Thursday, May 27, 2010

ரயில் பயணங்களில்



ஒரு பயணத்தில் நீங்கள் பார்த்த, ஒரு வார்த்தை கூட பேசாத, பெயர்தெரியாத ஒருவர், சில/பல நாட்களுக்குப் பிறகு உங்களை தொடர்பு கொண்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறதா? எனக்கிருக்கிறது. 

நாங்கள் நான்கு நண்பர்கள் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஐந்தாவது நண்பனின் வீட்டுக்கு விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டம் போட்டோம்.

நாங்கள் யார்? 
முதலில் நான். ரமேஷ். கந்தக பூமியான விருதுநகர்க்காரன். 
அடுத்தவன் மகேஷ் - மாற்றுத் திறனாளி. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர இன்னொருவரின் உதவி வேண்டும். ஆனால் தன்னம்பிக்கைக்கு மறுபெயர் அவன் தான். பல்கலைக்கழகத்தில் பியூனிலிருந்து துணைவேந்தர் வரை அவனைப் பார்த்தால் “ஹாய் மகேஷ்” என்று விஷ் செய்யாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரிடமும் நட்பு பாராட்டுபவன்.
அடுத்தவன் அபிஷேக். அப்பா ஏர்ஃபோர்ஸில் இருப்பதால் இந்தியாவின் அத்தனை நகரங்களிலும் படித்திருக்கிறான். தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது.
கடைசி ஆள் விக்டர். இவன் அப்பாவும் ஏர்ஃபோர்ஸ். பல பள்ளிகள். தமிழ் பேச மட்டும். ஆனால் இவனிடம் தூத்துக்குடி தமிழ் விளையாடும். 
நாங்கள் பார்க்கப் போவது எட்வர்ட். மார்த்தாண்டத்தில் பிறந்து வளர்ந்தவன். கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழும், ஆங்கிலமும் பேசுவான்.

எங்கள் நால்வரில் ஏற்கனவே எட்வர்ட் வீட்டுக்குப் போனது நான் மட்டுமே. அதனால் அனைவரும் வழிக்கு என்னையே நம்பியிருந்தனர். மதுரையிலிருந்து இரவு கிளம்பும் கொல்லம் பாஸஞ்சரில் அன் ரிசர்வ்டில் போகலாம் என்று முடிவெடுத்து மதுரை ஜங்க்‌ஷனுக்குப் போனோம். 
அன் ரிசர்வ்டில் கூட்டமாக இருந்ததால் டி.டி.ஆர் ஒருவரைப் பார்த்து சீட் ரிசர்வேசன் பெற்றுக் கொண்டு அதில் மகேஷை ஏற்றி நாங்களும் ஏறிக்கொண்டோம். 

நாகர்கோவில் ஜங்க்சன் தாண்டியதும் அடுத்த ஸ்டேஷன் குழித்துறை. அதில் இறங்கினால் பஸ் ஸ்டேண்டுக்கு நடந்தோ ஆட்டோ பிடித்தோ போனோமென்றால் புதுக்கடை பஸ்ஸைப் பிடித்தால் பஸ் ஸ்டாப்பில் எட்வர்ட் காத்திருப்பான். இதுதான் திட்டம்.

பேச்சும் விளையாட்டுமாக பொழுது கழிந்தது. திருநெல்வேலி ஜங்க்சன் வரும் வரை முழித்திருந்த நானும் மகேஷும் சீட்டிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம். 

தூக்கம் கலைந்து எழுந்தேன். மகேஷ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அபிஷேக்கும் விக்டரும் கதவருகில் நின்றுகொண்டிருந்தனர். ரயில் எந்த இடத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. முகம் கழுவி வரலாம் என்று போனேன். விக்டரும் அபிஷேக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டேய்! ரோடு வீடெல்லாம் பாக்கும்போது கேரளாவுக்குள்ள வந்துட்டோம் போலடா” விக்டர் வெளியே மலையும் மலை சார்ந்ததுமாக இருந்த பரப்பைப் பார்த்த அதிர்ச்சியில் சொன்னான்.
“ச்சே ச்சே. அப்பிடியெல்லாம் இருக்காதுடா. இது தமிழ்நாடுதான்” ஆணித்தரமாக அபிஷேக்.
“எப்பிடிடா சொல்ற?”
“ஒரு தமிழ்ப்பட போஸ்டர் பாத்தேண்டா”
“டேய் ங்கொய்யால, உனக்கு கைல வச்சிப் பாத்தாலே தமிழ் எழுத்து எதுன்னு சொல்லத்தெரியாதேடா. தூரத்துல இருக்கிற போஸ்டரை எப்பிடிடா பாத்த? ” இடையில் பதட்டத்துடன் புகுந்தேன். 
“தமிழ் மாதிரி இருந்திச்சி”
“அடப்பாவி. மலையாளமும் தமிழ் மாதிரி தாண்டா இருக்கும். மணி என்னாச்சிடா?”
“6:30”
“அய்யய்யோ. இன்னுமா குழித்துறை வராம இருக்கும்?”
“குழித்துறையா? அந்த ஸ்டேஷன் அப்பவே போயிருச்சேடா? நாம மார்த்தாண்டத்துலயில்ல எறங்கணும்?”
“நாசமாப் போச்சி. அனேகமா அடுத்த ஸ்டேஷன் திருவனந்தபுரம் தான்” நான் சொல்லி வாய் மூடவில்லை. ரயில் ஒரு ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. திருவனந்தபுரம் ஜங்க்‌ஷன். தலையில் கை வைத்துக்கொண்டே போய் மகேஷை எழுப்பினேன். அரை குறை தூக்கத்துடன் அவனை தூக்கி ப்ளாட்ஃபார்மில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்தேன்.

“என்னடா மாப்ள. நாகர்கோவில் வந்துரிச்சா? நாகர்கோவில்லயே மலையாளத்துல அனவுன்ஸ்மெண்ட் ஆரம்பிச்சிட்டாய்ங்களா?”

“மவனே. விட்டேனா தெரியுமா? திருவனந்தபுரம் வந்துட்டோம்டா.”

“திருவனந்தபுரமா? சரி. ஒரு டீ சொல்லு” 

“வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வந்துரும். நானே எம்புட்டு ஃபைன் கட்ட வேண்டியிருக்குமோன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”

“மாமு. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா?”

“என்னடா?”

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் மட்டும் போய் எப்பிடியாவது நாலு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன். அப்பிடியே நாலு பேரும் வெளிய போயிடலாம்” விக்டர் சொல்லும் யோசனை சரியாகப் பட்டது. காத்திருந்தோம். விக்டர் வேகவேகமாக திரும்பி வந்தான். 

“டேய் காசு மிச்சம்டா. அங்க டிக்கெட் வாங்க யாரும் இல்லை” 

நல்ல வேளை காசு மிச்சம் என்று போனோம். நாங்கள் போகும் நேரம் ஒருவர் வந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் டிக்கெட்டைப் பார்க்காமல் வாங்கி வாங்கி வைத்துக்கொண்டுதான் இருந்தார். தைரியமாகப் போய் கொடுத்தோம். எங்கள் டிக்கெட்டுகளையும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.  ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தோம். நேராக அங்கே நின்றிருந்த ஒரு ஆட்டோவில் மகேஷை உட்கார வைத்து விட்டு, அவரை கெத்தாகப் பார்த்து, “பஸ்ஸ்டாண்ட் போகணும்” என்றேன். மேலேயும் கீழேயும் வடக்கூர்க்காரர்கள் தென்னாட்டுக்காரர்களைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தார் ஆட்டோ டிரைவர். அப்படியே ஸ்லோ மோஷனில் தலையைத் திருப்பி கையை உயர்த்தி “இவிடதான் உண்டு” என்று எதிர்க்கட்டடத்தைக் காட்டினார். அசடு வழிந்து விட்டு மறுபடியும் ரோட்டைக் கடந்து பஸ் ஸ்டேண்டுக்குப் போனோம். மார்த்தாண்டம் என்று தமிழில் எழுதியிருந்த - கேரளாக்கராவிங்க ரொம்ப நல்லவிங்க - கேரள அரசுப்பேருந்தில் ஏறி கடைசி சீட்டில் உட்கார்ந்தோம். வாசலுக்கு அருகே விக்டர் உட்கார்ந்திருந்தான். இந்தப் பக்க ஜன்னலில் மகேஷும் அவனுக்கு அருகில் நானும்.

வரிசையாக பலர் வந்தார்கள். விக்டரிடம் என்னவோ கேட்டார்கள். அவன் ஏதோ பதில் சொன்னான். அவர்கள் பஸ்ஸில் ஏறாமல் போய் விட்டார்கள்.

“என்னடா என்ன நடக்குது அங்க?”

“என்னவோ வந்து கேட்டாங்கடா. நான் ‘அது இல்லா’ னு சொன்னேன். போயிட்டாங்க”

“அது இல்லான்னா” 
“மலையாளம் தெரியாதுன்னு சொல்றதுக்கு அதுதானடா?”
“அதுக்கு அறியில்லானு சொல்லனும்டா” - மகேஷ் தலையில் அடித்துக்கொண்டான். அவனுக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும். இப்போது மகேஷ் வாசலுக்கருகில் அமர்ந்து கொண்டான். அடுத்து ஒரு மலையாள ஃபிகர் வந்தது. “ஈ பஸ் மார்த்தாண்டாம் போயா?” 
“பூவாம்” என்று சொல்லிவிட்டு விக்டரை அவன் பார்த்த பார்வையின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஃபிகர் பஸ்ஸில் ஏறி என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டது, என்று எழுதத்தான் ஆசை...

ஒருவழியாக மார்த்தாண்டம் போய், அங்கிருந்து புதுக்கடை செல்லும் நகரப் பேருந்தில் ஏறி எட்வர்ட் வீட்டுக்குப் போய் விட்டோம். இதற்குள் எட்வர்ட் நாங்கள் வரவில்லை என்று எங்களைத் தேடி மார்த்தாண்டம் போயிருந்தான்.

நான்கு நாட்கள் அங்கே தங்கியிருந்து அருகிலிருந்த அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். 

கடைசியாகக் கன்னியாக்குமரிக்குப் போய்விட்டு அங்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு நாகர்கோவில் போய் அதே கொல்லம் பேஸஞ்சரில் மதுரை திரும்புவது என்ற திட்டத்துடன் விவேகானந்தர் பாறை, சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு வந்து நாகர்கோவில் சந்திப்புக்கு வந்தோம் ரயிலில் நாங்கள் சந்திக்கப்போகும் அனுபவத்தைப் பற்றி அறியாமல்.

ரயில் வந்தது. ஒரு பெட்டியில் ஏறி உட்கார இடம் இருக்கிறதா என்று தேடினோம். ஒரு கேபினில் சிங்கிள் சீட்டில் ஒரு இடமும், இன்னொரு கேபினில் எதிரெதிராக இருக்கும் இரண்டு சீட்டுகளும் கிடைத்தன. மகேஷும் விக்டரும் ஒரு சீட்டைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எதிரில் எட்வர்ட் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சீட்டில் அபிஷேக். எனக்கு மட்டும் இடம் இல்லை. 

ஒரு கேபினில் இந்தப்பக்க பெஞ்சில் ஒரு ஃபிகரும், அந்தப்பக்க பெஞ்சில் இரண்டு ஃபிகர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் தரையில் ஒரு ஆள், அவர்களின் தந்தையாக இருக்கலாம், படுத்திருந்தான். ‘ஒரு டிக்கெட் வாங்கிட்டு மூணு பேர் உக்கார்ற எடத்துல படுத்துட்டு வராளுங்க’ என்று மனதில் நினைத்துக்கொண்டே எட்வர்டின் அருகில் போய் சிரமப்பட்டு உட்கார்ந்து கொண்டேன். வழக்கம்போல விளையாட்டும் கேலியுமாக வந்தோம்.

தனியாக உட்கார்ந்திருந்த அபிஷேக் அசந்து தூங்கிவிட்டான். விக்டரும் எட்வர்டும் அவன் மடியில் ஒரு துண்டை விரித்து அதில் 25 பைசா 50 பைசா நாணயங்கள் சிலவற்றையும் போட்டுவிட்டு வந்தனர். அந்த வழியாக பாத்ரூம் போன புண்ணியவான் ஒருவர் என்ன நினைத்தாரோ பையில் கையை விட்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை அந்தத் துண்டில் போட்டுவிட்டுப் போனார். நாங்கள் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் எதற்காகவோ கண்விழித்த அபிஷேக் துண்டைப்பார்த்து விட்டான். எங்கள் வேலை என்பதையும் புரிந்து கொண்டு துண்டை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து விக்டரிடம் ஹிந்தியில் கோபமாக ஏதோ சொன்னான். உடனே நானும் மகேஷும், எங்களுக்குத் தெரிந்த ஹிந்திப்படப் பெயர்களைச் சொல்லி சண்டை போட்டுக்கொள்வது போல நடித்தோம். சிறிது நேரத்தில் சகஜமாகி எங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான். 

இப்போது நான் அந்த தனி சீட்டிற்குத் தள்ளப்பட்டேன். அப்போது ஒரு பாட்டி கதவருகில் கீழே உட்கார்ந்து வந்ததைப் பார்த்தேன். இந்தப் பக்கம் அந்தப் பெண்கள் மூன்று பேரும் வசதியாகத் தூங்கி வருவதையும் பார்த்தேன். எனக்குக் கோபம் வந்தது. எழுந்து நேராக அந்தப் பாட்டியிடம் போய், “பாட்டி நீங்க ஏன் கீழ உக்காந்து வர்றீங்க. வாங்க என்னோட. நான் உங்கள உக்கார வைக்கிறேன்” என்று சொல்லி அழைத்தேன்.

அந்தப் பெண்களில் தனியாகப் படுத்திருந்த பெண்ணின் காலைச் சுரண்டி எழுப்பினேன். எழுந்தவள் “யெஸ்” என்றாள். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் “நாங்கள்லாம் சீட்டு இல்லாம வர்றோம். நீ இன்னா உக்கார்ற எடத்துல தூங்கிக்கினு வர்ற” என்று வழிந்துகொண்டே சொல்லவும். அவள் எழுந்து உட்கார்ந்தாள். நான் பாட்டியைப் பார்த்து, “பாட்டி நீங்க உக்காந்துக்குங்க” என்று நான் உட்கார்ந்து வந்த தனி சீட்டைக் கொடுத்துவிட்டு நான் அந்த ஃபிகரின் பக்கத்தில் உட்கார்ந்தேன். 

இப்போது தான் பார்த்தேன். மேலே இருந்த லக்கேஜ் வைக்கும் இடத்தில் இன்னும் இரண்டு பெண்கள் படுத்து வந்தார்கள். என்னருகில் இருந்த ஃபிகர் அவர்களை எழுப்பவும் அவர்கள் கீழே இறங்கி என் அருகில் ஒருத்தியும் எதிர் சீட்டில் இன்னொருத்தியுமாக அமர்ந்தார்கள். 

இப்போது விக்டர் ஓடோடி வந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டான். நானும் விக்டரும் எங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தோம்.

“டேய் போதுண்டா. நாங்கள்லாம் காலைக் கீழ வக்க முடியல. உங்க ஜொள்ளு ஆறா ஓடுது” என்று பின்னாலிருந்து கமெண்ட் கேட்டது. அந்தப் பெண்களும் அவர்களுக்குள் சிரித்துக்கொண்டே வந்தார்கள். 

