Saturday, January 29, 2011

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.

இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.
பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா? 

சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?
இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?

அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்? 

இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது. 

மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். 

ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம். 

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).

கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம். 

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். 

இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம். 

இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். 

இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும். 

Tuesday, January 18, 2011

தமிழ்மணம் விருது 2010

நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். எனது கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு தமிழ்மணம் விருதுகள் 2010ல் பிரிவு-16ல் முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், எனக்கு தமிழ்மணம் தெரிவு செய்த நடுவர் குழுவில் உடன்பாடில்லை. அதற்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் நான் என் விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் அனுப்பிய மடல் கீழே:

தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இலாப நோக்கமில்லாமல் ஒரு திரட்டியை நிர்வாகம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் பதிவுலகில் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளில் எந்தப் பக்கமும் சாராது நடு நிலைமை வகித்து தமிழ் வலைப்பூக்களை தொகுத்து வழங்குவது என்பதே சிரமமான காரியம். அதிலும் ஆண்டுதோறும் சிறந்த வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருது வழங்குவதும் எளிய காரியம் அல்ல. அதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வழங்கி வரும் தமிழ் மண நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

இரண்டாவது முறையாக நான் இந்த ஆண்டும் விருதுக்கு எனது இடுகைகள் மூன்றை சமர்ப்பித்து இருந்தேன். முதல் சுற்றில் இரண்டு இடுகைகளும் இரண்டாவது சுற்றில் ஒரு இடுகையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இறுதிச் சுற்று முடிவில் என் கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் இடுகைக்கு பிரிவு-16ல் முதல் பரிசு வழங்கியிருந்தீர்கள். எனக்கு வாக்களித்த நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் நன்றிகள்.

அதே சமயம், நீங்கள் முடிவுகளோடு வெளியிட்டிருந்த நடுவர்கள் பட்டியல் எனக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. அந்த நடுவர்களில் சிலர் தங்கள் இடுகைகளை விருதுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவர்களில் சிலர் விருதை வென்றும் இருந்தனர். நடுவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தாங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்த பிரிவுகளுக்கு நடுவராக செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், இரண்டு பட்டியல்களையும் பார்க்கும்போது கொஞ்சம் இடறத்தான் செய்கிறது. இன்னும் சில நடுவர்கள் ஒரு பக்கச் சார்பு (இடது சாரி சிந்தனை) கொண்டவர்கள். இவர்கள் எப்படி நேர்மையாக விருதுக்கு இடுகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல,  என் போன்ற பலருக்கும் வந்துள்ளது. கூகுள் பஸ்ஸிலும் இடுகைகளிலும் அவர்கள் தங்கள் சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல விடயங்களில் நடுநிலைமையைப் பேணும் தமிழ்மணம் இந்த விடயத்தில் நழுவி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஃபிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் துவங்குகின்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு இலங்கை அணியில் தலைவரை அம்பயராகப் போட்டால் நன்றாகவா இருக்கும்? (நன்றி ஜானகிராமன்.என்)

தமிழ்மணத்தின் நியமித்த இந்த நடுவர் குழுவிற்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம் எனக்கு வழங்கப்பட்ட விருதை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

அதே நேரம், உங்களின் அயராத பணியைப் பாராடும் முகத்தான் என் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணத்தில் பகிர்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுகளில் இது போன்ற குறைகளை தமிழ்மணம் களையும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,

Dhinesh Kumar (முகிலன்)

நண்பர்களே என் எதிர்ப்பு இடுகைகளையும் பகிர்ந்து நடுவர்களாகவும் பணி புரிந்தவர்களுக்கும் ஒரு பக்கச் சார்பு கொண்டவர்களுக்கும் மட்டுமே. மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.