Sunday, December 26, 2010

கம்யூனிசம் மலர்ந்தால்??

நேற்று இரவு தூங்கும்போது ஒரு கனவு வந்தது. (இன்செப்ஷம் படம் பார்த்துத் தொலைந்ததன் விளைவோ?) இந்தியாவில் திடீரென்று புரட்சி வெடித்து கம்யூனிசம் மலர்ந்துவிட்டது. ஒரே நாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுதான் கனவு.

பகலெல்லாம் அந்தக் கனவை அசைபோட்டுக்கொண்டிருந்ததன் விளைவு இந்தப் பதிவு. என்னை ஃபாலோ செய்யும் நீங்களும் இந்த மொக்கைக் கொடுமையை அனுபவித்தே தீரவேண்டும்.

கம்யூனிசம் மலர்ந்தால் என்ன நன்மைகள் விளையும் என்பதை என் கனவின் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

நன்மைகள்:

1. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் நீங்கி அனைவரும் ஏழைகளாகவே இருப்பார்கள். (பொலிட் பீரோ உறுப்பினர்கள் சொகுசு மாளிகைகளையும் படகுக் கார்களையும் அனுபவிப்பார்கள். ஆனால் அவர்கள் பணக்காரர்கள் என்று கருதப்படக் கூடாது).

2. அனைவருக்கும் சமமான கல்வி கட்டணம் ஏதுமின்றி கிடைக்கும் (இலவசம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது.)

3. சமூகத்தின் ஒரு பிரிவு பட்டினியிலும், ஏனைய பிரிவுகள் தின்று கொழுத்தும் இருக்க மாட்டார்கள். (பட்டினி அத்தனை பேருக்கும் சமமாகப் பிரித்துத் தரப்படும்)

4. முதலாளிகளே இருக்க மாட்டார்கள். (அரசாங்கம் தான் முதலாளி. மற்ற அத்தனை பேரும் தொழிலாளிகளே).

5. ரேசன் கடையையே எட்டிப் பார்க்காமல் வெறும் ஆவணமாக மட்டும் ரேசன் கார்டை வைத்திருக்கும் பணக்காரர்கள் இருக்க மாட்டார்கள். (அத்தனை பேரும் ரேசனில் தான் பொருள் வாங்கி உண்ண வேண்டும்).

6. கடன் வேண்டுமா என்று கேட்டு தொல்லை செய்யும் பெண்கள் உங்கள் செல்ஃபோனுக்கு அழைக்க மாட்டார்கள் (செல்ஃபோனே இருக்காது உங்களுக்கு. இதில் ஃபோன் கால் வேறு வருமா?)

7. மசூதிகள் இடிக்கப்படுவதால் மதக் கலவரங்கள் நிகழாது (சர்ச், மசூதி, கோவில் உட்பட அத்தனை மத வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கமே இடித்துவிட்ட பின் மற்றவர் இடிக்க என்ன இருக்கும்?)

8. உங்களை விட அதிகம் படித்த உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்கும் ஒரே வாழ்க்கைத் தரம் தான் இருக்கும்.(அதனால் என்ன படித்து என்ன புண்ணியம் என்று மேல் படிப்பு படிக்க விருப்பம் இல்லாதவர்கள் அதிகமாவார்கள்).

9. அரசாங்கம் வேலையில்லாத இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் (இதனால் சோம்பேறிகள் அதிகமாவார்கள்)

10. அரசாங்கத்தை எதிர்த்து உண்மைத்தமிழன் அண்ணன் எழுதும் 144 பக்க பதிவுகளை படிக்க வேண்டியிருக்காது. வினவு, மாதவராஜ் ஆகியோர் பொங்கல் வைக்கும் கட்டுரைகளையும் படிக்க வேண்டிய தேவையிருக்காது. (அரசாங்கத்துக்கு எதிராக யோசித்தாலே மூளை சிதறடிக்கப்படும். அப்புறம் எங்கிருந்து பதிவு எழுதுறது?)

11. மதங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு மார்க்ஸியம் மட்டுமே மதமாக இருக்கும். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் (துணை முதல்வர் இல்லப்பா), சே குவேரா ஆகியோர் கடவுள்களாக அறிவிக்கப் படுவர். (கடவுள்களை இகழ்பவர்கள் வீட்டுக்கு முன்னால் அரசாங்க ஊழியர்கள் ஆபாச நடனம் ஆடுவார்கள்.)

12. பெப்ஸியும் கோக்கும் அடியோடு தடை செய்யப்படும். (மிக்ஸிங்குக்கு என்ன செய்வதா? சரக்கே கிடைக்காது. அப்புறம் எங்கிருந்து மிக்ஸிங்?)

Wednesday, December 22, 2010

மனம் விரும்புதே உன்னை..

கோட்டயம்.. அழகான ஊர்.. ஆனால் சுற்றிப் பார்க்கத்தான் நேரமில்லை. இண்டர் யூனிவர்சிட்டி யூத் ஃபெஸ்டிவலுக்காக ஆறு நாள் கோட்டயம் வாசம். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலிருந்தும் மாணவச் செல்வங்கள் வந்து குவிந்திருந்தனர். “எவிட இருந்நா வருந்நது” என்று மலையாளிகளும், “எல்லிந்த பர்த்தீரா?” என்று கன்னடர்களும், “எக்கடனிஞ்சி வஸ்துன்னாரு” என்று தெலுங்கர்களும், “வேர் ஆர் யூ ஃப்ரம்யா?” என்று தமிழர்களும் அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நான் உண்மையில் நாடக நடிகன். ஆனால் இந்த முறை one act playஐயும் Skitஐயும் ஃபாத்திமா கல்லூரி மகளிர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும், மிச்சம் இருக்கும் ஒரே நாடக வடிவான mimeஇல் பங்கு பெற ஏற்கனவே நடிப்பு மட்டுமே தெரிந்த ஆறு பேர் இருந்ததாலும் எனது இன்னொரு அம்சமான வினாடிவினாவில் பங்கு பெற வந்திருந்தேன்.

வந்த இடத்தில் என் நாடக அனுபவத்தை ஃபாத்திமா கல்லூரி மாணவிகளிடம் அள்ளி விட, பொறாமைப் பட்ட கோச் என்னைப் பயிற்சி அரங்கிலிருந்து வெளியேற்றி விட்டார்.

என்னடா செய்யலாம் என்று அவரிடம் அடித்து வைத்திருந்த வில்ஸ் ஃபில்டரை பற்ற வைத்துக் கொண்டே யோசித்த போது ராஜா அண்ணன் அந்தப் பக்கம் வந்தார். என் கையிலிருந்த வில்ஸ் பாக்கெட்டில் ஒன்றை எடுத்து பத்த வைத்துக் கொண்டு, “அந்த முசுடு உள்ள இருக்கானா?”

“இருக்கார்ணே.. என்ன மேட்டர்?”

“தந்தி வந்துச்சி?”

“தந்தியா?”

“ஆமாப்பா. பயப்புடுறா மாதிரி ஒன்னுமில்லை. மெட்றாஸ்ல ஒரு இண்டர்வியூவாம். நாளைக்கிக் காலையில”

“காம்பெடிஷனை விட்டுட்டு போறீங்களா?” ராஜா அண்ணன் நல்ல ஓவியர். ஓவியம், ரங்கோலி சம்மந்தப்பட்ட அத்தனை போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு பரிசுகள் அள்ளி வருபவர். எங்கள் பல்கலைக்கழகத்துக்குப் பரிசு என்று எதாவது வருமென்றால் அதை இவர் வாங்கித் தந்தால்தான் உண்டு. இவரும் போய்விட்டால் என்ன ஆவது?

“நாளைக்கு போஸ்டர் மேக்கிங் இருக்கு. நாளைக் கழிச்சி எதுவும் இல்லை. அதுக்கடுத்த நாள் திரும்பிடலாம்னு நினைக்கிறேன். முசுடுக்கிட்ட சொல்லணும். போஸ்டர் மேக்கிங்குக்கு மட்டும் யாரையாவதுப் பிடிச்சிப் போட்டுட்டாப் போதும்”

யோசித்தேன். இயக்க வேலைகளுக்குப் போஸ்டர் ஒட்டியதைத் தவிர போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், “நான் வேணும்னா பார்டிசிபேட் பண்றேண்ணே”

சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு இருகைகளாலும் என்னை அணைக்காமல் அணைத்துக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ்டா. என் கிட்டையே உனக்குக்குடுத்துட்டுப்போறேன்”

போகும் அவசரத்திலும் ஆடு சிக்கிய சந்தோசத்திலும் எனக்கு வரையத் தெரியுமா என்பதைக் கேட்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

சிகரெட்டை முடித்து விட்டு உள்ளே போய்விட்டு வந்தார். கூடவே முசுடும். “என்னப்பா.. ராஜாவுக்கு பதிலா நீ பார்டிசிபேட் பண்றியா?”

“பண்றேன் சார்”

“வரையத் தெரியுமா?” இப்பயாவது கேட்டாங்களே என்று நினைத்துக் கொண்டு, “அதெல்லாம் அதகளம் பண்ணிடுவேன் சார்.”

“என்னவோ சொல்ற. நான் ரெக்கார்ட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிடுறேன். ராஜா, நீ வெல்கம் கமிட்டிக்கிட்ட சொல்லிட்டுப் போயிடு”

“அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் சார். அவங்க தான் தந்தி ரிசீவ் பண்ணது”

“ஓக்கே ஓக்கே” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டது கிழம்.

நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் வேகமாக போன ராஜா அடுத்த நிமிடம் பெட்டியோடு வந்தார். இன்னொரு கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை.

“இதுல எல்லாம் இருக்கு. உனக்கு டவுட் ஏதாவது வந்தா செல்வரங்கத்துக்கிட்ட கேளு. அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்”

பேசிக் கொண்டே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றி அனுப்பி விட்டு மறுபடியும் தங்கியிருந்த அறைக்கு வந்தேன்.

மற்ற நண்பர்கள் மைம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க நான் மீண்டும் வெளியேறி மற்ற பல்கலைக் கழகங்களின் பயிற்சியை நோட்டம் விடப் போனேன்.

***************************************************************************************

போட்டி நடக்கும் ஹாலை தேடிப் பிடிக்கவே எனக்கு நேரமாகிவிட்டது. போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் கழித்தே உள்ளே நுழைந்தேன். போட்டி நடத்துபவர் என்னை முறைத்துக் கொண்டே போஸ்டர் வரைய வேண்டிய தாளைக் கொடுத்தார். அப்பாவியாகத் தெரிந்த ஒருவனின் அருகே போய் அமர்ந்து கொண்டு தேர்ந்த ஓவியனைப் போல பைக்குள் இருந்து பிரஷ்களையும் பெயிண்ட்களையும் எடுத்து வைத்தேன். போர்டில் என்ன தலைப்பில் வரைய வேண்டும் என்பதை கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருந்தார்கள் - “VANDALISM". எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் அர்த்தம் புரிந்து கொண்டு பென்சிலால் ஸ்கெட்ச் போட ஆரம்பித்தேன்.

பக்கத்தில் இருந்தவன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். “பாஸ், வாட்டிஸ் வாண்டலிசம்?” என்று கிசுகிசுத்தான்.

“தமிழா?”

“ஆமாங்க. நீங்களும் தமிழா?”

“ஆமா. காமராஜ் யுனிவர்சிட்டி. நீங்க?” பென்சிலை டேபிளின் மீது வைத்து விட்டு கையை நீட்டினேன்.

“நான் பாரதிதாசன்.” என் கைபிடித்துக் குலுக்கினான்.

அவனுக்கு வாண்டலிசத்தை விளக்கிச்சொல்லிவிட்டு “இது உங்கள் சொத்து” என்னும் தமிழக அரசின் கேப்ஷனைத் திருடி ஏனோ தானோவென்று வரைந்து கொண்டிருந்தேன்.

மஞ்சள் வண்ணமும் சிவப்பு வண்ணமும் குழைத்து தீயைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும்போது அவள் வந்தாள்.

கேரளப் பெண்களுக்கே உரிய மினுமினுப்பு. தலைக்குக் குளித்து நீளக் கூந்தலைப் பின்னாமல் நுனியில் சின்னதாக முடிந்து வைத்திருந்தாள். பார்த்ததும் அடிக்கும் அழகில்லை என்றாலும் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. தோழிகளுடன் தூரத்தில் வரும்போதே என் மீது வைத்த கண்ணை மாற்றாமல் பார்த்தபடியே வந்தாள். ஒவ்வொரு போட்டியாளரின் போஸ்டர்களாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். மடப் பயல்கள் அத்தனை பேரும் கடமையே கண்ணாயிருந்தனர். நான் மட்டும் அவளை பார்த்துக் கொண்டே போஸ்டரிலும் ப்ரஷை வைத்து எதையோ அடித்துக் கொண்டிருந்தேன்.

என்னை நெருங்க நெருங்க அவள் இதழ்களில் ஒரு புன்னகை வழிந்தது. பதிலுக்குப் புன்னகைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ ‘மனம் விரும்புதே உன்னை உன்னை’ என்று சிம்ரன் ஆடுவது கேட்டது.



என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தேவதையின் இதழோரத்தில் இருந்த மச்சம் இப்போது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என்னருகில் வர வர அவள் புன்னகையின் அளவு பெரிதானது. அதிகமாகிக் கொண்டே போனது. என் போஸ்டரைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்து புன்னகைத்தாள். நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். கொஞ்சம் தூரத்தில் இருந்த பெஞ்சில் போய் அவள் தோழிகளோடு அமர்ந்து கொண்டாள். என் மீது வைத்த பார்வையையும் உதட்டில் வழிந்த புன்னகையையும் மாற்றவேயில்லை.

நானும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் போக மீதி நேரத்தில் போஸ்டரில் என்னத்தையோ கிறுக்கினேன்..

நேரம் முடியப் போகிறது என்பதை சூப்பர்வைசர் அறிவித்ததும் அவளும் அவள் தோழிகளும் கிளம்பினர். என்னருகில் மீண்டும் வந்த அவள் ஒரு காகிதத்தை என் டெஸ்கின் மேல் வைத்துவிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டுப் போனாள்.

ஆரவமாக எடுத்தேன். “BATHROOM AT THE END OF THE CORRIDDOR" என்று எழுதியிருந்தது. சந்திப்பதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று நொந்து கொண்டு போட்டி நடத்துபவரிடம் என் போஸ்டரை நீட்டிவிட்டு வேகமாக வெளியே வந்தேன். தூரத்தில் தெரிந்தது பாத்ரூம். ஆனால் அவளையோ அவள் தோழிகளையோ காணவில்லை.

அங்கே பாய்ஸ் பாத்ரூம் மட்டுமே இருந்தது. குழப்பத்துடன் உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததற்காகக் கடமையை முடித்து விட்டு கை கழுவ வாஷ்பேசின் வந்தேன். கையைக் கழுவிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் கண்ணாடியின் என் முகம். கன்னத்தில் என்ன? சிவப்பும் மஞ்சளும் கலந்து நான் அடித்த பெயிண்ட் போஸ்டரில் தீ மாதிரி தெரிந்ததோ இல்லையோ என் கன்னத்தில் தெரிந்தது.

நல்ல வேளையாக வாட்டர் கலர் என்பதால் தண்ணீரால் அலசியே கழுவி விட்டேன். என்னவளைத் தேடிக் கொண்டே “அவள் வருவாளா, அவள் வருவாளா!” என்று என் மனதுக்குள் மெலிதாக ஒலிக்க அன்று முழுக்க அவளைத் தேடினேன். அடுத்த நாளும் பார்க்கவே முடியவில்லை.  

அடுத்த நாள் ராஜா அண்ணன் வந்து என்னிடமிருந்த பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டதும் சேர்ந்து சுற்ற ஆள் கிடைத்ததால் கொஞ்ச நேரம் அவளை நினைக்காமலிருக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

ராஜா அண்ணனுடன் ரங்கோலிப் போட்டிக்காக அதே ஹாலுக்குப் போக நேர்ந்தது. அங்கே போஸ்டர் மேக்கிங் போட்டியின் முடிவுகள் வெளியிட்டிருந்தார்கள்.
மூன்றாம் பரிசு ஆந்திராவில் ஏதோ ஒரு யுனிவர்சிட்டி,
இரண்டாம் பரிசு காலிகட் யுனிவர்சிட்டி,
முதல் பரிசு.. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்த்தேன்.. பாரதிதாசன் யுனிவர்சிட்டி. ஒரு பெரு மூச்சை வெளியிட்டு விட்டுத் திரும்பினேன்.

“எந்தா சாரே.. பெயிண்ட் போயோ?” களுக்கென்று சிரித்து விட்டு அகன்றாள் என் தேவதை..

எவனோ ஒரு கபோதி “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்று தன் ஸ்டீரியோவில் கசிய விட்டான்.

Sunday, December 5, 2010

நானும் தமிழ்மணம் விருதுகளில்..

நான் வலைப்பதிவு ஆரம்பித்த நாள் முதலாய் என்னைப் பின் தொடர்ந்து என் ஆயிரக்கணக்கான பதிவுகளை வாசித்து ஓட்டுப்போடு பின்னூட்டம் போட்டு என்னை குஷிப்படுத்தி வந்த வாசகப் பெருமக்களே.. இப்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அபிமான எழுத்தாளருக்கு (நான் தாங்க) உங்கள் ஆதரவைத் தெரிவிக்க மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு.

தமிழக வலையுலக வாசகர்களுக்கு வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் உன்னதப் பணியை செய்து வரும் தமிழ்மணமானது கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்கத் துவங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை வாசகர் பார்வைக்கு வைத்து ஓட்டளிக்கும் உரிமையையும் வழங்க உள்ளது. அதில் என் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இந்த முடிவை நான் எடுத்ததால் எனக்கு முன்னால் இருப்பது ஒரு இமாலயப் பணி. இந்த ஆண்டில் நான் எழுதிய நூற்றுக்கணக்கான இடுகைகளில் மூன்று பிரிவுகளுக்குச் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லா இடுகைகளுமே ஆகச்சிறந்த படைப்புகளாக இருப்பதால் என் அன்பிற்கினிய வாசகர்களாகிய உங்களின் உதவி தேவைப்படுகிறது.

இதோ நான் என் படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கும் பிரிவுகளும் என் படைப்புகளும் கீழே உங்கள் பார்வைக்கு. இதில் எந்த எந்த படைப்புகளைப் பரிந்துரைக்கலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கும் படைப்புகளை நானும் சமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

1. நகைச்சுவை / கார்ட்டூன்.

அ. ரஜினியும் முதல்வன் பட வசனமும்
ஆ. சர்வதேச பதிவர் சங்கமம் நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்
இ. இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ
ஈ. என்.சி.சி குடியரசு தின சிறப்புப் பதிவு
உ. செஷல்ஸ் தீவில் பல்பு (மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்)

2. படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை)

a. தற்கொலை - சற்றே நீளமான சிறுகதை
b. களவு
c. ஆயுதம்
d. யார் தீவிரவாதி
e. திரௌபதியின் அட்சயப் பாத்திரம்
f. கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

3. விளையாட்டு, உடல் ஆரோக்கியம்
i) ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் கனிஷ்கா பாலச்சந்திரன்
ii) ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு
iii) ஹாக்கியை நேஷனல் கேம்னு எவண்டா சொன்னது? 
iv) கிரிக்கெட் தொடர்பதிவு

எதைச் சமர்ப்பிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவற்றுக்கு எதிராக இருக்கும் எண்களை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இடுகை என எடுத்து கீழ்க்கண்டவாறு ஆ-a-iv என்பது போல பின்னூட்டத்திலோ, தனி மடலிலோ, பஸ்ஸில் கமெண்டாகவோ அளிக்கவும்.

மறுபடியும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

Wednesday, December 1, 2010

சாகுற நாள் தெரிஞ்சா...

காராஜில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். என் முகத்தைப் பார்த்ததும் கவிதாவுக்குப் புரிந்து விட்டது போலும்.

“என்ன மறுபடியும் டிப்ளாய்மெண்ட் ஃபெயில்டா?”

“ஆமா. எப்பிடிக் கண்டுபிடிச்ச?”

“அதான் மூஞ்சியிலயே எழுதி ஒட்டியிருக்கே”

கூடுதல் சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு காஃபி மேக்கரில் காஃபிப் பொடியைத்தட்டி காஃபி போட ஆரம்பித்தேன்.

“முதல்லயே இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா இப்பிடி லேட்டா ஆஃபீஸ்ல ஸ்டே பண்ணியிருக்க மாட்டியில்ல?” முகிலனுக்கு இட்டிலியைத் திணித்துக் கொண்டு கேள்வியை எனக்குத் திணித்த கவிதாவின் கடைவாயில் ஒரு ஏளனப் புன்னகை.

வெறுமையாகப் பார்த்தேன். டிவியில் கோபி மலர் மேடத்திடம் வழக்கம்போல சோகமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

“சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்னு தலைவர் சொல்லியிருக்கார்” நிகழ்வில் ரஜினியைத் துணைக்கழைத்தேன்.

“ம்க்கும்.. ரஜினி என்ன சொந்தமாவா சொன்னாரு. ஏற்கனவே மகாபாரதத்துல கண்ணன் சகாதேவன் கிட்ட சொன்னதுதான?”

“என்னது சகாதேவன்கிட்டயா இது என்ன புதுக்கதையா இருக்கு?” காபியின் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொண்டு கதை கேட்கும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.

“ஆமா.. முதல்ல சகாதேவன் யாருன்னு தெரியுமா?”

“தெரியுமே.. பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர்”

“கரெக்ட். அவர் ஒரு பெரிய ஜோசியக்காரன்ங்கிற விசயம் தெரியுமா?”

“ஓ.. டிவியில எல்லாம் ராசிபலன் சொல்வாரா?”

“ஜோசியக்காரங்கன்னாலே டிவியில ராசிபலன் சொல்றவங்கதானா?”

இடுப்பில் கை வைத்து முறைத்த கவிதாவைப் பார்த்தால் மிஷ்கினை முறைக்கும் டகேஷி கிட்டானோவைப் போல இருந்தது.

“சரி சரி முறைக்காத மேல சொல்லு”

“இந்த பாண்டு இருக்காரே..”

"யாரு இந்த மூஞ்சிய அஷ்டகோணலாக்கிக்கிட்டு ஆங்க்னு கத்துவாரே அவரா?”

“அவரு உனக்குத்தெரிஞ்ச பாண்டு. நான் சொல்றது பாண்டவர்களோட அப்பா பாண்டு”

“ஓ அவர் பேரும் பாண்டுதானா? ரைட்டு..”

மறுபடியும் முறைத்த கவிதாவை கண்டுகொள்ளாத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு, “மேல சொல்லு..”

“அவரு சாகுற தருவாயில தன்னோட புள்ளைங்களைக் கூப்பிட்டு ‘நான் செத்தப்புறம் என்னை எரிக்கவோ புதைக்கவோ செஞ்சிடாதீங்க. அதுக்கு பதிலா என் உடம்பை நீங்க அஞ்சு பேரும் தின்னுடுங்க’ன்னு கேட்டுக்கிட்டாரு”

“அடங்கொக்க மக்கா.. அந்தக் காலத்துல மனுசக்கறியெல்லாம் சாப்ட்டவிங்க தானா?”

“அது தெரியலை. ஆனா இது ஸ்பெசல் மீல்ஸ்”

“ம்ஹ்ம்.. இருக்கலாம். அப்புறம்?”

“அப்புறமென்ன, அவர் செத்ததும் வழக்கம்போல கண்ணன் வந்து ஏய் என்னப்பா எங்கயும் இல்லாத வழக்கமா பெத்த அப்பன் உடம்பையே திங்கிறது. அது தப்பு. பெத்த அப்பாவுக்கு இறுதிக்கடன்கள் செய்யறதுதான் பிள்ளைங்களோட கடமை அப்பிடின்னு சொல்லி அவங்களை இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு பண்ண சொன்னான்”

காபி குடித்த கப்பைக் கழுவிக்கொண்டே, “வந்துடுவானே இந்தக் கண்ணன். அவன் தடுக்கிறான்னா வேற எதோ மேட்டர் இருக்கு போலயே”

“இதே டவுட்டுதான் சகாதேவனுக்கும் வந்துச்சி. எல்லா ப்ரதர்ஸும் ஆளுக்கு ஒரு வேலையா போயிட, அப்பாவோட பிணத்தைக் காவல் காக்குற பொறுப்பு சகாதேவனுக்கு. தனியா இருந்த சகாதேவனுக்கு பெரிய டவுட். அப்பாவே தன் உடம்பை சாப்பிடச் சொன்ன பிற்பாடும் இந்த கண்ணன் வந்து தடுக்கிறான்னா அதுல ஏதோ பெரிய விசயம் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாம பாண்டுவோட கால் கட்டை விரலை மட்டும் கடிச்சித் தின்னுட்டான்”

சின்க்கில் இருந்த மற்றப் பாத்திரங்களையும் என்னை அறியாமல் கழுவிக்கொண்டே, “அடங்கொன்னியா? கட்டை விரலையா? அதுல அவ்வளவா சதை இருக்காதே? எப்பிடி தின்னான்?”

“ரொம்ப முக்கியமான கவலை பாரு..எப்பிடியோ தின்னுட்டான். தின்னதும் அவனுக்கு முக்காலமும் உணர்ற ஞானம் வந்திடுச்சி. பாண்டவர்களுக்கு வரப்போற ஆபத்தைத் தெரிஞ்சிக்கிட்டான்”

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதுனால தான் கண்ணன் தடுக்கப் பாத்திருக்கான்”

“திரும்பி வந்ததும் கட்டை விரல் மிஸ்ஸானதைப் பார்த்து என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிக்கிட்டான் கண்ணன். சகாதேவனைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயி, இங்க பாரு நீ கட்டை விரலைத் தின்னுட்டன்னு தெரியுது. உனக்கு என்ன நடக்கப் போவுதுங்கிறதும் தெரிஞ்சிருக்கும். ஆனா வெளிய சொல்லாத. எல்லாம் விதிப்படி நடக்கத்தான் வேணும். நீ இதையும் மீறி வெளிய சொன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு சொல்லிட்டான். சகாதேவனும் பதிலுக்கு, எனக்கும் என் சகோதரங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாம நீ காப்பாத்தனும். இல்லைன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு பதிலுக்கு சாபம் விட்டுட்டான்”

“ஓஹோ.. இதைத்தான் தலைவர் ஸ்லைட்டா மாத்தி சாகிற நாள் தெரிஞ்சான்னு பஞ்ச் அடிச்சிட்டாரா?”

“ஆமா”

பாத்திரம் எல்லாம் கழுவி முடிந்ததும், “ஆமா வழக்கமா இந்த மாதிரி கதை சொல்லும்போது நீ தான மெசேஜ் சொல்லுவ? ஆனா இந்தத் தடவை நான் தான மெசேஜ் சொன்னேன்? அப்புறம் எதுக்கு இந்தக் கதை?”

சின்க்குக்கு முன்னால் நின்றிருந்த என்னை லேசாக இடித்துத் தள்ளிவிட்டு கையைக் கழுவிய கவிதா, “அது ஒண்ணுமில்லை. கொஞ்ச நாளா, ப்ளாக்ல எழுத சரக்கில்லாம பஸ்ல எழுதினதையெல்லாம் கூட்டிப் பெருக்கிப் போட்டு கல்லாக்கட்டிக்கிட்டு இருந்தியில்ல, அதான் எழுதுறதுக்கு எதையாவது குடுக்கலாம்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

“யேய்... அப்பிடியெல்லாம் இல்லை. ஆஃபீஸ்ல ஒரே ஆணி. அதான் ப்ளாக் பக்கம் போக நேரமேயில்ல..” என்று காற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.