திருநெல்வேலி ஜங்க்‌ஷன் வந்தது. எட்வர்ட் கீழே இறங்கி எங்களுக்கு காபி வாங்கப் போனான். எங்கள் அதிர்ஷ்டம் (எட்வர்ட் அதிர்ஷ்டம்?!) பாருங்கள், ப்ளாட்ஃபார்ம் அந்தப் பெண்கள் உட்கார்ந்திருந்த ஜன்னல் பக்கம் இருந்தது. எட்வர்ட் காபியை வாங்கி ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கையில் கொடுத்து, “ப்ளீஸ் பாஸ் இட்” என்றான். அவளும் வாங்கி என்னிடம் நீட்டினாள். நான் அதுவரை பெண்களிடம் பேசிப் பழக்கம் இல்லாததால் வாங்கும் போது விரல் உரசவும் உணர்ச்சிவசப்பட்டு காப்பி கப்பை லேசாக நசுக்கி விட்டேன். காபி கொஞ்சமே கொஞ்சம் இடையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த ஆளின் மீது விழுந்து விட்டது. பாதி கப் காப்பியை வேகமாக விக்டரிடம் பாஸ் செய்துவிட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டேன். ஃபிகர்களோடு வந்தவனாதலால் மறுபடி மறுபடி கேட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் களுக்கென்று சிரித்துக்கொண்டிருந்தனர். எழுந்த ஆள் நேராக பாத்ரூம் போய் முகத்தைக்கழுவி விட்டு திரும்ப வந்தார். வந்தவர் எனக்கும் அந்த ஃபிகருக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டார். 

வண்டி கோவில்பட்டியை நெருங்கவும் என்னிடம் பேச ஆரம்பித்தார். என்ன பண்றீங்க, எங்க படிக்கிறீங்க, என்ன படிக்கிறீங்க, எங்க தங்கியிருக்கீங்க என்று கேள்விகள் கேள்விகள் கேள்விகள். நான் பெரியவர்களை மதிப்பவன் என்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். அவர் காடாத்துணி ஹோல்சேலில் வாங்கி விற்கிறாராம். அதை பற்றியும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கெமிஸ்ட்ரி லேபுக்கு முன்பு காடாத்துணி விற்றதாகவும் சொல்லிக்கொண்டே வந்தார். ‘எப்படா மதுரை வரும்’ என்றிருந்தது. நல்ல வேளையாக வந்து சேர்ந்தது. நாங்கள் வேகமாக இறங்கி யுனிவர்சிட்டிக்கு செல்லும் பஸ் பிடிக்க பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தோம்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எங்கள் ஹாஸ்டலுக்கு ஒரு கடிதம் வந்தது - “ரமேஷ் குமார், ஃபர்ஸ்ட் இயர் எம்.சி.ஏ, பாய்ஸ் ஹாஸ்டல், மதுரை காமாராஜ் யுனிவர்சிட்டி” என்று அரைகுறை முகவரியுடன். ஃப்ரம் அட்ரஸில், “மதர் தெரசா விமன்ஸ் யூனிவர்சிட்டி, கொடைக்கானல்” என்றிருந்தது.

20 comments:

Unknown said...

நாளை நான் இந்தியா செல்கிறேன். நான் விமானம் ஏறி இந்தியாவில் இறங்கும் வரைக்கும் எல்லோரும் என் ப்ளாகையே படித்துக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நீளமான பதிவு

ஜில்தண்ணி said...

அந்த கடுதாசி அந்த ஃபிகர் அனுப்பல
தங்களுக்கு அந்த கல்லூரியில் அட்மிஷன் கிடைத்திருக்காம்

நல்லா இருக்கு
நம்மள கொஞ்சம் பாருங்க
www.jillthanni.blogspot.com

Paleo God said...

//நாளை நான் இந்தியா செல்கிறேன். நான் விமானம் ஏறி இந்தியாவில் இறங்கும் வரைக்கும் //

உங்களுக்கே தமிழ் நாட்டுக்குப் போறோம்ங்கற உணர்வே இல்லைன்னா என்னத்தச்சொல்ல? :-)

கேட்ட ஐட்டத்தெல்லாம் மறக்காம வாங்கிட்டு வ்ந்திடுங்க ஓக்கே! :)

பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

Chitra said...

Have a safe trip! Enjoy.....

vasu balaji said...

வாங்க வாங்க. பில்லா டாப்பு:)). அந்த சிங்கை சிங்கம் வரட்டும் வச்சிக்கிறேன்.:-l, 26 வரீங்கன்னு சொல்லுச்சு.

Prathap Kumar S. said...

கதை நம்ம ஏரியாக்குள்ளு போய்ட்டு வந்திருக்கு... நாகர்கோவில், மார்த்தாண்டம்... ரைட்டு

உங்கள் பயணம் இனிதே அமையட்டும்
பில்ல செம டெர்ரர், :))

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்க‌ள்

Anonymous said...

ஜூனியர்க்கு இது தான் முதல் இந்திய பயணமா

சுசி said...

திட்டலாம்னு வந்தேன் தொடரும் போட்டத்துக்கு..

நல்ல படியா போய்ட்டு வாங்க.. பிள்ளையார வேண்டிக்கிறேன்..

வந்ததும் தொடர்ச்சியோட பயணம் பத்தியும் எழுதுங்க.

க ரா said...

இனிய பிராயன வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

அது சரி, அந்தக் கடுதாசியில என்ன எழுதியிருந்துச்சு?

ரோஸ்விக் said...

அப்பு... ஆம்பிளைப் பக்கிக கதையை அவ்வளவு நேரம் சொல்லிப்புட்டு... பொம்புளைப்புள்ளைக கதையை பொசுக்குன்னு முடிச்சா எப்புடி?? :-)))

பயணம் சிறக்க வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

//நாகர்கோவில் ஜங்க்சன் தாண்டியதும் அடுத்த ஸ்டேஷன் குளித்தரை//

அது குளித்தரை இல்லை.. குழித்துறை.

கலகலப்ரியா said...

er... இந்தக் கதையில்... தொடரும்... விட்டு போச்சா...

ஹேமா said...

முகிலன்...கதை தொடருதா ?

சரி....சரி
சுகமா போய்ட்டு சீக்கிரமா வாங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஃபிகர் பஸ்ஸில் ஏறி என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டது, என்று எழுதத்தான் ஆசை.
//

இது டூ மச் சார்..

ஆமா .. கடைய ஏன் பொசுக்குனு முடிச்சிட்டீங்க?..ஓ.. ஊருக்கு போகும் அவசரமா?..

ஓ.கே சார்.. ஜாலியா வெயில அனுபவிச்சுட்டு வாங்க..ஹி..ஹி

Prathap Kumar S. said...

அமைதிசாரல் said...
//குளித்தரை இல்லை.. குழித்துறை.//
ஹஹ. குழித்துறையை எல்லாரும் குளித்தரைன்னுதான் நம்ம ஊர்ல சொல்லுவாங்க அதை அப்படியே போட்டுட்டாரு...அவருக்கு என்ன தெரியும்...விட்ருங்க :))

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி... சுவாரசிய எழுத்தில் நல்ல பயண அனுபவம்.

பனித்துளி சங்கர் said...

////////அண்ணன் மாதவராஜின் பதிவைப் படித்த போது எனக்கு என் பேராசிரியரின் அறிவுரையை அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியிருந்தது அத்தனையும் நியாயம். ஆனால் உங்கள் தலைப்பும் நர்சிம்மையும் கார்க்கியையும் அவன் இவன் என்று விளித்ததும் கண்டிப்பாக அந்தத் தரப்பை உங்கள் வார்த்தைகளில் இருந்த நியாயத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய, தள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்லும்.
////////

எதையும் சொல்லி இன்னும் இங்கு தீ தூண்ட விரும்பவில்லை .

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. கதையோட முடிவுல இன்னொரு கதை ஆரம்பிச்சா மாதிரி இருக்கு.. :))