Friday, May 7, 2010

உளவு



“இது நம் திருமண நாளுக்காக” என்றவாறு தன் கையிலிருந்த ஷாம்பெயின் கோப்பையை உயர்த்தி பிடித்துவிட்டு, கோப்பையிலுருந்த ஷாம்பெயினை ஒரு சீப்பு சீப்பினார்.


எதிரே அவர் மனைவி ஒரு புன்னகையுடன் தன் கோப்பையைக் கீழிறக்கினாள்.

இரண்டாவது ஸிப் எடுக்கும்போது புரை ஏறியது.. நெஞ்சைப் பிடித்துகொண்டு இருமினார்.

மனைவி புன்னகை விலகாமல் அவரையே பார்த்தாள்.

இருமல் அடைப்பாகி கையிலிருந்த கோப்பையை கீழே போட்டு விட்டு மேஜை மேலேயே விழுந்தார்.

மனைவி இயல்பாக எழுந்து, அவர் கழுத்தில் விரல் வைத்துப் பார்த்தாள். மேஜை மீதிருந்த செல்பேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினாள்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்

“டியர்! ஐ யாம் ஹோம்” என்றவாறு உள்ளே நுழைந்த அவர் யாரையோ தேடினார். ஒவ்வொரு அறையாக தேடி விட்டு, கடைசியாக சமையலறைக்குள் வந்தார். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.

“வேலைக்காரி எங்கே? நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?”

“இன்றைய தினத்தை நாம் தனியாக கழிப்பதற்காக அவளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி விட்டு என் கையால் சமைத்திருக்கிறேன்.”

“வாவ் க்ரேட். கோழியின் வாசம் என்னை இப்போதே சாப்பிட சொல்கிறது”

“சாப்பாடு ரெடி. மேஜை மீது பரப்பி இருக்கிறேன். சாப்பிடலாம்”

“நான் போய் ஷாம்பெயின் எடுத்து வருகிறேன்”

ஷாம்பெயினைத் திறந்து க்ளாஸ் ஹொல்டரில் இருந்த கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒரு கை தேர்ந்த பட்லரின் திறமையோடு ஊற்றி மனைவியிடம் கொடுத்தார். இன்னொரு கோப்பையை எடுத்து அதிலும் ஊற்றி ஷாம்பெயின் பாட்டிலைக் கீழே வைத்தார்.

“இது நம் திருமண நாளுக்காக”

ஒரு மணி நேரத்துக்கு முன்னால்

கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்தாள். லைட்டரைக் கொளுத்தி காகிதத்தைப் பற்ற வைத்தாள். எரிந்து முடிந்ததும் அந்தக் காகிதத்தை டாய்லட்டில் போட்டு ஃப்ளஷ் செய்தாள். இரண்டாம் முறையும் ஃப்ளஷ் செய்து விட்டு வெளியே வந்தாள்.

சமையலறைக்கு வந்து ஷாம்பெயின் கோப்பைகளை எடுத்து துணியால் துடைத்தாள். மேஜை இழுப்பறையைத் திறந்து உள்ளே இருந்து “PEANUT OIL” என்று எழுதப்பட்ட பாட்டிலை வெளியே எடுத்தாள். குக்கிங்க் ப்ரஷ்ஷால் அந்த எண்ணையை தொட்டு 6 ஷாம்பெயின் கோப்பைகளின் உள்ளேயும் தடவினாள்.

ரெஃப்ரிஜிரேட்டரில் இருந்து கோழிக் கறியை எடுத்து சமைக்கத் தொடங்கினாள்.

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்

உடற்பயிற்சி அறையில் வழக்கமான அரைமணி நேர உடற்பயிற்சியை முடித்தாள். வெளியே வந்து வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் சிறிது நேரம் நீந்தினாள். பின்னர் குளியலறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து ஹாலில் அமர்ந்தாள்.

வேலைக்காரி கையில் ஜூஸ் கிளாசையு அவளிடம் நீட்டி விட்டு, கையிலிருந்த அன்றைய தபால்களை அவள் முன்னால் இருந்த மேசையின் மீது வைத்தாள்.
ஜூஸை சீப்பிக் கொண்டே தபால்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

XXX முக்கியம் XXX
என்று எழுதப்பட்ட தபால் நிலைய முத்திரை குத்தப்படாத அந்தக் கடிதம் அவளை ஈர்த்தது. ஜூஸைக் குடித்து விட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

கவரைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்தாள்.

“சந்தேக விதை விழுந்துவிட்டது. முடித்துவிடு” என்று எழுதியிருந்ததைப் படித்தாள். கையிலிருந்த லைட்டரால் கடிதத்தின் கவரைக் கொளுத்தி சாம்பலை டாய்லட்டுக்குள் போட்டாள்.

செல் பேசியை உயிர்ப்பித்தாள்.

“ஹனி. இன்றைய தினத்தை நாம் வீட்டிலேயே கொண்டாடலாமே? ரெஸ்டாரண்ட் பிளான் வேண்டாமே?”

மறுமுனை சொன்னதை மௌனமாக கேட்டாள்.

“தேங்க் யூ ஹனி”

செல்பேசியை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.

“மார்சி. நீ வீட்டுக்கு போகலாம். ஜோவையும் போகச் சொல்லிவிடு. இன்றைய மாலையை நானும் அவரும் தனியாகக் கழிக்க விரும்புகிறோம்”

“சரி அம்மா. நாளை காலை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மார்சி வெளியேறினாள்.
மீண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கையிலிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தாள்.

இரண்டரை மணி நேரத்துக்கு முன்

அந்த உருவம் புதருக்கு அருகில் மறைந்திருந்தது. பையில் வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டது. தபால்காரர் அந்த வீட்டின் தபால் பெட்டியில் கடிதங்களைப் போட்டுவிட்டு நகர்ந்தார். அவர் அந்தப்பக்கம் நகர்ந்ததும், வேகமாக அந்தப்பெட்டியை நெருங்கி கையில் இருந்த கடிதத்தை எடுத்து அதற்குள் போட்டு விட்டு விரைந்தது.

வாட்ச்மேன் போஸ்ட்மேன் அந்தப்பக்கம் போனதைப் பார்த்ததும் தபால் பெட்டியைத் திறந்து தபால்களை வெளியே எடுத்தான்.

வீட்டுக் கதவின் அருகில் இருந்த காலிங்க் பெல்லை அடித்தான்.

மார்சி வந்து கதவைத்திறந்து அவன் கையில் இருந்த கடிதங்களை வாங்கிச் சென்றாள்.
உள்ளே வந்த மார்சி கடிதங்களை மேஜை மீது வைத்து விட்டு, மணியைப் பார்த்தாள்.
‘அம்மா உடற்பயிற்சி முடித்து வரும் நேரம்’ - என்று நினைத்துக் கொண்டு ஜூஸ் கலக்க சென்றாள்.

அவள் உடற்பயிற்சி அறையில் வழக்கமான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

எட்டு மணி நேரத்துக்கு முன்

அவரது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முன் ஒரு பெரிய காகிதத்தில் ஒரு வருட கேலண்டர் இருந்தது. அதில் சில நாட்கள் சிவப்பு மையில் வட்டமிடப் பட்டிருந்தன. சில நாட்கள் ஆரஞ்சு வண்ணத்தில், சில நீல வண்ணத்தில்.

தலையில் கை வைத்தவாறு இருந்தார்.

அவர் முன்னால் உட்கார்ந்திருந்தவன் தன் பையில் இருந்து கைக்கடிகாரத்தை எடுத்து மணியைப் பார்த்துக்கொண்டான்.

“பீட், நம் அலுவலக ரகசியங்கள் வெளியே செல்கின்றன என்று 6 மாதங்களுக்கு முன் எஃ.பி.ஐயிடம் இருந்து தகவல் வந்த உடனே நம் அலுவலகத்தில் இருக்கும் அந்த கறுப்பு ஆட்டைக் கண்டுபிடிக்க ஆவன செய்து விட்டேன். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சொன்னேன். அவர்கள் அனுப்பிய அறிக்கைப்படி அனைவரும் சுத்தமானவர்கள்.”

“அப்படியென்றால் நம் ரகசியங்கள் எப்படி வெளியேறுகின்றன?”

“அதை மேலும் ஆராய நான் சில தேதிகளைப் எஃப்.பி.ஐ யிடம் இருந்து பெற்றேன். அந்தத் தேதிகளில் தான் நம் ரகசியங்கள் வெளியே சென்றிருக்கின்றன. அந்த நாட்களில் நான் என் மனைவியுடன் வெளியூரில் விடுமுறையில் இருந்திருக்கிறேன் அல்லது ஏதாவது காரணம் சொல்லி என் மனைவி அலுவலக நேரத்தில் என்னை வீட்டுக்கு அழைத்திருக்கிறாள்.”

“உங்கள் மனைவியை சந்தேகப் படுகிறீர்களா?”

“என் மனைவி வைரம். என்னுடன் இருபது வருடங்களாக குடும்பம் நடத்துகிறாள். ஆனால் யாரவது வெளி நபர்கள் அல்லது ஏஜென்சிகள் அவளை மிரட்டலாம் என்று சந்தேகப்படுகிறேன்”

“இதில் நான் என்ன செய்ய வேண்டும்?”

“இந்த அலுவலகத்தில் எனக்கு அடுத்து நீதான். என் நம்பகமானவனும் கூட. அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். எஃப்.பி.ஐக்கு நான் ரிப்போர்ட் அனுப்புமுன் இதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுக்கிறேன்”

“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு வராமல் நான் இந்த விசாரணையை முடிக்கிறேன்”

“நீயே இதில் பெர்சனலாக செயல்படு. வேறு யாரையும் பயன்படுத்த வேண்டாம்”

“உறுதியாக”

“நீ. போகலாம்”

“வருகிறேன் சர். விசாரணை முடியும் வரை உங்கள் மனைவியுடன் வழக்கமாக இருங்கள். அவரை அலர்ட் செய்துவிட வேண்டாம்”

“இதை நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை”

அவன் வெளியேறியதும் தனது பைப்பை எடுத்து புகையிலையை நிரப்பி பற்ற வைத்து புகையை விட்டத்தை நோக்கி வெளியிட்டார். வெளியேறிய புகையை வெறித்து பார்த்தவாறு இருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்

அதி முக்கியமான அந்த கோப்பை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டின் இராணுவம் சம்மந்தப்பட்ட கோப்பு அது. இவருக்கு நேரடியாக வந்து சேரும் தகவல். இவரைத்தவிர இவரது அலுவலகத்தில் வேறு யாரின் பார்வைக்கும் போகாது. அதில் உள்ள செய்திகளை இவர் மனம் ஆழ ஆராய்ந்து கொண்டிருந்தது.

இவர் அறைக்குள் அந்தக் கோப்பைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன், தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டான். மூன்று முறை மணி அடித்ததும் தொலை பேசியை வைத்து விட்டான். பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக இரண்டு நிமிடம் கழிந்ததும் மீண்டும் தொலலபேசியை எடுத்து மற்றொரு எண்ணைத் தொடர்பு கொண்டான். இரண்டு மணி அடித்ததும் மீண்டும் தொடர்பைத் துண்டித்தான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக ஒரு நிமிடம் ஆனதும் முதலில் தொடர்பு கொண்ட எண்ணைத் தட்டினான். ஒரு மணி அடித்ததும் தொலைபேசியைத் துண்டித்தான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே அவரது அறையில் தொலைபேசி ஒலித்தது. அவர் பதட்டமாகப் பேசினார். பேசிவிட்டு, கையில் இருந்த கோப்பை, அவரது ஸேஃபுக்குள் வைத்து விட்டு வெளியே வந்தார்.

“பீட். நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. நான் பங்கு கொள்ள வேண்டிய மீட்டிங்குகளைப் பார்த்துக் கொள். ஒரு முக்கியமான மீட்டிங்கை நான் கான்சல் செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

“அவர் அந்தப்பக்கம் போனதும், இவன் கணிணியில் சில பொத்தான்களைத் தட்டினான். அவரது அறையில் பொருததப்பட்ட CCTV யின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினான். இதுவரை பதிவான காலி அறையின் வீடியோவை திரும்ப திரும்ப பதியுமாறு விட்டு விட்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

பையில் இருந்து இரண்டு கையுறைகளை எடுத்து அணிந்தான். இரண்டு கைகளின் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் அவரது ஸேஃபில் இருந்த கைரேகை அறியும் பட்டியில் வைத்தான். ஸேஃபின் மேலே இருந்த இரும்புப் பட்டை விலகியது. உள்ளே இருந்த சாவித் துவாரத்தில் பையிலிருந்து எடுத்த சாவியை நுழைத்தான். திறந்ததும் ஸேஃப் திறந்து கொண்டது. உள்ளே இருந்த கோப்பை எடுத்து கையிலிருந்த போர்ட்டபிள் ஸ்கேன்னரில் பதிவு எடுத்துக் கொண்டு, கோப்பை இருந்த மாதிரி வைத்து விட்டு ஸேஃபை பூட்டினான்.

திரும்ப தன் அறைக்கு வந்து CCTVயின் கட்டுப்பாட்டை பழைய படிக்கு மாற்றிவிட்டு தன் கையில் இருந்த ஸ்கேன்னரில் இருந்த கோப்பின் பிரதிகளை உடனடியாக ஒரு சிப்புக்கு மாற்றினான். பின் அந்தச் சிப்பை தன் ஷூவில் பொருத்திக் கொண்டான்.

இருபது வருடங்களுக்கு முன்

அந்த சர்ச்சின் வாசலில் கார்கள் குவிந்திருந்தன.

இசை ஒலித்தது. முதலில் ஜான் நடந்து வந்தார். பின்னர் சூசன்.

அவர்களிருவரும் பாதிரியாரின் முன் நின்றனர்.

“மிஸ். சூசன், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ்டர். ஜான் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவர் மனைவியாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”

“சம்மதிக்கிறேன்”

“மிஸ்டர். ஜான், நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதிவரை மிஸ் சூசன் அவர்களுடன் உங்கள் சுக துக்கங்களை அவரது கணவனாகப் பங்கு கொள்ள சம்மதிக்கிறீர்களா?”

“சம்மதிக்கிறேன்”

“உங்கள் இருவரையும் கணவன் மனைவி என இறைவனின் பெயரால் அறிவிக்கிறேன்”

இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

“நீங்கள் இப்போது உங்கள் மனைவியை முத்தமிடலாம்”

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்

பாப் இசை அந்த பாரின் எல்லா ஸ்பீக்கர்களிலிருந்தும் வழிந்து கொண்டிருந்தது. ஜான் தனது இரண்டாவது பியரை சிப்பினான். அங்கே இருந்த அனைவரும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

‘என்னிடம் என்ன குறை? அழகில்லையா? இல்லை பணமில்லையா? ஒரு செனட்டருக்கு மகனாகப் பிறந்தும் நமக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்ணும் நிலையாக அமைய மாட்டேன் என்கிறாள்?’ என்று எண்ணிக் கொண்டே அந்த பியரையும் காலி செய்து விட்டு, பார் டெண்டரை நோக்கி “ஒன் மோர்” என்று சொல்லிவிட்டு திரும்பும்போது அவளைப் பார்த்தான்.

கண்டிப்பாக எந்த ஒரு ஆணும் அவளைத் திரும்பிப் பார்க்காமல் போக மாட்டான். அப்படி ஒரு அழகு. உடன் வந்தவனை அவள் நடத்திய விதம் ஒரு அடிமையை ராணி நடத்துவது போல இருந்தது. ஜான் எழுந்து நேராக அவளிடம் சென்றான்.

“ஹாய், என் பெயர் ஜான். மூன்றாம் வருடம். நீ?”

“சூசன் முதல் வருடம்”

“நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ என்னுடன் ஒரு ட்ரிங்க் அருந்துவாயா?”

“பிறகு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

ஜானின் முகம் சுண்டிவிட்டது. மீண்டும் பாருக்கு போய் அமர்ந்து கொண்டு தன் பியரைச் சப்பினான்.

நான்காவது பியரை முடித்துவிட்டு, “ஒன் மோர்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, “எனக்கும் ஒன்று சொல்வாயா?” என்ற குரல் கேட்டு திரும்பினான்.

சூசன் நின்று கொண்டிருந்தாள். அவள் தோள் சிவந்திருந்தது. யாரோ பிடித்து அழுத்தியது போல.

“என்ன காயம்?”

“அந்த இடியட் அத்து மீறப் பார்த்தான். நான் திமிறினேன். அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். விட்டேன் ஒரு அறை ஓடிப் போய்விட்டான்” என்று சிரித்தாள்.

“ரொம்பவும் தைரியசாலிதான். அவன் கத்தி ஏதாவது வைத்திருந்து குத்திவிட்டுப் போயிருந்தால்?”

“செத்துப் போயிருப்பேன். தட்ஸ் ஆல். செத்துபோனாலும் போவேனே தவிர சம்மதமில்லாததை ஏன் செய்ய வேண்டும்?”

“சரியான வாதமாகத்தான் இருக்கிறது”

இப்படித் துவங்கிய பழக்கம் டேட்டிங்கில் முடிந்து ஒரே வீட்டில் குடியேறும் வரை தொடர்ந்தது. ஒரு கூடைப்பந்தாட்டப் போட்டியில் வைத்து சூசனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அவளும் மறுக்காமல் உடனே சம்மதித்தாள்.

இவன் செனட்டர் தந்தையை சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சூசனின் முழு பின்னணியையும் ஆராய்ந்த பின்னரே சம்மதித்தார்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு

அவள் அந்த வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். மிகவும் பதட்டத்துடன் இருந்தாள்.

அந்தப் பெண் அதிகாரி வந்தார்.

“அலெக்சாண்ட்ரா நீ இப்போது உள்ளே போகலாம்”

“காம்ரேட் அலெக்சாண்ட்ரா - வயது பதினெட்டு. தாய் தந்தை இல்லை. எட்டு வயதில் செம்படையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டிருக்கிறாய். ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும். அனைத்து தற்காப்பு கலைகளிலும் தேர்ந்திருக்கிறாய். அனைத்து வகை துப்பாக்கிகளையும் கையாளத் தெரியும்”

“உனக்கு இந்தப் பணியை செய்வதில் முழுச் சம்மதம் தானே?”

“சம்மதம் தான் காம்ரேட்”

“இது தான் உன் அசைன்மெண்ட். அலெக்சாண்ட்ரா. நாளை முதல் உன் பெயர் சூசன் ஸ்கின்னர். உன் குடும்பத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் இதில் இருக்கிறது. நன்றாக மனனம் செய்து கொள். நீ கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஜான் ஃபோர்டை சந்திக்க வேண்டும். அவனை உன் மீது மையல் கொள்ள வைக்க வேண்டும். அவனை நீ மணக்க வேண்டும். உனக்கு வரும் உத்தரவுப் படி நடந்து கொள்ள வேண்டும். ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?”

“இல்லை காம்ரேட்”

“நீ போகலாம்.”

15 comments:

பிரபாகர் said...

ஆஹா!

மேலிருந்து கீழாக... அருமை. இரண்டு முறை படித்தேன்.

பட்டா, முந்திகிட்டேன்!

பிரபாகர்...

Chitra said...

Interesting story .... good writing style. :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கதை எழுதறதில புதுசு புதுசா யுத்தி கண்டுபிடிக்கறீங்க முகிலன்.. இதுவும் நல்லா வந்திருக்கு.. வாண்டேஜ் பாயிண்ட் நினைவுக்கு வருது.. :))

அதுவுமில்லாம, அந்தந்த நேரத்துக்கான தகவல்களை மட்டுமே சொல்லிட்டு, அவைகளுக்கான தொடர்பை நாங்களே புரிஞ்சுக்கற மாதிரி விட்டிருக்கீங்க.. அதுவும் நல்லாயிருக்கு.. குட் ஜாப்..

vasu balaji said...

ஊருக்கு வர மூட்ல உக்காந்து எழுத முடியலைன்னு தெரியுது:). மீள் மீள் பதிவு எப்ப?:)). இன்னொரு வாட்டி கதை சூப்பர்.

பனித்துளி சங்கர் said...

மீள்பதிவு என்றாலும் இன்னும் அதன் சிறப்பு மாறாமல் புதுமையாகத்தான் இருக்கிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

தர்ஷன் said...

புதுமையான அருமையான முயற்சி
வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

அருமையான கதை.

Anonymous said...

நல்லாருக்கு. இப்ப பெண்கள் மாதிரி ஆண்களும் இந்த டைப் உளவு வேலை ஆரம்பிச்சிருக்காங்க. பாகிஸ்தான்ல ஏமாந்த இந்திய பெண் அதிகாரி இப்படித்தானாம்.

நசரேயன் said...

//வானம்பாடிகள் said...
ஊருக்கு வர மூட்ல உக்காந்து எழுத முடியலைன்னு தெரியுது:). மீள் மீள் பதிவு எப்ப?:)). இன்னொரு வாட்டி கதை சூப்பர்//

அண்ணே அடுத்த கதை முகிலன் பேருல நம்ம கடையிலே இருந்து சுடச் சுட வருது

கலகலப்ரியா said...

அட இந்த டெக்னிக் நல்லாருக்கே.. தலை கீழா நின்னு எழுதினீங்களா..

சாமக்கோடங்கி said...

எப்படி....? இது நீங்க எழுதினதா..? மிகவும் அருமை..

ராஜ நடராஜன் said...

//அண்ணே அடுத்த கதை முகிலன் பேருல நம்ம கடையிலே இருந்து சுடச் சுட வருது //


இப்பத்தானே தெரியுது பதிவு நசர் கான்செப்ட் ரகசியம்!

Ahamed irshad said...

Good Story, Nice Write up....

Anonymous said...

தமிழ் நாட்டுக்கு இன்னொரு ராஜேஷ் குமார் கிடைச்சாச்சு. கதை சொன்ன விதம் ரொம்பா நல்லா இருந்தது

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு முகிலன்.