஷயம் நாம எதிர்பார்க்கிறதை விட தீவிரமாப் போவுது. சில டாக்டர்ஸ்க்கே தொடர்பு இருக்கலாம் போல. வார்ட் பாய் டாக்டர்ஸ் ரெஸ்ட் ரூமுக்கு வெளிய ஒட்டுக் கேட்டிருக்கான். பல லட்சம் 
மதிப்புள்ள டயமண்ட்ஸா இருக்கலாம். அநேகமா வெளிநாட்டுல இருந்து உடம்புல வச்சி ஸ்மக்கிள் செஞ்சிருக்கலாம். அதை சர்ஜரி பண்ணி எடுக்கிற வேலைய ஹாஸ்பிடல்ல சில டாக்டர்ஸ் செய்யலாம்ங்கிறது என் யூகம் சார்”

“ஓக்கே கவுதம். ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்டுக்கு தகவல் குடுத்துட்டு செக்யூரிட்டி டைட் பண்ணுங்க. வெளிய போற ஃபோன்கால்ஸ், டாக்டர்ஸோட செல்ஃபோன் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணுங்க. 

நமக்குத் தெரியாம ஒரு ஈ காக்கா கூட வெளிய போகக் கூடாது”

“சார் பேஷண்ட்ஸ்?”

“அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எல்லாம் சீக்ரெட்டாவே நடக்கட்டும். இது ஒரு ஷேடோ ஆப்பரேஷன்”

“ஓக்கே சார்”

***************************************************************************************
கம்ப்யூட்டர் திரையில் “You have got a new Mail" என்று ஒளிர்ந்ததும் பரந்தாமனின் கண்களில் அந்த ஒளி தொற்றிக் கொண்டது. திறந்து உள்ளே இருந்த அந்த இயேசு நாதரின் படத்தை டவுன்லோட் 
செய்து இமேஜ் டிக்ரிப்ஷன் சாஃப்ட்வேரில் போட்டார். இயேசுவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அந்த எழுத்துக்கள் மட்டும் திரையில் குடி கொண்டன - “Mission Planned. Carrier Kamini". 
"யெஸ்” என்று உற்சாகத்தில் முஷ்டியை மடக்கி காற்றில் குத்தினார் பரந்தாமன். 

நினைவு வந்தவராக செல்ஃபோனை எடுத்து நம்பரை ஒற்றி, எதிர்முனை எடுத்ததும், “சிவா” என்றார்.

************************************************************************
ஓரியெண்டல் மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. ஸ்ட்ரெச்சரில் ரத்தச் சகதியாக இருந்தாள் அந்தப் பெண். நினைவு தப்பவில்லை. இரண்டு நர்ஸ்கள், இரண்டு வார்ட் பாய்கள், இரண்டு டாக்டர்கள் அந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்கள். 

“உங்க பேரு என்னங்க?”

“கா.. கா.. காமினி” திக்கித் திணறி சொல்லி முடித்தாள். கையில் வைத்திருந்த பேடில் கிறுக்கிவிட்டு ஐசியுவுக்குள் தள்ளிப் போனார்கள். அரை மணி கழித்து ஆறு பேரும் வெளியேறினார்கள். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஐ.சி.யூ தரைத் தளத்தில் இருந்த படியால் மெத்தென்ற புல்வெளியில் பூனை போல விழுந்தாள். இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது பத்திரமாக இருந்தது. யாரும் பார்க்கும் முன் அந்த மருத்துவமனையைச் சுற்றி வந்து கூட்டத்துக்குள் கலந்து காணாமல் போனாள்.

**************************************************************************

சிறிது நேரத்துக்கு முன் உள்ளுக்குள் ஏற்றிய ரம் சிவப்பாய் விழிகளில் படர்ந்திருந்தது. மூன்று நாள் தாடி முகத்தில் முள் போட்டிருந்தது. செல்ஃபோனை எடுத்து மணி பார்த்துக் கொண்டான். அவன் கண்கள் தூரத்தில் வரும் ஒவ்வொரு ஆட்டோவையும் ஸ்கேன் செய்து கொண்டிருந்தன. கடைசியாக ஒரு ஆட்டோ வந்து அவன் அருகில் நின்றது. 
அதிலிருந்து காமினி இறங்கினாள். கைப்பைக்குள் கையை விட்டவள் ஒரு கிழிந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து “சில்லறை இருக்கா?” என்று நீட்டினாள். 

“இருவத்தஞ்சி ரூவா நோட்டா இருக்கு பரவாயில்லயா?” 

"பாஸ் கோட்?”

“டயமன்ட்ஸ் ஃபார் எவர்”

“சிவா?” என்றவாறு கையை நீட்டினாள்.

“காமினி?” கையைப் பிடித்துக் குலுக்கினான். ஆட்டோவை கட் செய்துவிட்டு மறைவாக இருந்த ஸ்விஃப்டில் ஏறினர்.

**************************************************************************
அந்த பழைய கட்டடத்தின் முன் கார் நின்றது. 

“உள்ள வா காமினி” என்றவாறு கதவைத் திறந்து உள்ளே போனான். காமினி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். சிறிய ஹால், வலது பக்கம் கிச்சன், இடதுபக்கம் பெட்ரூம் என்று அடக்கமாக, அழகாக இருந்தது. 

“உக்காரு” சோஃபாவை சுட்டினான். 

“பரந்தாமன் சார் எங்க இருக்காரு?”

“அவர் வேற இடத்துல. நீ என் கிட்ட குடுத்தா போதும். நான் அவர்கிட்ட சேத்துடுவேன்.”

“நோ. பரந்தாமன் சார்கிட்ட குடுக்கச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு”

“இல்ல என் கிட்ட குடு”

“நோ வே”

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினி சட்டென்று தொண்டையைப் பிடித்துக் கொண்டு ஒரு கேவலை வெளிப்படுத்தி மடங்கி விழுந்தாள். பயந்து போன சிவா மண்டி போட்டு காமினியை நோக்கிக் குனிந்தான்.

“சொத்” என்று அடக்கப்பட்ட ஸ்பிரிங் விடுபடுவதைப் போல காமினியின் வலதுகால் சிவாவின் உயிர்நிலையில் அடித்தது. “அம்மா...” காமினியின் கைகளும் கால்களும் கராத்தே வீராங்கனையின் லாவகத்தோடு இயங்கின. இரண்டே நிமிடங்களில் சுருண்டு மயங்கி விழுந்தான் சிவா. சிவாவின் கை கால்களை அங்கே இருந்த அவன் பெல்டுகளால் இறுக்கிக் கட்டினாள். 

அவன் செல்ஃபோனை எடுத்து பரந்தாமன் நம்பரைத் தேடினாள். 

“ஹலோ..”
“பரந்தாமன் ஹியர்”
“நான் காமினி”
“சிவா எங்க?”
“டபுள் கிராஸ் பண்ணப் பார்த்தான். முடிச்சிட்டேன்”
“கொன்னுட்டியா?”
“இல்ல இல்ல. மயக்கம் தான். போலீஸ் எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. ஹாஸ்பிட்டல் செக்யூரிட்டி டைட்டென் ஆயிடுச்சி”
“கேள்விப்பட்டேன். எப்பிடி தப்பிச்ச?”
“எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் எப்பிடி வரணும்?”
“நீ அங்கயே இரு. நான் வர்றேன்”
“ஓக்கே”

ஃபோனை அணைத்துவிட்டு டிவியைப் போட்டாள். 

******************************************************************************
செல்ஃபோன் ஒலித்தது. பரந்தாமன். 
“ஹலோ”
“காமினி, நான் வெளியதான் நிக்கிறேன்”

எழுந்து போய் கதவைத் திறந்தாள். 

உள்ளே வந்த பரந்தாமனுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். கருகருவென்றிருந்த முடி கோத்ரெஜ் என்றது. நடிகர் நாசரின் மூக்கைப் போல சற்றே நீளம் அதிகமான மூக்கு. மேனரிசம் போல அதை கட்டை விரலாலும் சுட்டு விரலாலும் இழுத்து இழுத்து விட்டுக் கொண்டார். 

“காமினி போலிஸ் மோப்பம் பிடிச்சிட்டதா தகவல் வந்ததே?”

“ஆமா சார். ஆனா நான் போலிஸுக்கு டிமிக்கி குடுத்துட்டேன்”

“டைமண்ட் எங்கே? நான் பாக்கணும்” 

இடுப்பிலிருந்து அந்தக் குடுவையை எடுத்து நீட்டினாள். 

அதைக் கையில் வாங்கி "காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

வேக வேகமாக அந்தக் குடுவையைத் திறந்தவர் முகத்தில் ஏமாற்றம்.

“என்ன காமினி இது. ஒரு கிட்னி தான் இருக்கு?”

“மிச்சமெல்லாம் ஒரு இடத்துல பத்திரமா இருக்கு.” பின்னாலிருந்து ஒலித்த குரலுக்கு திடுக்கிட்டுத் திரும்பினார்.

அங்கே கவுதமும் இன்னும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

பரந்தாமனின் கை தானாய் மேலேறியது. “டாக்டர் பரந்தாமன். ஒரு புனிதமான தொழில் செய்யற நீயே இப்பிடி உடல் உறுப்புகளை கள்ள மார்க்கெட்ல விக்கலாமா? இதுல அதுங்களுக்கு டயமண்ட்னு கோட் வேர்ட் வேற”

பரந்தாமன் பதில் சொல்லாமல் கவுதமை முறைத்தான். “என்னடா முறைக்கிற? எப்பிடித் தெரியும்னா? முதல்ல நாங்களும் டயமண்ட்னு தான் நினைச்சோம். அப்புறமா உனக்கு வந்திச்சே ஒரு ஈ-மெயில், அதை நாங்களும் trap பண்ணிட்டோம். உன்கிட்ட மட்டும் தான் இமேஜ் டி-க்ரிப்டர் இருக்குமா? எங்க டிபார்ட்மெண்ட்லயும் இருக்கு. அதை அனுப்புன டாக்டரை ரெண்டு தட்டு தட்டின உடனே உண்மையக் கக்கிட்டான். உன்னைக் கையும் களவுமாப் பிடிக்கணும்னு தான் எங்க டிப்பார்ட்மெண்ட் எஸ்.ஐ காமினியை அனுப்பி வச்சோம்”

“நீ கையில வச்சிருக்கிற பாக்ஸ்ல இருக்கிறது கிட்னி இல்ல. க்ளோப்ஜாமுன்” குடுவையை வாங்கி கான்ஸ்டபிளிடம் கொடுத்த காமினி கவுதமின் நீட்டிய கையிலிருந்த விலங்கை வாங்கி பரந்தாமனின் கையை பின்னால் மடக்கி மாட்டினாள்.

டிஸ்கி 1: நல்லா பாத்துக்குங்க. லேபிள்ல பு..வு இல்லை. வேற சொற்சித்திரம், சொற்சிலம்பம் இப்பிடி எதுவுமே இல்லை. மேலும், இது போட்டிக்கான கதைங்கிறதால இதுல வர்ற கேரக்டர் (முக்கியமா பெண்) எல்லாம் கற்பனையே.. யாரையும் குறிப்பதல்ல. யாராவது பிராது குடுக்கணும்னா பரிசல் & ஆதி மேல குடுக்கவும்.

டிஸ்கி 2: மக்கள்ஸ் தைரியமா பின்னூட்டலாம். பின்னாடி யாரும் வந்து இந்த இடுகையைப் படிச்சியா? இது சரியா? நேரடி பதில் தேவைன்னு கேக்க மாட்டாங்க. 

Monday, September 20, 2010

தி.கு.ஜ.மு.க (ரகசியப்) பொதுக்குழுக் கூட்டம்

பல முறை சலிக்கச் சலிக்கப் பார்த்த நயகரா. நதியின் இரண்டு புறமிருந்தும் அருவிகளைப் பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் முகிலன் பிறந்த பின்னால் ஒரு முறை கூட போனதில்லை என்பதால் இந்த வருடம் சீசன் முடிந்ததும் (கூட்டம் குறைந்ததும்) போகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம்.

சொல்லி வைத்தாற்போல டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஒரு அழைப்பு. நான் நயகரா வருகிறேன். சந்திக்கலாமா? தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததைத் தட்ட முடியுமா? சரி என்று போக முடிவெடுத்து விட்டோம். 

முதல் நாள் மாலை பஃபலோ (ஊர் பேர்தானுங்க) வந்து சேர்ந்ததும் அழைத்து உறுதிப் படுத்திக்கொண்டார். அடுத்த நாள் காலை எழுந்து கட்டு சோறு கட்டிக் கொண்டு - நயகராவில் சீசன் நேரத்தில் நல்ல சிற்றுண்டி சாலைகள் இல்லை. ஜன்க் ஃபுட் சாப்பிடுவது ஓக்கே என்றால் கவலைப் படாமல் போகலாம். ஆகவே நாங்கள் எப்போது கட்டு சோறு எடுத்துச் சென்று விடுவது - கிளம்பினோம்.மாங்காய் சாதமும், தயிர் சாதமும். எங்களுடன் இன்னொரு ஜோடியும் வருவதாக இருந்தார்கள். அவர்கள் காய்கறிகள் செய்து வந்தார்கள். 

திட்டப்படி காலை 10 மணிக்கு காரில் ஏற வேண்டும். ஆனால் இந்திய பங்க்சுவாலிட்டி படி 11மணிக்குக் காரில் ஏறி கிளம்பினோம். முகிலனுக்கு மோஷன் சிக்னெஸ் உண்டு (பரம்பரை சிக்னெஸ்). சொல்லி வைத்தாற்போல பஃபலோவை நெருங்கும் போது வாயிலெடுத்துவிட்டார். அப்புறம் அங்கேயே ஓரத்தில் காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டு நயகராவை நெருங்கினால் ட்ராஃபிக் ஜாம். அங்கே கிட்டத்தட்ட 45 நிமிடம் வெட்டியாய் செலவு செய்த பின் மணியைப் பார்த்தால் 1:00. 

ஜம்பமாக சாப்பாடு எடுத்து வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே. இப்போது அவர்கள் பசியில் இருப்பார்களே என்று வேகவேகமாக காரை ஓட்டி கோட் ஐலண்டை நெருங்கும்போது மணி 1:30. குடுகுடுப்பைக்கு தொலைபேசினால், கேவ் ஆஃப் த விண்ட்ஸ்ல இருக்கோம். அங்கயே வந்துருங்க என்றார். நாங்களும் அங்கேயே போய் காரை பார்க் செய்து விட்டு அங்கே ஒரு ஓரமாக இருந்த பெஞ்சுகளில் எங்கள் கையிலிருந்த பார்சல்கள அத்தனையையும் வைத்து விட்டு பார்த்தால், அங்கே ஒரு கூட்டம். மறுபடியும் தொலை பேசினேன்.

“குடுகுடு, இங்க ஒரு கூட்டமே இருக்கு. நீங்க எங்க இருக்கீங்க?”

“அந்தக் கூட்டத்துலதான் இருக்கோம்.”

“அடையாளம் சொல்லுங்க.”

“மஞ்சக்கலர்ல பாஞ்சோ (ரெயின் கோட்) போட்டிருக்கோம் பாருங்க”


“அதுக்கு நான் திருப்பதியில போயி மொட்டை போட்டவங்களத் தேடுவேனே?”

“நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“நாங்க இங்கதான் பெஞ்சில உக்காந்திருக்கோம்”

“சரி அப்ப நாங்க போயி கேவ் ஆஃப் த விண்ட்ஸ் பாத்துட்டு வந்துடுறோம்”

“சரி.”

வைத்துவிட்டு பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தேன். இதுவரை பார்த்திராத முகம். வலையுலகில் மட்டுமே பழக்கம். ஓரிரு முறை தொலைபேசியிருக்கிறோம். தங்கமணிக்கு பெரிய கவலை - ஹரிணியும், குடுகுடுவின் மாமியாரும் சாப்பிடாமல் இருப்பார்களே.

அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வந்தார். பார்த்ததும் புன்னகையையும் கைக்குலுக்கல்களையும் பரிமாறிக் கொண்டோம். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். அவருக்கு நான்கு மணிக்கு ஃப்ளைட் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் நிறைய நேரம் இருக்க முடியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் வலையுலக அரசியல் பற்றியும் சமீபத்திய சர்ச்சைகள் பற்றியும் சிறிது நேரம் அலசினோம். என் மனைவி இந்தப் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் பற்றி பின்னர் தொலைபேசியில் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் குடுகுடுப்பை. 

குடுகுடுப்பையின் மாமியார் சளைக்காமல் பேசினார். அவருக்கு இந்தியாவுக்கு திரும்பிவிட வேண்டும். அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். 

அடுத்ததாக ஹரிணி, தன் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு எதாவது வாங்க வேண்டும் என்று சொல்லவும், அழைத்துக் கொண்டு போனோம். கடையையே அலசி கடைசியில் சில பேனாக்களும், கட் செய்த கற்களும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். முகிலன் வெட்கம் விட்டு சகஜமாக ஆரம்பித்தான். ஹரிணியும் முகிலனும் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் முகிலன் ஓட, நான் துரத்த, என்னை அவனைத் தூக்க விடாமல் ஹரிணி தடுக்க என்று இருவரும் என்னை நன்றாக ட்ரில் வாங்கினர். 

விடை பெறும் நேரம் வந்தது. அடுத்த முறை வரும்போது வீட்டில் தங்குவதைப் போல வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விடை கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் பகிரக்கூடாது என்று உத்தரவிட்டதால் பகிரவில்லை. (ஆனாலும் ஏன் அவரது அழகு முகத்தை யாருக்கும் காட்டக்கூடாது என்று நினைக்கிறாரோ தெரியவில்லை).

பார்த்த சிறிது நேரத்தில் நிறைய பேச முடியவில்லை தான். ஆனாலும் நீண்ட நாள் பழகிய ஒரு நண்பரைப் பார்த்த ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இப்படி நல்ல நட்புகளைக் கொடுத்த வலையுலகிற்கு நன்றி. 

(பொதுக்குழுவில் என்ன பேசினீர்கள் என்று கேட்பவர்களுக்கு, அது தான் ரகசியப் பொதுக்குழுன்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எப்பிடி அதை வெளிய சொல்வோம். தலைவர் சீக்கிரம் நடவடிக்கைகள் எடுப்பார். ஒன்றிரண்டு தலைகளின் பதவிகள் கைமாறலாம்). 

புள்ளிவிபரம்

தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை - 6800.
ஒரு குவாட்டரின் விலை ரூ.50 என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 1000 குவாட்டர் விற்றால் மொத்த வருமானம் ரூ.50000/- 6800 கடைகளிலும் மொத்த வருமானம் -  ரூ.34 கோடி. பண்டிகை நாட்களில் இது மூன்று அல்லது நான்கு மடங்காகும்.

டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் யார்? ஒரு நாள் தினக்கூலியாக ரூ.100/- வாங்கி அதில் அம்பது ரூபாய்க்குக் குடுத்தழிப்பவர்கள் தான் இதில் பெரும்பான்மையினர். இதில் எத்தனை பேர் மனைவியின் தாலியை அடமானம் வைத்துவிட்டு குடித்தார்களோ, மகளின் சங்கிலியை விற்றுவிட்டு குடித்தார்களோ. அது அவர்களுக்கே வெளிச்சம். இப்படி ஏழைகளின் பாக்கெட்டில் கை விட்டு திருடும் “புனித” செயலை அரசாங்கமே செய்கிறது.

தமிழகத்தில் சராசரியாக மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக இடப்படுகின்றன. ஒரு கிராமத்தில் 2 கி.மீ ரோடு போடும் காண்ட்ராக்ட் என்று வைத்துக் கொள்வோம். ரோடு போட இரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட் என்றால், அதில் பல தலைகளுக்கு கமிஷனாக ஒரு லட்சம் ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது. அதன் பின் லாபம் போக காண்ட்ராக்டர் செலவிடும் தொகை வெறும் 75000 தான் இருக்கும். தமிழ்நாடு முழுக்க 1,99,040 கி.மீ ரோடு இருக்கிறது. ஆக மொத்தம் கமிஷனாக ஏப்பம் விடப்படும் தொகை - ரூ.995 கோடி.

ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்
தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் ஊழல்
சர்க்கரையில் ஊழல்
ரயில் பெட்டியில் ஊழல்
தொட்டில் குழந்தையில் ஊழல்
சுடுகாட்டுக் கூரையில் ஊழல்
இப்படி ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை.
இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.


டிஸ்கி: நான் எந்திரன் பார்ப்பேன்.

Thursday, September 16, 2010

யார் தீவிரவாதி?

பல வருடங்களுக்கு முன்:

நிலவின் ஒளி அந்த அடர்ந்த காட்டினுள் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பரவியிருந்தது. தூரத்தில் கத்தும் ஆந்தையின் அலறல் அந்த சூழலை அமானுஷ்யமாக்கிக் கொண்டிருந்தது. லேசான குளிர்தான் என்ற போதிலும் அவளின் முதுகெலும்பு வரை ஊடுருவிக் குத்தியது. சேலையை இன்னும் இறுக்கமாகப் போர்த்திக் கொண்டாள். அந்த செயலால் அவள் நடையின் வேகம் சற்றே மட்டுப் பட்டது.

ம்ம்ம். வேகம். நாம் விடிவதற்குள் இன்னும் ஆறு மைல்கள் உள்ளே செல்ல வேண்டும். விடிந்து விட்டால் உங்கள் ராணுவத்திடம் இருந்து தப்ப முடியாது

கிசுகிசுப்பான குரலில் அவன் சொன்னாலும் அந்தக் குரலின் தீவிரம் அவளுக்குப் புரியாமல் இல்லை. நடையை எட்டிப் போட்டாள். கடந்த ஆறு வாரங்களாக யார் யாரையோப் பிடித்துக் கெஞ்சி, சில பல சோதனைகளுக்கு உட்பட்டு இப்போதுதான் அவர்களின் தலைவரைப் பார்க்க அவளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அவளின் தாயைத் தவிர வேறு யாருக்கும் அவள் இப்படி ஒரு காரியம் செய்யப் போகிறாள் என்பது தெரியாது. அவள் தாய் தந்த ஊக்கம் தான் இப்படி ஒரு செயலைச் செய்து பார்க்க அவளுக்கு ஒரு தைரியத்தை அளித்தது என்று கூட சொல்லலாம்.

நீண்ட நேரம் நடந்த பின்னர் “எங்கள் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இனி நமக்குப் பயமில்லை.” நடை சற்றுத் தளர்ந்தது.

நிலா வெளிச்சத்தில் அவன் இவளைப் பார்த்து புன்னகைப்பது தெரிந்தது. “எதற்காக இவ்வளவு பெரிய ஆபத்தைத் தாண்டி எங்கள் தலைவரை நீ சந்திக்க வேண்டும் என்று துடிக்கிறாய் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

அந்தத் தகவல் உங்கள் தலைவருக்குத் தெரிவித்தாகி விட்டது. வேறு யாரிடமும் பகிரக் கூடாது என்று உத்தரவு

சரி. தலைவனின் கட்டளை அது என்றால் எனக்கு தெரிய வேண்டியதில்லை

இன்னும் சிறிது தூரம் நடந்ததும் ஒரு சிறிய குடில் தெரிந்தது. இரண்டு பெண்கள் சீருடையில் கையில் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணுக்குத் தெரிந்ததும், “இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்” என்று சொல்லிவிட்டு அவனும் அவ்வாறே செய்தான்.

அந்தக் குடிலை நெருங்கியதும் இருவரும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவன் கையில் இருந்த ஒரு கடிதத்தை அவர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையிலிருந்த ஒரு கோப்பில் எதையோ சரி பார்த்தனர்.

நீங்கள் வருவதாக எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை. அவளை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.

அவன் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தான்.

சிறிது ஓய்வுக்குப் பின் இன்னொரு போராளியோடு கண்கள் கட்டப்பட்ட நிலையில்அவள் பயணம் தொடர்ந்தது. இன்னும் சில கை மாற்றல்களுக்குப் பிறகு அவள் அங்கே வந்து சேர்ந்தாள். மீண்டும் கடுமையான சோதனைகளுக்க்குப் பின் அவள் ஒரு அறையில் அமர வைக்கப் பட்டாள்.

அவர் உள்ளே நுழைந்தார். அவருடன் அவரது பாதுகாவலர்களும் இன்னும் இரண்டு பேரும் வந்தனர்.

அவரைப் பார்த்ததும் அவள் தானாக எழுந்து கொண்டாள்.

வணக்கம் அம்மா. உன் தைரியத்தையும் மன உறுதியையும் பாராட்டுகின்றேன். கணவனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீ பல ஆபத்துகளைத் தாண்டி வந்திருக்கிறாய். உன் கணவன் மீது நீ வைத்திருக்கும் ஆழமான அன்பையே இது காட்டுகிறது.

திருமணம் ஆன மூன்றாம் நாளே அவர் என்னைப் பிரிய நேரிட்டு விட்டது. அவர் துரதிருஷ்டம், உங்களிடம் மாட்டிக் கொண்டார்

அது துரதிருஷ்டமா இல்லை அதிர்ஷ்டமா என்பதை உன் கணவனிடமே கேட்டுக் கொள். இன்னும் பதினைந்து நிமிடத்தில் அவன் இங்கே இருப்பான். பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் இருவரையும் தனியே சந்திக்க என்னால் அனுமதிக்க முடியாது. இவர்கள் இருவரும் உடன் இருப்பார்கள்

அவள் சம்மதம் என்பதைப் போன்று தலையசைக்கவும் அவரும் அவரது பாதுகாவலர்களும் வெளியேறினர். சூடான தேநீர் ஒரு கோப்பையில் அவளிடம் நீட்டப் பட்டது. இரவு முழுக்க செய்த பிரயாணக் களைப்பு தேநீர் குடிக்கச் சொன்னாலும், கணவனைப் பார்த்து விட்டுதான் தொண்டையை நனைப்பது என்ற குறிக்கோள் மறுக்கச் சொன்னது.

அவள் கணவன் உள்ளே நுழைந்தான். தன்னை விட்டுப் பிரிந்த சமயத்தைக் காட்டிலும் இப்போது சற்று மெலிந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கண்கள் குளமாயின. பிரிந்தவர்கள் கூடும் போது மௌனம் தானே ஒரே மொழி. அவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

நலம் பறிமாறலும், அளவளாவல்களும் முடிந்த பின்னர் “எங்கிருந்து உனக்கு இப்படி ஒரு துணிவு வந்தது?

என் நண்பர்களும் அம்மாவும் கொடுத்த தைரியம் தான். எங்கே கடைசி வரை உங்களைப் பார்க்காமலே போய் விடுமோ என்று பயந்தேன். இனி நான் நிம்மதியாக செத்துப் போவேன்

அதற்கு அவசியம் இல்லை” என்றவாறு அந்தக் குடிலுக்குள் மறுபடியும் நுழைந்தார் தலைவர். “உன்னை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நீ இனி உன் மனைவியுடன் சந்தோசமாக இருக்கலாம்

இருவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தனர்.

நீ” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து “எப்படி வந்தாயோ அதே முறையில் ஊருக்கு திருப்பி அனுப்பப் படுவாய். நீ” என்று அந்த ராணுவ வீரனைப் பார்த்து “எங்களிடம் இருந்து தப்பியவன் போல உங்கள் ராணுவம் இருக்கும் இடத்தின் அருகில் விடப்படுவாய். அவர்களிடம் ஏதாவது கதை சொல்லி அவர்களை நம்ப வைத்து உன் மனைவியிடம் போய் சேர்வது உன் சாமர்த்தியம்

எனக்கு இது போதும். நான் எந்தக் கதையையாவது சொல்லி சமாளித்து விடுவேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை

உன் மனைவிக்கு சொல்”. உடனிருந்தவர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கி விட்டு அவர் வெளியேறினார். இருவரும் அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் முழுக்க கண்ணீருடன் நன்றியும் கலந்திருந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சில மாதங்களுக்கு முன்

அந்த ஜீப் ராணுவ முகாமுக்குள் நுழைந்த போதே அந்த அலறல் அவர் காதுகளுக்கு எட்டியது. முகாமின் வாயிலில் காவலுக்கு இருந்த அந்த ராணுவ வீரன் அவரது ஜீப்பைப் பார்ததும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான். ஜீப் அவனுக்கு அருகில் வந்ததும் நின்றது.

அவன் குனிந்து “மூன்று ” என்றான். ஜீப் கிளம்பி உள்ளே சென்று மூன்று என்று பெரிதாக எழுதிய அந்த சிறிய கூடாரத்தின் முன் நின்றது.

அந்தக் கூடாரத்துக்கு உள்ளே இருந்து தொடர்ந்து அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய அவர் தனது பெல்ட்டை சரி செய்து கொண்டார். அவர் இறங்கியதும் ஜீப் கிளம்பி மறைந்தது.

மெதுவாக அடி மேல் அடி எடுத்து அந்தக் கூடாரத்திற்குள் நுழைந்தார். உள்ளே என்ன மாதிரியான அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருக்குமோ என்ற பயம் அவர் அடி வயிற்றில் எதுவோ செய்தது.

உள்ளே, எதை நினைத்து அவர் பயந்தாரோ அதை விட பல மடங்கு கொடூரமாக இருந்தது. பதிமூன்று வயதான அந்தப் பாலகனை நிர்வாணமாக்கி, கைகள் இரண்டையும் பின்னால் கட்டி மண்டியிடச் செய்திருந்தனர். அவன் உடல் முழுவதும் சிகரெட் சுட்ட காயங்கள். அவனைச் சுற்றி ராணுவ அதிகாரிகள் சிலர் சிரித்துக் கொண்டு கைகளில் மது அல்லது சிகரெட்டோடு நின்றிருந்தனர். சில அண்டை நாட்டு ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.

இவர் உள்ளே நுழைந்ததைப் பார்த்த ராணுவத் தளபதி “ஹே வா வா. நீ ஒருவன் தான் பாக்கி. மற்ற எல்லாரும் தங்கள் மரியாதையைச் செலுத்தி விட்டனர். நீயும் செலுத்தி விடு.” என்று ஏதோ பெரிய நகைச்சுவையை சொன்னதை போல உரத்த குரலில் சிரித்தான். மற்றவர்களும் பலமாக சிரித்தனர்.

என்ன மரியாதை

என்ன மரியாதையா... ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. இதோ அடுத்த தலைவன் ஆகியிருக்க வேண்டியவன். அவனுக்குத் தக்க மரியாதை செலுத்த வேண்டாமா” என்று தன் கையில் இருந்த சுருட்டை பலமாக இழுத்து அந்தச் சிறுவனின் மார்பில் அழுத்தினான் தளபதி.

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ” என்ற அந்தச் சிறுவனின் அலறல் எங்கும் எதிரொலித்தது.

அவர் திரும்பி நடந்தார்.

ஹே எங்கே போகிறாய்?

நான் சிறுநீர் கழிக்க வேண்டும்

அதற்கெதற்கு வெளியே போக வேண்டும். இதோ இப்படிப் போகலாமே” என்று அண்டை நாட்டு அதிகாரி ஒருவன் ஜிப்பைத் திறந்து அந்தச் சிறுவனின் முகத்தின் மீது சிறுநீர் கழித்தான்.

அதற்கு மேல் காணச் சகிக்காமல் திரும்பி நடந்தார். “ஹே! என்ன?” என்ற குரல் பின்னால் கேட்டது. “எனக்கு விருப்பமில்லை” என்று திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே நடந்தார்.

போகட்டும் விடு. இவனை அவன் குடும்பத்தாரோடு சேர்த்து விடலாம்” என்று யாரோ பின்னால் சொல்வது கேட்டது.

மெதுவாக நடந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் நிழலோவியமாக ஓடின. இடுப்பில் பொருத்தியிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தார்.

ட்டுமீல்

இரண்டு துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்தன.

Monday, September 13, 2010

திருநாவுக்கரசர்

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் சைவக் குரவர் நால்வரில் ஒருவர். இவர் இயற்றிய தேவாரம், பன்னிரு திருமுறைகளில் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாக வழங்கப் படுகின்றன. அவர் எழுதிய ஒரு சிறப்பு மிக்க தேவாரப் பாடலை இங்கே காண்போம்.

“குனித்த புருவமும்”

வில் போல் வளைந்த புருவத்தையும்

“கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்”

கொவ்வைப் பழம் போல சிவந்த இதழ்களில் குவிகின்ற புன் சிரிப்பையும்,

“பனித்த சடையும்”

கங்கையைச் சுமந்த சடையையும்,

“பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறும்”

பவழம்போலச் சிவந்த சிவபெருமானின் மேனியில் பூசப்பட்டிருந்த பால் போன்ற வெண்மையான திருநீறையும்

“இனித்தம் உடன் எடுத்த பொற்பாதமும்” 

இனிமையுடன் எடுத்து வைத்த பொற்பாதமும்

“காணப்பெற்றால்”

ஒரு காலைத் தூக்கி நிற்கும் நடராஜராக உன்னைக் காணப் பெற்றால்

“மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே”

இந்தப் பெரிய உலகத்தில் மனிதப் பிறவியை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டுவேனே.. அடியவர்கள் முக்தி - மறு பிறப்பின்மை - யை வேண்டுவது வழமை. ஆனால் இந்த அப்பரடிகளார், மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி வேண்டும் என்று வேண்டுவது அவர் நடராசரின் மீது வைத்துள்ள பக்தியைக் காட்டுகிறது.

இப்படிச் சொல்லும் அடியவர்கள், அடுத்த வரியில்...

“அடி ராக்கம்மா கையத் தட்டு.. புது ராகத்தில் மெட்டுக் கட்டு”

என்று நடராசரின் களிநடனத்துக்கு உமையாளையே கைத்தட்டி மெட்டுப் போடச் சொல்லும் வார்த்தை நடனத்தை என்னவென்று சொல்வது??

Tuesday, September 7, 2010

பிதற்றல்கள் - 9/7/2010

லகமே மே முதல் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடி மகிழும் போது, அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். காலக் கொடுமை.

மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் காரணம் என்ன? 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக (அதற்கு முன் அப்படி கட்டுப்பாடு எதுவும் இல்லை) வேண்டும் என்று கோரி ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பல தொழிலாளர்களும் சில போலீஸ் அதிகாரிகளும் மரணம் அடைந்தார்கள். அதை நினைவு கூறும் வண்ணமே மே முதல் தேதி மே தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த கறுப்புச் சரித்திரத்தை மறைக்கவே வேறொரு நாளில் கொண்டாடுகிறதோ?

எப்படியோ ஒரு லாங் வீக்கெண்ட் கிடைத்தால் சரி.

ந்த லாங் வீக்கெண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் பார்க்க நேர்ந்தது. முதல் படம் நான் மகான் அல்ல. பையாவுக்குப் பிறகு கார்த்திக்கு மற்றுமொரு மசாலாப் படம். மசாலாப் படம் என்றால் அக்மார்க் மசாலா. மசாலாப் படங்களுக்கான இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி இருந்த படம். முதல் பாதி நகைச்சுவையாகப் போய் அடுத்த பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றி கடைசியில் மசாலாப் படங்களுக்கேயுரிய சினிமாத்தனத்தோடு முடித்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். முதல் படத்தை மென்மையாகக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தை அதிரடியாகக் கொடுத்ததில் லிங்குசாமியின் வாரிசாகி விட்டார். (என்ன பொருத்தம் பாருங்கள். கார்த்தியின் முந்தைய படம் லிங்குசாமி டைரக்‌ஷன்). வழக்கம்போல ஏதாவது கண்ணாடியைப் போட்டுப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களை வில்லன்களாக்கி விட்டார்கள். அதில் ஒருவர் முஸ்லிம் சிறுவன் என்றெல்லாம் பேசத் துவங்கிவிட்டார்கள். அந்த முஸ்லிம் பாத்திரம் ஒன்றும் திணிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மற்றபடி வன்முறையையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளித்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதையெல்லாம் காட்டாமலே உணர்த்திய சுசீந்திரனுக்கு மற்றுமொரு சல்யூட்.

ன்னொரு படம் வம்சம். இதுவும் ஒரு மசாலாப் படமே. ஆச்சரியம் தரும் வகையில் சுனைனா நன்றாக நடித்திருந்தார். பாண்டிராஜின் சின்னச் சின்ன ஐடியாக்கள் அவரது முதல் படம் போலவே ஆங்காங்கே ரசிக்க வைத்தது. “முடிய நீளமா வச்சிருக்கிறவ, குடும்பத்தையும் அதே மாதிரி பத்திரமா பாத்துக்குவா” என்று கதாநாயகனின் தாய் சிலாகித்துக் கொண்டே போக இங்கே சுனைனா சவரியைப் பிரித்து தலையைக் கோதுகிறார்.

செல்ஃபோனை மரத்தின் மீது கட்டிவிட்டு, போன் பேசவேண்டுமென்றால் மரமேறிப் பேசுவது, சுனைனா வீட்டிலோ, மேலே இருக்கும் செல்ஃபோனில் இருந்து நீஈஈஈஈளமான ஹெட் ஃபோன் மூலம் கீழிருந்த படியே பேசுகிறார்.

கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது. பெண்களைத் தாக்குவதில்லை என்பதும், சத்தியம் செய்து விட்டால் அதற்குக் கட்டுப்படுவதும் என்றும் வாழும் இந்தச் சமூகத்தின் மீது வன்முறை/அராஜகத்தைத் தாண்டிப் பார்த்தால் ஒரு மரியாதை வரும்போல. எப்படியோ பாண்டிராஜ் மீண்டும் ஒரு செஞ்சுரி போட்டுவிட்டார்.

ஜெயப் பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார். பக்கத்து ஊர்த் தலைவரைக் கொன்றுவிட்டு பன்னிக்கறியும் பட்டை சாராயமும் சாப்பிடும் போது அவர் அடிக்கும் டயலாகும் அதன் டெலிவரியும் அசத்தல். இவருக்காகவே இன்னுமொருமுறை பார்க்கவேண்டும்.

“கண்ணாடி” போட்டுப் பார்ப்பவர்களுக்கு: இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷின் மகனாக வருபவர் பல காட்சிகளில் சிவப்புச் சட்டை போட்டு வருகிறார்.

ரண்டரையாவதாகவும் ஒரு படம் பார்த்தேன். பீப்ளி லைவ். முழுதும் பார்த்துவிட்டு என் கருத்தை (ரொம்ப முக்கியம்) அடுத்த பிதற்றல்களில் தருகிறேன்.

ஸ்ஸில் கார்த்திகா வாசுதேவன் சும்மானாச்சுக்கும் ஒரு தமிழ் குவிஸ் வைத்திருந்தார். நானும் என் மூளையைக் கசக்கி கூகுளாண்டவர் துணையோடு அந்த ஐந்துக் கேள்விகளுக்கு விடையை அளித்திருந்தேன். (இதுல நான் சொல்லிக் குடுத்த மாதிரியே சொன்னதுக்கு நன்றின்னு தளபதி நசரேயன் கமெண்டு வேற). சரி பதிலை சொல்லியாச்சே. எதாவது பரிசு உண்டாவென்று கேட்டால், அனுப்பி வைக்கிறார்கள் ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் பி.டி.எஃப் பிரதியை. தமிழில் குவிஸ் நடத்தி, தமிழ் இலக்கியத்திலிருந்து கேள்வி கேட்டு, அதற்கு தமிழில் பதில் கொடுத்தால் எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் புத்தகம் அனுப்பினால் எப்படி? நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா?

இதில் புத்தகம் அனுப்பியதைப் பற்றி விளம்பரம் போடவில்லையென்று கவலை வேறு...:))

உங்களுக்காக அந்தக் கேள்விகள் இதோ:

1 .ஐம்பெருங்காப்பியங்கள் எவை? 

2 . ஐஞ்சிறுகாப்பியங்கள் எவை ? 

3 . இதிகாசங்கள் எவைஎவை? 

4 .புராணம் இதிகாசம் ஒரே வரியில் வேறுபடுத்திக் காட்டுக? 

5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்


எச்சரிக்கை: இந்தக் கேள்விகளுக்குப் பின்னூட்டத்தில் பதில் அளிப்பவர்களுக்கு அந்தப் புத்தகம் அனுப்பிவைக்கப் படும்.


முகிலன் அப்டேட்ஸ்

பூச்சாண்டி ஒரே மாதத்தில் புஸ்ஸாண்டி ஆகிவிட்டது. இப்போது அவர் எங்களை பூச்சாண்டியைக் காட்டி பயமுறுத்துகிறார். என்ன சொல்ல?

ஆங்கில எழுத்துக்கள் - A, B, C, F, G, I, N, O, P, Q, R, S, T, U, W, Y, Z - ஆகியவற்றை அடையாளம் கண்டுபிடிக்கப் பழகிவிட்டார். இப்போது அந்த எழுத்துக்களை எங்கே பார்த்தாலும், அப்பா டபியூ, அம்மா டபியூ என்று இருவரையும் அழைத்துக் காட்டி கை தட்டும் வரை விடமாட்டேன் என்கிறார்.

மூன்று பேர் உட்காரும் சோஃபாவில் இடது ஓரம் அம்மா சீட், நடுவில் அப்பா சீட், வலது ஓரம் தம்பி சீட். மாறி உட்கார்ந்தால் எழுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். இதில் கொடுமை, ஓர சீட்டுகள் இரண்டும் ரெக்லைனர்கள். நடு சீட் அப்பாவுக்கு. என்ன ஒரு வில்லத்தனம்?

எந்திரன் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. (அப்புறம் விடாம போட்டுக்கிட்டே இருந்தா, பிடிக்காதா என்ன?). காரில் ஏறியதும் கையில் ஐ பாடைக் கொடுத்து விட்டால் எந்திரன் பாடல் கேட்டுக் கொண்டு அமைதியாக வருகிறார்.

கொசுறு: ரஜினியை டிவியிலோ செல்ஃபோனிலோ பார்த்தால் ரஜிதாத்தா என்று சொல்கிறார்.

Friday, September 3, 2010

ரஜினியும் முதல்வன் பட வசனமும்

முதல்வன் படத்தின் வசனம் இது:

முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்டிருப்பார். அப்போது அவர் தந்தை, “விசிஆர்ல இருக்கிற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் லைஃப்லயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்பார்.

அப்படி ஒரு வசதி ரஜினிக்குக் கிடைக்கிறது.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணத்திற்கு சென்னையின் போக்குவரத்து மற்றும் இட நெருக்கடி காரணமாக ரசிகர்களை அழைக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன்.
பத்திரிகைகள்: ரசிகர்கள் வரவேண்டாம் - ரஜினி அறிக்கை
பதிவர்கள்: ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தவனுக்கு அழைப்பில்லையாம்.
ரஜினியின் வளர்ச்சி ரசிகனின் வீழ்ச்சி

ரஜினி: ம்ம்ம்.. இப்பிடி ஒரு அறிக்கை விட்டதுதான் தப்போ. பேசாம ரீவைண்ட் பண்ணி ஒன்னும் சொல்லாம இருந்திரலாம்

ரஜினி அறிக்கை: ம்ஹூம்.
பத்திரிகைகள்: ரசிகர்களுக்கு அழைப்பு இல்லை - ரஜினி ரசிகர்களைப் புறக்கணிக்கிறார்.
பதிவர்கள்: தனது படங்களுக்கு 500, 1000 என்று மனைவியின் தாலியை விற்று டிக்கெட் எடுத்துப் பார்த்த ரசிகனை அழைக்கவேண்டாம். ஏன் அழைக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கையாவது விட வேண்டாமா?.
இப்படியா கள்ள மவுனம் சாதிப்பது?
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் ரஜினி.

ரஜினி: இதுவும் தப்பா.. பேசாம ரீவைண்ட் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கத்துல வச்சிரலாம் கல்யாணத்தை.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணம் அனைத்து ரசிகர்களும் கலந்து கொள்ளுமாறு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். என் உயிருனும் மேலான ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிகைகள்: வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சும் வகையில் ஆடம்பரமாக ரஜினியின் மகள் திருமணம்.
பதிவர்கள்: இத்தனை கோடி செலவு செய்து ஒரு திருமணம் நடத்த வேண்டுமா? அந்தக் காசில் எத்தனை ஏழைகளைப் படிக்க வைத்திருக்கலாம்?
ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பசியால் இந்தியாவில் இறக்கின்றன. இந்தப்பணத்தில் எத்தனை குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
இந்தப் பணம் எப்படி இவருக்கு வந்தது? கறுப்புப் பணத்தை எதிர்த்து சிவாஜி படத்தில் போராடிய இவர் கறுப்பில்லாமல் இவ்வளவு பணம் எப்படிச் சேர்த்தார்?

ரஜினி: போச்சுடா.. இதுவும் தப்பா. ரீவைண்ட். காதும் காதும் வச்ச மாதிரி திருப்பதியில கல்யாணத்த முடிச்சிட்டு திரும்பிடலாம்.

ரஜினி அறிக்கை: மூச்..
பத்திரிகைகள்: ரஜினி மகள் ரகசியத் திருமணம். ரஜினிக்குத் தெரியுமா? அவர் கருத்தென்ன?
பதிவர்கள்: ஏன் ரஜினியின் மகள் ரகசியத்திருமணம் செய்து கொள்ள வேண்டும்? எதுவும் கசமுசவா?

ரஜினி: அடங்கொய்யால. இதுக்கு புள்ளையே பெத்துக்காம ரெண்டு படம் நடிச்சிட்டுப் போயிருந்திருக்கலாமே.. ரீவைண்ட்..

முதல் படம்: ஃப்ளாப்
பத்திரிகைகள்: ரஜினியின் படம் படு தோல்வி. வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு ரஜினியை நெருக்குகின்றனர். ரஜினி சகாப்தம் முடிந்ததா?
பதிவர்கள்: அம்புட்டுத்தான் ரஜினி. இனி தலையில துண்டுதான்.
அவரை நம்பித்தானே வினியோகஸ்தர்கள் பணம் போட்டார்கள். அவர்களின் நஷ்டத்துக்கு அவரே பொறுப்பேற்று பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

இரண்டாம் படம்: பெரிய பட்ஜெட்
பத்திரிகைகள்: பணத்தை இறைத்து ரஜினியின் அடுத்த படம். அவருக்கு சம்பளம் 25 கோடியாம்.
பதிவர்கள்: இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்க வேண்டுமா? இந்தப் படத்தைப் புறக்கணிப்போம்.
இந்தப் பணத்தில் எத்தனை ஏழைகளை.. ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பாபாபா

ரஜினி: அவ்வ்வ்வ்வ்வ்... வேற வழியே இல்லை ரீவைண்ட்...

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

1949, March 12


ஜீஜாபாய்: என்னங்க.. புள்ளைகளை தூங்க வச்சிட்டேன். பாலக் குடிச்சிட்டுப் படுக்க வாங்க.
ராமோஜிராவ்: இல்லடி நான் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறேன்.






டிஸ்கி: எப்படி மார்ச் 12, என்று கேட்டவர்களுக்காக. கர்ப்பத்தின் ட்யூ டேட் இப்படித்தான் கணக்கிடப் படுகிறது. கூட்டிக் கழிச்சிப் பாருங்க கணக்கு சரியா வரும்.