Wednesday, December 30, 2009

சுசிலாம்மாவுக்கு சில கேள்விகள்

முன்குறிப்பு: திருமதி.சுசிலா அவர்களின் வலைப்பூவில் இந்த பின்னூட்டத்தை இட்டு வைத்தேன். பதில் ஏதும் வராததால் என் ஆதங்கத்தை பதியும்பொருட்டே இவ்விடுகை. இதை தமிழ்மணத்திலோ தமிழிஷ்ஷிலோ இணைக்க விரும்பவில்லை.


அன்பின் சுசிலாம்மா,  

முதலில் நான் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை மதிக்கிறேன். அந்தக் கருத்துக்கள் மற்ற மதத்தவரையோ சக மனிதனையோ பாதிக்காத வரை. முஸ்லிம்கள் பர்தா அணிவதையோ இந்துக்கள் விபூதி அணிவதையோ, கிறித்தவர்கள் சிலுவை அணிவதையோ, சீக்கியர்கள் டர்பன் அணிவதையோ மூட நம்பிக்கை என்றோ காட்டுமிராண்டித்தனம் என்றோ சொல்பவன் நான் இல்லை.  


நீங்கள் சக பதிவர் ஒருவருக்கு வரைந்த மின்மடலை அவர்தன் பதிவில் வெளியிட்டிருந்தார். அதனைப் படித்ததும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்ததன் வெளிப்பாடே இப்பின்னூட்டம்.  


நீங்கள் இந்தப் பிரச்சனை முழுவதையும் தெரிந்து கொள்ளவில்லையோ என்றே கருதும்படி இருக்கிறது உங்கள் கருத்துக்கள். ஆதலால் உங்களுக்கு இந்தப் பிரச்சனையின் ஆதி மூலத்தை அறியச் செய்ய விரும்புகிறேன். 

சம்மந்தப்பட்ட பதிவர் அவர் ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதைப் பற்றி வெளியிட்ட பதிவில் "நான் விழாவுக்கு பர்தா அணிந்து சென்றிருந்தேன், கடைசி வரை பர்தாவிலேயே இருந்தேன்" என்று சொல்லியிருந்தார். இவர் பர்தா அணிவதும் அதைப் பற்றி பெருமைப்படுவதும் இவர் விருப்பம். அதில் யாரும் தலையிடவில்லை. அதற்கு பின்னூட்டமிட்ட ஒரு விஷமி - நான் பேண்ட்டில் போயிருந்தேன். கடைசிவரை பேண்ட் போட்டுக்கொண்டே இருந்தேன் - என்று எழுதிவிட்டார். அந்த விஷமியின் பின்னூட்டத்தை நான் வன்மையாகவே கண்டிக்கிறேன். இன்னொருவரின் உடை விருப்பம் குறித்து விமர்சனம் செய்ய யருக்கும் உரிமை இல்லை. அது தாயாகவே இருந்தால் கூட.  

இந்த விஷமப் பின்னுட்டத்திற்கு பதில் தரும் வண்ணம் அவர் எழுதிய பதிவு தான் "பர்தா என்றால் என்ன?" என்பது. அதிலும் அவரது கருத்துக்கள் அனைத்தோடும் நான் முரண்படவில்லை. பர்தா என்பதை திணிக்கப்பட்டது அல்ல அது முஸ்லிம் பெண்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற கருத்தை எடுத்து வைக்கவே அவர் அப்பதிவை உபயோகித்தார். ஆனால் அப்பதிவில் அவர் தெரிவித்த ஒரு கருத்து -  

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?  

அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள்.  

இந்தக் கருத்து பர்தா அணிய விரும்பாத இஸ்லாமிய பெண்கள் எல்லாம் நற்குடியில் பிறக்காதவர்கள் என்பதாகப் படுகிறது என்பதை பல நண்பர்கள் - நான் உட்பட - பின்னூட்டங்களில் எடுத்துச் சொன்ன போதும் அவர் தான் செய்தது சரியே என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்.  

இதைப் படித்த மற்றொரு பதிவர் தனது அறச்சீற்றத்தை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக - உங்கள் வார்த்தைகளில் சொன்னால் - பொறுமையாக, நிதானமாக, அமைதியாக, பொறுப்பாக - விளக்கிக் கவிதை எழுதியிருக்கும் http://sumazla.blogspot.com/2009/12/blog-post_27.html பதிவைப் பாருங்கள்.  

ஒரு பெண் அணிந்திருக்கும் அல்லது அணிய மறுக்கும் உடையை வைத்து அவரது பிறப்பு/வளர்ப்பின் பரிசுத்தத்தை எடை போடுவது பெண் சுதந்திரமா? அதை எதிர்த்துப் பேசுவது ஆண் ஆதிக்கமா?  

// பசுபோட்ட சாணத்தை தலைமேலே ஏற்றி, // 
இது இந்துக்களின் மத நம்பிக்கையை கேலி செய்வதாக இல்லையா?  

//பெண்ணினத்தின் நாணத்தை காலாலே நசுக்கி, // 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என்று சொன்ன பாரதியைக் கண்டனம் செய்கிறாரா இவர்? இப்படி சொல்வது பெண்ணடிமைத்தனம் இல்லையா? அதை எதிர்ப்பதுதான் ஆண் ஆதிக்கமா?  

//
மூடிவைத்த பதார்த்தத்தில் 
வாசம் வராதென்று, 
திறந்து வைத்து, 
தேடிவரும் ஈசலுக்கும், 
நாடிவரும் எறும்புக்கும் 
இரையாக்கும் கூட்டம்! 
// 
உடலை மறைக்கும் உடை அணியாதவரெல்லாம் "வேசிகள்" என்று பொருள்படும்படி இல்லையா இந்த வரிகள்? நீங்கள் இவருக்கா வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்களில் மின்னஞ்சலை தனது பதிவில் போட்டதன் மூலம் தான் செய்தது சரியே என்ற கருத்தைப் பதிந்துவிட்டுப் போயிருக்கிறாரே அது சரியா?  

நீங்கள் எழுதியதுபோல "செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே?" என்று யாரும் இவரிடம் கேட்கவில்லை. இவர்தான் "இஸ்லாமியராகப் பிறந்துவிட்டு பர்தா அணிய மறுப்பது தவறு" என்று பிற்போக்காகப் பேசுகிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?  

உங்களிடம் இருந்து விளக்கங்கள் எதிர்பார்க்கிறேன்.

சுசிலா அவர்கள் அந்தப் பதிவருக்கு எழுதிய கடிதம் கீழே

‘அன்பின் சுமஜ்லா,
உங்கள் குறிப்பிட்ட பதிவைப்படித்து உங்கள் துணிவையும்,நேர்மையையும்,பொறுமையையும் வியக்கிறேன்.இவ்வாறான சூழலில் எனக்கு அறச்சீற்றம் ஏற்பட்டு நிதானமிழந்திருப்பேன்.நீங்கள் அமைதியாக...நிதானமாக விளக்கியிருக்கிறீர்கள்.
அப்படி ஒரு மோசமான,வக்கிரமான கருத்தை வெளியிட்டவர்கள் உங்கள் பொறுப்பான,கண்ணியமான பதிலுக்குப் பாத்திரமானவர்கள் அல்ல.அவர்கள் விஷமத்தனமான சகதிகளை வாரி இறைப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்.

தாஙள் மட்டும் கோட்டும்,சூட்டும் போட்டுக் கொண்டு,’’சேலை உடுத்தத் தயங்கறியே’’என்று பாடும் ஆண் வர்க்கத்தின் வேறு வகைப் பிரதிநிதிகள் இவர்கள்.
பெண் எதை எப்படி எழுதினாலும் இந்த ஆணாதிக்க உலகம் அதை எள்ளலாகவே எடைபோடும்.

கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்;காலம் மாறும்.
வீணர்களுக்குப் பதில் தந்து பொழுதை விரயமாக்க வேண்டாம்- ஆனால் இந்தப் பதில் பதிவும் கூட அர்த்தச் செறிவுடன் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
அன்பு வாழ்த்துக்களுடன்,’



அவர் போட்ட பின்னூட்டம் கீழே


எம்.ஏ.சுசீலா,http://www.masusila.blogspot.com
புதுதில்லி
அன்பின் சுமஜ்லா,
உங்கள் இந்தப் பதிவில் என் அஞ்சலை வெளிட்டமைக்கு நன்றி.அந்தப் பதிவில் பின்னூட்டம் சரியாக அமையாததாலேயே அஞ்சலில் அனுப்பினேன்.எவர்க்கும் அஞ்சவில்லை.உண்மையைச்சொல்ல ஏன் அச்சம்,ஏன் தயக்கம்.தைரியமாக என் பெயரை வெளிடுக.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் கண்டு தயங்காமல் இன்று போல் என்றும் உங்கள் பணி எழுச்சியுடன் தொடர்க.
நான் பிறப்பால் இந்துவெனினும்,உங்களைப் போலவே மதம் கடந்த நிலையில் யோசிப்பவள்.அப்படிப்பட்ட வருங்காலம் இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான்.
இந்தப்பதிவின் கடைசிப் பகுதி உங்கள் தெளிந்த ஞானச் செருக்கைக் காட்டுகிறது.பாரதி நம்மிடம் எதிர்பார்த்தது அதைத்தான்.சபாஷ் !!
அன்பு வாழ்த்துக்கள்.

9 comments:

vasu balaji said...

இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு. இது புரிய வைக்கத்தான் எவ்வளவோ முயற்சி. பார்க்கலாம் முகிலன்.:)

கலகலப்ரியா said...

:)

எம்.ஏ.சுசீலா said...

அன்புள்ள திரு முகிலன்,
வணக்கம்.சற்று முன்புதான் தங்கள் அஞ்சல் கண்டேன்.இல்லையென்றால் உடன் பதில் எழுதியிருப்பேன்.
நீங்களும்,நானும் மதம் சார்ந்த விஷயங்களில் ஒரே கோட்டில்தான் பயணிக்கிறோம்.
விஷமத்தனமான பின்னூட்டத்தில் அந்தப் பதிவர் கேவலமாகக் குறி வைக்கப்பட்டதாலேயே நான் அந்த மடலை எழுதினேன்.
மற்றபடி நூறு சதவிகிதம் பெண்ணிய வாதியாகிய நான் என்றுமே ஒருவர் அணியும் உடையை வைத்து அவரது குணம்,மற்றும் கண்ணியத்தை எடை போட மாட்டேன்.அது யார் எழுதினாலும் தவறுதான்.
அந்த நேரத்தில் காயப்பட்ட ஒருவருக்கு ஆறுதல் அளிப்பது மட்டுமே என் நோக்கம்.
பிற மதக் கோட்பாடுகளை மிதிபதும்,நாகரிகமின்றிப்பழிப்பதும் தவறுதான் என்ற தங்கள் கருத்தை முழுமனதுடன் ஏற்கிறேன்.பிற பின்னூட்டங்களையும்,அவற்றுக்கான எதிர்வினைகளையும் படிக்காமல் எழுதியது என் தவறுதான்.
தங்கள் கருத்துக்கு நன்றி.இனி கவனமாக இருப்பேன்.
என் வலைக்கு வந்து கருத்துப்ப் பதிவு செய்யுங்கள்.உங்கள்; அறிமுகம் கிட்டியதில் மகிழ்ச்சி.
வலை நல்ல கருத்துப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பயன்படட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா

திவ்யாஹரி said...

முகிலன் நண்பா இருக்கிங்களா? கலகலப்ரியா என்ன சொல்றாங்க..
கொஞ்சம் அந்த பக்கம் வாங்க.. முகிலன்.. முகிலன்.. நில்லுங்க..

Unknown said...

// வானம்பாடிகள் said...
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு. இது புரிய வைக்கத்தான் எவ்வளவோ முயற்சி. பார்க்கலாம் முகிலன்.:)
//

ஆமாம் சார்

// கலகலப்ரியா said...
:)//
:(

Unknown said...

@ எம்.ஏ.சுசீலா

நன்றி சுசீலாம்மா.. உங்கள் வலைப்பூவின் பதிவுகளைப் படித்ததும் பெண்ணியம் பேசும் நீங்கள் உறுதியாக ஒரு பிற்போக்குச் சிந்தனைக்கு ஆதரவாகப் பேசியிருக்க மாட்டீர்கள் - முழு விவகாரமும் தெரிந்தால் - என்பதைப் புரிந்து கொண்டேன்.

என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி

MUNI said...

நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க முகிலன். ?

குடுகுடுப்பை said...

நன்றி சுசீலாம்மா மற்றும் முகிலன்.

Unknown said...

//MUNI said...
நீங்க ஏன் ரொம்ப மொக்கையா எழுதறீங்க முகிலன். ?
//

சட்டியில இருக்குறதுதான அகப்பைல வரும்?