Friday, September 5, 2014

ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி

அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”

ரவிச்சந்திரன் தயக்கத்துடன் அருகில் அமர்ந்திருந்த லாயரைப் பார்த்தான். அவர் கண்ணசைக்கவும், அருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“மிஸ்டர் ரவி. நான் இந்தக் கேஸ்ல போலீஸ்க்குக் கன்சல்டண்டா ஒர்க் பண்றேன். உங்க மேல நாலு கொலை ஒரு திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்குதுன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?”

லாயர் குறுக்கிட்டார். “தெரியும் மிஸ்டர் அருண். அந்தக் கேஸ்ல சரண்டர் ஆகிட்டாரு என் க்ளையன்ட். என்ன கேக்கணும்னாலும் ஆஃப்டர்னூன் ஜட்ஜ் கஸ்டடி ஆர்டர் குடுத்தார்னா கஸ்டடியில வச்சி விசாரிச்சிக்கோங்க. பட் உங்க சைட்ல கேஸ் ஸ்டிராங்கா இல்லை. கஸ்டடி கிடைக்குமாங்கிறதே சந்தேகம் தான்”

“தெரியும் மிஸ்டர்…”

“அன்பழகன். கிரிமினல் லாயர்”

“நல்லது மிஸ்டர் அன்பழகன். அது சம்மந்தமா பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா?”

“நீங்க என் கிளையண்ட் கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம அவர் எதையுமே பேச மாட்டாரு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டீங்கன்னா பேசலாம்”

“அக்ரீட். சிவா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்”

சிவா தலையசைக்க, அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் அருண் மூவரும் நடந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த இரண்டு ஜூனியர்கள் அவர்களின் சீனியரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர். 

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு 9க்கு வந்தாப் போதும்”

அவர்கள் இருவரும் வெளியேறியதும், அன்பழகன் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த சேர்களில் ஒன்றை இழுத்து அன்பழகனின் அருகில் போட்டு அதில் ரவிச்சந்திரன் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சேரில் அருண் உட்கார்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.

பல சினிமாக்களில் பார்த்தது போல பின்னால் லைப்ரரி போல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டாமல் சாதாரண அரசு அலுவலரின் அறை போல இருந்தது. மேஜை மேல் கேஸ் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“சொல்லுங்க மிஸ்டர் அருண். என்ன பேசணும்?”

“ரவி, நீங்க எடுத்த பேரர் பாண்ட்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா?”

“எடுத்ததா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறன்னு சொல்லுங்க அருண். அவர் எடுத்ததா உங்களால நிரூபிக்க முடியுமா? என் க்ளையண்டோட தாத்தா எப்பவோ வாங்கின இந்த பேரர் பாண்ட்ஸை பரண் மேல போட்டு வச்சிருந்திருக்காரு. ரீசண்டா வீடு க்ளீன் பண்ணும்போது கிடைச்சதுன்னு எங்களால ப்ரூவ் பண்ண முடியும்”

“இங்க பாருங்க அன்பழகன். எல்லாம் எனக்குத் தெரியும். கொலைக் கேஸ்ல போலீஸ்க்கு ஹோல்ட் கம்மின்னும் தெரியும். ஈஸியா ஒடச்சி உங்க கிளையண்டை வெளிய கொண்டு வந்துடுவீங்கன்னும் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாதது ஒண்ணு இருக்கு”

“என்ன?”

“இந்த பேரர் பாண்ட்ஸ் எல்லாம் ம.மு.க கட்சியோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்குச் சொந்தமானது. அவர் குடுத்த கேஸ் தான் திருட்டுக் கேஸ். அவருக்கு போலிஸ்ல இருக்கிற இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி பழைய தேதியில கேஸ் குடுத்துருக்காரு. அவரோட கம்ப்ளெயிண்ட்ல சீரியல் நம்பரோட குடுத்துருக்காரு. அதுல கொஞ்சம் பாண்ட்ஸை ரவி எக்ஸேஞ்ச் செஞ்சிருக்காரு. இந்த ஆதாரத்தை வச்சி அவரை 5 வருசம் உள்ள தள்ள முடியும்"

ரவி அன்பழகனின் தோளைப் பிடித்துத் திருப்பினான். “சார், இவர் சொல்றது நிஜமா?”

“ம்ம். திருடினதுக்கு ஆதாரம் இருக்குதுன்னா அஞ்சி வருசம் கிடைக்கலாம். மூணு வருசமாக் கூடக் கொறச்சிடலாம்"

அருண் இடைமறித்தான். “ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லாம வெளிய வர்றதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வீங்களா?”

அன்பழகனும் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். 

“சி.எம்.சி ஆஸ்பிட்டல்ல செத்துப் போனானே கணேசன். அவன் தான் இந்த பேரர் பாண்ட்ஸைக் கொண்டு போயிட்டு இருந்தவன். அவன்கிட்ட இருந்துதான் நீங்க எடுத்தீங்க இல்லையா?”

