Wednesday, August 19, 2009

ஆனைப்பட்டி டூ ஆனைநகர்

ஒருவழியாக ஆனைப்பட்டியானின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

"மாப்ள தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி குடுடா" தர்மபுரியான்.

ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரையே உற்றுப் பார்த்தான் தர்மபுரியான்.
"என்ன மாப்ள பாக்குற? கம்மால தண்ணி வந்திருச்சில்ல. அதுனால தண்ணி கொஞ்சம் கலங்கலாயிடுச்சி"
"எலய் தண்ணி கலங்கலடா, கலங்கல்ல தான் தண்ணியே இருக்கு"
வேறு வழியில்லாமல், ஹார்லிக்ஸை இனிப்பில்லாமல் குடிப்பது போல நினைத்துக் கொண்டு குடித்து முடித்தோம்.

மாலை மயங்கியதும் ஆனையூரானை மடக்கி, "என்ன பங்காளி, சரக்கு இருக்கும்னு சொன்ன கண்ணுலய காட்ட மாட்டங்குற?"
"இருங்கடா, நான் போயி எங்க மாமங்கிட்ட கேட்டுட்டு வாரேன். அவர் தான் சரக்கு இன் சார்ஜ்"
போனவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
"பங்காளி ஒரு சின்ன சிக்கல்"
"டேய் நீ சிக்கல்னு சொன்னாலே பெருசா தானடா இருக்கும்?"
"ஒயினெல்லாம் இல்லடா. மத்த சரக்குதான் இருக்கு"
"அவ்வளவுதானா? ஒயினெல்லாம் லேடீஸ் சரக்குடா. நமக்கு விஸ்கி, பிராந்தி, ரம்மு இப்பிடி ஏதாவது ஒன்னு இருந்தா போதும்."
"சரக்க எடுத்துட்டு எங்கயாவது ஒதுக்குப்புறமா போயிடுவோம்டா. இங்க பெரிசுங்க நிறைய இருக்கு"
"சரிடா, நீங்க ஆலமரத்துக்கிட்ட இருங்க. நான் எங்க மாமங்கிட்ட சரக்க வாங்கிட்டு, கிளாஸ் எடுத்துட்டு வந்திடுறேன்"
"டேய் அப்பிடியே சைட் டிஷ் எடுத்துட்டு வாடா"
நாங்கள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து கையில் ஒரு தூக்குச்சட்டி, ஒரு பெரிய சொம்பு, மூன்று டம்ளர்களுடன் வந்தான்.
தூரத்தில் இவனைப் பார்த்ததும் தர்மபுரிக்காரனுக்கு சந்தேகம்.
"மாப்ள என்னடா சொம்பு கொண்டுட்டு வர்றான். சந்தேகமா இருக்கு?"
"இடுப்புல வச்சிருப்பான் மாப்ள. வெளிய தெரியிற மாதிரி எடுத்துட்டு வர்ற அயிட்டமா அது"
"அது சரி"
பக்கத்தில் வந்தான்.
"அம்மா கோழி வச்சிட்டுருந்தாங்கடா. அதை எடுத்துட்டு வர லேட்டயிடுச்சி"
"டேய் அம்மாக்கிட்ட சொல்லிட்டியா?"
"ஆமா"
"அடப்பாவி"
"அதுனால என்ன பங்காளி. நாந்தான் தண்ணி அடிக்க மாட்டேனே?"
"அப்ப எங்க பேரு கெட்டுபோனா பரவாயில்லயா?"
"சரி விடுடா. நேரமாயிட்டே இருக்கு. ஆரம்பிப்போம். சரக்க எடு மாப்ள"
"இந்தா இருக்கேடா" என்று சொம்பை காண்பித்தான்.
"டேய் இது என்னவோ மிக்ஸிங்க்குக்கு தண்ணி கொண்டு வந்திருக்கன்னு நினச்சா? இத சரக்குன்ற"
"தண்ணி சுத்தமா இருக்கும்போதே எனக்கு டவுட்டு. நாட்டுச் சரக்க குடுத்து கவுத்திட்டியேடா?"
"அதான் சொன்னேனேடா. ஒயினெல்லாம் இல்லைன்னு"
"ஒயின் தானடா இல்லன்னு சொன்ன?"
"ஆமா. ஒயின் ஷாப்புல வாங்காதது"
"அடப்பாவி. இவ்வளவு கேணயனா இருக்கியேடா?"
"எனக்கு அப்பவே தெரியும்டா. இவன் இப்பிடி ஏதாவது செய்வான்னிட்டு. அதான் கமுதியிலயே வாங்கச் சொன்னேன்"
"டேய் இது எங்க மாமன் கல்யானத்துக்காக ஸ்பெசலா காச்சினது"
போடிக்காரன் "டேய் பரவாயில்லடா. ஸ்டார்ட் பண்ணுவோம்"
"டேய் காட்டுப்பயலே. நீ எல்லா சரக்கும் அடிச்சிருக்க. எங்களுக்கு எல்லாம் பழக்கம் இல்லயேடா"
"அதுக்காக இந்நேரம் கமுதிக்கு போக முடியுமா? விடிஞ்சா கல்யானம் வேற"
என்று சொல்லிவிட்டு ஒரு டம்ப்ளரில் சரக்கை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான் போடிக்காரன்.
குடித்து விட்டு "டேய் செம்ம டேஸ்டுடா. இவங்க மாமன் நல்ல பழமா போட்டு செமயா காச்சி இருக்காருடா. சும்மா கொஞ்சம் டேஸ்ட் பாருங்க"
அனைவரும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்தோம். ரம்மை விட கேவலமாகவும் பிராந்தியை விட நன்றாகவும் இருந்தது. ஆளுக்கு ஒரு கிளாஸ் அடித்து விட்டு மட்டையானோம்.

மறுநாள் திருமணம் முடிந்து கறி சோறு சாப்பிட்டு விட்டு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.
ஆனைப்பட்டியான் ஒரு வாரம் கழித்து ஹாஸ்டல் வந்தான். அவனை உட்கார வைத்து நடந்தவற்றை கொஞ்சம் மிகைப்படித்து கிண்டல் அடித்து மகிழ்ந்தது மொத்த ஹாஸ்டலும்.

கடுப்பாகிப்போன ஆனைப்பட்டியான் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவெடுத்தான்.

"நான் படிச்சி முடிச்சி அரசியல்ல சேந்து மந்திரியாகி, எங்க ஊரு பேர ஆனைநகர்னு மாத்துவேன். அப்ப வாங்கடா கிண்டல் பண்ண"

ஆனைப்பட்டியை ஆனைநகர் என்று மாற்றிவிட்டால், ரோடு வருமா? குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்குமா? கிங்க்ஸ் சிகரெட் கிடைக்குமா? ஒயின்ஷாப்தான் திறந்துவிடுவார்களா?

இது நடந்து 13 வருடங்கள் ஆகி விட்டன. இன்று ஆனைப்பட்டி ஆனை நகர் ஆகிவிட்டதா தெரியவில்லை. அந்த ஊருக்கு ரோடு வந்துவிட்டதா என்றும் தெரியவில்லை. அநேகமாக டாஸ்மாக் மட்டும் திறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

2 comments:

குடுகுடுப்பை said...

டாஸ்மாக்கும் இருக்காது, இன்னிக்கு வரைக்கும் பட்டைதான் இருக்கும்.

Unknown said...

குடுகுடுப்பை - வரவுக்கு நன்றி.