Wednesday, October 14, 2009

ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து..

சர்வேசன்500 - நச்னு ஒரு கதைப் போட்டிக்காக


எத்தனை நாள் ஆசை. பிரபுவும் மந்திராவும் பனிமலையில் "ஆல்ப்ஸ் மலைக் காற்று வந்து நெஞ்சைத் தீண்டுதே" என்று பாடியதைப் பார்த்ததில் இருந்து அந்த ஆல்ப்ஸ் மலையைப் பார்த்துவிட வேண்டும் என்ற என் ஆசை இன்று நிறைவேறிவிட்டது.



பனிக்காற்று முகத்தில் வந்து அடித்தது. மூச்சை இழுத்து நுரையீரல் முழுக்க  நிரப்பிக்கொண்டேன். அந்த இடமே ரம்மியமாக இருந்தது. கழுத்தில் புதிதாக வாங்கிய டெலி-ஜூம் பொருத்திய எஸ்.எல்.ஆர் காமிரா தொங்கிக்கொண்டிருந்தது.


என்னால் பெருமைப் படாமல் இருக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம்?. பார்க்கும் இடமெல்லாம் அழகாக இருந்தது எதைப் படம் பிடிப்பது எதை விடுவது என்று தெரியவில்லை.


தூரத்தில் ஒரு நாய் எதையோ முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. காமிராவில் கண் பொருத்தி ஜூம் செய்தேன். நாய் முகர்ந்து பார்க்கவில்லை. செத்துக் கிடந்த ஏதோ ஒரு விலங்கின் சதையை கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஜூம் செய்தேன். நாயின் முகம் க்ளோஸ்-அப்பில் பயங்கரமாக இருந்தது. அதன் பற்களின் இடையில் அந்த விலங்கின் சதைகள், கடைவாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு.. அப்பப்பா.. அந்த நாயின் கண்களில் ஒரு குரூரம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது. மேலும் யோசிக்காமல் காமிராவைக் கிளிக்கினேன். நல்ல ஷாட். ஏதோ புலிட்சர் விருது வாங்கியதைப் போல பெருமிதமடைந்தேன்.



அப்போது தான் அவர்களைப் பார்த்தேன். மூன்று பேரும் சற்று தூரத்தில் இருந்தனர்.ஓரு பெண், இரண்டு ஆண்கள். அவர்களை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது ஒருத்தன் கையில் ஒரு துப்பாக்கி முளைத்திருந்தது. இன்னொரு பெண்ணையும் ஆணையும் துப்பாக்கி வைத்திருப்பவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.


துப்பாக்கி வைத்திருந்தவன் எட்டி அந்தப் பெண்ணின் தலை முடியைப் பற்றினான். அவள் தலையில் துப்பாக்கியின் முனையைப் பொருத்தினான். நான் என் கேமிரா வழியாகப் பார்க்கத்துவங்கினேன்.


துப்பாக்கி வைத்திருந்தவன் பார்க்க ஃப்ளெட்சர் கமல் மாதிரி இருந்தான். அவன் கையில் சிக்கி இருந்தவள் ஒரு சாயலில் சாண்ட்ரா புல்லக் மாதிரியும் இன்னொரு சாயலில் ஜூலியா ராபர்ட்ஸ் மாதிரியும் தெரிந்தாள். வலி தாங்காமல் கதறுவது ஊமைப் படம் போல தெரிந்தது. இன்னொரு ஆணும் கதறிக் கொண்டிருந்தான்.


ஃப்ளெட்சர் கையில் இருந்த துப்பாக்கியின் பின் பக்கத்தால் சாண்ட்ரா புல்லக்கின் தலையில் ஓங்கி அடித்தான். அந்த தங்க நிற கூந்தல் சடுதியில் சிவப்பானது..


இன்னொரு ஆண் கோட்டுக்குள் கை விட்டு எதோ ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து ஃப்ளெட்சரின் கையில் கொடுத்தான். வாங்கிய ஃப்ளெட்சர் சாண்ட்ராவின் தலையிலிருந்து கையை எடுக்காமலே அதில் இருந்த ஏதோ ஒரு பொருளை சரி பார்த்தான். பார்த்ததில் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அவன் உதடுகள் கோணியது. சிரிக்கிறான் என்று நினைக்கிறேன். அந்த பொட்டலத்தை தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தான்.


துப்பாக்கி வைத்திருந்த கையை உயர்த்தி துப்பாக்கியின் பின் பக்கத்தால் இன்னொரு ஆணை அடித்தான். பலமான அடியாக இருந்திருக்க வேண்டும். எங்கோ மரத்தில் கோடரி இறங்கும் போது கேட்பது போல "சொத்" என்ற சத்தம் எனக்கே கேட்டது. அந்த இன்னொரு ஆண் கீழே விழுந்தான்.


சாண்ட்ராவின் கூந்தலில் இருந்து கையை எடுக்காமல் காலை உயர்த்தி அவள் வயிற்றில் எத்தினான். அவள் வலி பொறுக்க முடியாமல் சுருண்டு விழுந்தாள்.


ஃப்ளெட்சரின் முகத்தில் ஒரு குரூரம். துப்பக்கியால் இரண்டு பேரையும் சுட்டான். ஆளுக்கு இரண்டு குண்டுகள் பரிசளித்த பின்னர், சுற்றிப் பார்த்தான். நான் தயங்காமல் சில ஃபோட்டோக்கள் எடுத்திருந்தேன். அவன் இப்போது என்னைப் பார்த்து விட்டான். நான் இன்னும் சில கிளிக்குகள் கிளிக்கிய பிறகுதான் அவன் என்னைப் பார்த்ததை கண்டு பிடித்தேன். அவன் துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டினான்.


எனக்கு அப்போது தான் உறைத்தது. தடாரென்று கீழே விழுந்து தவழ்ந்து மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி விரைந்தேன். அவன் இரண்டு குண்டுகளை மரத்தின் மீது வீணாக்கினான்.


மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் வந்ததும் எழுந்து ஓட ஆரம்பித்தேன். அவன் ஓடி வரும் சத்தம் கேட்டது, அல்லது கேட்டது போல இருந்தது. பின்னால் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை.. எந்தப் பக்கம் ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. உயிர் பயம் மட்டுமே மனதில். காமிராவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.


திரும்ப திரும்ப ஒரே இடத்தில் ஓடுவது போல இருந்தது. ஒரு வழியாக மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து வெளியே வந்தேன். அங்கே ஒரு சிதிலமான கட்டிடம் ஒன்று இருந்தது. அதன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கதவைத் தாளிட்டேன். உள்ளே இருட்டாக இருந்தது. கண்கள் இருட்டுக்குப் பழகவும் அந்த கட்டிடம் ஒரு சிற்பக்கூடம் என்பதைக் கண்டு கொண்டேன்.


வெளியே ஏதோ சத்தம் கேட்டது.


'ஃப்ளெட்சர் வந்து விட்டானோ?'


அந்தக் கட்டிடத்தின் பின் பக்கத்தில் சில அலமாரிகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஒழிநது கொண்டேன். என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டது. மூச்சு விடும் ஓசை ஒரு ரைஸ் மில் ஓடுவது போலக் கேட்டது. உயிர் பயம் என்ன என்பதை உணரவைத்துக் கொண்டிருந்தான் ஃப்ளெட்சர்.


கதவை யாரோ தள்ளுவது தெரிந்தது.

'திறக்க முயற்சி செய்கிறார்கள்'.


சில பல தள்ளுகளுக்கு அல்லது உதைகளுக்குப் பிறகு தாழ்ப்பாள் விட்டுக்கொடுத்துவிட்டது. கதவைத் திறந்து உள்ளே வந்தான் ஃப்ளெட்சர். அவன் நின்ற இடம் வெளிச்சமாக் இருந்தது. நான் இருக்கும் இடம் கும்மிருட்டு. அதனால் அவன் என்னைப் பார்க்க வாய்ப்பு இல்லை.

அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு பார்க்க அவன் முயற்சி செய்வது அவனின் இடுங்கிய கண்களில் இருந்து தெரிந்தது. என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டது. மூச்சு விடும் ஓசை கூட கேட்டுவிடக்கூடாது என்று என் விரலை பற்களுக்கு இடையில் கொடுத்து இறுகக் கடித்துக் கொண்டேன்.

என் நினைவுக்கு வந்த எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். எப்படியாவது என்னை இவனிடமிருந்து காப்பாற்றிவிடுங்கள். எல்லாக் கோயில்களுக்கும் நடந்தே வருகிறேன்.

அந்த குறுகலான இடைவெளியில் என்னை நுழைத்துக் கொண்டேன். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் பார்த்து விட்டு இங்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு திரும்பினான்.

"கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்" என்று என் செல்போன் நேரம் கெட்ட நேரத்தில் ஒலித்தது. வேக வேகமாக பைக்குள் கையை விட்டு போனை வெளியே எடுத்து பச்சைப் பொத்தானை அழுத்தி போனை காதுக்குக் கொடுத்தேன்.

"ஹலோ"
"டேய் எரும. பதிவர் சந்திப்புக்கு போலாம் வான்னு சொல்லிட்டு இன்னும் தூங்கிக்கிட்டா இருக்க?  கதவத் திற, வெளியதான் நிக்கிறேன்"

11 comments:

Anonymous said...

//டேய் எரும. பதிவர் சந்திப்புக்கு போலாம் வான்னு சொல்லிட்டு இன்னும் தூங்கிக்கிட்டா இருக்க? கதவத் திற, வெளியதான் நிக்கிறேன்" //

ஹஹாஹா :)

பின்னோக்கி said...

//கடைவாயிலிருந்து ரத்தம் வழிந்து

இந்த வரிகளைப் படிச்ச உடனே டவுட் ஆனேன் :).

பித்தனின் வாக்கு said...

பனிச்சறுக்கு வண்டி இழுக்கும் நாய்க்கு ஓவர் பில்டப் கொடுத்த போதே நினைத்தேன் இது கதைனு. அமா உங்க கனவுல திரிசா நமிதா நயந்தாரா எல்லாம் உங்க கூட ஆல்ப்ஸ் வரலையா? வெறும் கொலைதான் வந்ததா? ஹாஹா நல்ல பதிவு. நல்ல கதை.

Unknown said...

சின்ன அம்மிணி
நன்றி.

பின்னோக்கி.. இஃகி இஃகி இஃகி

//பித்தனின் வாக்கு said...
பனிச்சறுக்கு வண்டி இழுக்கும் நாய்க்கு ஓவர் பில்டப் கொடுத்த போதே நினைத்தேன் இது கதைனு. அமா உங்க கனவுல திரிசா நமிதா நயந்தாரா எல்லாம் உங்க கூட ஆல்ப்ஸ் வரலையா? வெறும் கொலைதான் வந்ததா? ஹாஹா நல்ல பதிவு. நல்ல கதை.
//

என்னாங்க பண்றது? நயன் தாரா வந்தா கூடவே பிரபுதேவா வர்றாரு, நமீதா வந்தா கூடவே தங்கமணி பூரிக்கட்டையோட வர்றாங்க.

அது சரி(18185106603874041862) said...

பர பரன்னு கதை நல்லாருக்கு முகிலன்....ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு ஓப்பனிங் சீன் மாதிரி...இல்லாட்டி ராபர்ட் லட்லம்...டாம் க்ளான்ஸி நாவல்ல முதல் எபிசோட் மாதிரி இருக்கு....வெல்டன்!

குடுகுடுப்பை said...

நிறைய இங்கிலீசு படம் பாப்பியளோ?

நல்லா இருக்கு.

Unknown said...

அது சரி
குடுகுடுப்பை

வருகைக்கு நன்றி. பாராட்டுகளுக்கும் நன்றி.

Prabhu said...

தீபாவளி தசாவதாரம் ஹேங் ஓவரா?

Shakthiprabha (Prabha Sridhar) said...

எதிர்பார்த்த நச் தான் என்றாலும், உங்கள் கதை விவரிப்பு அருமை.

கே. பி. ஜனா... said...

நல்ல நடை. வாழ்த்துக்கள்! -கே.பி.ஜனா

சுவாசிகா said...

கதையின் முடிவு சூப்பரா நச்னு இருந்துச்சு...

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me