“அ..அ.. ஆமா”

“அவன் ரயில்ல இருந்து தவறி விழுந்ததாதான் வாக்குமூலம் குடுத்துருக்கான். ஆனா நீங்க சொக்கலிங்கம் தான் தள்ளி விட்டதா வாக்குமூலம் குடுக்கணும். நாங்க, நான் இன்ஸ்பெக்டரா இருந்த காலத்துல இருந்து, ஏதாவது கேஸ்ல வசமா சிக்க வச்சிரணும்னு காத்துக்கிட்டு இருந்தோம். சாட்சியமே இருக்காது. இல்ல இருக்கிற சாட்சியத்தைக் கலைச்சிருவாங்க. இப்ப இது ஒரு நல்ல வாய்ப்பு"

“ம். சொல்லுங்க"

“இப்ப ஜட்ஜ்கிட்டப் போய் பேசலாம். ரவி இன்-காமிரா டெஸ்டிமோனி குடுத்துரட்டும். போலீஸ் எல்லாக் கேஸ்ல இருந்தும் அவர் பேரை எடுத்துடுறோம். ஒரு 5 லேக்ஸ் ஒர்த் பாண்ட்ஸ் மட்டும் அந்த டைம்ல தவறீ விழுந்ததை நீங்க எடுத்து வச்சதா சொல்லி கோர்ட்ல ஒப்படைச்சிருங்க. அது போதும் எல்லாக் கேஸ்ல இருந்தும் வெளிய வந்துடலாம். சொக்கலிங்கத்தை அரஸ்ட் பண்ணினதும் ரவி ப்ளான் பண்ணின படி வெளிநாட்டுக்குப் போயிரட்டும். அவர்கிட்ட இருந்தும் தப்பிச்சிரலாம். ஓக்கேவா?”

“மிஸ்டர் அருண். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிட்டு வர்றோம். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க"

“ஓக்கே” வெளியே வந்த அருண் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிகரெட்களைக் கரைத்து முடித்தான். அன்பழகன் வெளியே வந்தார். 

“மிஸ்டர் அருண். உங்க ப்ரொபோசலை ஏத்துக்கலாம்னு இருக்கோம். ஜட்ஜ் இப்ப அவைலபிளா இருப்பார். நாம போய் பேசலாமா?”

“ஷ்யூர் அன்பழகன். என் ஃப்ரண்ட் கமிஷனர் கார்த்திகைப் பாண்டியனும் வந்துட்டாரு. பிபியையும் கூட்டிக்கிட்டு ஜட்ஜைப் போய்ப் பார்ப்போம் வாங்க"

கதவைத் திறந்து வெளியே வர முயன்ற ரவியிடம் அன்பழகன், “ரவி நீங்க இங்க என் ரூம்லையே உக்காருங்க. ஜட்ஜ்கிட்டப் பேசிட்டு டெஸ்டிமோனிக்கு ரெடியானதும் உங்களைக் கூப்புட்டு விடுறேன். ஓக்கேவா?”

ரவி தயக்கத்துடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.

ஜட்ஜ் அறைக்குப் போகும் வழியில் சிவாவைப் பார்த்து வலது கையில் கட்டை விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரல்களையும் மடக்கி காதின் அருகில் வைத்து ‘கால் பண்ணு' என்று வாயசைத்தான் அருண்.

ஜட்ஜ் ஏதோ வேலையாக இருக்க அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டனர். உள்ளே நுழையும் போது அருணின் ஃபோன் மெசேஜ் டோன் அடித்தது. எடுத்து மெசேஜ் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.

கார்த்திகைப் பாண்டியனும் வக்கீலும் நிலவரத்தை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஜட்ஜ் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான்.

பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு 
ஐந்து
நான்கு
மூன்று 
ரெண்டு 
ஒன்று
சாத்தியிருந்தக் கதவைக் கிட்டத் தட்ட உடைத்துத் திறந்துகொண்டு வந்தான் ரவி. மூச்சு வாங்கியதைப் பார்க்கும்போது முழு ஹாலையும் ஓடிக் கடந்திருப்பான் போல. 

ஜட்ஜ் திடுக்கிட்டு எழுந்து, “யாரு மேன் நீ?” என்றார்.

அன்பழகனும் திடுக்கிட்டு, “என்னாச்சு ரவி? உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன்? ஏன் வந்தீங்க?”

ரவி இருவரையும் கண்டு கொள்ளாமல் அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

“சார், நான் தான் அந்த நாலு கொலையையும் பண்ணேன். ரெண்டு கொலையை நானே செஞ்சேன். ரெண்டு கொலையை ஆள் வச்சி செஞ்சேன். பேரர் பாண்ட்ஸ்க்காக தான் இந்தக் கொலைகளைச் செஞ்சேன். என்னை உடனே ஜெயில்ல போடுங்க. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்" 

திரும்பத் திரும்ப அதையே சொல்லி அழ ஆரம்பித்தான். 

“ரவி என்ன நீங்க, எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க" என்றெல்லாம் அன்பழகன் சொன்ன ஆறுதல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அருண் கைகளையும் கார்த்திகைப் பாண்டியனின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தான் ரவி.

ஜட்ஜ் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தார். அருண் நிதானமாக அவரிடன் எடுத்துச் சொல்லி ரவியின் வாக்குமூலத்தைப் பதியச் செய்தான். சிவா உள்ளே வந்து ரவியின் கையில் விலங்கு பூட்டி வெளியே கூட்டிக்கொண்டு சென்றார். 

ஜட்ஜிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அருண். 

தூரத்தில் வைத்தியால் கொடி கட்டப்பட்ட சுமோவில் ஏற்றிவிடப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கம் அருணின் தலை தெரிந்ததும் பற்கள் தெரியச் சிரித்தார். வலது கை மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அருண் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான்.

(முற்றும்).

No comments: