Thursday, May 24, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 3



தலையை சாய்த்து, ஒற்றைக் கண்ணை மூடி, மாலா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்தப் பப்புக்குள்ள போலாமா??"

"வ்வாட்?” என் இதயம் ஒரு நொடி என் வாய்க்கு வந்துவிட்டது. இவ்வளவு போல்டான பெண்ணா? இவளை நம்புவதா இல்லையா?

“சும்மா கேட்டேம்பா.. இன்னும் இந்தளவுக்கு வரலை. ஆனா ஒரு நாள் என்னையக் கூட்டிட்டுப் போகணும். ஓக்கே?”

“யம்மா தாயே. ஒரு செகண்ட்ல என் ஹார்ட் நின்னே போச்சி. இம்புட்டு போல்டான பொண்ணான்னு. நல்ல வேளை பாலை வார்த்த”

“ஏன்? பொண்ணுங்கன்னா பப்புக்குப் போகக் கூடாதா?? அங்க நிக்கிற பொண்ணுங்க எல்லாம் பொண்ணுங்க இல்லையா?”

“அப்பிடிச் சொல்லலை மாலா. இன்னைக்குக் காலையில தான் மீட் பண்ணோம். அதுக்குள்ள பப்புக்கு என்னைய நம்பி வர அளவுக்கு தைரியம் எப்பிடின்னு யோசிச்சேன். அவ்ளோதான். மத்தபடி பாருக்குப் போற பொண்ணுங்க எல்லாம் மோசமானவங்கன்னு நினைக்கிற சராசரி ஆள் இல்லை நான்.”

“ஓக்கே ஓக்கே. இந்த வாட்டி மன்னிச்சிட்டேன். எப்பவாச்சும் உன் ஆம்பளைத்தனம் வெளிய வராமலா போயிரும்?” கிண்டலாகச் சிரித்ததால் எனக்குக் கோபம் வரவில்லை.

அந்த பப் வாசலிலேயே ஒரு ஆட்டோ பிடித்து கெஸ்ட் ஹவுஸ் போய் இறங்கினோம். என் ரூம் மேட்டும் அவள் ரூம் மேட்டும் வந்திருந்தனர். டிவியில் சன் மியூசிக் ஓடிக் கொண்டிருந்தது. என் ரூம் மேட் செந்தில்குமரன் திருநெல்வேலிக்காரன். ஒடிசலாக நெடுநெடுவென்று இருந்தான். ஜானி படத்து ரஜினியைப் போல அடர்த்தியான மீசை வைத்திருந்தான். நெற்றியில் குங்குமம். மா நிறம். சிறிய கண்கள். அதிக நேரம் சிமிட்டிக் கொண்டே இருந்தான். அப்படி சிமிட்டுபவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்று எங்கோ படித்த நினைவு. சென்னையில் படித்தவன். அவனை சென்னை அதிகம மாற்றாமல் இருந்தது அதிசயமாக இருந்தது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் என்றதும் காரணம் புரிந்தது.

மாலாவின் ரூம் மேட்டாக ஓமனா காசர்கோட்டுக்காரி. உதட்டு ஓர மச்சம் (மட்டும்) சிம்ரனை நினைவு படுத்தியது. அளவான சிரிப்புடனும், அழுத்தமான மலையாள வாடையுடனும் பேசினாள். மலையாளப் பெண்களுக்கே உரித்தான நீளமான முடி, மினுமினுப்பான சருமம், பரந்த மார்புகள். அவள் அணிந்திருந்த கரும்பச்சை சுடிதார் அவள் நிறத்தை இன்னமும் எடுப்பாகக் காட்டியது. அடுத்தவர் பேசும்போது உம் கொட்டுவதைப் போல அவள் சொன்ன “ஓ” ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

சிறிது நேர அறிமுகத்துக்குப் பின் நால்வரும் நன்றாக ஒட்டிக்கொண்டோம். சேர்ந்தே போய் மெஸ்ஸில் சாப்பிட்டோம். வறண்டு போன சப்பாத்தியும் தயிர்சாதமும் இருந்தது. சிக்கன் குழம்பு இருந்ததால் பிழைத்தேன். செந்தில் மட்டும் சைவம். அவன் பாடு பாவம்தான்.

அறைக்குத் திரும்பி அடுத்த நாளைப் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொண்டு கதைத்துக் கொண்டு விட்டு படுக்கைக்குச் செல்லும்போது மணி 9. கல்லூரியிலும், வீட்டிலும் இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போய் பழக்கமே இல்லை. அதனால் படுத்துக் கொண்டே அடுத்த நாள் எப்படிப் போகும் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். செந்தில் எப்போதோ தூங்கிப் போயிருந்தான்.

****************************
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

என்ற யாரோ சத்தமாகப் பாடும் குரல் கேட்டு எழுந்தேன். செந்தில் இடுப்பில் துண்டுடன் அவனது கப்போர்டுக்கு முன் நின்று கண்களை மூடி பாடிக் கொண்டிருந்தான். நெற்றியிலும் கைகளிலும் பட்டை பட்டையாய் விபூதி. குளித்துவிட்டு வந்திருப்பான் போல. அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல், சத்தம் காட்டாது பாத்ரூமுக்குள் நுழைந்தேன். குளித்து முடித்து வெளியே வரும்போது செந்திலின் நெற்றியில் விபூதிப் பட்டை போன இடம் தெரியவில்லை. சிறு கீற்றாக குங்குமம் மட்டும். வெள்ளைச் சட்டையும் கறுப்பு பேண்டுமாய் நின்றிருந்தான். நானும் என்னிடம் இருந்ததில் நல்ல செட் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.

எங்களை அழைத்துச் செல்ல ஒரு பஸ் தயாராய் நின்றிருந்தது. மற்ற அப்பார்மெண்டில் இருந்த 10 பேரோடு நாங்களும் சேர்ந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். வேறொரு இடத்தில் இருந்த இன்னொரு கெஸ்ட் ஹவுஸில் இன்னும் 16 பேரை ஏற்றிக் கொண்டு BIMன் ஹெட் ஆஃபிஸுக்குப் போய்ச் சேர்ந்த போது மணி 9:30. அங்கே எச்.ஆர் இரண்டு பேர் எல்லோரின் பேப்பர்களையும் சரி பார்த்தார்கள். பின்னர் எங்களுக்கு ஒரு மாதம் ட்ரெயினிங் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அது முடிந்த பின்னரே ப்ராஜெக்டில் போடுவார்கள் எனவும் அறிவித்தனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, டிரிபிள் இ, எம்.சி.ஏ போன்ற கம்ப்யூட்டரோடு கொஞ்சம் தொடர்புடைய படிப்புகள் படித்திருந்த 15 பேர் ஒரு குழுவாகவும், மற்ற கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகத் தொடர்பில்லாத மெக்கானிக்கல், சிவில், மெட்டலர்ஜி போன்ற படிப்புகள் படித்திருந்த என்னைப் போன்ற 15 பேரை இன்னொரு குழுவாகவும் பிரித்திருந்தனர். கெஸ்ட் ஹவுஸ் கொடுக்கப்பட்டிருந்த 15 நாட்களுக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்தும், அதன் பிறகு ஹெட் ஆஃபிஸில் இருந்தும் பஸ் காலை 8:30 மணிக்குக் கிளம்பும் என்று அறிந்தோம்.

அதன் பின்னர் அன்றைய பொழுது ஐடி கார்டுகள் பெறுவதிலும், பே ரோல் படிவங்கள் நிரப்புவதிலும் செலவானது. மாலாவும் செந்திலும் கம்ப்யூட்டர் தெரிந்த குழுவிலும், நானும் ஓமனாவும் கம்ப்யூட்டர் தெரியாத குழுவிலும் சேர்க்கப்பட்டிருந்தோம். மாலைக்குள் எங்கள் பிரிவில் இருந்த மற்ற ஃப்ரஷர்ஸோடு சிறிது அறிமுகம் ஆனது. எங்கள் நால்வரைத் தவிர மற்ற அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டார்கள். அதனாலோ என்னவோ நாங்கள் ஒன்றாகவே திரிய வேண்டியதாய்ப் போய் விட்டது. நானும் செந்திலும் டா போட்டுப் பேசும் அளவுக்கு ஒன்றியிருந்தோம். ஐடி கார்டில் கால் நேம் மட்டும் போடும் வழக்கத்தால் என் பெயரை தேவா என்றே கொடுத்திருந்தேன். முழுப் பெயரைக் கொடுக்கத் தேவை இல்லாதது ஒரு சந்தோசத்தையே கொடுத்தது.

ட்ரெயினிங் செண்டர் இன்னர் ரிங் ரோடில் கோல்ஃப் க்ளப்பைப் பார்த்த படியான அமைப்பில் இருந்தது. இரண்டு வகுப்பறைகள். 15 கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக் திரை, வீடியோ ரெக்கார்டிங் என ஹை-டெக் வகுப்பறைகள். வகுப்பாசிரியர் விரும்பினால் எந்த மாணவரின் முன் இருக்கும் திரையையும் மெயின் திரைக்குக் கொண்டு வர இயலும். காலையில் மூன்று மணி நேரம், ஒரு மணி நேர லஞ்ச் ப்ரேக், மதியம் மூன்று மணி நேரம் என்று ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் மட்டுமே வகுப்பு. காலையில் ஒரு முறை மதியம் ஒரு முறை டீ ப்ரேக். லன்சும் அங்கேயே வழங்கப் பட்டது. ஒரு மாதம் கல்லூரிப் படிப்பையே தொடர்ந்தது போல கம்ப்யூட்டரில் ஏபிசிடியிலிருந்து எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.

15 நாட்கள் கெஸ்ட் ஹவுஸ் வாசத்தின் போதே ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அருகருகே இரண்டு அப்பார்ட்மெண்ட்களை - நானும் செந்திலும் ஒரு அப்பார்ட்மெண்டிலும், மாலாவும் ஓமனாவும் ஒரு அப்பார்ட்மெண்டிலும் - வாடகைக்கு எடுத்திருந்தோம். அட்வான்ஸ் கொடுப்பதற்கு அலுவலகத்திலேயே 0% வட்டியில் கடன் கொடுத்தார்கள். கல்லூரியில் படிக்கும் போதே பார்ட் டைமாக வேலை பார்த்ததன் மூலம் சேர்த்து வைத்திருந்த தொகை முதல் மாதத்தை ஓட்ட உதவியது. நான்கு பேரும் ஒன்றாகவே சமைத்து சாப்பிட்டோம். சாப்பாட்டு செலவை நான்காகப் பிரித்துக் கொள்வது என்று ஒப்பந்தம். நான் வெஜிடேரியன் சமைக்கும் போது மட்டும் வெளியில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டான் செந்தில். 

வார இறுதிகளில் பெங்களூரின் யூத் ஸ்பாட்டுகளை பெரும்பாலும் நான்கு பேராக அல்லது செந்திலைக் கழட்டி விட்டு மூன்று பேராக சுற்றுவது எங்களுக்கு வழக்கமாகிப் போனது. ரோட்டைக் கடக்கும் போது கையைப் பிடித்துக் கொள்வது, சினிமா தியேட்டரில் வன்முறை மற்றும் பயமுறுத்தும் காட்சிகள் என் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வது் என மாலா என்னுடன் ஒன்றியிருந்தாள். ஹோட்டலில் சாப்பிடச் செல்லும் போது செலவை மாலாவே ஏற்றுக் கொள்வாள். என்னை பர்ஸைத் திறக்க விடுவதே இல்லை. பர்ஸ் பெரும்பாலும் காலியாகவே இருந்ததால் நானும் பெரியதாகக் கவலைப் படவும் இல்லை. சம்பளம் வந்ததும் வரும் முதல் வார இறுதியில் ஊருக்குப் போக எனக்கும் சேர்த்து கே.பி.என்னில் டிக்கெட் புக் செய்தாள்.

சம்பள நாளும் வந்தது. காலை எழுந்ததும் ஓடிப் போய் ஏ.டி.எம் கார்டைப் போட்டு ஐந்திலக்கத் தொகை அக்கவுண்டில் விழுந்திருந்ததைப் பார்த்ததும் தான் மனது நிம்மதியானது. மாலை வகுப்பு முடிந்ததும் மாலாவை இழுத்துக் கொண்டு கமர்சியல் ஸ்ட்ரீட்டுக்குப் போனேன். மாலாவுடன் தான். கடையில் பார்த்துப் பார்த்து அம்மாவுக்கும் ஆத்தாவுக்கும் புடவை எடுத்தேன். அப்பாவுக்கு ஒரு சட்டை மட்டும். ஊருக்குப் போய் ஒரு வேட்டி வாங்கிக்கொள்ளலாம். தங்கைக்கு ஒரு சுடிதார். பெங்களூர் குளிருக்கு ஒரு ஜெர்க்கின் வாங்கிக் கொண்டேன். மாலா எதுவுமே வாங்காமல் வந்துகொண்டிருந்தாள்.

“என்ன நீ எதுவும் வாங்கலையா?”

“அதான் வாரா வாரம் வர்றேனே. வந்து வாங்கிட்டுத்தானே இருக்கேன்?”

“இல்ல ஃபர்ஸ்ட் சேலரி வந்திருக்கே? அம்மா அப்பாவுக்கு எதுவும் வாங்கலையா?”

“ஃபர்ஸ்ட் சேலரியில இதைத்தான் வாங்கணும்னு நான் ஒரு கனவே வச்சிருக்கேன்”

“என்ன கனவு?” எம்.டி.ஆர் சாஃப்டீ இரண்டு வாங்கி அவள் கையில் ஒன்றைக் கொடுத்துக் கொண்டே கேட்டேன்.

“ஒரு வண்டி வாங்கனும்”

“ஸ்கூட்டியா ஹோண்டாவா?”

என்னை எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள். “பல்சர் 150சிசி”

(தொடரும்)


அடுத்த பாகம் இங்கே

No comments: