Tuesday, October 18, 2011

முதலாளித்துவ முட்டாள்தனம்

காவேரிப் பிரச்சனைக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் தீர்வு சொல்கிறார்களாமாம். விவசாயத்தை நிறுத்திவிட்டால் தண்ணீரே தேவையில்லையாம். காவேரிக்கரைகளையும் காய்ந்து போன வயல்களையும் சுற்றுலாத் தளமாக்கி வெளிநாட்டுக்காரர்களை வரவழைத்து அந்நியச் செலாவணியைப் பெருக்குவார்களாம். 

இப்படிப்பட்ட முதலாளித்துவ சிந்தனையாளர்கள் வருவார்கள் என்பதை அன்றே கண்டறிந்து சொல்லிப் போயிருக்கிறான் எங்கள் தாடிக்கார டி.ராஜேந்த்.. மன்னிக்கவும் திருவள்ளுவர். 

“துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்குத்
                                  துப்பாய தூஉம் மழை”

இதற்கு என்ன அர்த்தம்??? மழை பொய்க்குங்கால் விவசாயிகளின் வாழ்க்கைத் தூர்த்துப் போய்விடும். விவசாயம் தூர்த்துப் போனால், நாடே பிறநாடுகள் தூ என்று துப்பும் அளவுக்குத் துப்புகெட்டுப் போய்விடும். அதன் பின்னர் இப்படித் துப்புக் கேட்ட துருப்பிடித்த சிந்தனையாளர்கள் துன்னது செரிக்காமல் எதையாவது துப்பிவிட்டுப் போவார்கள். அவர்களை எதிர்க்கத் துப்பாக்கி எடுப்பது தவிற வேற துப்பே கிடையாது. ஆக, துப்பாக்கி முனையில் தான் ஜனநாயகம் பிறக்கிறது என்பதை மாவோவுக்கு முன்பே துப்பிச் சென்றவன் எங்கள் வள்ளுவன். 

நாங்களெல்லாம் இந்த வள்ளுவனின் வழி வந்தவர்கள் என்பதை உங்கள் சிந்தனைச் செருப்புகளை எங்கள் வீட்டு வாசலில் விடும் முன்னரே உங்கள் சட்டைப் பைக்குள் விட்டுக் கொண்டீர்களானால் இப்படி ஒரு சிந்தனை உங்கள் மூளையில் உதிக்கும் முன்னரே முளையிலே கிள்ளியிருக்கும்.

காவேரிப் பிரச்சனையை இந்தியாவின் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. அதனைத் தீர்த்து வைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்ன அக்கறை? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். காவேரிப் பிரச்சனையைப் பற்றி நாங்கள் கவலைப் பட்டுக் கொள்கிறோம். உங்கள் கோமணத்தை “Occupy Wall Street" என்று எங்கள் உழைக்கும் வர்க்கம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

முதலாளித்துவ முதலைகளைத் திட்டியது போதும். காவேரிப் பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? 

இப்போதுதான் கர்நாடக (முன்னாள்) முதல்வர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீதான வழக்குகளை தமிழ்நாட்டின் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். அவர் தமிழ்நாட்டுக்கு வாய்தாவுக்கு வரும்போது பிடித்து வைத்துக் கொண்டு, “காவேரியைத் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடாவிட்டால் எடியூரப்பாவை திறந்து விட்டு விடுவோம்” என்று மிரட்டலாம். மிரட்டலுக்கு அடி பணிந்து அவர்கள் கண்டிப்பாக காவேரியைத் திறந்துவிட்டுவிடுவார்கள். எல்லாவற்றிலும் எடக்குக் கேள்வி கேட்பவர்கள், நம் மாநிலத்தின் முதல்வரும் ஊழல் வழக்குக்காக கர்நாடக நீதிமன்றத்துக்குப் போகவேண்டியிருக்கிறதே, அவரை கர்நாடக நீதிவான்களான வட்டாள் நாகராஜ் போன்றோர் பிடித்து வைத்துக் கொண்டு இதே போல மிரட்ட வாய்ப்பிருக்கிறதே என்று கேட்கலாம். அதைக் குறித்து சந்தோசப் பட வேண்டியதில்லை. ஏனென்றால் நம் மாநில முதல்வர் அங்கே போகப் போவதே இல்லை. 

முல்லைப் பெரியாறுப் பிரச்சனைக்கும் இதே போல தீர்வு காணவேண்டிய நாள் விரைவில் வந்தே தீரும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளின் மேல் இருக்கிறது.