Sunday, December 26, 2010

கம்யூனிசம் மலர்ந்தால்??

நேற்று இரவு தூங்கும்போது ஒரு கனவு வந்தது. (இன்செப்ஷம் படம் பார்த்துத் தொலைந்ததன் விளைவோ?) இந்தியாவில் திடீரென்று புரட்சி வெடித்து கம்யூனிசம் மலர்ந்துவிட்டது. ஒரே நாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுதான் கனவு.

பகலெல்லாம் அந்தக் கனவை அசைபோட்டுக்கொண்டிருந்ததன் விளைவு இந்தப் பதிவு. என்னை ஃபாலோ செய்யும் நீங்களும் இந்த மொக்கைக் கொடுமையை அனுபவித்தே தீரவேண்டும்.

கம்யூனிசம் மலர்ந்தால் என்ன நன்மைகள் விளையும் என்பதை என் கனவின் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

நன்மைகள்:

1. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் நீங்கி அனைவரும் ஏழைகளாகவே இருப்பார்கள். (பொலிட் பீரோ உறுப்பினர்கள் சொகுசு மாளிகைகளையும் படகுக் கார்களையும் அனுபவிப்பார்கள். ஆனால் அவர்கள் பணக்காரர்கள் என்று கருதப்படக் கூடாது).

2. அனைவருக்கும் சமமான கல்வி கட்டணம் ஏதுமின்றி கிடைக்கும் (இலவசம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது.)

3. சமூகத்தின் ஒரு பிரிவு பட்டினியிலும், ஏனைய பிரிவுகள் தின்று கொழுத்தும் இருக்க மாட்டார்கள். (பட்டினி அத்தனை பேருக்கும் சமமாகப் பிரித்துத் தரப்படும்)

4. முதலாளிகளே இருக்க மாட்டார்கள். (அரசாங்கம் தான் முதலாளி. மற்ற அத்தனை பேரும் தொழிலாளிகளே).

5. ரேசன் கடையையே எட்டிப் பார்க்காமல் வெறும் ஆவணமாக மட்டும் ரேசன் கார்டை வைத்திருக்கும் பணக்காரர்கள் இருக்க மாட்டார்கள். (அத்தனை பேரும் ரேசனில் தான் பொருள் வாங்கி உண்ண வேண்டும்).

6. கடன் வேண்டுமா என்று கேட்டு தொல்லை செய்யும் பெண்கள் உங்கள் செல்ஃபோனுக்கு அழைக்க மாட்டார்கள் (செல்ஃபோனே இருக்காது உங்களுக்கு. இதில் ஃபோன் கால் வேறு வருமா?)

7. மசூதிகள் இடிக்கப்படுவதால் மதக் கலவரங்கள் நிகழாது (சர்ச், மசூதி, கோவில் உட்பட அத்தனை மத வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கமே இடித்துவிட்ட பின் மற்றவர் இடிக்க என்ன இருக்கும்?)

8. உங்களை விட அதிகம் படித்த உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்கும் ஒரே வாழ்க்கைத் தரம் தான் இருக்கும்.(அதனால் என்ன படித்து என்ன புண்ணியம் என்று மேல் படிப்பு படிக்க விருப்பம் இல்லாதவர்கள் அதிகமாவார்கள்).

9. அரசாங்கம் வேலையில்லாத இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் (இதனால் சோம்பேறிகள் அதிகமாவார்கள்)

10. அரசாங்கத்தை எதிர்த்து உண்மைத்தமிழன் அண்ணன் எழுதும் 144 பக்க பதிவுகளை படிக்க வேண்டியிருக்காது. வினவு, மாதவராஜ் ஆகியோர் பொங்கல் வைக்கும் கட்டுரைகளையும் படிக்க வேண்டிய தேவையிருக்காது. (அரசாங்கத்துக்கு எதிராக யோசித்தாலே மூளை சிதறடிக்கப்படும். அப்புறம் எங்கிருந்து பதிவு எழுதுறது?)

11. மதங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு மார்க்ஸியம் மட்டுமே மதமாக இருக்கும். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் (துணை முதல்வர் இல்லப்பா), சே குவேரா ஆகியோர் கடவுள்களாக அறிவிக்கப் படுவர். (கடவுள்களை இகழ்பவர்கள் வீட்டுக்கு முன்னால் அரசாங்க ஊழியர்கள் ஆபாச நடனம் ஆடுவார்கள்.)

12. பெப்ஸியும் கோக்கும் அடியோடு தடை செய்யப்படும். (மிக்ஸிங்குக்கு என்ன செய்வதா? சரக்கே கிடைக்காது. அப்புறம் எங்கிருந்து மிக்ஸிங்?)

Wednesday, December 22, 2010

மனம் விரும்புதே உன்னை..

கோட்டயம்.. அழகான ஊர்.. ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் நேரமில்லை. இண்டர் யூனிவர்சிட்டி யூத் ஃபெஸ்டிவலுக்காக ஆறு நாள் கோட்டயம் வாசம். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலிருந்தும் மாணவச் செல்வங்கள் வந்து குவிந்திருந்தனர். “எவிட இருந்நா வருந்நது” என்று மலையாளிகளும், “எல்லிந்த பர்த்தீரா?” என்று கன்னடர்களும், “எக்கடனிஞ்சி வஸ்துன்னாரு” என்று தெலுங்கர்களும், “வேர் ஆர் யூ ஃப்ரம்யா?” என்று தமிழர்களும் அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நான் உண்மையில் நாடக நடிகன். ஆனால் இந்த முறை one act playஐயும் Skitஐயும் ஃபாத்திமா கல்லூரி மகளிர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும், மிச்சம் இருக்கும் ஒரே நாடக வடிவான mimeஇல் பங்கு பெற ஏற்கனவே நடிப்பு மட்டுமே தெரிந்த ஆறு பேர் இருந்ததாலும் எனது இன்னொரு அம்சமான வினாடிவினாவில் பங்கு பெற வந்திருந்தேன்.

வந்த இடத்தில் என் நாடக அனுபவத்தை ஃபாத்திமா கல்லூரி மாணவிகளிடம் அள்ளி விட, பொறாமைப் பட்ட கோச் என்னைப் பயிற்சி அரங்கிலிருந்து வெளியேற்றி விட்டார்.

என்னடா செய்யலாம் என்று அவரிடம் அடித்து வைத்திருந்த வில்ஸ் ஃபில்டரை பற்ற வைத்துக் கொண்டே யோசித்த போது ராஜா அண்ணன் அந்தப் பக்கம் வந்தார். என் கையிலிருந்த வில்ஸ் பாக்கெட்டில் ஒன்றை எடுத்து பத்த வைத்துக் கொண்டு, “அந்த முசுடு உள்ள இருக்கானா?”

“இருக்கார்ணே.. என்ன மேட்டர்?”

“தந்தி வந்துச்சி?”

“தந்தியா?”

“ஆமாப்பா. பயப்புடுறா மாதிரி ஒன்னுமில்லை. மெட்றாஸ்ல ஒரு இண்டர்வியூவாம். நாளைக்கிக் காலையில”

“காம்பெடிஷனை விட்டுட்டு போறீங்களா?” ராஜா அண்ணன் நல்ல ஓவியர். ஓவியம், ரங்கோலி சம்மந்தப்பட்ட அத்தனை போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு பரிசுகள் அள்ளி வருபவர். எங்கள் பல்கலைக்கழகத்துக்குப் பரிசு என்று எதாவது வருமென்றால் அதை இவர் வாங்கித் தந்தால்தான் உண்டு. இவரும் போய்விட்டால் என்ன ஆவது?

“நாளைக்கு போஸ்டர் மேக்கிங் இருக்கு. நாளைக் கழிச்சி எதுவும் இல்லை. அதுக்கடுத்த நாள் திரும்பிடலாம்னு நினைக்கிறேன். முசுடுக்கிட்ட சொல்லணும். போஸ்டர் மேக்கிங்குக்கு மட்டும் யாரையாவதுப் பிடிச்சிப் போட்டுட்டாப் போதும்”

யோசித்தேன். இயக்க வேலைகளுக்குப் போஸ்டர் ஒட்டியதைத் தவிர போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், “நான் வேணும்னா பார்டிசிபேட் பண்றேண்ணே”

சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு இருகைகளாலும் என்னை அணைக்காமல் அணைத்துக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ்டா. என் கிட்டையே உனக்குக்குடுத்துட்டுப்போறேன்”

போகும் அவசரத்திலும் ஆடு சிக்கிய சந்தோசத்திலும் எனக்கு வரையத் தெரியுமா என்பதைக் கேட்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

சிகரெட்டை முடித்து விட்டு உள்ளே போய்விட்டு வந்தார். கூடவே முசுடும். “என்னப்பா.. ராஜாவுக்கு பதிலா நீ பார்டிசிபேட் பண்றியா?”

“பண்றேன் சார்”

“வரையத் தெரியுமா?” இப்பயாவது கேட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு, “அதெல்லாம் அதகளம் பண்ணிடுவேன் சார்.”

“என்னவோ சொல்ற. நான் ரெக்கார்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிடுறேன். ராஜா, நீ வெல்கம் கமிட்டிக்கிட்ட சொல்லிட்டுப் போயிடு”

“அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் சார். அவங்க தான் தந்தி ரிசீவ் பண்ணது”

“ஓக்கே ஓக்கே” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டது கிழம்.

நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் வேகமாக போன ராஜா அடுத்த நிமிடம் பெட்டியோடு வந்தார். இன்னொரு கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை.

“இதுல எல்லாம் இருக்கு. உனக்கு டவுட் ஏதாவது வந்தா செல்வரங்கத்துக்கிட்ட கேளு. அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்”

பேசிக் கொண்டே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றி அனுப்பி விட்டு மறுபடியும் தங்கியிருந்த அறைக்கு வந்தேன்.

மற்ற நண்பர்கள் மைம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க நான் மீண்டும் வெளியேறி மற்ற பல்கலைக் கழகங்களின் பயிற்சியை நோட்டம் விடப் போனேன்.

***************************************************************************************

போட்டி நடக்கும் ஹாலை தேடிப் பிடிக்கவே எனக்கு நேரமாகிவிட்டது. போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் கழித்தே உள்ளே நுழைந்தேன். போட்டி நடத்துபவர் என்னை முறைத்துக் கொண்டே போஸ்டர் வரைய வேண்டிய தாளைக் கொடுத்தார். அப்பாவியாகத் தெரிந்த ஒருவனின் அருகே போய் அமர்ந்து கொண்டு தேர்ந்த ஓவியனைப் போல பைக்குள் இருந்து பிரஷ்களையும் பெயிண்ட்களையும் எடுத்து வைத்தேன். போர்டில் என்ன தலைப்பில் வரைய வேண்டும் என்பதை கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருந்தார்கள் - “VANDALISM". எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் அர்த்தம் புரிந்து கொண்டு பென்சிலால் ஸ்கெட்ச் போட ஆரம்பித்தேன்.

பக்கத்தில் இருந்தவன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். “பாஸ், வாட்டிஸ் வாண்டலிசம்?” என்று கிசுகிசுத்தான்.

“தமிழா?”

“ஆமாங்க. நீங்களும் தமிழா?”

“ஆமா. காமராஜ் யுனிவர்சிட்டி. நீங்க?” பென்சிலை டேபிளின் மீது வைத்து விட்டு கையை நீட்டினேன்.

“நான் பாரதிதாசன்.” என் கைபிடித்துக் குலுக்கினான்.

அவனுக்கு வாண்டலிசத்தை விளக்கிச்சொல்லிவிட்டு “இது உங்கள் சொத்து” என்னும் தமிழக அரசின் கேப்ஷனைத் திருடி ஏனோ தானோவென்று வரைந்து கொண்டிருந்தேன்.

மஞ்சள் வண்ணமும் சிவப்பு வண்ணமும் குழைத்து தீயைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும்போது அவள் வந்தாள்.

கேரளப் பெண்களுக்கே உரிய மினுமினுப்பு. தலைக்குக் குளித்து நீளக் கூந்தலைப் பின்னாமல் நுனியில் சின்னதாக முடிந்து வைத்திருந்தாள். பார்த்ததும் அடிக்கும் அழகில்லை என்றாலும் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. தோழிகளுடன் தூரத்தில் வரும்போதே என் மீது வைத்த கண்ணை மாற்றாமல் பார்த்தபடியே வந்தாள். ஒவ்வொரு போட்டியாளரின் போஸ்டர்களாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். மடப் பயல்கள் அத்தனை பேரும் கடமையே கண்ணாயிருந்தனர். நான் மட்டும் அவளை பார்த்துக் கொண்டே போஸ்டரிலும் ப்ரஷை வைத்து எதையோ அடித்துக் கொண்டிருந்தேன்.

என்னை நெருங்க நெருங்க அவள் இதழ்களில் ஒரு புன்னகை வழிந்தது. பதிலுக்குப் புன்னகைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ ‘மனம் விரும்புதே உன்னை உன்னை’ என்று சிம்ரன் ஆடுவது கேட்டது.



என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தேவதையின் இதழோரத்தில் இருந்த மச்சம் இப்போது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என்னருகில் வர வர அவள் புன்னகையின் அளவு பெரிதானது. அதிகமாகிக் கொண்டே போனது. என் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்து புன்னகைத்தாள். நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். கொஞ்சம் தூரத்தில் இருந்த பெஞ்சில் போய் அவள் தோழிகளோடு அமர்ந்து கொண்டாள். என் மீது வைத்த பார்வையையும் உதட்டில் வழிந்த புன்னகையையும் மாற்றவேயில்லை.

நானும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் போக மீதி நேரத்தில் போஸ்டரில் என்னத்தையோ கிறுக்கினேன்..

நேரம் முடியப் போகிறது என்பதை சூப்பர்வைசர் அறிவித்ததும் அவளும் அவள் தோழிகளும் கிளம்பினர். என்னருகில் மீண்டும் வந்த அவள் ஒரு காகிதத்தை என் டெஸ்கின் மேல் வைத்துவிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டுப் போனாள்.

ஆரவமாக எடுத்தேன். “BATHROOM AT THE END OF THE CORRIDDOR" என்று எழுதியிருந்தது. சந்திப்பதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று நொந்து கொண்டு போட்டி நடத்துபவரிடம் என் போஸ்டரை நீட்டிவிட்டு வேகமாக வெளியே வந்தேன். தூரத்தில் தெரிந்தது பாத்ரூம். ஆனால் அவளையோ அவள் தோழிகளையோ காணவில்லை.

அங்கே பாய்ஸ் பாத்ரூம் மட்டுமே இருந்தது. குழப்பத்துடன் உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததற்காகக் கடமையை முடித்து விட்டு கை கழுவ வாஷ்பேசின் வந்தேன். கையைக் கழுவிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் கண்ணாடியின் என் முகம். கன்னத்தில் என்ன? சிவப்பும் மஞ்சளும் கலந்து நான் அடித்த பெயிண்ட் போஸ்டரில் தீ மாதிரி தெரிந்ததோ இல்லையோ என் கன்னத்தில் தெரிந்தது.

நல்ல வேளையாக வாட்டர் கலர் என்பதால் தண்ணீரால் அலசியே கழுவி விட்டேன். என்னவளைத் தேடிக் கொண்டே “அவள் வருவாளா, அவள் வருவாளா!” என்று என் மனதுக்குள் மெலிதாக ஒலிக்க அன்று முழுக்க அவளைத் தேடினேன். அடுத்த நாளும் பார்க்கவே முடியவில்லை.  

அடுத்த நாள் ராஜா அண்ணன் வந்து என்னிடமிருந்த பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டதும் சேர்ந்து சுற்ற ஆள் கிடைத்ததால் கொஞ்ச நேரம் அவளை நினைக்காமலிருக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

ராஜா அண்ணனுடன் ரங்கோலிப் போட்டிக்காக அதே ஹாலுக்குப் போக நேர்ந்தது. அங்கே போஸ்டர் மேக்கிங் போட்டியின் முடிவுகள் வெளியிட்டிருந்தார்கள்.
மூன்றாம் பரிசு ஆந்திராவில் ஏதோ ஒரு யுனிவர்சிட்டி,
இரண்டாம் பரிசு காலிகட் யுனிவர்சிட்டி,
முதல் பரிசு.. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்த்தேன்.. பாரதிதாசன் யுனிவர்சிட்டி. ஒரு பெரு மூச்சை வெளியிட்டு விட்டுத் திரும்பினேன்.

“எந்தா சாரே.. பெயிண்ட் போயோ?” களுக்கென்று சிரித்து விட்டு அகன்றாள் என் தேவதை..

எவனோ ஒரு கபோதி “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்று தன் ஸ்டீரியோவில் கசிய விட்டான்.

Sunday, December 5, 2010

நானும் தமிழ்மணம் விருதுகளில்..

நான் வலைப்பதிவு ஆரம்பித்த நாள் முதலாய் என்னைப் பின் தொடர்ந்து என் ஆயிரக்கணக்கான பதிவுகளை வாசித்து ஓட்டுப்போடு பின்னூட்டம் போட்டு என்னை குஷிப்படுத்தி வந்த வாசகப் பெருமக்களே.. இப்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அபிமான எழுத்தாளருக்கு (நான் தாங்க) உங்கள் ஆதரவைத் தெரிவிக்க மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு.

தமிழக வலையுலக வாசகர்களுக்கு வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் உன்னதப் பணியை செய்து வரும் தமிழ்மணமானது கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்கத் துவங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை வாசகர் பார்வைக்கு வைத்து ஓட்டளிக்கும் உரிமையையும் வழங்க உள்ளது. அதில் என் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இந்த முடிவை நான் எடுத்ததால் எனக்கு முன்னால் இருப்பது ஒரு இமாலயப் பணி. இந்த ஆண்டில் நான் எழுதிய நூற்றுக்கணக்கான இடுகைகளில் மூன்று பிரிவுகளுக்குச் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லா இடுகைகளுமே ஆகச்சிறந்த படைப்புகளாக இருப்பதால் என் அன்பிற்கினிய வாசகர்களாகிய உங்களின் உதவி தேவைப்படுகிறது.

இதோ நான் என் படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கும் பிரிவுகளும் என் படைப்புகளும் கீழே உங்கள் பார்வைக்கு. இதில் எந்த எந்த படைப்புகளைப் பரிந்துரைக்கலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கும் படைப்புகளை நானும் சமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

1. நகைச்சுவை / கார்ட்டூன்.

அ. ரஜினியும் முதல்வன் பட வசனமும்
ஆ. சர்வதேச பதிவர் சங்கமம் நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்
இ. இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ
ஈ. என்.சி.சி குடியரசு தின சிறப்புப் பதிவு
உ. செஷல்ஸ் தீவில் பல்பு (மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்)

2. படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை)

a. தற்கொலை - சற்றே நீளமான சிறுகதை
b. களவு
c. ஆயுதம்
d. யார் தீவிரவாதி
e. திரௌபதியின் அட்சயப் பாத்திரம்
f. கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

3. விளையாட்டு, உடல் ஆரோக்கியம்
i) ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் கனிஷ்கா பாலச்சந்திரன்
ii) ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு
iii) ஹாக்கியை நேஷனல் கேம்னு எவண்டா சொன்னது? 
iv) கிரிக்கெட் தொடர்பதிவு

எதைச் சமர்ப்பிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவற்றுக்கு எதிராக இருக்கும் எண்களை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இடுகை என எடுத்து கீழ்க்கண்டவாறு ஆ-a-iv என்பது போல பின்னூட்டத்திலோ, தனி மடலிலோ, பஸ்ஸில் கமெண்டாகவோ அளிக்கவும்.

மறுபடியும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

Wednesday, December 1, 2010

சாகுற நாள் தெரிஞ்சா...

காராஜில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். என் முகத்தைப் பார்த்ததும் கவிதாவுக்குப் புரிந்து விட்டது போலும்.

“என்ன மறுபடியும் டிப்ளாய்மெண்ட் ஃபெயில்டா?”

“ஆமா. எப்பிடிக் கண்டுபிடிச்ச?”

“அதான் மூஞ்சியிலயே எழுதி ஒட்டியிருக்கே”

கூடுதல் சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு காஃபி மேக்கரில் காஃபிப் பொடியைத்தட்டி காஃபி போட ஆரம்பித்தேன்.

“முதல்லயே இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா இப்பிடி லேட்டா ஆஃபீஸ்ல ஸ்டே பண்ணியிருக்க மாட்டியில்ல?” முகிலனுக்கு இட்டிலியைத் திணித்துக் கொண்டு கேள்வியை எனக்குத் திணித்த கவிதாவின் கடைவாயில் ஒரு ஏளனப் புன்னகை.

வெறுமையாகப் பார்த்தேன். டிவியில் கோபி மலர் மேடத்திடம் வழக்கம்போல சோகமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

“சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்னு தலைவர் சொல்லியிருக்கார்” நிகழ்வில் ரஜினியைத் துணைக்கழைத்தேன்.

“ம்க்கும்.. ரஜினி என்ன சொந்தமாவா சொன்னாரு. ஏற்கனவே மகாபாரதத்துல கண்ணன் சகாதேவன் கிட்ட சொன்னதுதான?”

“என்னது சகாதேவன்கிட்டயா இது என்ன புதுக்கதையா இருக்கு?” காபியின் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொண்டு கதை கேட்கும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.

“ஆமா.. முதல்ல சகாதேவன் யாருன்னு தெரியுமா?”

“தெரியுமே.. பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர்”

“கரெக்ட். அவர் ஒரு பெரிய ஜோசியக்காரன்ங்கிற விசயம் தெரியுமா?”

“ஓ.. டிவியில எல்லாம் ராசிபலன் சொல்வாரா?”

“ஜோசியக்காரங்கன்னாலே டிவியில ராசிபலன் சொல்றவங்கதானா?”

இடுப்பில் கை வைத்து முறைத்த கவிதாவைப் பார்த்தால் மிஷ்கினை முறைக்கும் டகேஷி கிட்டானோவைப் போல இருந்தது.

“சரி சரி முறைக்காத மேல சொல்லு”

“இந்த பாண்டு இருக்காரே..”

"யாரு இந்த மூஞ்சிய அஷ்டகோணலாக்கிக்கிட்டு ஆங்க்னு கத்துவாரே அவரா?”

“அவரு உனக்குத்தெரிஞ்ச பாண்டு. நான் சொல்றது பாண்டவர்களோட அப்பா பாண்டு”

“ஓ அவர் பேரும் பாண்டுதானா? ரைட்டு..”

மறுபடியும் முறைத்த கவிதாவை கண்டுகொள்ளாத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு, “மேல சொல்லு..”

“அவரு சாகுற தருவாயில தன்னோட புள்ளைங்களைக் கூப்பிட்டு ‘நான் செத்தப்புறம் என்னை எரிக்கவோ புதைக்கவோ செஞ்சிடாதீங்க. அதுக்கு பதிலா என் உடம்பை நீங்க அஞ்சு பேரும் தின்னுடுங்க’ன்னு கேட்டுக்கிட்டாரு”

“அடங்கொக்க மக்கா.. அந்தக் காலத்துல மனுசக்கறியெல்லாம் சாப்ட்டவிங்க தானா?”

“அது தெரியலை. ஆனா இது ஸ்பெசல் மீல்ஸ்”

“ம்ஹ்ம்.. இருக்கலாம். அப்புறம்?”

“அப்புறமென்ன, அவர் செத்ததும் வழக்கம்போல கண்ணன் வந்து ஏய் என்னப்பா எங்கயும் இல்லாத வழக்கமா பெத்த அப்பன் உடம்பையே திங்கிறது. அது தப்பு. பெத்த அப்பாவுக்கு இறுதிக்கடன்கள் செய்யறதுதான் பிள்ளைங்களோட கடமை அப்பிடின்னு சொல்லி அவங்களை இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு பண்ண சொன்னான்”

காபி குடித்த கப்பைக் கழுவிக்கொண்டே, “வந்துடுவானே இந்தக் கண்ணன். அவன் தடுக்கிறான்னா வேற எதோ மேட்டர் இருக்கு போலயே”

“இதே டவுட்டுதான் சகாதேவனுக்கும் வந்துச்சி. எல்லா ப்ரதர்ஸும் ஆளுக்கு ஒரு வேலையா போயிட, அப்பாவோட பிணத்தைக் காவல் காக்குற பொறுப்பு சகாதேவனுக்கு. தனியா இருந்த சகாதேவனுக்கு பெரிய டவுட். அப்பாவே தன் உடம்பை சாப்பிடச் சொன்ன பிற்பாடும் இந்த கண்ணன் வந்து தடுக்கிறான்னா அதுல ஏதோ பெரிய விசயம் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாம பாண்டுவோட கால் கட்டை விரலை மட்டும் கடிச்சித் தின்னுட்டான்”

சின்க்கில் இருந்த மற்றப் பாத்திரங்களையும் என்னை அறியாமல் கழுவிக்கொண்டே, “அடங்கொன்னியா? கட்டை விரலையா? அதுல அவ்வளவா சதை இருக்காதே? எப்பிடி தின்னான்?”

“ரொம்ப முக்கியமான கவலை பாரு..எப்பிடியோ தின்னுட்டான். தின்னதும் அவனுக்கு முக்காலமும் உணர்ற ஞானம் வந்திடுச்சி. பாண்டவர்களுக்கு வரப்போற ஆபத்தைத் தெரிஞ்சிக்கிட்டான்”

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதுனால தான் கண்ணன் தடுக்கப் பாத்திருக்கான்”

“திரும்பி வந்ததும் கட்டை விரல் மிஸ்ஸானதைப் பார்த்து என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிக்கிட்டான் கண்ணன். சகாதேவனைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயி, இங்க பாரு நீ கட்டை விரலைத் தின்னுட்டன்னு தெரியுது. உனக்கு என்ன நடக்கப் போவுதுங்கிறதும் தெரிஞ்சிருக்கும். ஆனா வெளிய சொல்லாத. எல்லாம் விதிப்படி நடக்கத்தான் வேணும். நீ இதையும் மீறி வெளிய சொன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு சொல்லிட்டான். சகாதேவனும் பதிலுக்கு, எனக்கும் என் சகோதரங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாம நீ காப்பாத்தனும். இல்லைன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு பதிலுக்கு சாபம் விட்டுட்டான்”

“ஓஹோ.. இதைத்தான் தலைவர் ஸ்லைட்டா மாத்தி சாகிற நாள் தெரிஞ்சான்னு பஞ்ச் அடிச்சிட்டாரா?”

“ஆமா”

பாத்திரம் எல்லாம் கழுவி முடிந்ததும், “ஆமா வழக்கமா இந்த மாதிரி கதை சொல்லும்போது நீ தான மெசேஜ் சொல்லுவ? ஆனா இந்தத் தடவை நான் தான மெசேஜ் சொன்னேன்? அப்புறம் எதுக்கு இந்தக் கதை?”

சின்க்குக்கு முன்னால் நின்றிருந்த என்னை லேசாக இடித்துத் தள்ளிவிட்டு கையைக் கழுவிய கவிதா, “அது ஒண்ணுமில்லை. கொஞ்ச நாளா, ப்ளாக்ல எழுத சரக்கில்லாம பஸ்ல எழுதினதையெல்லாம் கூட்டிப் பெருக்கிப் போட்டு கல்லாக்கட்டிக்கிட்டு இருந்தியில்ல, அதான் எழுதுறதுக்கு எதையாவது குடுக்கலாம்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

“யேய்... அப்பிடியெல்லாம் இல்லை. ஆஃபீஸ்ல ஒரே ஆணி. அதான் ப்ளாக் பக்கம் போக நேரமேயில்ல..” என்று காற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

Sunday, November 21, 2010

இப்போ இதுதான் ஃபேஷனாம்..

திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் லிவிங் டுகேதரை எதிர்த்தே ஆக வேண்டுமா? 
லிவிங் டுகேதரை ஆதரிப்பவர்கள் எல்லாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் என்ற அர்த்தமா? 
லிவிங் டுகேதரை ஏன் திருமணத்துக்கு மாற்றாகவே கருதுகிறார்கள் - இரண்டு பக்கம் நின்று பேசுபவர்களும்?


******************************************************************************************************


தனி மனிதத் தாக்குதல் என்பது என்ன?

ஒருவரின் பெயர் போட்டு அவரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதுவதா?

இல்லை ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அவர் பிறப்பும் சாதியுமே காரணம் என்று சொல்வதா?

#டவுட்டு



*******************************************************************************************************


ட்விட்டரில் வாந்தியெடுக்கும் அஜீரணக்காரர்கள்

சமீபத்தில் சில “தோழர்”களின் ட்விட்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்ணுரிமைக்குப் போராடும் போராளிகளான இந்த வீரர்கள் ஒரு பெண்ணை இழிசொற்களால் பகடி செய்து விளையாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்றும் பெண்ணுரிமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இதில் இவர்களோடு திடீர் புளியோதரை, திடீர் லெமன் சாதம் போல திடீர் தோழரான இன்னொரு பெண்ணும் சேர்ந்து கும்மியடிக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தனக்கொன்று நேர்ந்ததும் என்னைக் கையப் புடிச்சி இழுத்துட்டான் என்று ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தவர். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சாஸ் என்று நினைத்துவிட்டார் போலும்..

யோக்கியன் வரான். சொம்ப எடுத்து ஒளிச்சி வையுங்க..



**********************************************************************************************************


பஸ்ல டிவிட்டர்ல போட்ட போஸ்டை எல்லாம் வெட்டி ப்ளாக்ல ஒட்டுறதுதான் இப்போ லேட்டஸ்ட் ஃபேஷனாமே? மேல இருக்கிறதெல்லாம் நம்ம பஸ்ஸு

Wednesday, November 17, 2010

லிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது

ஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்புல எல்லாம் ஏறி பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் நாமும் இதைப் பத்தி ஏதாவது கருத்து சொல்லலைன்னா எப்புடி?

லிவிங் டுகெதர் என்பது என்ன?

ஆணும் பெண்ணும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை (வீட்டில் பார்த்த பெண்/பையன்) வரும் வரை தங்கள் உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள சேர்ந்து வாழ்கிறோம் என்ற பெயரில் கூத்தடிப்பதா?

இல்லை. இந்த எண்ணத்துடன் செய்வதற்குப் பெயர் ஸ்லீப்பிங் டுகெதர்.

ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கின்றனர். பழகியதில் இருவருக்கும் ஒத்த அலைவரிசை இருப்பதாகத் தோன்றுகிறது. தனக்கொரு சிறந்த கம்பானியனாக இருப்பார் என்று ஒருவர் மற்றொருவரைப் பற்றி நினைக்கிறார். ஒத்த அலைவரிசையோடு இருப்பவர்கள் சேர்ந்து வாழலாமே? உனக்கென்று நான் எனக்கென்று நீ என்றிருக்கலாமே? என்று முடிவு செய்து ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். இங்கே முக்கியமான விடயம் கம்பானியன்ஷிப். செக்ஸ் என்பது அதில் பை ப்ராடக்ட் தான். அதற்குத் திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்கலாம். திருமணம் என்பது கமிட்மெண்ட். நம் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று நமக்குப் பிடித்தது சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்காமல் போய்விடலாம். இன்று ஒத்தக்கருத்து உடையவர்கள் பின்னாளில் மாற்றுக் கருத்துடையவர்களாகிவிடலாம். அப்போது பிரிய இந்தத் திருமணம் என்ற கமிட்மெண்ட் தடையாயிருக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள் லிவிங் டுகெதரைத் தேர்ந்தெடுப்பார்கள். லிவிங் டுகெதராய் இருப்பவர்கள் சிறிது நாட்களில் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் விவாகரத்து செய்யாமல் வாழ்கிறார்கள்.

பொதுவாக இந்த லிவிங் டுகெதர் மேலை நாடுகளில் பிரசித்தம். அங்கே குழந்தைகளுக்கு 13 வயதிலிருந்து செக்ஸ் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ளவும், காதல் தோல்விகளைக் கையாள மனதளவில் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் மனநல வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூழலில் இன்னொருவருடன் வாழத் துவங்குமுன் எதிர்காலத்தைப் பற்றி சரியான ஒப்பந்தத்துக்கு வந்த பின்பே முடிவெடுக்கிறார்கள்.

அதே போல அங்கே your children and my children are playing with our children என்பது சகஜம். அதை குழந்தைகளும் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர். இப்படி தயார்ப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஸ்டெப் ஃபாதர்/ஸ்டெப் மதரோடு வசிப்பது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பும் பக்குவமும் நம் நாட்டில் வந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது லிவிங் டுகெதர் என்ற கலாச்சாரம் அப்படி வாழ்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்பை லிவிங் டுகெதர் மட்டுமில்லை. திருமணத்துக்குப் பிறகு விவாகரத்து பெறுபவதும் ஏற்படுத்தும்.

நான் அமெரிக்கா வந்த புதிதில் ஒரு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர், “எப்பிடி இன்னொருத்தன் பிள்ளையைக் கொஞ்சுறது? என்னால எல்லாம் அப்பிடி இருக்க முடியாது” என்று சொன்னார். “ஏங்க தெருவுல போகும்போது எதாவது குழந்தையை நீங்க கொஞ்சுறதில்லையா? உங்க அக்கா, அண்ணன் பிள்ளைகளைக் கொஞ்சுறதில்லையா? அது மாதிரிதான்” என்று சொன்ன போது அவரால் என் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நம் நாட்டில் இருக்கும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் இந்த நண்பரைப் போன்ற மனநிலையில் இருப்பதால் இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரம் பெண்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு சாரார் நினைக்கின்றனர்.

ஆனால் அப்படிப் புரிதலும் பக்குவமும் இருக்கும் இரண்டு பேர் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் தப்பா? அதை தப்பு என்றும் அவர்களை விபச்சாரம் செய்கிறவர்கள் என்றும் அழைப்பவர்களுக்கும் காதலர் தினம் கொண்டாடியவர்களை அடித்து விரட்டும் “கலாச்சார காவல்க் காட்டு மிராண்டி”களுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.

லிவிங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற “புனித” கலாச்சாரம் அங்கே அடிபட்டுப் போகிறதே? இதையும் விபச்சாரம் என்று அழைப்பீர்களா?

Friday, October 22, 2010

கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

தலையில் கை வைத்து உக்கார்ந்திருந்தேன். முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் நான் திறந்து வைத்திருந்த காலண்டரின் 27 ஆம் தேதி என்னைப் பார்த்துப் பரிகசித்தது. தலை முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

முகத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டு கண்களை மறைத்துக் கொண்டிருந்த விரல்களிடையே ஸ்க்ரீனைப் பார்த்தேன். அப்படியாவது போய் விடாதா என்று. என் இம்சையைப் புரிந்திருப்பார் போல. தங்கமணி என் அருகே வந்தார்.

"ஹேய் என்னப்பா ஆச்சு. பேயறஞ்ச மாதிரி உக்காந்துருக்க?"

"அதை ஏன் கேக்கற. 27 ந்தேதி டெட்லைன். இன்னும் இவனுங்க கோடிங் முடிக்கலை. எல்லாம் என் தலைல வந்து விடிஞ்சிடும் போல"

"விடிஞ்சா என்ன நீயே கோடிங் எழுதிட வேண்டியதுதான. டெவெலப்பரா இருந்து தான ப்ராஜக்ட் மானேஜர் ஆன?"

நான் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து தங்கமணியை முறைத்தேன். "ஏன் சொல்ல மாட்ட? இந்த ப்ராஜக்ட்ல ஒரு மாட்யூல் வெப் டெக்னாலஜி, இன்னொரு மாட்யூல் மெயின்பிரேம். இன்னொரு மாட்யூல் டேட்டா வேர்ஹவுசிங்"

"அதுனால என்ன. கம்பர் ஒரே ராத்திரியில கம்ப ராமாயணத்தை எழுதின மாதிரி நீயும் கோட் பண்ணிட வேண்டியதுதான?"

"என்னது கம்பர் ஒரே ராத்திரியில ராமாயணம் எழுதுனாரா? இன்ரஸ்டிங்கா இருக்கே” லேப்டாப்பை மூடினேன்.

"அதான. கதைன்னா கேக்க வந்துடுவியே. உனக்கு ஓட்டக் கூத்தர் தெரியுமா?"

"ஓ தெரியுமே. அம்பிகாபதி படத்துல நம்பியார் நடிச்சிருப்பாரே. அந்த காரக்டர் தான?" முகிலன் என் ஷார்ட்சைப் பிடித்து இழுத்து 'அப்பா ஃபோனி எந்திமா' என்று சொல்ல ஐ-ஃபோனை அவனிடம் கொடுத்து விட்டு தங்கமணியின் முகத்தையே பார்த்தேன்.

சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்ட தங்கமணி, போர்வையால் நன்றாக சுற்றிக் கொண்டு, "அவருக்கு ஏன் ஓட்டக் கூத்தன்னு பேர் வந்துச்சு தெரியுமா?"

"தெரியாதே?"

"ஒட்டம்னா பெட். அவரு எதுக்கெடுத்தாலும் பெட் கட்டிட்டே இருப்பாராம். அதான் அவருக்கு அந்தப் பேர்"

"அப்பா அவரு சீக்கிரமாவே 'ஓட்ட'க்கூத்தர் ஆயிருப்பாருன்னு சொல்லு"

என்னை முறைத்த தங்கமணி "அவருக்கும் கம்பருக்கும் ஒரு பெட். யாரு முதல்ல ராமாயணத்தைத் தமிழ்ல எழுதுறதுன்னு”

“ஓக்கே. என்ன பெட்?”

“அதெல்லாம் ராஜா முடிவு பண்ணுவாருன்னு விட்டுட்டாங்க. ஒட்டக்கூத்தர் சின்சியரா எழுதிட்டு இருந்தாரு. கம்பரோ ஓ.பி அடிச்சிட்டு இருந்தாரு”

“ப்ளாக் எழுதாத சாஃப்ட்வேர் எஞ்சினியரும் ப்ளாக்கரான சாஃப்ட்வேர் எஞ்சினியரும் மாதிரின்னு சொல்லு”

மீண்டும் முறைத்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அரிமா அரிமா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன்.

தங்கமணி தொடர்ந்தார். “அப்ப ஒரு நாள் ஒட்டக்கூத்தர் கம்பர்கிட்ட என்னப்பா ராமாயணம் எவ்வளவு தூரத்துல இருக்குனு கேக்க, கம்பர் நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைன்னு உண்மையச் சொல்லிட்டார்”

“அடப் பாவமே? ஒட்டக் கூத்தர் ராஜாக்கிட்ட பத்த வச்சிருப்பாரே?”

“ஒட்டக்கூத்தர் மாதிரியே யோசிக்கிறியே?? ஆமா. அவர் ராஜாகிட்ட போய், ராஜா ராஜா ராமாயணத்தை உங்க முன்னாடி படைக்கிறது இருக்கட்டும். எதுவரைக்கும் எழுதியிருக்கோம்னு பாக்கலாம்னு சொன்னார். ராஜாவும் ரெண்டு பேர்கிட்ட கேக்கவும், ஒட்டக்கூத்தர் நான் கடல்ல அணை கட்டுற வரைக்கு வந்துட்டேன்னு சொன்னார். உடனே கம்பரும் நான் அதையும் தாண்டி போர்க்காட்சிகள் வரைக்கும் வந்துட்டேன்னு சொன்னார்”

“அய்யய்ய பொய்யா சொல்லிட்டார்? எனக்கு இந்த பொய் சொல்றவங்களைக் கண்டாலே பிடிக்காது”, மறுபடியும் தங்கமணி முறைக்க. “சரி சரி மேல சொல்லு”

“உடனே ஒட்டக்கூத்தர் வேகமா. ‘அப்பிடின்னா அதுல ஒரு பாட்டை சொல்லு’ன்னு கேக்க, கம்பரும் இந்தப் பாட்டை எடுத்து விடுறாரு”

“செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்
வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கிறான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். ”

“அப்பிடின்னா என்னான்னு தமிழ்ல கொஞ்சம் சொல்லேன்” கெஞ்சலாக தங்கமணியைப் பார்த்தேன்.

பட் பட் என்று தலையில் அடித்துக் கொண்டு “இந்திரஜித்தையும் சூரியனையும் ஒண்ணாப் பாக்குறார் கம்பர் இதுல. அதாவது போரால இந்திரஜித் உடம்பெல்லாம் ரத்தம் சொரிந்து சிவப்பா இருக்கிறது மாதிரி கீழ் வானம் சிவந்து இருக்கறதாலயும், இந்திரஜித் உடம்பெல்லாம் லட்சுமணன் விட்ட அம்பு குத்தியிருக்கிறது மாதிரி சூரியனோட ஆயிரம் கதிர்கள் இருக்கறதாலயும், ரெண்டு பேரும் வெம்புகின்ற தங்கத் தேரில வர்றதாலயும், இந்திரஜித் உடம்போட மேலோகம் போற மாதிரி சூரியன் கிழக்கில இருந்து உதிக்கிறானாம்.”

“ஓ, இதுக்கு இப்பிடி அர்த்தமா?”

‘ரோபோ’ என்று சொன்ன ரஜினியைப் போல வாயைச் சுழித்து “ஆமா” என்றார் தங்கமணி.

“சரி மேல சொல்லு”

“இதைக் கேட்டதும் ஒட்டக்கூத்தர் வாயடைச்சுப் போயிட்டாரு. என்னடா வில்லனொட மகனையே சூரியனோட கம்பேர் பண்ணி வர்ணிக்கிறாரே? அப்பிடின்னா ராமனை எப்பிடியெல்லாம் வர்ணிச்சிருப்பாரு? இது கூட சேத்து வச்சிப் பாக்கும்போது நாம எழுதுறதெல்லாம் பாட்டே இல்லையேன்னு நொந்து போய் வீட்டுல தான் எழுதி வச்சிருந்த ஓலைச் சுவடிய எல்லாம் நெருப்புல போட்டுட்டார்”

“அய்யய்யோ அப்புறம்?”

“அந்த வழியா வந்த கம்பர் அதைப் பாத்துட்டு ஓடி வந்து அவரைத் தடுத்து தான் ஒன்னும் எழுதலை சும்மா கதையடிச்சேன்னு சொன்னார். மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிட்டாரு ஒட்டக் கூத்தர்”

“அவரு எதுக்கு முருங்கை மரத்துல எல்லாம் ஏறுனாரு?”

“டேய்ய்ய்ய்ய்.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சின்னா என்னான்னு தெரியுமா?”

“தெரியுமே. ராத்திரியெல்லாம் இனிமே புளிக் குழம்பு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலைல எழுந்ததும் புளியை ஊறப்போடுவியே அதுதான?”

‘நங்’

தலையைத் தடவிக்கொண்டே கேட்டேன், “சரி மேல சொல்லு”

“ராஜா ராஜா, கம்பர் தான் யுத்த காண்டம் வந்துட்டாரே. பேசாம அவரை நாளைக்கே சபையில ராமாயணத்தை அரங்கேற்றச் சொல்லுங்கன்னு சொல்லிட்டார். ராஜாவும் ஆமா கம்பரே உங்க தமிழை கேட்க நானும் காத்திருக்க முடியாது, நாளைக்கே செய்யுங்கன்னு சொல்லிட்டார்”

“ஆஹா டெட்லைனை ப்ரிப்போன் செஞ்சிட்டாய்ங்களா? என்ன செஞ்சாரு கம்பர்”

“கம்பர் என்ன பண்ணாருன்னா, தன்னோட சிஷ்யப் புள்ளைங்க ஆறு பேரை உட்கார வச்சி அவங்க கையில சுவடியையும் எழுதாணியையும் குடுத்துட்டு ஆளுக்கொரு காண்டத்தில இருந்து ஒவ்வொரு பாட்டா parallel ஆ சொல்லிட்டே வர விடியிறதுக்குள்ள கம்பராமாயணம் ரெடி”

“அடேங்கப்பா. கம்பர் பெரியாளா இருந்திருப்பார் போல. ஆறு பேருக்கும் ஆளுக்கொரு பாட்டு சொல்லிட்டே முழுக் கதையையும் முடிக்கணும்னா சான்ஸே இல்லை”

“பாத்தியா அந்தக் காலத்துலயே எப்பிடி மல்டி ப்ராசஸிங் செஞ்சிருக்காருன்னு?”

“ஆமா”

“நீ ஏன் அது மாதிரி மூணு லேப்டாப் வச்சிக்கிட்டு ஒண்ணுல மெயின்ஃப்ரேம் கோடிங், ஒண்ணுல ஜாவா இன்னொண்ணுல டேட்டா வேர்ஹவுசிங்க்னு செய்யக் கூடாது?”

“ம்ஹ்ம். கம்பருக்கு ஆறு சிஷ்யப்புள்ளைங்க இருந்தாங்க. நானே எல்லாத்தையும் செய்ய முடியுமா? அதோட அவருக்கு பாட்டு எழுதத் தெரியும் செஞ்சிட்டாரு. எனக்கு கோடிங் செய்யத் தெரியாதே?”

“அது சரி. சட்டியில இருக்கிறது தான அகப்பையில வரும்” என்று சொல்லிவிட்டு ஆடிக் கொண்டிருந்த முகிலனைத் தூக்கிக் கொண்டு மாடி ஏற படியை நோக்கிப் போனார்.

என் கண்களில் ஒளி மின்ன நான் லேப்டாப்பைத் திறந்தேன்.

“என்ன கண்ணு பளிச்னு எரியுது? கோடிங் செய்யப் போறியா?”

“ம்ஹூம். நீ சொன்னதை ப்ளாக்ல ஏத்தப் போறேன்”

தங்கமணி தலையில் அடிக்கும் சத்தம் மட்டும் கேட்க, www.blogger.com என்று டைப்ப ஆரம்பித்தேன்.

Tuesday, October 19, 2010

பிதற்றல்கள் - 10/19/2010

ஒரு எதிர்வினை

எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும்

1. லாஜிக் இல்லாத அபத்தமான கதை - ஷங்கர் + ரஜினி படங்களில் உலகத்தரமான கதை + லாஜிக் எதிர்பார்த்து போகும் இவர்களை என்னவென்று சொல்வது. 10 வருடம் அல்ல 100 வருடக் கனவு படம் என்றாலும் ஷங்கரால் இதைத் தாண்டி கதை சொல்ல முடியாது. ஷங்கர் படத்துக்குப் போய் ஷங்கரைத் தேடுங்கள் கிம்கிடுக்கை அல்ல.

2. கொசு பிடிக்கும் காட்சி - பலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. டாக்டர் புருனோ நர்சிம் இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இது குழந்தைகளுக்காக. ஆங்கிலப் படம் போல குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக, ஆக்‌ஷன் விரும்பிகளுக்காக, ரொமான்ஸ் விரும்பிகளுக்காக என்று தனித்தனியே எதிர்பார்ப்பவனல்ல தமிழ் ரசிகன். அவனுக்கு இலை போட்டு 4 வகைக் கூட்டு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர் கடைசியாக ஒரு கரண்டி பாயாசம் என்று அத்தனையையும் சேர்த்துப் படைக்க வேண்டும். அதில் உங்களுக்கு காய் பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதை விடுத்து அந்தக் காயினால் சாப்பாடே கெட்டுப் போய்விட்டது என்று கூப்பாடு போடாதீர்கள். “பசங்க” படத்திலும் காதல் எதிர்பார்ப்போம், “காதல்” படத்திலும் காமெடி எதிர்பார்ப்போம்.

3. விளம்பரங்களில் இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல், இதுவரை வெளிவராத புது முயற்சி என்றெல்லாம் சீன் போடும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.  - இதெல்லாம் விளம்பரம் பாஸ். புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் சூர்யா வந்து SUPERல் S for Service என்று சொல்கிறார். அதை நாம் ஒரு புன்னகையுடன் கடந்து போவதில்லை?

4. சன் டிவியில் அரைமணிக்கொரு முறை விளம்பரம் போட்டு கொல்கிறார்கள் - அவர்கள் இதை எந்திரனுக்கு மட்டுமா செய்கிறார்கள்? அவர்களின் முதல் மொக்கைப் படமான காதலில் விழுந்தேனிலிருந்தே இதைச் செய்து வருகிறார்கள். திடீரென பலருக்கு இப்போதுதான் சன் டிவி என்ற சேனல் இருப்பதும் அதில் எந்திரன் விளம்பரம் போடுவதும் தெரிகிறது.

எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்கள் எழுதியதை விட ரஜினியை வெறுப்பவர்கள் தான் அதிக இடுகைகளைப் போட்டார்கள். அது கூட ஒரு மாதிரி விளம்பரப் பிரியம் தான்.

ஒரு நன்றி:

நர்சிம் அவர்களிடம் பல நாட்களாகக் கேட்டுக் கேட்டு அவர் செய்யாததால் வெறுத்துப் போய் பின்னூட்டப் போராட்டம் நடத்திய பின்னர் அவர் சச்சின் பற்றி எழுதிவிட்டார். சச்சின் பற்றி யார் எழுதினாலும் படிக்கலாம். ஆனாலும் நர்சிம்மின் டச்சோடு படிக்கலாமே என்று நினைத்துத்தான் அந்தப் போராட்டம்.எதிர்ப்பார்ப்பை 100% பூர்த்தி செய்யவில்லை என்றாலும் எழுதிய வரை ஓக்கே. பரிசல் அண்ணா தானும் ஒரு பாதி எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் எழுதச் சொல்லி போராடிவிட வேண்டியதுதான்.

ஒரு விளம்பரம்

நண்பர் பலா பட்டறை ஷங்கர் - இருங்க இருங்க, அவசரப்படாதீங்க, விவகாரமில்லை.. விஷயம் - ஒரு தளத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகிட்டார். உண்மையிலேயே ஒரு களஞ்சியம் அந்தத் தளம் - http://www.chennailibrary.com/ பழந்தமிழ் இலக்கியங்களும், சம கால நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியங்களும் மின்னூலாக வைத்திருக்கிறார்கள். சென்று படித்து பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

ஒரு கொலு

நான் இதுவரை கொலு என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். அங்கே என்ன செய்வார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை இந்த முறை ஒரு வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள். (சுண்டல் தருவார்கள் என்று சொல்லியிருந்ததால்) தங்கமணி, முகிலனோடு ஆஜர் ஆகிவிட்டோம். வந்தவர்கள் எல்லாரும் ஆளுக்கொரு பாட்டு பாடிவிட்டு சென்றார்கள். என்னையோ தங்கமணியையோ பாடச் சொன்னார்கள். கொலுவிலிருக்கும் விக்ரகங்கள் & பொம்மைகள் எல்லாம் எழுந்து ஓடிவிடும் அபாயம் இருந்ததால புன்னகையோடு மறுத்துவிட்டு சுண்டலையும் டீயையும் குடித்துவிட்டு வீடு திரும்பினோம். தங்கமணிக்கும் கொலு வைக்கும் ஆசை வந்துவிட்டது.. :(((

முகிலன் அப்டேட்ஸ்

முகிலன் இப்போது ஆங்கில எழுத்துக்கள் 26ஐயும் (கேப்பிடல் மற்றும் ஸ்மால்) அடையாளம் கண்டுகொள்கிறார். "L" எழுதினால் நேராகப் பார்த்து எல் எனவும் தலைகீழாகத் திருப்பி செவன் எனவும் சொல்கிறார் (M & Wவுக்கும் இப்படியே). ஒரே ஒரு நாள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து டென் வரைக்கும் அவராகவே எண்ணினார். அதன் பிறகு பலமுறை முயன்றும் டூவிலிருந்து ஆரம்பிக்கிறாரே ஒழிய ஒன் சொல்வதே இல்லை.

அடுத்த கட்டமாக தமிழ் எழுத்துகள் அறிமுகம் துவங்கியிருக்கிறது. அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அனாவுக்கு அடுத்து இனாவுக்குப் போய்விடுகிறார். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார்.

இந்த விஜயதசமிக்கு வித்யாரம்பம் செய்தாகிவிட்டது. தமிழகத்தில் இருந்த வரை அப்படியென்றால் என்னவென்றே தெரியாமலிருந்தேன். இங்கே உள்ள கோவிலில் வருடா வருடம் விஜயதசமியன்று குழந்தையை மடியில் வைத்து அரிசியில் அ அல்லது ஓம் எழுதி நாவில் தேன் தடவி நடனம் பயில ஆசைப் படுவோருக்கு சலங்கையும், பாட்டு படிக்க ஆசைப்படுவோருக்கு தாளமும் தருவார்கள். இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து மதியொளி சரஸ்வதி என்பவர் வருகை புரிந்திருந்ததால் அவர் கையால் (மூன்று வயதிலிருந்து 21 வயதுடைவர்களுக்கு) வித்யாரம்பம் செய்து வைத்தார். (பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டவர்களுக்கு வித்யாரம்பம் ஏன் என்று புரியவில்லை).

அண்ணா, அக்கா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று மற்றவர்களை அழைக்க முகிலனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவனுக்கு பயங்கரமாக ரெஜிஸ்டராகிவிட்டது. சிறுவயதினரை அக்கா, அண்ணா, இளைய மற்றும் நடுத்தர வயதினரை அத்தை, மாமா, வயதானவர்களைத் தாத்தா பாட்டி என்று அவனாகவே அழைக்கத் தொடங்கிவிட்டான். நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, October 11, 2010

ஆயுதம் செய்வோம்

இன்று சன் டிவியில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி நடித்த ஆயுதம் செய்வோம் என்றவொரு மொக்கைப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பம் முதல் விவேக்கும் சுந்தர்.சியும் காமெடி என்ற பெயரில் அடித்த கூத்துகளைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்து வந்த நானும் தங்கமணியும் படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் அடக்கமாட்டாமல் வயிறு வலிக்க சிரித்தோம்.

படத்தின் கதை இதுதான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரவுடித்தனம் செய்து திரியும் சுந்தர்.சியும், போக்குவரத்துக் காவலராக வரும் விவேக்கும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு வழக்கில் மதுரையில் இருக்கும் காந்தி மியூசியத்தில் 15 நாள் தங்கி காந்தியம் கற்று வர வேண்டும் என்ற வினோத தண்டனை பெறுகின்றனர். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தந்த வக்கீல் விஜயகுமார் - பொதுநல வழக்குகள் ஸ்பெசலிஸ்ட், ட்ராஃபிக் ராமசாமியின் திரைப்படைப்பு என்றும் சொல்லலாம் - ஒரு முன்னாள் அமைச்சர் சம்மந்தப்பட்ட வழக்கின் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த முன்னாள் அமைச்சருக்காக அவரை மிரட்டப் போகிறார் சுந்தர்.சி. அப்போது தெரியாத்தனமாக விஜயகுமார் உயிரை விட்டு விட, சாகும் தருவாயில் அவர் சொல்லிப்போன “வாழ்க வளமுடன்” என்ற வார்த்தைகள் சுந்தர்.சியை நிம்மதி இழக்கச் செய்கிறது. அவர் விட்டுப் போன அந்த முன்னாள் அமைச்சரின் குற்றத்தை வெளிக்கொண்டு வர சுந்தர்.சி அந்த ஆதாரங்களைத் தேடி எடுக்கிறார். அதை போலிஸில் கொண்டு சேர்க்க நீதிமன்றத்தின் முன் அவற்றைச் சமர்ப்பிக்குமுன் அமைச்சரின் ஆட்களால் ஆதாரம் அழிக்கப் படுகிறது.

இதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது காமெடிக் காட்சிகள். ஆதாரம் போனால் என்ன, குற்றவாளி அந்த முன்னாள் அமைச்சர்தான் என்ற சத்தியம் இருக்கிறதே என்று , வடபழனி காந்தி பஜாரில் இருக்கும் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கிறார் முன்னாள் ரவுடியான ஹீரோ. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஆதரவு திரண்டு தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவரை யாரோ சுட்டு விட, இளைஞர்கள் வெகுண்டெழுந்து வன்முறையில் இறங்க, உடனே காந்தி, ச்சே, ஹீரோ அவர்களை வன்முறைப் பாதையில் இறங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார். உடனே மக்களும் வன்முறையை கைவிட்டு விடுகின்றனர். இதைப் பார்த்ததும் மனம் மாறிய முன்னாள் அமைச்சர், தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு போலிஸில் சரணடைகிறார். எல்லாம் முடிய சுபம்.

இதில் என்ன காமெடி என்கிறீர்களா? அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டில் நியாயம் அடைய முடியுமா? அதுவும் ஒரு அரசியல்வியாதி சம்மந்தப்பட்ட வழக்கில்?

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உண்ணாவிரதம் மூலம் இரண்டே இரண்டு விடயங்கள் தான் நடந்துள்ளன. காவிரித்தாய் சென்னை மெரினாவில் இருந்த உண்ணாவிரதத்தினால் தங்கு தடையின்றி காவிரி தமிழகத்துக்குள் பாய்கிறது. தமிழினத் தலைவர் நான்கு மணி நேரம் பீச் ரோட்டில் இருந்த உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நின்று பிரபாகரனும் ராஜபக்‌ஷேவும் கை குலுக்கினர். வேறு எதுவும் நிகழ்ந்ததாக சரித்திரம் சொல்லவில்லை.

ஆனால் உண்ணாவிரதம் இருந்து மண்ணாகிப்போனவர்கள், போகப்போகிறவர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்தத் திரைப்படத்தில் மக்கள் ஹீரோவுக்கு ஆதரவாகத் திரளும்போது காந்தியவாதி நாசர் சொல்வதாக வரும் இந்த வசனத்தை ஹீரோ நினைத்துப் பார்ப்பார் - “நீ ஆயுதம் ஏந்திப் போராடுனா நீ தனியாத்தான் போராடனும். அதுவே அஹிம்சை வழியிலப் போராடுனா உலகமே உன் பின்னாடி நிக்கும்” சத்தியமாக வடிவேலு, விவேக் காமெடிக்குக் கூட இந்தளவுக்கு நான் சிரித்திருக்க மாட்டேன்.

அஹிம்சை வழியில் போராடினான், சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆயுதமாக ஏந்தினான். ஐயா, உலகம் பின்னால் திரள வேண்டாம். அவனை சாகவிட்டு வேடிக்கை பார்க்காமலாவது இருக்க வேண்டுமே? 26 வயது சாகக் கூடிய வயதா?

சாக விட்டது நமது ராணுவமாய் இருந்தாலும், அது பக்கத்து நாட்டு சமாச்சாரம் என்று சொல்வீர்கள். சரி, பக்கத்து நாடு வேண்டாம். நம் நாட்டிலேயே பார்ப்போம்.

ஐரோம் சர்மிளா. நவம்பர் நான்காம் தேதி வந்தால் அவர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து 10 வருடம் நிறைவடையும். எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்? 1958ஆம் வருடம் மணிப்பூர் உட்பட கிழக்கு மாகாணங்களின் மீது இந்திய அரசு நிறைவேற்றிய AFSPA - Armed Forces Special Powers Act - என்ற அடக்குமுறைச் சட்டத்தை இந்திய அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது? அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் தங்க வைத்து உணவை ட்யூப் மூலம் ஏற்றி வருகிறது. அவர் வாய் வழியாக தண்ணீர் கூட உண்பதில்லை. எத்தனை வருடங்களுக்கு இது தொடரப்போகிறது? அவர் மரணிக்கும் வரையிலா?

இந்த இரு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது காந்தி சொல்லிக் கொடுத்த அகிம்சையும் காந்தியமும் எந்த வகையில் நமக்கு உதவும்? முன்னா பாய், ஆயுதம் செய்வோம் போன்ற திரைப்படங்களை எடுப்பதைத் தவிர?

ஒரு படத்தில் சத்யராஜ் சொன்ன வசனம் நினைவுக்கு வருகிறது - “டேய் பேசிக்கலி வெள்ளக்காரன் நல்லவன்டா”

Saturday, October 2, 2010

எந்திராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

முன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங்களை நாடவும்.. :))

ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி டிக்கெட் புக்கியிருந்தேன். அக்டோபர் ஒன்னாம் தேதி மூணு ஷோ. மதியம் 1:00 மணி, மாலை 4:30, இரவு 8:10. மதியமும் மாலையும் ஆணு புடுங்குற, ஆணி புடுங்கி முடிஞ்சி வீட்டுக்கு வர வேலையிருக்கும்ங்கிறதால இரவு 8:10 ஷோவுக்கு தான் புக் செஞ்சிருந்தேன்.

ஆஃபீஸ்ல இருந்து 4:15 மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்துடனும். வந்துட்டு சினிமா பாக்கும்போடு கொறிக்க ஹெல்தியா எதாவது - சுண்டல்கடலை பெஸ்ட் சாய்ஸ் - செஞ்சி எடுத்து வச்சிக்கணும். முகிலனுக்கு சாப்பாடு - பேபி ஃபுட் -, குடிக்க தண்ணி இதெல்லாம் ரெடி செஞ்சிரனும். இதையெல்லாம் நீயா செஞ்சாத்தான் நான் சினிமாவுக்கு வருவேன் - இது தங்கமணி மிரட்டல். நம்ம பங்குக்கு 6:30க்கெல்லாம் சாப்டுட்டு 7:30 மணிக்குள்ள தியேட்டர்ல இருக்கணும் இப்பிடியெல்லாம் திட்டம் போட்டுட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பி போயாச்சி.

கை பொட்டியத் தட்டிக்கிட்டு இருந்தாலும் மனசெல்லாம் எந்திரன் ஓடிக்கிட்டே இருந்தது. எந்த விமர்சனத்தையும் - தல கிரியோடது தவிர - படிக்கலை. எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது மதியம் மூணு மணி வரைக்கும்.

சரியா மூணு மணிக்கு ஒரு ஃபோன் கால். Userகிட்ட இருந்து. ஒரு அப்ளிக்கேஷன் புட்டுக்குச்சி. என்னான்னு பாருன்னு. நானும் அதை வழக்கம்போல நம்ம டீம்ல இருக்கிற ஒருத்தருக்கு அசைன் பண்ணிட்டு என்ன நடக்குதுங்கிறதை நகத்தைக் கடிச்சிட்டுப் பாக்க ஆரம்பிச்சேன். பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்சாச்சி, ஆனா அதை சால்வ் செய்யறது எங்க கைல இல்லை. மேனேஜ்மெண்ட்தான் செய்யணும். ஆனா டைரக்டரும், சி.ஐ.ஓவும் அன்னைக்கிப் பாத்தா லீவ் போடணும்? இதுக்கு நடுவுல பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்ச சாஃப்ட்வேர் எஞ்சினியர் 4:00 மணியானதும் வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க. கடைசியில லீவ்ல போன டைரக்டரை செல்ஃபோன்ல பிடிச்சி, பிரச்சனைய விளக்கி இப்பிடித்தான்யா தீக்கணும்னு சொல்லி.. எல்லாம் முடிஞ்சிரும்ங்கிற நிலைமை வரும்போது மணி பாத்தா 4:45. சரி இன்னும் ஒரு கால் மணி நேரத்துல அப்ளிகேஷனை ரீ-ஸ்டார்ட் பண்ணிரலாம்னு நினைச்சா, கடைசியில ஒரு முட்டுக்கட்டை விழுந்திருச்சி. டைரக்டர், இதை இப்போ ரிசால்வ் செய்ய முடியாது. திங்கட்கிழமை பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா பிசினஸ் விட மாட்டேங்கிறாங்க. இன்னைக்கே தீர்க்கணும்னு என்னை மிரட்டறாங்க. எனக்குன்னா மணி 5:00 ஆயிடுச்சேன்னு ஒரே கவலை. அப்புறம் பிசினஸையும் டைரக்டரையும் கோத்து விட்டு அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு ஒரு வழியா நீ இன்னைக்கி ஆணியே புடுங்க வேணாம்னு என் கிட்ட சொல்லும்போது மணி 5:45.

அவசரம் அவசரமா வீட்டுக்கு வந்தா, நம்ம தங்கமணி நிலைமையப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே சுண்டல் கடலையை வேக வச்சிருந்தாங்க. முகிலனுக்கும் ஷார்ட் டிஃபன் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம சைட்ல அந்த சுண்டலுக்கு தாளிச்சிக் கொட்டி கலந்துட்டு, நைட் டின்னருக்கு நூடுல்ஸ் செஞ்சி எல்லாரும் சாப்டுட்டு , பேசின மாதிரியே 7:00 மணிக்கு கிளம்பியாச்சி. போற வழில ஃப்ரண்டையும் அவர் மனைவியையும் பிக்-அப் செஞ்சி தியேட்டருக்குப் போய் ரீச் ஆவும்போது மணி 7:25.

தியேட்டர்ல மேல என்ன என்ன படம் ஓடுதுன்னு எழுதி லைட் போட்டு வச்சிருப்பாங்க. அதுல எந்திரன் பாத்ததுமே மனசுல ஒரு பெருமிதம். தமிழ்ப்படத்தையும் ஒரு ஆங்கிலப்படம் போடுற தியேட்டர்ல போட்டு மேலயே எழுதியும் வச்சிருக்காங்கன்னு. நான் பெற்ற பெருமிதம் பெருக இவ்வையகம்.



தியேட்டருக்கு வெளிய இருந்து நம்மாளுங்க நிக்கிறதைப் பாத்ததும் பக்னு ஆயிருச்சி.(அந்த ஃபோட்டோல பாருங்க. ஒரு வரிசை தெரியுதா?) நல்ல சீட் கிடைக்காதா? முன்னாடி உக்காந்துதான் பாக்கணுமோன்னு. எதுக்கும் இருக்கட்டும்னு தங்கமணிக்கிட்ட ஒரு அப்ளிகேஷன் - அப்பிடி ஒரு வேளை நல்ல சீட்ல உக்காந்து பாக்க முடியலைன்னா ஞாயிற்றுக்கிழமை இன்னொரு தடவை வரணும் - போட்டு வச்சிட்டேன்.

தியேட்டருக்குள்ள நுழைஞ்சி (ஏற்கனவே ஆன்லைன புக் செஞ்சியிருந்ததால) அங்க இருந்த கயாஸ்க் (Kiosk) போய் டிக்கெட்டைப் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திடலாம்னு போனா எனக்கு முன்னாடி ஒருத்தர் - 17 டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு இருந்தாரு. முதல்லயே மத்தவங்களை எல்லாம் க்யூல (மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் - எந்திரன் ஓடுறது ஸ்க்ரீன் 1. அதுக்குள்ள போறதுக்கான க்யூ) நிக்க சொல்லிட்டு நானும் நாலு டிக்கெட்டையும் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு க்யூல போய் சேந்துக்கிட்டேன்.


அந்த தியேட்டர்ல இருந்தவங்கள்ல முக்கால்வாசி பேரை நான் ராச்செஸ்டர்ல பாத்ததில்லை. இவ்வளவு பேரு இங்க இருக்காங்களான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஆமா நாம வீட்ட விட்டு வெளிய போறதேயில்ல. நாலு எடத்துக்குப் போய் வந்தாதான மனுசங்களைப் பாக்க முடியும்னு கொமட்டுல தங்கமணி குத்தவும், ஆமால்லன்னு நினைவுக்கு வந்தது.

7:40க்கெல்லாம் தியேட்டர் உள்ள விட ஆரம்பிச்சிட்டாங்க. அதிசயமா நம்ம மக்கள் வரிசையாவே தியேட்டர் உள்ள போனாங்க. வரிசையா போற கிரவுட்ல ஒரு பகுதி.


தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் என்னோட அதியசத்துல விழுந்தது மண்ணு. உள்ள வந்தவங்க ஜஸ்ட் சாம்பிள். ரெண்டு பேரா உள்ள வந்தவங்க நல்லதா ஒரு ரோல இந்தக் கடைசியில ஒருத்தர் அந்தக் கடைசியில ஒருத்தர்னு உக்காந்துக்கிட்டாங்க. என்னாங்கனு கேட்டா, நடுவுல இருக்கிற சீட்டுக்கெல்லாம் அவங்க ஃப்ரண்ட்ஸ் & ஃபேமிலி வராங்களாம். இதுதான் ரிசர்வ் பண்றதா? கொடுமையேன்னு, சைட்ல இருந்த நாலு பேர் சீட்ல உக்காந்தோம்.

படம் போடுற வரைக்கும் எதேதோ படங்களோட ட்ரெயிலர் ஓடிட்டு இருந்தது. மக்கள் பொறுமையில்லாம கத்திக்கிட்டே இருந்தாங்க. நாமும் நம்ம பங்குக்கு விசில் போட்டோம். (சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் பாத்ததுல இருந்து முகிலன் விசில் போடுறார் - அப்பிடின்னா சும்மா ஒரு விரல் இல்லைன்னா ரெண்டு விரலை வாயிக்குள்ள வச்சி உஃப் உஃப்னு ஊதுவார்) நான் விசிலடிக்கிறதைப் பாத்துட்டு முகிலனும் விசில் போட்டார்.

ஆப்பரேட்டர், படத்தப் போடுய்யா...

ஆப்பரேட்டருக்குத் தமிழ் தெரியுமா?

இப்பிடியெல்லாம் கத்திக்கிட்டே இருந்தாங்க. சரியா 8:10க்கு படம் போட ஆரம்பிக்க முன்னாடி, மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சைலண்டா இருந்து படம் பாருங்கன்னு ஸ்லைட் போடவும் தியேட்டரே சத்தத்துல அதிர்ந்திச்சி.

படம் ஆரம்பிச்சி, புதிய மனிதா பாட்டுப் போடவும் முகிலனுக்கு கண்ணு ரெண்டும் பிரைட் ஆகிடுச்சி. ஆஹா நாம கேட்ட பாட்டுடானு. டைட்டில் போடும்போது ரஜினி, சுஜாதா, ரஹ்மான், ஷங்கர் இவங்களுக்கு பெரிய கைத்தட்டல். பாட்டப்போ எல்லாம் ஜாலியா பாத்த முகிலன் ரோபோவைக் காட்டினதும் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. (ஏற்கனவே டிவியில வர்ற மஹிந்த்ரா மினி ட்ரக் விளம்பரத்துல அந்த மினி ட்ரக் ரோபோவா மாறுரதைப் பாத்தே பயந்தவரு). என் மடியில இருந்து அவங்கம்மா மடிக்கு ஷிஃப்ட் ஆயிட்டாரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல இறங்கி நம்ம ஃப்ரண்ட்கிட்ட போய் உக்காந்துக்கிட்டாரு.


மேல இருக்கிற ஃபோட்டோ காதல் அணுக்கள் பாட்டு ஓடும்போது எடுத்தது. சிட்டி ரோபோ செய்யற சாகசங்களுக்கு தியேட்டர் கைத்தட்டும்போதெல்லாம் கை தட்டினாரு. ஆனா அதே ஸ்கின் இல்லாத மெட்டல் ரோபோவா வரும்போதெல்லாம் பயப்படறதை நிறுத்தல. அதிலயும் டேனி டென்சொங்பாவோட ரோபோஸைப் பாத்து ரொம்பவே பயந்தாரு. குறிப்பா சிட்டி ஃபயர்ல இருந்து ஆளுங்களைக் காப்பாத்தும்போது அம்மாவைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டாரு.

இண்டர்மிஷன்னு போட்டும் இண்டர்வல் விடல - ஹாலிவுட் படம் மாதிரி. அதுனாலயோ என்னவோ கிளிமாஞ்சாரோ பாட்டுக்கு கொஞ்சம் பேர் வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. முகிலனும் பொறுமை இழந்து வெளிய போகணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு, பாவம் தங்கமணிதான் வெளிய கூட்டிட்டுப் போனாங்க. (என்ன ஒரு ஆணாதிக்கம்?) அதுக்கப்புறம் ஒரே உள்ளே வெளியே தான்.

கடைசி அரை மணி நேரம் எல்லாரையும் கட்டிப் போட்டுடுச்சி. ரஜினி அதகளம். நான் பின்னாடி போய் நின்னுக்கிட்டே பாத்தேன் - முகிலன் புண்ணியம். அரிமா அரிமா - முகிலனோட ஃபேவரைட் பாட்டு போடவும், முகிலன் டான்ஸ் ஆடினாரு. இருட்டா இருந்ததால படமோ வீடியோவோ எடுக்க முடியலை. படம் முடியவும் ஒருத்தர் சத்தமா - “தலைவா உனக்கு இன்னும் வயசாவலை”னு சொல்லவும் இன்னும் சிலர் கைத்தட்டுனாங்க. (அந்த இன்னும் சிலர்ல நான் இல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க).

மொத்தத்துல எந்திரன் சினிமா இல்லை. எக்ஸ்பீரியன்ஸ். DOT.

Thursday, September 30, 2010

பிதற்றல்கள் - 9/30/2010

இன்று பாபர் மசூதி/ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எந்தக் கலவரமும் வெடிக்காமல் அமைதியாக முடிய அல்லாவையும் ராமரையும் வேண்டிக் கொள்கிறேன்.

***********************************************************************

நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?

ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.

*****************************************************************************

கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.

தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.

இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.

******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.

எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.

********************************************************************************

முகிலன் அப்டேட்ஸ்:

ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.

பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.

முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும்.  தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..

இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.

என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).

தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார்.  கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.

Wednesday, September 29, 2010

டைமண்ட்-2 (சவால் சிறுகதை)

காமினி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கில் துளிர்த்திருந்த நீர்த்திவலைகள் அவள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுக்க வயர்கள் பொருத்தப்பட்டு மானிட்டர்கள் பீப்பிக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் டாக்டர்கள். தலை முழுக்க சில்வர் பெயிண்ட் அடித்தது போல இருந்த அந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

“நோ மோர் ஹோப். சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிட்ற வேண்டியதுதான்” விலகி நடந்தார்.

அனைவரும் அவரைப் பின் தொடர, ஒரு டாக்டர் மட்டும் நின்று காமினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். திறந்திருந்த அவள் கண்கள் அவரைப் பார்த்துக் கெஞ்சுவது போல இருந்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு விலகி நடந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

பதினான்காவது மாடியில் இருந்து விழுந்த அவள் கீழேஏஏஏ போய்க் கொண்டே இருந்தாள்.

திடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள். முகமெல்லாம் வேர்த்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். நாளை செய்யப் போகும் காரியத்தை நினைத்தால் அவள் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

அதற்கு மேல் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

*****************************************************************************

சிவா பேட்டிங் க்ரீஸில் இடது காலை லெக் ஸ்டம்பிலும் வலது காலை ஆஃப் ஸ்டம்பிலும் வைத்து கோணலாக நின்று கொண்டிருந்தான்.

எதிர்ப்புறம் இடது கை பவுலர் ஓவர் த விக்கெட்டில் பந்து போட ஓடி வந்து கொண்டிருந்தான். “சிவா சிவா சிவா” என்ற கோஷம் ஃபோர் லைனில் உட்கார்ந்திருந்த அவன் அணி ஆட்டக்காரர்களிடம் இருந்து பலமாக வந்து கொண்டிருந்தது.

யார்க்கர் லெங்க்த்தில் இடது புறம் வீசப்பட்ட பந்தை அல்ரெடி க்ரீஸில் டீப்பாக நின்று கொண்டிருந்த படியால் ஃபுல் டாஸாக எதிர்கொண்டு மட்டையை சுழற்றி அடித்தான். பந்து மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு ஃபோர்லைனைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது. அணியின் மற்ற வீரர்கள் எழுந்து பிட்சை நோக்கி ஓடி வந்தார்கள். இருவர் அலேக்காக சிவாவைத் தலைக்கு மேல் தூக்கி சுற்றினார்கள். அவர்களின் தோளில் உட்கார்ந்திருந்த சிவா தூரத்தில் வந்து கொண்டிருந்த காமினியைத் தெளிவாகப் பார்த்தான். மெதுவாக இறங்கி நண்பர்களை விட்டு விலகி காமினியை நோக்கி நடந்தான்.

*******************************************************************************

“என்ன காமினி? பரந்தாமன் சார் கிட்ட பேசிட்டியா?” கையில் மாட்டியிருந்த கிளவுஸைக் கழட்டிக் கொண்டே கேட்டான் சிவா.

“பேசிட்டேண்டா. ஆனா எனக்கு பயமா இருக்கு...”

“பயப்படாத காமினி. பெர்ஃபெக்ட் ப்ளான். போலீஸை ஏமாத்துறதுக்கும் ரெடி பண்ணியாச்சி. நீ இப்போ போய் பயப்பட்டா எப்பிடி?”

“நீ என்ன ஈஸியா சொல்லிட்ட. ஆனா டயமண்ட எடுத்துட்டு வரப்போறது நான் தான?”

மெதுவாக பைக்குள்ளிருந்து கையை வெளியே எடுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

“ஹேய் என்ன இது?” என்று அவன் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிப் பார்த்தாள்.

“போலிஸை ஏமாத்துற திட்டத்துல இதுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கு”

“எல்லாம் நல்லபடியா நடந்தா சரி” காமினி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.

“காமினி நீ கவலைப் படாம போ. நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும். நான் இப்போ பசங்க கூட போறேன். மேட்ச் ஜெயிச்சதைக் கொண்டாடணும்னு நினைப்பாங்க”

“சரிடா. ஈவினிங் நாலு மணி மறந்துடாத..”

“ஓக்கே ஓக்கே” துப்பாக்கியை மறுபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நண்பர்களை நோக்கி ஓடினான் சிவா.

******************************************************************************

டிங் டாங்..

வாசலில் மணி. கதவைத் திறந்த பரந்தாமனின் முன் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள் காமினி. அவள் கையில் துண்டால் சுற்றப் பட்டு ஏதோ இருந்தது.

“உள்ள வா காமினி” இரு கதவுகளையும் அகலத் திறந்தார் பரந்தாமன்.

காமினி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

துண்டை விலக்கினாள் காமினி.

"காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

“அதை ஏன் சார் கேக்கறீங்க. கொண்டு வரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துருச்சி”

“எப்பிடி போலீஸை ஏமாத்தின?”

காமினி ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் டோர் பெல் மீண்டும் ஒலித்தது.

பரந்தாமனே போய் கதவைத் திறந்தார். வெளியே சிவா, பாஸ்கர், கோபி நின்றிருந்தனர்.

“வாங்கப்பா. வாங்க”

உள்ளே நுழைந்த மூவரும் காமினியைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடா சிரிக்கிறீங்க?” காமினி முறைத்தாள்.

“பின்ன என்ன காமினி ஒரு சின்ன மேட்டருக்குப் போய் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்ட?”

“உங்களுக்குச் சின்ன மேட்டர்டா. எனக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா?”

“அதெல்லாம் இருக்கட்டும்பா. எப்பிடி செஞ்சிங்க இதை?” பரந்தாமன் இடைமறித்தார்.

“நான் சொல்றேன்”

“நான் சொல்றேன்” பாஸ்கரும் சிவாவும் சண்டை போட்டனர்.

“யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா”

“நானும் பாஸ்கரும் போலிஸ் பக்கத்துல நின்னுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுற மாதிரி பாவலா பண்ணினோம். அப்போ போலிஸ் பக்கத்துல வந்து என்னடா சண்டை போடுறீங்கன்னு கேட்டான்” சிவா ஆரம்பித்தான்.

“அப்போ கோபி வந்து சிவாவுக்கு சப்போர்ட் செய்யற மாதிரிப் பேசவும் சண்டை பெருசாச்சி. எதுக்கு சண்டை போடுறோம்னே சொல்லாம மூணு பேரும் மாறி மாறி பேசிட்டே இருந்தோம்” பாஸ்கர் தொடர்ந்தான்.

“நிறுத்துங்கடா மூணு பேரும் சண்டைய. முதல்ல எதுக்கு சண்டை போடுறீங்கன்னு சொல்லுங்கன்னு போலீஸ் கத்தவும், சிவா பையில இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான்” இது கோபி.

“துப்பாக்கியைப் பாத்ததும் போலீஸ் கண்ணு பல்பு போட்டா மாதிரி பளிச்சுனு ஆயிருச்சி. என் கையில இருந்து பிடுங்கப் பார்த்தான். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு அவன் கையில குடுத்து பாக்க வச்சோம்”

“இந்த கேப்ல காமினி ஒரு துணியால டைமண்ட மூடி இங்க கொண்டு வந்துட்டா. போலீஸ் தான் துப்பாக்கியப் பிடுங்கிட்டுப் போயிட்டான்” பாஸ்கரின் முகத்தில் உண்மையிலேயே கவலை.

“டாக்டர் சார். இந்தக் கதையைக் கேட்டுட்டு நேரம் வேஸ்ட் பண்ணாம இந்த டைமண்டைக் கொஞ்சம் பாருங்க” காமினி பரந்தாமனை நினைவுக்குக் கொண்டுவந்தாள்.

பரந்தாமன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த டைமண்டைப் பார்த்தார். இயல்பிலிருந்து மிகவும் மாறி இருந்தது. வழக்கமான டைமண்ட் போலவே இல்லை. மெதுவாக இரண்டு விரல்களால் வருடினார். கையை சிறிது நேரம் டைமண்டின் மீதே வைத்துக் கொண்டிருந்தார்.

திரும்பி உள்ளே போனவர் கையில் ஒரு ஊசியோடு வந்தார். சிவப்பு வண்ணத்தில் ஒரு மருந்தை அதில் ஏற்றியவர் “ஏந்தான் இந்த போலீஸ் பய இப்பிடி இருக்கானோ? ஆமா அவனுக்கு ஏன் போலிஸ்னு பேரு வந்திச்சி?”

“அவன் போலீஸ் ஆகனும்னு ரொம்ப கஷ்டப்பட்டு பிராக்டிஸ் எல்லாம் செஞ்சான் சார். கடைசியில ஒரு நாய் கடிச்சி தப்பிச்சி ஓடும்போது கீழ விழுந்து கால் ஒடிஞ்சதால போலீஸ்ல சேர முடியாமப் போயிடுச்சி. அதனால பைத்தியமாயிட்டான். தெருவுல போற ஒரு நாயை விடமாட்டான். போலீஸ் மாதிரி ஒரு விசில் வச்சி அடிச்சிக்கிட்டே இருக்கிறதால போலீஸ் போலீஸ்னு கூப்புடுறோம்” சிவா வரலாறை சொல்லி முடித்தான்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டைமண்டின் கழுத்துக்கீழ் ஊசியைக் குத்தி அந்த மருந்தை உள்ளே ஏற்றினார். காமினி சீராக டைமண்டின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க. இன்னும் ஒரு நாள் விட்டிருந்தா செத்தே போயிருக்கும். சின்னப் பசங்களா இருந்தாலும் பொறுப்பா தெரு நாய எல்லாம் காப்பாத்துறீங்க. பெருசானப்புறம் பெரிய சமூக சேவகர்களாவீங்க” கைகளைக் கழுவிக்கொண்டே பரந்தாமன் சொன்னார்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

Sunday, September 26, 2010

போராளிகளா? பூச்சாண்டிகளா?

முதலில்:
நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும், “நீ ரொம்ப ஒழுங்கா?” என்ற வாதங்களைத் தவிர்ப்பதற்காகவும். அவற்றைப் படிக்க விரும்பாதவர்கள் நேராக “இப்போது ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும்” என்ற பத்திக்குப் போய்விடலாம். 

எனக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன தொடர்பு?


SFI - Student Federation of India - இந்திய மாணவர் சங்கம். இது CPI(M) கட்சியைச் சார்ந்த ஒரு மாணவர் அமைப்பு (வெளியில் கட்சி சார்பற்றது என்றுதான் சொல்வார்கள்). சாதாரணமாக SFIல் தீவிரமாக ஈடுபடுபவர்கள் ஒன்று சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அல்லது தொழிற்சங்கத்தில்/கட்சியில் களப்பணியாற்றுபவர்களின் வாரிசுகளாக இருப்பார்கள். நான் நடுத்தர வர்க்கத்தில் தீவிர தி.மு.க ஆதரவாளரின் மகனாகப் பிறந்திருந்தும் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கின்ற காலத்தில் SFIல் தீவிர களப்பணி ஆற்றி வந்திருக்கிறேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். விருதுநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முக்கியமான பங்காற்றியிருக்கிறேன் (என் பங்கு என்ன என்பது அப்போதைய மாவட்ட செயலாளர் தேவா அவர்களுக்கும், மாநிலத் தலைவர் ராம்கி அவர்களுக்கும் தெரியும்).

அருப்புக்கோட்டை நகரப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பேருந்துகளில் ஏறி பேசி உண்டியல் குலுக்கி இருக்கிறேன். கடை கடையாக ஏறி வசூல் செய்திருக்கிறேன். நகரத் தெருக்களில் சகோதர இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், தர்ணாக்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். சிலவற்றில் உரையாற்றியும் இருக்கிறேன். மற்ற ஊர்களில் நடைபெறும் பேரணிகளிலும் (அது தொழிற்சங்கத்தின் மாநாடோ, இல்லை DYFI மாநாடோ) கலந்துகொண்டு வந்திருக்கிறேன்.

தெரு நாடகங்களில் நடித்திருக்கிறேன். த.மு.எ.ச மேடைகளில் நாடகங்கள் போட்டிருக்கிறேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? சாதரணமாக நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வெட்கப்படும் விடயங்கள் இவை. இவற்றைச் செய்ய நான் எப்போதும் தயங்கியது இல்லை.

SFI எனக்கு கம்யூனிசம் தவிர வேறு பல நல்ல பாடங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. Leadership, Personal Skills, Team Work, Planning, People Management - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சில சொந்தக் காரணங்களாலும் கொள்கை ரீதியாலும் SFIஐ விட்டு விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை. அதை இங்கே விளக்க விரும்பவில்லை.

பதிவர் சாந்தியுடன் எனக்கு என்ன பிரச்சனை?

பதிவர் சாந்தி தன் தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று பதிவெழுதிய போதே நான் அவருக்கு ஒரு பின்னூட்டம் வைத்தேன். அவர் அதை வெளியிடவில்லை. அந்தப் பதிவை பாலபாரதி கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த போது நான் அங்கே பதிவர் சென்ஷி மற்றும் தோழர் ஏழர அவர்களுடனான விவாதத்தில் என் பக்கத்தை எடுத்து வைத்தேன். பாலபாரதி பஸ்ஸைத் தூக்கிவிட்டார். பின்னர் வினவு அவர்களின் தளத்தில் பதிவர் சாந்தியின் கட்டுரையை வெளியிட்ட போது அதில் என் பக்க விளக்கத்தை பின்னூட்டினேன். அதை வினவு ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதோடு எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக பதிவெழுதிய பெண் பதிவரை ஆணாதிக்க அடிமை என்று அடுத்தொரு கட்டுரை எழுதி வெளியிட்டது வினவு.

அதனால் நான் அதைப் பற்றி எழுதாமல் அமைதி காத்து வந்தேன். என் நண்பர்கள் சிலரையும் தேவையில்லாமல் இழுத்து விட்டு அவர்களின் தளத்தில் பின்னூட்ட விவாதத்தை வைத்தும் அவர்களைத் திட்டி பதிவெழுதியும் சிலர் வம்பிழுத்த போதும் நான் அமைதி காத்தேன். உச்ச கட்டமாக செந்தழல் ரவி என்னை, என் குடும்பத்தாரை தரக்குறைவாக எழுதி, அதிலும் வானம்பாடிகள் அய்யா அவர்களை தேவையில்லாமல் தாக்கி எழுதிய போதும் நான் அமைதியாக இருந்தேன். என் நண்பர்கள் சிலருக்கு இதனால் என் மீது கோபம் வந்திருக்கலாம். இருந்தும் நான் என் தளத்தில் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இப்போது என் பக்கத்தை எடுத்து வைக்க ஒரு சந்தர்ப்பமாக இந்த இடுகையை உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.

ஜூலை 27 - பலா பட்டறை ஷங்கர், கலஹாரி இலக்கியம் என்று ஒரு மொக்கைப் பதிவெழுதி என்னைத் தொடர அழைத்தார். குழுமத்தில் அடிக்கும் கும்மியையும், மற்ற பதிவர்கள் அவர்கள் பதிவுகளில் எழுதியதையும் வைத்து புனையப்படும் மொக்கைதான் கலஹாரி இலக்கியம்.

ஆகஸ்டு 1 - நான் ஷங்கரைத் தொடர்ந்து அவர் உபயோகப் படுத்திய கதாபாத்திரங்களுடன் இன்னும் சிலரைச் சேர்த்து எனது இடுகையை வெளியிட்டேன். இதில் நான் ஜான்சி அக்கா என்று சொல்லியிருந்தது - ஷங்கர் தனது பதிவில் எழுதியிருந்தது போல - பதிவர் சாந்தியைத்தான். இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் வருத்தமும் இல்லை. இன்னொரு தாய்லாந்துப் பெண்ணாகவும் தன்னையே சுட்டுவதாக அவர் கோரியிருப்பதில் 0.000000001% கூட உண்மையில்லை.

இதைப் படித்துவிட்டு அரவிந்த் இதே கலஹாரி இலக்கியத்தைத் தொடர்ந்தார். அவரும் என் இடுகையில் இருந்த கதாபாத்திரங்களோடு இன்னும் சில பாத்திரங்களைச் சேர்த்துக் கொண்டார்.

என் இடுகையில் ஜானகிராமன் “தல, இப்படி போட்டு உடச்சிட்டீங்களே. உங்க புனைவுக்கு எதிர்புனைவு நாலாபக்கமும் ரெடியாயிட்டிருக்கு. சூதானமா இருந்துக்குங்க.” இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதற்குப் பதிலாக “நாங்க தடால்னு கால்ல விழுந்து மாப்பு கேட்ருவோம்ல என்று எழுதியிருந்தேன். ஆனால் அந்த இடுகையின் பின்னூட்டத்திலோ, குழுமத்திலோ, இல்லை தனிமடலிலோ தன் பெயரை எழுதியதற்கான எதிர்ப்பை பதிவர் சாந்தி வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்பைத் தெரிவித்து இடுகையிலிருந்த அவர் பெயரையும் நீக்கியிருப்பேன். அப்படி நீக்க மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரிடம் இருந்து எதிர்ப்பு வராதபோது அவரும் இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று தானே அர்த்தம்?

ஆகஸ்டு 11 - செந்தழல் ரவி மிஷனரிகள் பற்றிய ஒரு இடுகையை அவர் பதிவில் போட்டார். அதை நான் படித்த போது அங்கே பின்னூட்டங்கள் எதுவும் இல்லை. படித்துவிட்டு வந்துவிட்டேன். பின்னர் அந்த இடுகை குழுமத்தில் பகிரப்பட்டது. அதற்கு காட்டமாக பதிலுரைத்திருந்தார் பதிவர் சாந்தி. நான் மீண்டும் ரவியின் இடுகைக்குப் போய் சாந்தி அங்கே இட்டிருந்த பின்னூட்டங்களையும், அவர் ரவிக்கு வைத்திருந்த கேள்விகளையும் படித்தேன்.
அவர் ரவிக்குக் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்களை அளித்துவிட்டு, விவாதிக்க அழைத்திருந்த சாந்தியை விவாதம் தொடங்க அழைத்தேன். அவர் ரவிக்கு பின்னூட்டியாயிற்று. அதைப் பற்றி என்னிடம் பேச முடியாது என்று மறுத்துவிட்டார். நானும் கிரேட் எஸ்கேப் என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்சனையை முடித்துக் கொண்டேன். (இங்குதான் என் மீது அவருக்கு கோபம் வந்திருக்கிறது. இதை அவர் மற்ற பதிவர்களிடம் சாட்டில் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது)

ஆகஸ்டு 13- நான் ஆகஸ்டு 11 அன்று என் மகனது வீடியோ ஒன்றை என் தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதற்கு ஆகஸ்டு 13ம் தேதி பதிவர் சாந்தி (ரவியின் பதிவு பற்றிய என் கமெண்டுக்குப் பிறகு) ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார் -
குழந்தை படம் துணிவா போட்டிருக்கீங்க...

சுத்தி போடுங்க.. 

(குழந்தை விஷயம் சுய சொறிதலில் சேர்க்க மாட்டேன் பயப்படாதீங்க..:) )

இதில் அவர் வீடியோவை பாராட்டுவது போல எழுதியிருந்தாலும் சுயசொறிதல் என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். (நான் உடனே எதாவது வம்பிழுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம்).

ஆகஸ்டு 18 - புலவன் புலிகேசி தனது தளத்தில் எழுதியிருந்த எந்திரன் - ஏழைப் பங்காளன் என்ற கவிதைக்கு எதிர் வினை ஒன்றை என் தளத்தில் வைத்தேன். அதற்கு பதிவர் சாந்தி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
இதுவே ஒரு நல்ல செயல்தான் .. சில சுய சொறிதல்களை ஒப்பீடு செய்யும்போது..

எழுத்தினால் சமூகத்தில் மாற்றம் கண்டிப்பாக கொண்டு வரமுடியும்... 

நல்லது நம்மால் செய்ய முடியாவிட்டாலும் எள்ளாமல் இருப்பது சிறப்பு..
இதிலும் அவர் அந்த சுய சொறிதல் என்ற பதத்தை உபயோகப் படுத்துவதைப் பாருங்கள்.

நான் இந்தப் பின்னூட்டத்தை குழுமத்துக்கு எடுத்துச் சென்று எந்திரன் பற்றிய விவாதம் ஒன்றை துவங்கும் எண்ணத்தில் ஒரு திரியைத் துவக்கினேன். ஆனால் சாந்தி அவர்கள் அதை திசை மாற்றி சுயசொறிதல் என்ற பதத்தைப் பிடித்துக் கொண்டு அதைப் பற்றியே விவாதித்து வந்தார். திரி 100ஐத் தொட்டும் அவர் எந்திரன் பற்றிப் பேச வராமல் விவாதத்தை முடித்துக் கொண்டார். அந்த விவாதத்தில் அவர் ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியான என் இடுகையைப் பற்றி பேசினார். அதன் பிறகு புலவன் புலிகேசி அவர்களது தளத்திலும் அவரைப் பற்றி நான் எழுதிய புனைவு என்று என் இடுகையைப் பற்றிப் பேசினார். பின்னர் தனி மடலிலும் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த இடுகை பகடியாக எழுதப்பட்டது மட்டுமே என்ற என் கருத்தில் உறுதியாக இருந்தேன். (உங்கள் மகனின் வீடியோவில் தெரியும் உங்கள் மனைவியின் உடையைப் பற்றி யாராவது எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கேள்வியும் எழுப்பினார்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நான் அவரைப் பற்றி என் தளத்திலோ இல்லை குழுமத்திலோ இல்லை மற்ற தளங்களிலோ நான் தரக்குறைவாகப் பேசியதில்லை.

ஆகஸ்டு 25 - அவரது தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று மூன்று பாகங்களாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில் என் மற்றும் அரவிந்தின் இடுகைகளில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட (ஜான்சி அக்கா) பகுதியை மட்டும் வெட்டி ஒட்டிப் போட்டதோடு அல்லாமல், யாரோ ஒரு ஆண் பதிவர் யாரோ ஒரு பெண் பதிவரை “படுக்க வர்றியா” என்று அழைத்த ஒரு சம்பவத்தையும் சேர்த்தெழுதி அதற்கும் எங்களுக்கும் எதோ சம்மந்தம் இருப்பது போன்ற ஒரு அவதூறை எழுப்பினார். நான் அவருக்குப் போட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடவில்லை. மாறாக தனி மடலில் வழக்குப் போடப்போவதாக மிரட்டினார். நானும் வழக்குப் போடுங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

அதன் பின்னர் அவர் மாதவராஜையோ வினவையோ நாடுவார் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் வினவும் மாதவராஜும் என்ன நடந்தது என்பதை விசாரித்துப் பதிவெழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம்.

நான் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை? அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடுகையை நீக்கவில்லை? 

என் இடுகை வெளிவந்தவுடன் அவர் என்னிடம் அது அவரைப் புண்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்திருந்தால், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்டுவிட்டு இடுகையில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட பகுதியை நீக்க நான் தயங்கியிருக்க மாட்டேன். ஆனால் அவர் காலம் தாழ்த்திச் செய்வது என் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவே என்பதால் அவருக்கு அடிபணிந்து போக நான் தயாராயில்லை.

மேலும் நான் எழுதிய இடுகையை வினவு வன்மத்துடன் புனையப்பட்ட வக்கிரத் துகிலுரிவு - என்ற அடைமொழியுடன் அழைத்தது. நான் அந்த இடுகையை எழுதிய போது எனக்கு சாந்தி அவர்களின் மீது வன்மமோ, என் மனதில் வக்கிரமோ, அவரைத் துகிலுரிய வேண்டும் என்ற எண்ணமோ இல்லாத போது நான் அந்த இடுகையை இப்போது நீக்கினால் வினவின் குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்வது போலாகிவிடும் என்பதாலும் நீக்கவில்லை. இனிமேலும் நீக்க மாட்டேன்.

வினவு
வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழுதி வருவது நான் பதிவுலகத்துக்கு வந்தது எனக்கு அறிமுகமானது. நான் சில கட்டுரைகளையும் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் ம.க.இ.கவின் ஆதரவுத் தளம் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்ததும் நான் அவர்களின் தளத்துக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். (அதற்குக் காரணம் எனக்கும் ம.க.இ.கவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை).

ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒரு பெரிய குறை, சமூகக் கட்டுரைகளை எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற்றே விலகி யாரையாவது அல்லது எந்த நிகழ்வையாவது தேவையில்லாமல் தாக்கிச் செல்வார்கள். இது அந்த நபரின் அல்லது அந்த நிகழ்வின் ரசிகர்/ஆதரவாளர்களுக்குக் கசப்பை உண்டாக்குவதுடன் கட்டுரையின் சாராம்சத்தை விட்டு விலகவோ புறக்கணிக்கவோ செய்துவிடும். அதே போல அவர்களின் தளத்திலேயே ஒரு கட்டுரையின் கருத்தில் விவாதம் வைத்தால் அதைப் பற்றி விவாதிக்காமல் அதைச் சுற்றி சல்லியடித்தே ஓட்டிவிடுவார்கள் அவர்களின் ஆதரவாளர்கள்.

மொத்தத்தில் சமூகப் போராளிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் வினவு, சமீப காலமாக பெண்ணியக் காவலர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். நல்லதுதான். ஆனால் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் முழு விபரங்களையும் விசாரித்து ஆதரவு தெரிவிப்பதில்லை. அதோடு குற்றம் சாட்டப்படுபவர்கள் அவர்களின் தோழர்களாக இருக்கும்பட்சத்தில் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடுநிலைப் பெண்ணியக் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் செய்யும் செயல் இல்லையே?

இப்போது நான் ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டும்? 


சமீபத்தில் பதிவர் மதார் எழுதிய ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அதில் பதிவர் சாந்தி ஒரு சக ஆண் பதிவரிடம் பேசிய சாட்டின் விபரம் பகிரப்பட்டிருந்தது. அதில் அவர், அந்த ஆண் பதிவரிடம் -


தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?

இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?

மதார் என்ன பாவம் செய்தார்? எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக ஒரு இடுகை எழுதினார் என்பதைத் தவிர? அதற்குத்தான் வினவுத் தளமே இன்னொரு இடுகையையும் போட்டு மதாரை வம்பிழுத்து விட்டதே? ஏன் இன்னும் வன்மம் கொண்டுத் திரிகிறார்? இப்படி ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பித் திரிவது எந்த ஆதிக்கத்தில் வரும்?

தோழர் மாதவராஜ் : இப்போது இந்தப் பதிவரசியலைப் பார்த்து எச்சில் துப்பப் போகிறீர்களா இல்லை வெட்கித் தலை குனியப் போகிறீர்களா?

பதிவர் சந்தனமுல்லை: நான் போலி முற்போக்காளனாக இருந்து விட்டுப் போகிறேன். ஒரு பெண்ணின் மீது ஏவப்படும் அவதூறு வன்முறையை நீங்கள் ஒரு முற்போக்கு சக பெண் பதிவராக என்ன செய்யப் போகிறீர்கள்?

வினவு: நீங்கள் முன்வைத்த கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன் - கொள்கைக்காக நட்பா? நட்புக்காக கொள்கையா? என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது நீங்கள் அமைதி காத்தால் என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே நீங்கள் யாருக்காவது நிகழ்ந்த ஆணாதிக்கச் செயலை எடுத்துக் கொண்டு வந்தால் இந்தப் பதிவுலகம் அப்போது உங்கள் பக்கம் நிற்காமல் போய்விடும் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு சொல்லிச் செல்ல ஆசைப்படுகிறேன். இணையப் போராளிகள் என்ற பெயர் போய் உங்களை பயமுறுத்தப் பயன்படும் ஒரு பூச்சாண்டியாக மாறிப் போய்விடாதீர்கள்.

எனக்கு ஆதரவாகப் பதிவெழுதிய ஒரு பெண்ணுக்கு அந்த ஒரே காரணத்துக்காக அநீதி நடக்கும்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் மனிதனே இல்லை. 


பதிவர் சாந்தியின் இந்தச் சாக்கடைச் செயலுக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். 

Thursday, September 23, 2010

டைமண்ட் (சவால் சிறுகதை)

எஸ்.பி.சற்குணபாண்டியனின் செல் அலறியது. தெரியாத நம்பர். பச்சைப் பொத்தானை ஒத்தி “ஹலோ” என்றான். எதிர்முனையின் பதட்டம் இவனைத் தொற்றிக் கொண்டது. ஃபோனை அணைத்ததும் 
எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, “கவுதம்...” கத்தினான்.

எஸ்.ஐ கவுதம் “யெஸ் சார்” என்று ஓடி வந்தான்.

“ஒரியெண்டல் ஹாஸ்பிடல்ஸ்ல யாரோ டயமண்ட் கடத்தலாம் அல்லது திருடலாம்னு ஒரு கால் வந்திருக்கு. என்னன்னு விசாரிங்களேன்?”

“பேசினது யாரு சார்?”

“மாரிமுத்துனு ஒரு வார்ட்பாய்”

“விசாரிக்கிறேன் சார்” விலகினான் கவுதம்.

**************************************************************************************  
கவுதமின் புல்லட் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. புல்லட்டை நிறுத்தியதும் நேராக சற்குணபாண்டியனின் அறைக்குள் சென்று விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தான். 

“என்ன கவுதம்?”

“சார் விஷயம் நாம எதிர்பார்க்கிறதை விட தீவிரமாப் போவுது. சில டாக்டர்ஸ்க்கே தொடர்பு இருக்கலாம் போல. வார்ட் பாய் டாக்டர்ஸ் ரெஸ்ட் ரூமுக்கு வெளிய ஒட்டுக் கேட்டிருக்கான். பல லட்சம் 
மதிப்புள்ள டயமண்ட்ஸா இருக்கலாம். அநேகமா வெளிநாட்டுல இருந்து உடம்புல வச்சி ஸ்மக்கிள் செஞ்சிருக்கலாம். அதை சர்ஜரி பண்ணி எடுக்கிற வேலைய ஹாஸ்பிடல்ல சில டாக்டர்ஸ் செய்யலாம்ங்கிறது என் யூகம் சார்”

“ஓக்கே கவுதம். ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்டுக்கு தகவல் குடுத்துட்டு செக்யூரிட்டி டைட் பண்ணுங்க. வெளிய போற ஃபோன்கால்ஸ், டாக்டர்ஸோட செல்ஃபோன் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணுங்க. 

நமக்குத் தெரியாம ஒரு ஈ காக்கா கூட வெளிய போகக் கூடாது”

“சார் பேஷண்ட்ஸ்?”

“அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எல்லாம் சீக்ரெட்டாவே நடக்கட்டும். இது ஒரு ஷேடோ ஆப்பரேஷன்”

“ஓக்கே சார்”

***************************************************************************************
கம்ப்யூட்டர் திரையில் “You have got a new Mail" என்று ஒளிர்ந்ததும் பரந்தாமனின் கண்களில் அந்த ஒளி தொற்றிக் கொண்டது. திறந்து உள்ளே இருந்த அந்த இயேசு நாதரின் படத்தை டவுன்லோட் 
செய்து இமேஜ் டிக்ரிப்ஷன் சாஃப்ட்வேரில் போட்டார். இயேசுவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அந்த எழுத்துக்கள் மட்டும் திரையில் குடி கொண்டன - “Mission Planned. Carrier Kamini". 
"யெஸ்” என்று உற்சாகத்தில் முஷ்டியை மடக்கி காற்றில் குத்தினார் பரந்தாமன். 

நினைவு வந்தவராக செல்ஃபோனை எடுத்து நம்பரை ஒற்றி, எதிர்முனை எடுத்ததும், “சிவா” என்றார்.

************************************************************************
ஓரியெண்டல் மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. ஸ்ட்ரெச்சரில் ரத்தச் சகதியாக இருந்தாள் அந்தப் பெண். நினைவு தப்பவில்லை. இரண்டு நர்ஸ்கள், இரண்டு வார்ட் பாய்கள், இரண்டு டாக்டர்கள் அந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்கள். 

“உங்க பேரு என்னங்க?”

“கா.. கா.. காமினி” திக்கித் திணறி சொல்லி முடித்தாள். கையில் வைத்திருந்த பேடில் கிறுக்கிவிட்டு ஐசியுவுக்குள் தள்ளிப் போனார்கள். அரை மணி கழித்து ஆறு பேரும் வெளியேறினார்கள். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஐ.சி.யூ தரைத் தளத்தில் இருந்த படியால் மெத்தென்ற புல்வெளியில் பூனை போல விழுந்தாள். இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது பத்திரமாக இருந்தது. யாரும் பார்க்கும் முன் அந்த மருத்துவமனையைச் சுற்றி வந்து கூட்டத்துக்குள் கலந்து காணாமல் போனாள்.

**************************************************************************

சிறிது நேரத்துக்கு முன் உள்ளுக்குள் ஏற்றிய ரம் சிவப்பாய் விழிகளில் படர்ந்திருந்தது. மூன்று நாள் தாடி முகத்தில் முள் போட்டிருந்தது. செல்ஃபோனை எடுத்து மணி பார்த்துக் கொண்டான். அவன் கண்கள் தூரத்தில் வரும் ஒவ்வொரு ஆட்டோவையும் ஸ்கேன் செய்து கொண்டிருந்தன. கடைசியாக ஒரு ஆட்டோ வந்து அவன் அருகில் நின்றது. 
அதிலிருந்து காமினி இறங்கினாள். கைப்பைக்குள் கையை விட்டவள் ஒரு கிழிந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து “சில்லறை இருக்கா?” என்று நீட்டினாள். 

“இருவத்தஞ்சி ரூவா நோட்டா இருக்கு பரவாயில்லயா?” 

"பாஸ் கோட்?”

“டயமன்ட்ஸ் ஃபார் எவர்”

“சிவா?” என்றவாறு கையை நீட்டினாள்.

“காமினி?” கையைப் பிடித்துக் குலுக்கினான். ஆட்டோவை கட் செய்துவிட்டு மறைவாக இருந்த ஸ்விஃப்டில் ஏறினர்.

**************************************************************************
அந்த பழைய கட்டடத்தின் முன் கார் நின்றது. 

“உள்ள வா காமினி” என்றவாறு கதவைத் திறந்து உள்ளே போனான். காமினி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். சிறிய ஹால், வலது பக்கம் கிச்சன், இடதுபக்கம் பெட்ரூம் என்று அடக்கமாக, அழகாக இருந்தது. 

“உக்காரு” சோஃபாவை சுட்டினான். 

“பரந்தாமன் சார் எங்க இருக்காரு?”

“அவர் வேற இடத்துல. நீ என் கிட்ட குடுத்தா போதும். நான் அவர்கிட்ட சேத்துடுவேன்.”

“நோ. பரந்தாமன் சார்கிட்ட குடுக்கச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு”

“இல்ல என் கிட்ட குடு”

“நோ வே”

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினி சட்டென்று தொண்டையைப் பிடித்துக் கொண்டு ஒரு கேவலை வெளிப்படுத்தி மடங்கி விழுந்தாள். பயந்து போன சிவா மண்டி போட்டு காமினியை நோக்கிக் குனிந்தான்.

“சொத்” என்று அடக்கப்பட்ட ஸ்பிரிங் விடுபடுவதைப் போல காமினியின் வலதுகால் சிவாவின் உயிர்நிலையில் அடித்தது. “அம்மா...” காமினியின் கைகளும் கால்களும் கராத்தே வீராங்கனையின் லாவகத்தோடு இயங்கின. இரண்டே நிமிடங்களில் சுருண்டு மயங்கி விழுந்தான் சிவா. சிவாவின் கை கால்களை அங்கே இருந்த அவன் பெல்டுகளால் இறுக்கிக் கட்டினாள். 

அவன் செல்ஃபோனை எடுத்து பரந்தாமன் நம்பரைத் தேடினாள். 

“ஹலோ..”
“பரந்தாமன் ஹியர்”
“நான் காமினி”
“சிவா எங்க?”
“டபுள் கிராஸ் பண்ணப் பார்த்தான். முடிச்சிட்டேன்”
“கொன்னுட்டியா?”
“இல்ல இல்ல. மயக்கம் தான். போலீஸ் எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. ஹாஸ்பிட்டல் செக்யூரிட்டி டைட்டென் ஆயிடுச்சி”
“கேள்விப்பட்டேன். எப்பிடி தப்பிச்ச?”
“எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் எப்பிடி வரணும்?”
“நீ அங்கயே இரு. நான் வர்றேன்”
“ஓக்கே”

ஃபோனை அணைத்துவிட்டு டிவியைப் போட்டாள். 

******************************************************************************
செல்ஃபோன் ஒலித்தது. பரந்தாமன். 
“ஹலோ”
“காமினி, நான் வெளியதான் நிக்கிறேன்”

எழுந்து போய் கதவைத் திறந்தாள். 

உள்ளே வந்த பரந்தாமனுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். கருகருவென்றிருந்த முடி கோத்ரெஜ் என்றது. நடிகர் நாசரின் மூக்கைப் போல சற்றே நீளம் அதிகமான மூக்கு. மேனரிசம் போல அதை கட்டை விரலாலும் சுட்டு விரலாலும் இழுத்து இழுத்து விட்டுக் கொண்டார். 

“காமினி போலிஸ் மோப்பம் பிடிச்சிட்டதா தகவல் வந்ததே?”

“ஆமா சார். ஆனா நான் போலிஸுக்கு டிமிக்கி குடுத்துட்டேன்”

“டைமண்ட் எங்கே? நான் பாக்கணும்” 

இடுப்பிலிருந்து அந்தக் குடுவையை எடுத்து நீட்டினாள். 

அதைக் கையில் வாங்கி "காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

வேக வேகமாக அந்தக் குடுவையைத் திறந்தவர் முகத்தில் ஏமாற்றம்.

“என்ன காமினி இது. ஒரு கிட்னி தான் இருக்கு?”

“மிச்சமெல்லாம் ஒரு இடத்துல பத்திரமா இருக்கு.” பின்னாலிருந்து ஒலித்த குரலுக்கு திடுக்கிட்டுத் திரும்பினார்.

அங்கே கவுதமும் இன்னும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

பரந்தாமனின் கை தானாய் மேலேறியது. “டாக்டர் பரந்தாமன். ஒரு புனிதமான தொழில் செய்யற நீயே இப்பிடி உடல் உறுப்புகளை கள்ள மார்க்கெட்ல விக்கலாமா? இதுல அதுங்களுக்கு டயமண்ட்னு கோட் வேர்ட் வேற”

பரந்தாமன் பதில் சொல்லாமல் கவுதமை முறைத்தான். “என்னடா முறைக்கிற? எப்பிடித் தெரியும்னா? முதல்ல நாங்களும் டயமண்ட்னு தான் நினைச்சோம். அப்புறமா உனக்கு வந்திச்சே ஒரு ஈ-மெயில், அதை நாங்களும் trap பண்ணிட்டோம். உன்கிட்ட மட்டும் தான் இமேஜ் டி-க்ரிப்டர் இருக்குமா? எங்க டிபார்ட்மெண்ட்லயும் இருக்கு. அதை அனுப்புன டாக்டரை ரெண்டு தட்டு தட்டின உடனே உண்மையக் கக்கிட்டான். உன்னைக் கையும் களவுமாப் பிடிக்கணும்னு தான் எங்க டிப்பார்ட்மெண்ட் எஸ்.ஐ காமினியை அனுப்பி வச்சோம்”

“நீ கையில வச்சிருக்கிற பாக்ஸ்ல இருக்கிறது கிட்னி இல்ல. க்ளோப்ஜாமுன்” குடுவையை வாங்கி கான்ஸ்டபிளிடம் கொடுத்த காமினி கவுதமின் நீட்டிய கையிலிருந்த விலங்கை வாங்கி பரந்தாமனின் கையை பின்னால் மடக்கி மாட்டினாள்.

டிஸ்கி 1: நல்லா பாத்துக்குங்க. லேபிள்ல பு..வு இல்லை. வேற சொற்சித்திரம், சொற்சிலம்பம் இப்பிடி எதுவுமே இல்லை. மேலும், இது போட்டிக்கான கதைங்கிறதால இதுல வர்ற கேரக்டர் (முக்கியமா பெண்) எல்லாம் கற்பனையே.. யாரையும் குறிப்பதல்ல. யாராவது பிராது குடுக்கணும்னா பரிசல் & ஆதி மேல குடுக்கவும்.

டிஸ்கி 2: மக்கள்ஸ் தைரியமா பின்னூட்டலாம். பின்னாடி யாரும் வந்து இந்த இடுகையைப் படிச்சியா? இது சரியா? நேரடி பதில் தேவைன்னு கேக்க மாட்டாங்க. 

Monday, September 20, 2010

தி.கு.ஜ.மு.க (ரகசியப்) பொதுக்குழுக் கூட்டம்

பல முறை சலிக்கச் சலிக்கப் பார்த்த நயகரா. நதியின் இரண்டு புறமிருந்தும் அருவிகளைப் பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் முகிலன் பிறந்த பின்னால் ஒரு முறை கூட போனதில்லை என்பதால் இந்த வருடம் சீசன் முடிந்ததும் (கூட்டம் குறைந்ததும்) போகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம்.

சொல்லி வைத்தாற்போல டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஒரு அழைப்பு. நான் நயகரா வருகிறேன். சந்திக்கலாமா? தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததைத் தட்ட முடியுமா? சரி என்று போக முடிவெடுத்து விட்டோம். 

முதல் நாள் மாலை பஃபலோ (ஊர் பேர்தானுங்க) வந்து சேர்ந்ததும் அழைத்து உறுதிப் படுத்திக்கொண்டார். அடுத்த நாள் காலை எழுந்து கட்டு சோறு கட்டிக் கொண்டு - நயகராவில் சீசன் நேரத்தில் நல்ல சிற்றுண்டி சாலைகள் இல்லை. ஜன்க் ஃபுட் சாப்பிடுவது ஓக்கே என்றால் கவலைப் படாமல் போகலாம். ஆகவே நாங்கள் எப்போது கட்டு சோறு எடுத்துச் சென்று விடுவது - கிளம்பினோம்.மாங்காய் சாதமும், தயிர் சாதமும். எங்களுடன் இன்னொரு ஜோடியும் வருவதாக இருந்தார்கள். அவர்கள் காய்கறிகள் செய்து வந்தார்கள். 

திட்டப்படி காலை 10 மணிக்கு காரில் ஏற வேண்டும். ஆனால் இந்திய பங்க்சுவாலிட்டி படி 11மணிக்குக் காரில் ஏறி கிளம்பினோம். முகிலனுக்கு மோஷன் சிக்னெஸ் உண்டு (பரம்பரை சிக்னெஸ்). சொல்லி வைத்தாற்போல பஃபலோவை நெருங்கும் போது வாயிலெடுத்துவிட்டார். அப்புறம் அங்கேயே ஓரத்தில் காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டு நயகராவை நெருங்கினால் ட்ராஃபிக் ஜாம். அங்கே கிட்டத்தட்ட 45 நிமிடம் வெட்டியாய் செலவு செய்த பின் மணியைப் பார்த்தால் 1:00. 

ஜம்பமாக சாப்பாடு எடுத்து வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே. இப்போது அவர்கள் பசியில் இருப்பார்களே என்று வேகவேகமாக காரை ஓட்டி கோட் ஐலண்டை நெருங்கும்போது மணி 1:30. குடுகுடுப்பைக்கு தொலைபேசினால், கேவ் ஆஃப் த விண்ட்ஸ்ல இருக்கோம். அங்கயே வந்துருங்க என்றார். நாங்களும் அங்கேயே போய் காரை பார்க் செய்து விட்டு அங்கே ஒரு ஓரமாக இருந்த பெஞ்சுகளில் எங்கள் கையிலிருந்த பார்சல்கள அத்தனையையும் வைத்து விட்டு பார்த்தால், அங்கே ஒரு கூட்டம். மறுபடியும் தொலை பேசினேன்.

“குடுகுடு, இங்க ஒரு கூட்டமே இருக்கு. நீங்க எங்க இருக்கீங்க?”

“அந்தக் கூட்டத்துலதான் இருக்கோம்.”

“அடையாளம் சொல்லுங்க.”

“மஞ்சக்கலர்ல பாஞ்சோ (ரெயின் கோட்) போட்டிருக்கோம் பாருங்க”


“அதுக்கு நான் திருப்பதியில போயி மொட்டை போட்டவங்களத் தேடுவேனே?”

“நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“நாங்க இங்கதான் பெஞ்சில உக்காந்திருக்கோம்”

“சரி அப்ப நாங்க போயி கேவ் ஆஃப் த விண்ட்ஸ் பாத்துட்டு வந்துடுறோம்”

“சரி.”

வைத்துவிட்டு பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தேன். இதுவரை பார்த்திராத முகம். வலையுலகில் மட்டுமே பழக்கம். ஓரிரு முறை தொலைபேசியிருக்கிறோம். தங்கமணிக்கு பெரிய கவலை - ஹரிணியும், குடுகுடுவின் மாமியாரும் சாப்பிடாமல் இருப்பார்களே.

அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வந்தார். பார்த்ததும் புன்னகையையும் கைக்குலுக்கல்களையும் பரிமாறிக் கொண்டோம். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். அவருக்கு நான்கு மணிக்கு ஃப்ளைட் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் நிறைய நேரம் இருக்க முடியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் வலையுலக அரசியல் பற்றியும் சமீபத்திய சர்ச்சைகள் பற்றியும் சிறிது நேரம் அலசினோம். என் மனைவி இந்தப் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் பற்றி பின்னர் தொலைபேசியில் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் குடுகுடுப்பை. 

குடுகுடுப்பையின் மாமியார் சளைக்காமல் பேசினார். அவருக்கு இந்தியாவுக்கு திரும்பிவிட வேண்டும். அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். 

அடுத்ததாக ஹரிணி, தன் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு எதாவது வாங்க வேண்டும் என்று சொல்லவும், அழைத்துக் கொண்டு போனோம். கடையையே அலசி கடைசியில் சில பேனாக்களும், கட் செய்த கற்களும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். முகிலன் வெட்கம் விட்டு சகஜமாக ஆரம்பித்தான். ஹரிணியும் முகிலனும் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் முகிலன் ஓட, நான் துரத்த, என்னை அவனைத் தூக்க விடாமல் ஹரிணி தடுக்க என்று இருவரும் என்னை நன்றாக ட்ரில் வாங்கினர். 

விடை பெறும் நேரம் வந்தது. அடுத்த முறை வரும்போது வீட்டில் தங்குவதைப் போல வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விடை கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் பகிரக்கூடாது என்று உத்தரவிட்டதால் பகிரவில்லை. (ஆனாலும் ஏன் அவரது அழகு முகத்தை யாருக்கும் காட்டக்கூடாது என்று நினைக்கிறாரோ தெரியவில்லை).

பார்த்த சிறிது நேரத்தில் நிறைய பேச முடியவில்லை தான். ஆனாலும் நீண்ட நாள் பழகிய ஒரு நண்பரைப் பார்த்த ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இப்படி நல்ல நட்புகளைக் கொடுத்த வலையுலகிற்கு நன்றி. 

(பொதுக்குழுவில் என்ன பேசினீர்கள் என்று கேட்பவர்களுக்கு, அது தான் ரகசியப் பொதுக்குழுன்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எப்பிடி அதை வெளிய சொல்வோம். தலைவர் சீக்கிரம் நடவடிக்கைகள் எடுப்பார். ஒன்றிரண்டு தலைகளின் பதவிகள் கைமாறலாம்).