Friday, May 1, 2009

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் - தொடர்கிறது

மன்சூர் அலிகான் தேர்தலில் தோல்வி அடைந்தால் சாக்கு சொல்வதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. அவர் தான் ஒரு பெரிய கட்சியின் சார்பில் போட்டி போடுவதாக மனதில் நினைத்துக் கொண்டு மாற்று வேட்பாளராக தனது மனைவியை மனு தாக்கல் செய்ய வைத்திருந்தார். வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் நாள் முடிந்ததும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் பார்த்தால் அவர் மனைவியும் இருக்கிறார். தேர்தல் அதிகாரிகளிடம், இவர் எனக்கு மாற்று வேட்பாளர், இவர் மனுவை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டதற்கு, சுயேச்சைகளுக்கு எல்லாம் மாற்று வேட்பாளர் கிடையாது. அது பெரிய கட்சிகள் சார்பில் போட்டி போடுபவர்களுக்கு மட்டும் தான் என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டாராம். ஆகவே, மன்சூர் அலிகான் தேர்தலில் தோற்றுப்போனால், அதற்கு காரணம், அவரது வோட்டுக்களை அவர் மனைவியே பிரித்து விட்டதால் தான்.

சிதம்பரத்தை எதிர்த்து ராசிவ் காந்தி.
சிவகங்கையில் சிதம்பரம் ராஜிவ் பெயரை சொல்லி வோட்டு கேட்க முடியாது. ஏனென்றால் ராஜிவ் காந்தி அவரை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆம், ஈழத்தமிழர்கள் அழிக்கப் படுவதற்கு பாசிச காங்கிரஸ்சே காரணம் என்பதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரிய தலைகளை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக சிதம்பரத்தை எதிர்த்து ராஜிவ் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவரை நிறுத்தி இருக்கின்றனர். இதில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பதிமூன்று கணினி பொறியாளர்களை கேள்விப்படாத நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.

இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் செலக்டிவ் அம்னீசியா
ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரை ஈந்து மொத்த தமிழ் நாட்டையும் திரும்பி பார்க்க செய்த இளைஞன் முத்துக்குமாரை பற்றிய கேள்விக்கு அறிக்கை திலகம், பெரியாரின் பேரன் "முத்துக்குமரா? யாரது?" என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இவர், ஒரு வேலை வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று விட்டால், ஈரோடா அது எங்கே இருக்கிறது என்று கேட்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இதற்காகவாவது இவரை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் ஈரோட்டு மக்கள். இல்லையேல், அவர்களை முத்துக்குமாரின் ஆவி சத்தியமாக மன்னிக்காது.

மேலும் பார்ப்போம்.

No comments: