Thursday, August 30, 2012

சில்வியா



Detectives don't see different things. They see things differently


A5 கேட் வழியாக வெளியே வந்த அருண் தூரத்தில் சௌமியாவின் தலை தெரிந்ததும் கையசைத்தான். சௌமியாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கு போட்டது போல ஒரு மகிழ்ச்சி. வெளியே வந்ததும் அருணின் கையில் தொங்கிய கோட்டைப் பார்த்து,
“அடப்பாவி. நல்ல ஜூலை மாசத்துல வந்து இறங்கிட்டு கைல கோட்டு வேறயா? கொளுத்துற வெயில்ல மூளையே ஆவியாகப் போவுது பாரு?”

“நாட்டி” என்று அவன் தலையில் கொட்டிய அருண், “அமெரிக்கா ரொம்ப குளுரும்னு பொய் சொல்லிட்டாய்ங்க போலருக்கே” என்று சிரித்தபடி அவளுடன் நடந்தான்.

சௌமியா, அருணின் அத்தை பெண். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள். 30 வயது. ஒரு லோக்கல் பள்ளியில் டீச்சராக இருக்கிறாள். இன்னும் திருமணம் ஆகவில்லை. சிறுவயதில் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அருணுடனே சுற்றிக் கொண்டிருப்பாள். 8 வயது சிறியவள் ஆனாலும் பெயர் சொல்லி அழைக்க அமெரிக்கா கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ் அரைகுறை. அமெரிக்க ஆங்கிலம் கரை புரண்டு ஓடும். இவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். சௌந்தர். அருணை விட இரண்டு வயது இளையவன். ராச்சஸ்டர் போலீஸ் டிப்பார்மெண்டில் டிடெக்டிவாக இருக்கிறான். அத்தையும் மாமாவும் அமெரிக்காவுக்கு வரச் சொல்லி பல முறை அழைத்தும் இப்போதுதான் அருணுக்கு நேரம் வாய்த்திருக்கிறது.

லக்கேஜை எடுத்துக்கொண்டு காரில் ஏறி பத்தாவது நிமிடத்தில் வீட்டு காராஜில் நிறுத்தினாள். கதவைத் திறந்து இறங்கியதும் அத்தை அணைத்துக் கொண்டாள்.

“ஏண்டா அருண். அங்க தனியா இருந்துட்டு எதுக்குடா கஷ்டப்படற. நாங்கள்லாம் இங்க இருக்கோமே இங்க வந்துடலாமே?”

“எங்க அத்தை. ஆறு மாசத்துக்கு மேல இருக்க விடமாட்டேன்னு பாஸ்போர்ட்லயே எக்ஸ்பயரி டேட் குத்தி தானே அனுப்புறாங்க. அப்புறம் எப்பிடி இங்கயே வந்து தங்கறது?”

“வேணும்னா என்னையக் கல்யாணம் பண்ணிக்கோ. க்ரீன் கார்ட் உடனே கிடைச்சிடும்” கண்ணடித்தாள் சௌமியா.

“அய்யோ, அதுக்கு நான் இந்தியாவுலயே இருந்துருவேன்” சொன்ன அருணினின் புஜத்தில் செல்லமாக குத்திவிட்டு, “நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்று எழுந்தாள் சௌமியா.

“ஹேய், இன்னுமா பேரண்ட்ஸ் வீட்டுலயே இருக்க? ஏன் அத்தை, இவளை பதினெட்டு வயசானதும் வெளிய தள்ளி விட்டுடலையா?”

“நான் அப்பார்ட்மெண்ட்ல தனியா தான் தங்கியிருக்கேன். இப்ப ஏதோ நீ வந்திருக்க, உனக்குக் கம்பெனி குடுக்கலாம்னு தான் டெம்பரரியா வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கேன்.” படி ஏறிக்கொண்டே பதில் சொன்னாள்.

“சரிடா நீயும் ரெஃப்ரஷ் பண்ணிக்கோ. மாமா ஆஃபிஸ்ல இருந்து வர்ற நேரமாச்சு”

மாமா வந்து நல விசாரிப்பு சம்பிரதாயங்களோடு இரவு உணவும் முடிந்து பயணக் களைப்பில் சீக்கிரமே தூங்கிப் போனான்.

=======================================================================


காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து, குளித்து விட்டுக் கீழே வந்து பார்த்த போது ஹாலில் சௌந்தர் உட்கார்ந்திருந்தான்.

“வா மாமா. நல்லா தூங்கினியா?” எழுந்து வந்து கை கொடுத்தான்.

“ம்ம்.. போலீஸ் வேலை எல்லாம் எப்பிடி போகுது?”

“செம இண்டரஸ்டிங் மாமா. உனக்கெல்லாம் வேலைய விட எப்பிடி மனசு வந்திச்சோ?”

“அந்தக் கதை தான் உனக்குத் தெரியுமே. உன் வீடு எங்க இருக்கு?”

“இங்கருந்து 15 மைல். டின்னர் எங்க வீட்லதான் ஓக்கே?”

“சரிடா”

பேசிக்கொண்டிருக்கும்போதே சௌந்தரின் செல்ஃபோன் ஒலித்தது. “ஒரு நிமிஷம்” என்று எழுந்து சென்று பேசிவிட்டு வந்தான்.

“மாமா ஈவினிங் வந்து உன்னை கூட்டிட்டிப் போறேன். இப்ப எனக்கு வேலை வந்திடுச்சி.”

“என்ன வேலை?”

“ஒரு சூசைட். க்ரைம் சீனுக்கு வரச் சொல்றாங்க போய் பார்த்துட்டு வந்திர்றேன்”

“ம்ம்.. நானும் வரலாமா? உங்க ஊர்ல கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் எப்பிடி இருக்குதுன்னு பார்க்கலாம்னு ஆசை”

ஒரு நொடி யோசித்தவன், “சரி வா” என்றான்.

சௌந்தரின் அன்மார்க்ட் போலிஸ் காரில் ஏறி கிரைம் சீனுக்கு விரைந்தார்கள். அது ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ். பார்க்கிங் லாட்டில் ஒரு ஆம்புலன்ஸ், ஒரு பயர் ட்ரக், ஒரு சி.எஸ்.ஐ வேன், மூன்று போலிஸ் கார்கள் நின்று கொண்டிருந்தன. சௌந்தர் இறங்கியதும் ஷெரீஃப் வந்து கை கொடுத்தார்.

“சௌ. த கேஸ் இஸ் சிம்பிள். சூசைட். நீ வந்து பார்த்து கன்ஃபர்ம் மட்டும் செஞ்சிடு” காரின் இன்னொரு பக்கம் இருந்து இறங்கிய என்னைப் பார்த்ததும் கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினார்.

“ஷ்யூர் ஷெரிஃப்.” அவர் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்த சௌந்தர், “இது அருண். என்னோட கசின். இந்தியாவுல இருந்து வந்திருக்கார். அங்க இவர் ஒரு எக்ஸ் டிடெக்டிவ்”

“ஓ அப்பிடியா? வெல்கம் டு ராச்சஸ்டர் அருண்” கையைப் பிடித்து குலுக்கினான்.

“அருணும் கிரைம் சீனுக்குள்ள வர்றதுல உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லைல்ல?”

“ஓ நோ ப்ராப்ளம்”

மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒற்றை பெட்ரூம் அப்பார்ட்மெண்ட். உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் கிச்சன். கிச்சனுக்கு வலது பக்கம் ஒரு டைனிங் டேபிள். டேபிளின் இரண்டு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. டேபிளுக்கு மேலே ஒரு கட்டிங் போர்ட், அதன் மீது பாதி வெட்டப்பட்ட கேரட்டும் ஒரு கத்தியும் இருந்தது. மேலும் சில காய்கறிகள், வெட்டப்பட காத்திருந்தன. டைனிங் டேபிளுக்கு நேராக அந்தப் பக்கம் ஒரு டேபிள் போடப்பட்டு அதற்கு மேல் ஒரு கம்ப்யூட்டர் ஃப்ளாட் ஸ்க்ரீன் மானிட்டரோடு இருந்தது. ஒரு ஃபோட்டோ ஃப்ரேம். அந்த டேபிளுக்குப் பின்னால் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேரில் அவள், அது என்று சொல்லவேண்டும், சரிந்து செத்துப் போயிருந்தாள். இடது பக்கம் சரிந்து கிடந்தாள். இரவு உடை. வலது நெற்றிப் பொட்டு வழியாக நுழைந்து மூளையச் சிதறடித்த தோட்டாவுக்குச் சொந்தமான துப்பாக்கி அவள் வலது கையில் தொங்கிக் கொண்டு இருந்தது. ஃபோட்டோகிராஃபர் பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். ஏனைய சி.எஸ்.ஐ டீம் ஓரமாக நின்று நாளை நடக்கப் போகும் பேஸ் பால் மேட்ச் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

கையில் ஒரு நோட் பேடோடு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒரு ப்ளூ யூனிஃபார்ம் போலீஸ்காரரைப் பார்த்து, “சார்ஜண்ட், குட் யூ ப்ளீஸ் ஃபில் இன் சௌ?” என ஷெரீஃப் கேட்டார்.

“யெஸ் சார். ஹல்லோ டிடெக்டிவ்” என்று கை கொடுத்துவிட்டு “இந்தப் பொண்ணு பேரு சில்வியா ரயான். பக்கத்துல இருக்கிற கம்யூனிட்டி காலேஜ்ல வேலை பார்த்துட்டு இருக்கா. போன மாசம் இவ பாய் ஃப்ரண்ட் ஜான் ப்ரொடியோட ப்ரேக் அப் ஆகியிருக்கு. அதிலருந்து அழுதிட்டே இருந்திருப்பா போல. பாய் ஃப்ரண்டைப் பிரிஞ்சி இருக்கிறதைத் தாங்கிக்க முடியலைன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு சுட்டுக்கிட்டா. இந்தக் காலத்துப் பொண்ணுங்க எதுக்கு எடுத்தாலும் செத்துப் போறாங்க”

“கன்?” சௌந்தர் கேள்வியாகக் கேட்க, “இவளோட அப்பாவோடது. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யாரோ இவளை ஸ்டாக் பண்ணாங்கன்னு பாதுகாப்புக்கு வேணும்னு சொல்லி போன சண்டே தான் வாங்கி வச்சிருக்கா. இவங்கப்பா கூட இவ பேர்ல பிஸ்டல் லைசன்ஸ் ஒண்ணு அப்ளை பண்ணியிருக்கார். சூசைட் செஞ்சிக்கத்தான் வாங்கிருக்கான்னு தெரியாமலே அவங்கப்பா குடுத்துருக்காரு.”

“அவர் எங்க?” அவர் ஃபிலடெல்ஃபியால இருக்கார். அவரும் அவர் மனைவியும் கிளம்பி வந்துட்டு இருக்காங்க”

“ம்ம்”

“டிடெக்டிவ். உங்களுக்குப் பெருசா வேலை எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். திஸ் இஸ் அ ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் ஸ்யூசைட்”

அருணும், சௌந்தரும் சுற்றி வந்து பார்த்தனர். மானிட்டரில் அவள் எழுதிய தற்கொலைக் கடிதம் எம்.எஸ் வேர்டில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிப் பார்த்துவிட்டு சௌந்தர், ஷெரீஃபைப் பார்த்து, “இவர் சொன்ன மாதிரி, இட்ஸ் அ ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் ஸ்யூசைட் ஷெரீஃப். யூ மே க்ளோஸ் த ஃபைல்”

அருண் அதிர்ந்து சௌந்தரைப் பார்த்தான். “என்ன சௌந்தர். நீயும் சூசைட்னு சொல்ற? இது மர்டர். உங்க பாஷையில ஹோமிசைட்”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

கலைமொழி - 2

ஏற்கனவே போட்டது போல ஒரு புதிர்தான். இந்த முறை தமிழிலக்கியத்துல இருந்து. இது ஒரு செய்யுள். Birds of feather flock together என்ற ஆங்கிலப் பழமொழிக்கும் இந்த செய்யுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.


புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ (maildhinesh@gmail.com) அனுப்பலாம்.




சென்ற கலைமொழிப் புதிருக்கான விடை - கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. 
சரியான பதில் சொன்னவர்கள் - திண்டுக்கல் தனபாலன், ஹூசைனம்மா, தினேஷ், யோசிப்பவர், shanthi, Elangovan, இன்னமுதம், PonChandar, 10அம்மா.

இது போன்ற புதிர்களை உருவாக்க http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

Tuesday, August 28, 2012

சொல்கலை - 1

நண்பர் யோசிப்பவர், தனது தளத்தில் இது போன்ற புதிர்கள் பல வெளியிடுவார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல என்னாலான ஒரு சிறு முயற்சி.

குறிப்பு: பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 9 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “ கடார நாட்டு கண்ணன்! ” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.







1.
2.
3.
4.
5.
6.
7.


வள்ளுவன் வாக்கு

Wednesday, August 15, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 13


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 


“சொல்லுங்க மேடம்” கை கட்டி வாய் பொத்தி சொன்னேன். கல கலவென சிரித்தாள். “சிரிச்சது போதும்டி. சொல்லு”

அவள் முகத்தில் இருந்த சிரிப்பு வடிந்து போனது.

“தேவா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு”

என்ன இவள், நான் சொல்லவேண்டிய வசனத்தை இவள் சொல்கிறாள்? கிள்ளிவிட்ட ஹாஃப்பாயில் போல கலங்கிப் போனேன். இவள் பக்கம் பிரச்சனையே இருக்காது என்று நினைத்தேனே. இப்போது இவள் என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறாளோ?

“என்ன மாலா சொல்ற?”

“ஆமா தேவா. எங்கப்பா அம்மா எல்லாம் நிறைய படிச்சவங்க, ஜாதி பாக்க மாட்டாங்கன்னு எல்லாம் நினைக்காத. அந்த விசயத்துல அவங்க படிக்காதவங்களை விட ரொம்ப மோசமா நடந்துப்பாங்க. அது போக எங்கம்மாவுக்கு மொத்தம் நாலு சிஸ்டர்ஸ். அவங்கல்லாம் பிஸினஸ் பண்றவங்க. எங்கம்மாவே ஒத்துக்கிட்டாலும் அவங்க விடமாட்டாங்க. இவங்களையெல்லாம் மீறி நம்ம கல்யாணம் எப்பிடி நடக்கப் போவுதுங்கிறதுதான் சிக்கல்”

“ஆஹா..நான் என் குடும்பத்துப் பக்கம் இருக்கிற சிக்கலை எப்பிடி உன்கிட்ட சொல்லலாம்னு நைட் எல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தேன். நீ என்னடான்னா உன் பக்கத்து சிக்கலை சொல்ற” தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

“உன் ஃபேமிலியில என்ன சிக்கல்? உன் தங்கை கல்யாணம் தானே? அது முடிஞ்ச பிறகே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லையே”

“அது சரி. உங்க சைட்ல எப்பிடின்னு தெரியாது. எங்க சைட்ல வேற ஜாதிப் பொண்ணுன்னு சொன்னா வாயால பேச மாட்டாங்க. அருவாளாலதான் பேசுவாங்க. பட், ஒரு மாதிரி நான் அதை சமாளிச்சிருவேன். பேசாம நாமளா கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி போய் நின்னா என்ன?”

இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தாள். “போடா.. எங்க ஃபேமிலியில என்னை எப்பிடியெல்லாம் தாங்குவாங்க தெரியுமா? அவங்க இல்லாம என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது?”

“ம்ம்ம்ம்” நூல்கண்டில் ஒரு பக்கம் மட்டும் சிக்கலென்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பிரித்துவிடலாம். இங்கே ரெண்டு பக்கமும் சிக்கலாயிருக்கிறதே? என்ன செய்யலாம்?

“தேவா. நான் ஒரு சொல்யூஷன் சொல்லட்டுமா?”

“என்ன?”

“இப்போதைக்கு நாம அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எனக்கு எப்பவாச்சும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்கன்னா, அப்ப நம்ம விசயத்தை ஓப்பன் பண்ணுவோம். நீயும் உன் தங்கச்சிக்கு சீக்கிரம் வரன் தேடச் சொல்லு. ஓக்கே”

“நல்ல யோசனை தான் மாலா. நாமும் கொஞ்ச நாளைக்கு லவ் பேர்ட்ஸா இருப்போம்”

“ம்க்கும். நீ இங்கயும் நான் இந்தியாவுலையும் லாங் டிஸ்டன்ஸ் லவ்வா பண்ண முடியும்?”

“ஆமாம்ல. நீ இன்னும் ரெண்டு வாரம் தான் இருப்பியா? ஒவ்வொரு செகண்டும் உன் கூட செலவு பண்ணனும் மாலா. வா ஆஃபிஸ் போலாம்”

இருவரும் எழுந்து அலுவலகம் நோக்கி சென்றோம். முதல் நாள் ரீனா எனக்கு என்ன என்ன காட்டித் தந்தாளோ அதை எல்லாம் மாலாவுக்கும் காட்டினேன். டீம் மொத்தமும் கான்ஃபரன்ஸ் ஹாலில் கூடியிருந்தோம். நடுநாயகமாக ரீனா. நானும் மாலாவும் உள்ளே நுழைந்ததும், மொத்த டீமும் எழுந்து கை தட்டினார்கள். ஜேக் எனக்கு கை கொடுத்தான்.

“Congrats guys. I heard you both are engaged.”

எங்கேஜ்டா?? என்னங்கடா இது, இப்போதுதான் காதலையே சொல்லியிருக்கிறோம். அதற்குள் எங்கேஜ்டு என்று சொல்கிறார்களே என்று முழித்தேன். மாலாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் குழப்பம் எதுவுமில்லை. சிரித்துக் கொண்டே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.

“Where is the ring?” யாரோ கேட்ட கேள்விக்கு, “That is not in our custom” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்களில் இயல்புக்கு வந்து புதன்கிழமை நடக்கப் போகும் கான்ஃபரன்ஸின் நிகழ்ச்சி நிரலையும், ரீனாவின் ப்ரசண்டேஷனையும் பற்றி விளக்கினாள். டீமில் யாரும் வராமல் இருக்கக் கூடாது என்பதை நூறாவது முறையாக நினைவு படுத்திவிட்டு, கார்ப்பரேட் ஆஃபிஸில் இருந்து வரும் கெஸ்ட்ஸ் இன்றும் நாளையும் நம் அலுவலகத்தை சுற்றி வருவார்கள். அப்படி வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சொன்னாள். ஒருவழியாக மீட்டிங் முடிந்து வெளியே வந்தோம்.

“என்ன மாலா எங்கேஜ்ட்னு கேக்குறாங்க, நீயும் ஆமாம்னு மண்டைய ஆட்டுற?”

“டேய், இவங்க கல்ச்சர்ல, ப்ரொபோஸல்னா கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குறதுதான். நம்ம கல்ச்சர்ல லவ் ப்ரோப்போஸ் பண்ணாலே அந்த பெர்சனைத்தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்னு அர்த்தம் இல்லையா?”

“ஆமா.”

“அப்ப அவங்க கேட்டது சரிதானே?”

“சரிதான்” மனதுக்குள் மாலாவுக்கு ஒரு மோதிரம் பரிசளிக்கவேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தன. ஃப்ளஷிங் பிள்ளையார் கோவில், பிரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோவில் (ஆனந்த தாண்டவம் படத்துல கல்யாணம் நடக்குமே அந்தக் கோவில்தானே - மாலா), சுதந்திர தேவி சிலை, மேடம் டுஸ்ஸாட் வேக்ஸ் மியூசியம், நயகரா, அட்லாண்டிக் சிட்டி என்று நான் பார்த்த எல்லா இடங்களையும் மாலாவிடம் காட்டி மகிழ்ந்தேன். செண்ட்ரல் பார்க்கில், சிம்பு-த்ரிஷா உட்கார்ந்திருந்த அதே பெஞ்சில் அதே போஸில் உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

*****************************

வியாழக்கிழமை. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மாலா இந்தியா திரும்புகிறாள். அலுவலகத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும் வழியில், “இன்னைக்கி நைட் இங்கயே தங்கிடேண்டா”

யோசித்தேன். இருப்பது 24 மணிநேரத்துக்கும் குறைவு. இதில் எட்டு மணி நேரத்தை இழக்க விருப்பமில்லை. “சரி”.

“தேங்க்ஸ்டா” என்று அணைத்து நெற்றியில் இதழ்களைப் பதித்தாள். என் தோளில் சாய்ந்து கொண்டாள். என் இடது கையை அவளைச் சுற்றிப் போட்டு அணைத்துக் கொண்டே நடந்தோம். சாதாரணமாக தூரமாகத் தெரியும் ஹோட்டல் இன்று சீக்கிரமே வந்துவிட்டது.

ரூம் சர்வீஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எதுவும் பேசவில்லை. கட்டிலில் அருகருகே உட்கார்ந்திருந்தோம். மாலா என் தோளில் சாய்ந்திருந்தாள்.

“தேவா, நாளைக்கு இன்னேரம் நான் ஏரோப்ளேன் ஏறி போயிட்டே இருப்பேன். உன் பக்கத்துல இப்பிடி உக்காந்திருக்க முடியாது. கவலையா இருக்குடா”

“எங்க மாலா போயிடப் போறோம். நினைச்ச உடனே ஃபோன்ல பேசலாம். ஸ்கைப்ல வீடியோ சேட் பண்ணலாம். உன் கிட்ட விசா இருக்கு. ரொம்ப ஃபீலிங்கா இருக்குதுன்னா டக்குனு ஒரு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஃப்ளைட் பிடிச்சி இங்க வந்துடு. அவ்வளவு தானே?”

“ஈஸியா சொல்லுவடா. ஆனா கஷ்டம் எனக்குத்தானே?”

“ஹ்ம்ம்ம்”

“டேய் இந்த மூணு மாசம் இருந்த மாதிரி பேசாம இருந்துடாதடா. டெய்லி பேசு. ஓக்கே”

“சரி மாலா. படுத்துக்கோ. நாளைக்கு ட்ராவல் இருக்குதுல்ல. நான் அந்த சோஃபால படுத்துக்குறேன்”

“ம்ம்.. வேண்டாம்டா. என் பக்கத்துலையே படுத்துக்கோ” என் கையைக் கட்டியணைத்துக் கொண்டு கெஞ்சினாள்.

“சரி” அவள் பக்கத்திலேயே படுத்துக்கொண்டேன்.  என் தோளில் முகம் பதித்தவாறே படுத்துக் கொண்டிருந்தாள். அவள் தலையை கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இருவரும் எப்போது தூங்கிப் போனோம் என்று நினைவில்லை.

**************************
அடுத்த நாள் ஏர்ப்போர்ட்டில் எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவது போல முகத்தை வைத்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து போனாள். செக்யூரிட்டி செக்-இன் தாண்டி கேட் நோக்கிப் போகும் வரை திரும்பித் திரும்பி கையசைத்துக் கொண்டே போனாள். எனக்கும் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. வெளியே வந்து டாக்ஸி ஸர்வீஸஸில் நிற்க, அடுத்து வந்து நின்ற டாக்ஸியில் ஏறினேன்.

“சார், எப்பிடி சார் இருக்க? அன்னைக்கு பார்த்ததுதான். அப்புறம் பாக்கவே இல்லை. இன்னமும் அதே ஹோட்டல் தானா சார்?” முதல் நாள் நியுயார்க்கில் காலடி எடுத்து வைத்த போது சந்தித்த தமிழ் டாக்ஸி டிரைவர்.

“சொல்லுங்கண்ணே, நல்லா இருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

ஒரு கணம் திரும்பி என்னைப் பார்த்தார். இருவருக்கும் இடையில் இருந்த ஃப்ளெக்ஸி க்ளாஸில் அவர் கண்களில் இருந்த உணர்ச்சியை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு கணம் அமைதியாக என்னைப் பார்த்துவிட்டு, “நல்லா இருக்கறாங்க சார். நீ இன்னும் ஹில்டன்ல் தான் இருக்கியா?”

“இல்லண்ணே, இப்ப ப்ராங்க்ஸ்ல இருக்கேன்” அட்ரஸைச் சொன்னேன்.

“யாரும் ஊருக்குப் போறாங்களா சார்?”

“ஆமா. என்னோட ஃபியான்சி இந்தியாவுக்குப் போறா”

“அட, கல்யாணமாவப் போவுதா? வாழ்த்துக்கள் சார். பொண்ணு எந்த ஊரு?”

“திண்டுக்கல்”

“சொந்தமா?”

“இல்லண்ணே. கூட வேலை பார்க்கிற பொண்ணு.”

“லவ் மேரேஜா? சந்தோசம் சார்”

அதன் பிறகு நிறைய பேசினார். அவரது காதல் கதையையும், கடும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதையும் பற்றி விரிவாகப் பேசினார். சுவாரசியமாக இருந்தது. இன்னொரு நாளில் நானும் யாருக்காவது எனது காதல் திருமணத்தில் முடிந்த கதையை இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பேன். எத்தனை எதிர்ப்பை மீற வேண்டியிருக்குமோ? பேசாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டு இரண்டு பேரின் வீட்டுக்கும் போய் விடலாம். மாலா தான் பெற்றோர் சம்மதத்தோடு தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். நம் பக்கம் செய்ய வேண்டியவைகளைச் செய்வோம். முதலில் அப்பாவுக்கு ஒரு பெரும் தொகையை ட்ரான்ஸ்ஃபர் செய்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டும்.

இறங்க வேண்டிய இடம் வந்தது. மீட்டர் ஐம்பது டாலரைக் காட்டியது. 60 டாலராக எடுத்து நீட்டினேன். “இருக்கட்டும் சார். உன்னோட கல்யாணத்துக்கு என் கிஃப்டா வச்சிக்கோ” என்றார். வம்படியாக அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அவர் நம்பரை வாங்கிக் கொண்டேன்.

*********************************************
மாலா ஊருக்குப் போய் சேர்ந்ததும் அவளுக்கு முன்னால் செந்தில் அழைத்தான். நண்பனின் காதல் வெற்றியடைந்ததும் உண்மையான நண்பனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, செந்திலின் குரலில் தெரிந்தது. ஓமனாவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். தினமும் இரண்டு மணி நேரமாவது மாலாவுடன் பேசுவது வழக்கமாகிப் போனது. வானேஜ் இருந்ததால் பிழைத்தேன். இல்லையென்றால் என் சம்பளம் முழுக்க ஃபோன் பில்லிலேயே போயிருக்கும்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். மாலாவிடம் இருந்து ஃபோன் வந்தது. கட் செய்துவிட்டு திரும்ப அழைத்தேன். வழக்கமான குறும்பு மாலாவின் குரலில் மிஸ்ஸிங். சோகம் இழையோடுவதாக எனக்குப் பட்டது.

“என்னாச்சி மாலா, குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?”

“ஆமா தேவா. பெரிய பிரச்சனை”

(தொடரும்)

அடுத்த பாகம்

Monday, August 13, 2012

புதிர் - ஆங்கிலப் படங்களின் வசனங்கள்

Identify the movies (Please don't use Google).

Quote 1:

There's two ways you can go on this job: my way or the highway

படம்: Reservoir Dogs

Quote 2:

I trust everyone. It's the devil inside them I don't trust

படம்: The Italian Job

Quote 3:

Very poor choice of words...

படம்: Dark Knight

Quote 4:

Revenge is a dish best served cold.

படம்: Kill Bill Vol.1

Quote 5:

This isn't flying, this is falling with style!

படம்: Toy Story

Monday, August 6, 2012

கலை மொழி (புதிர்)

ரீபஸ் புதிர்களுக்குக் கிடைத்த பெருவாரியான (ம்க்கும்) ஆதரவைத் தொடர்ந்து கலைமொழி என்ற அடுத்த வடிவம்.

இங்கே ஒரு பஞ்ச் வசனம் கலைந்துள்ளது. இந்த வடிவ புதிரை எப்படி விளையாடுவது என்று இங்கே போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

முடித்ததும், Completed என்ற பொத்தானை அழுத்தினாள் நீங்கள் சேர்த்த அந்த வரி அந்த கட்டத்துக்குள் வரும். அதை காப்பி செய்து பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்யவும்.

மீண்டும், பின்னூட்டம் மட்டுறுத்தப்படுகிறது. 






Thursday, August 2, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 12


பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 

“நாம முன்னாடி ஒரு தடவை செக்ஸ் டிப்ரைவ்ட் பத்தி பேசியிருக்கோம் நினைவிருக்கா?”

“ஆமா” எதுக்கு இவ இதைப்பத்தி இப்ப இழுக்கிறா?

“I was wrong then"

“என்ன சொல்ற? எனக்குப் புரியலை” நிஜமாகவே புரியவில்லை. என்ன சொல்ல வருகிறாள் இவள்?

“இல்லடா. நம்ம கௌசல்யா மேம் சிடுசிடுன்னு விழுந்ததுக்கு அவங்க செக்ஸ் டிப்ரைவ்டா இருக்கிறதுதான் காரணம்னு சொன்னேன்ல?”

“ஆமா”

மாலா இப்போது தலையைக் குனிந்து கொண்டாள். “அது மட்டும் காரணமில்லைன்னு நினைக்கிறேன். நமக்கு மனசுக்குப் பிடிச்சவங்க பக்கத்துல இல்லைன்னா கூட அப்பிடித்தான் எரிஞ்சி எரிஞ்சி விழுவோம் போல” டேபிளில் சிந்திய தண்ணீரைக் கோடு இழுத்துக் கொண்டே சொன்னாள்.

“மாலா. என்னைய மன்னிச்சிக்கோ. நான் ஒரு ட்யூப் லைட்டு தான். எனக்குப் புரியலை. நேரடியா சொல்லு”

“ம்ம்.. தேவா, நீ என்கிட்ட ப்ரொப்போஸ் பண்ணினதும் நான் அதை ரிஜெக்ட் பண்ணிட்டேன். ஏன்னா நான் அப்போ நமக்குள்ள இருந்த உறவு வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்னு நினைச்சேன். அந்த ஃப்ரண்ட்ஷிப் தாண்டி என்னால போக முடியாதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, நீ என் பக்கத்துல இல்லாமலும் என் கிட்ட பேசாமலும் இருந்த இந்த மூணு மாசம் எனக்கு நரக வேதனையா இருந்தது. உன்னைய ரொம்பவே மிஸ் பண்ணேன். ஆனாலும் உன் கிட்ட பேச என்னோட ஈகோ தடுத்துருச்சி. விளைவு, நான் எல்லார்கிட்டயும் எரிஞ்சி எரிஞ்சி விழ ஆரம்பிச்சிட்டேன். எனக்கே என்னைய பிடிக்காமப் போயிருச்சி”

எனக்கு இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது. என்ன சொல்லப் போகிறாள்?

“அப்புறம் நம்ம டீம் நந்தினிதான் என்கிட்ட தனியாப் பேசினா. அவ கிட்ட பேசின பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. இந்த மூணு மாசமே கஷ்டமா இருக்கே. எனக்கோ உனக்கோ கல்யாணம் ஆன பிறகு காலம் முழுக்க எல்லாம் உன்னைப் பிரிஞ்சி இருக்க முடியுமான்னு நினைச்சிப் பார்த்தேன். இருக்க முடியாதுன்னு மனசு சொன்னது. அப்போதான் உணர்ந்தேன் உன் மேல எனக்கு இருக்கிறது வெறும் ஃப்ரண்ட்ஷிப் இல்லைன்னு. உன் கிட்ட நோ சொன்னதுக்கு என்னைய மன்னிச்சிருவியா?? இப்ப சொல்றேன் டபுள் எஸ். ட்ரிபிள் எஸ்”

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஜிவ்வென்று பறந்து கொண்டிருந்தேன். அடுத்தடுத்து அதிர்ச்சிகள். அதில் இது ஆனந்த அதிர்ச்சி. என் அமைதி மாலாவுக்கு உறுத்தியிருக்க வேண்டும். கோலம் போட்டுக் கொண்டிருந்த விரலை நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களின் ஓரம் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

“இதை என் கிட்ட நேர்ல வந்து சொல்லணும்னு இப்பிடி ஒரு சர்ப்ரைஸ் ட்ரிப் போட்டு வந்தியா??”

அவள் கன்னம் சடுதியில் சிவந்தது. வெட்கம். இது வரை இவள் வெட்கப் பட்டு பார்த்ததே இல்லை. என் கண்களைச் சந்திக்க முடியாமல் மீண்டும் தாழ்த்திக் கொண்டாள். தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்து ஆம் என்றாள்.

மாலாவின் நாடியைப் பிடித்து முகத்தை உயர்த்தினேன். “மாலா, உன் வாயால ஒரு தடவை ஐ லவ் யூன்னு சொல்லேன்?”

“ஐ லவ் யூடா”

“தேங்க் யூ மாலா. தேங்க்யு வெரி மச். எனக்கு இப்ப உயர உயர பறக்கிற மாதிரி இருக்கு” அவள் கைகள் இரண்டையும் என் கைகளுக்குள் அடைத்துக் கொண்டேன்.

“பட் இன்னொரு தடவை சண்டை போட்டுக் கூட என் கிட்ட பேசாம இருந்துடாதடா? என்னால தாங்கவே முடியலை”

“சாரி மாலா. ரொம்ப சாரி. என்னாலயும் உன்னோட நிராகரிப்பை தாங்க முடியலை. அதான்..”

“பரவாயில்லடா. இப்பத் தான் நான் ஒத்துக்கிட்டேனே”

எப்போது பேரர் வந்து சாப்பாடு வைத்தார், அதை எப்போது சாப்பிட்டோம் என்ற நினைவே இல்லை. ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். மாலாவின் கைகளைக் கோர்த்துக் கொண்டேன். அவள் என் புஜத்தை அணைத்துக் கொண்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். மெல்ல நடை பயின்றோம். இரண்டு பேருக்குள் காதல் சொல்லி ஏற்றுக் கொண்ட அந்தத் தருணத்தில் பேச வார்த்தை இருக்காது போலும். ஆனால் காதலர்கள் ஃபோனிலும் நேரிலும் பக்கம் பக்கமாக என்ன தான் பேசிக் கொள்வார்களோ. திடீரென்று எனக்கு அந்த ஆசை வந்தது.

“மாலா”

“ம்ம்”

“இது நியூயார்க் தானே? நம்ம ஊர் இல்லைல?”

“ஆமா. அதுக்கு என்ன இப்போ?”

“உன்னைக் கட்டிப் பிடிச்சிக்கட்டுமா?”

“ம்ம்”

கையைப் பிடித்து, தோளை வளைத்து எனக்கு எதிரில் அவளை நிறுத்தினேன். மாலாவின் கண்களுக்குள் பார்த்தேன். என் இரு கைகளையும் விரிக்கவே என் கைகளுக்குள் அடைக்கலமானாள். என் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன். என் முதுகை அவள் கைகள் வருடின.

“தேவா..”

“என்ன மாலா? இப்பிடியே இருந்துடலாம்னு சினிமா டயலாக் அடிக்கப் போறியா?”

“இல்லடா? வெறும் ஹக் பட்டும் தானா? கிஸ் பண்ற எண்ணம்லாம் உனக்கு இல்லையா?”

நான் பதில் பேசவில்லை. பேச முடியாத வண்ணம் எங்கள் உதடுகள் இணைந்தன.

ஒரு நிமிடத்துக்குப் பிறகு, “நாட் பேட்” என்றாள்.

”என்னது?”

“You are not a bad kisser"

"என்னமோ இது வரைக்கும் நிறைய பேரை கிஸ் அடிச்ச மாதிரி சொல்ற?”

“அதெல்லாம் எங்களுக்கு பில்ட்-இன் அட்ரிப்யூட் டா. பசங்கதான் சொதப்புவீங்க”

“தோடா..” சிரித்துக் கொண்டே ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

“நைட்டு இங்கயே தூங்கிடேன்” கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தட்டிக் காட்டினாள்.

“வேணாம்பா. நான் என் ரூமுக்கே போறேன்”

“ஏன் என்னைப் பார்த்து பயமா?”

“க்ளிஷே தான். இருந்தாலும் சொல்லியே ஆகணும். உன்னைப் பார்த்து பயமில்லை மாலா. நம்ம இளமையைப் பார்த்துத்தான் பயம்”

“சும்மா பயப்படாத கண்ணு. தங்கிட்டுப் போ”

”அது மட்டுமில்லை, நான் ட்ரெஸ் எதுவும் கொண்டு வரலை. நாளைக்குக் காலைல கிளம்பி ரூமுக்குப் போயிட்டு வர்றது கஷ்டம்”

”சரி சரி போயிட்டு வா. காலைல என்னைக் கூப்புட வந்துடு. சரியா?”

“சரி மாலா. நான் போயிட்டு வர்றேன்”

மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரூமுக்கு வந்து சேர்ந்தேன்.

இவ்வளவு நேரம் காதல் நிறைவேறிய குதூகலம் மனதை நிரப்பியிருந்தது. இப்போது அந்தக் குதூகலம் வடியத் தொடங்கியது. காதல் வெற்றியடைவது என்பது திருமணத்தில் முடிவது தான். என்னால் மாலாவை வெற்றிகரமாகக் கைப்பிடிக்க முடியுமா? அதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது?

முதலில் நான் யார்? என் பெயர் தேவா என்று தானே சொல்லி வந்திருக்கிறேன். என் முழுப் பெயர் நல்லுத்தேவன். வீர மறவர் என்று வீம்புக்கு சாதியைச் சுமந்து திரியும் தேவர் இனத்தைச் சேர்ந்தவன். அதிலும் என் குடும்பம் சாதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆம், எனக்கு இந்தப் பெயரை வைத்த பெரியப்பா பழனித் தேவர் இப்போது இருப்பது ஜெயிலில். அவர் ஜெயிலுக்குப் போன காரணம்? அவர் ஒரே மகள், எனக்கு அக்கா, ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக, அவளையும் அவள் கணவனையும் வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக. அவர் ஜெயிலுக்குப் போனதை இன்றும் பெருமையாக சொல்லித் திரியும் குடும்பம் என் குடும்பம். இந்தக் குடும்பத்தை மீறி நான் மாலாவைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா? அதோடு தங்கை வேறு திருமண வயதில் நிற்கிறாள். அவள் திருமணம் முடிந்த பின்புதான் என் திருமணம் பற்றி யோசிக்க முடியும். அப்படியே தங்கை லைனை க்ளியர் செய்தாலும், அப்பாவின் சகோதரியும், அம்மாவின் சகோதரரும் ஆளுக்கொரு பெண்ணைப் பெற்று வைத்திருக்கிறார்கள். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இரண்டு பக்கமும் நினைக்கிறார்கள். இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி மாலாவின் கரம் பிடிக்க முடியுமா??

மாலாவின் வீட்டுப் பக்கம் பிரச்சனை அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். அவள் அப்பா அம்மா இரண்டு பேரும் கல்லூரி பேராசிரியர்கள். பி.எச்.டி முடித்தவர்கள். அவர்களின் படிப்புக்கேற்ற பக்குவம் இருக்கும். மாலாவும் ஒரே மகள். கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டு காட்டுமிராண்டிகளிடம் அவர்கள் என்ன என்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஹரி படம் போல அருவாள்களுக்கு நடுவில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் போல.

காலையில் மாலாவைப் பார்த்ததும் முதல் வேலையாக இந்தச் சூழ்நிலையை அவளிடம் விளக்கி விட வேண்டும். என் தங்கையின் திருமணம் முடியும் வரை காத்திருக்கும் பக்குவம் அவளுக்கு இருக்கிறது. ஆனால் அவள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தால் அதைத் தடுக்கச் சொல்ல வேண்டும். என்னைப் பற்றியும் என் ஜாதியைப் பற்றியும் அதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும், அவள் என்ன என்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். அவளை தயார்படுத்துவதே என் முதல் வேலை.

ஒரு வழியாக உறங்கிப் போனேன்.

காலை எழுந்ததில் இருந்து மாலாவிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பதே என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. பலவாறாக வசனங்களை ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டேன். நான் பேசுவது எந்த முறையிலும் மாலாவிடம் கசப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நேற்று என் காதலை ஏற்றுக் கொள்ள அவள் எடுத்த முடிவை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக வார்த்தைகளைக் கவனமாக எடுத்துக் கோர்த்துக் கொண்டேன். “மாலா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு” பத்தாவது முறையாக சொல்லிப் பார்த்து திருப்தி அடைந்தேன்.

சப்வே பிடித்து ஹில்டன் போய் சேர்ந்தேன். மாலா தயாராக இருந்தாள். ப்ளாக் பேன்ட்டும் வெள்ளை நிற முழுக்கை டாப்ஸும் அணிந்திருந்தாள். பக்கா ப்ரொஃபெஷனல் உடை. முகத்தில் மெலிதான மேக்கப், உதட்டை லிப் பென்சிலால் எழுதியிருந்தாள். மேனேஜரும் மற்ற டீம்லீட்களும் தயாராக இருந்தார்கள்.

மானேஜர், “காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கே. சாப்டுட்டு போலாமே” என்றார்.

”நாங்க முன்னாடி போறோம். உங்களுக்கு ஆஃபிஸ் தெரியுமா?” என்றேன்.

“நான் ஏற்கனவே வந்திருக்கேன் பா. எனக்குத் தெரியும். நீங்க போங்க” என்றார்.

“நாம போலாமா மாலா?” அவளின் ட்ரேட் மார்க் சிரிப்பு. இருவரும் கிளம்பி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

“தேவா, பயங்கரமா பசிக்குது தேவா. நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருச்சி”

“பாவி. அங்க தான் காப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்ததே. அதைக் கொட்டிட்டு வந்திருக்கலாமே?”

”ஏன் நீ வாங்கித் தரமாட்டியா?”

“சரி சரி வா” மாலாவிடம் பேச, இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தான். Dunkin Donutsக்கு அழைத்துப் போனேன். அவளுக்கும் எனக்கும் ப்ரேக்ஃபாஸ்ட் வாங்கிக் கொண்டு அங்கே இருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்தோம்.

“மாலா, உன்கிட்ட ஒரு விசயம் பேசணும்”

“நானும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் தேவா”

“நான் முதல்ல சொல்லிடறேனே”

“நோ நோ. நான் தான் மாட்யூல் லீடர். நான் சொல்றதைத் தான் நீ கேக்கணும்”

“சொல்லுங்க மேடம்” கை கட்டி வாய் பொத்தி சொன்னேன். கல கலவென சிரித்தாள். “சிரிச்சது போதும்டி. சொல்லு”

அவள் முகத்தில் இருந்த சிரிப்பு வடிந்து போனது.

“தேவா, நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுல ஒரு சிக்கல் இருக்கு”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே