Friday, November 13, 2009

நீண்ட நெடிய இருபது வருடங்கள்

1989ம் வருடம். ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானின் சுற்றுப் பயணம் செய்கிறது. அந்த அணியில் இடம் பெற்றிருந்தான் பதினாறு வயதே நிரம்பிய அந்தச் சிறுவன். அவனைப் பற்றி கிரிக்கெட்டின் பெரிய ‘தல’ கவாஸ்கர் பெருமையாகச் சொல்லியிருந்தார். முதல் டெஸ்ட் மேட்ச் அவ்வளவாக சோபிக்கவில்லை. கவாஸ்கர் ஊர்ப்பாசத்தில் பேசியிருக்கிறார் என்று தான் நினைத்தோம். பாகிஸ்தானிலும் அச்சிறுவனைக் கேலி செய்யும் வண்ணம் பேனர்கள் வைத்திருந்தார்கள். “பால் குடிக்கும் குழந்தையே, வீட்டுக்குப் போய் பால் குடி” என்று.

இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு கண்காட்சிப் போட்டி. அதில் முஸ்தாக் அகமதுவின் ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாசியிருந்தான் அச்சிறுவன். அப்போது உலகின் தலை சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிர் (முஸ்தாக் அகமதுவின் குரு) அச்சிறுவனை நோக்கி - “ஏன் சிறுவர்களின் பந்து வீச்சை அடிக்கிறாய்? என் பந்தை அடித்துப் பார்?” என்று சவால் விடுத்துவிட்டு பந்து வீச வந்தார். அந்தச் சிறுவனும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டான். அந்த ஓவர் முடிந்த போது ஸ்கோர் கார்ட் இப்படி இருந்தது - 6 0 4 6 6 6. சச்சின் என்ற பேட்ஸ்மெனை உலகம் கண்டு கொண்டது.

அந்தச் சிறுவன் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் நிறைவு பெருகின்றன.

இருபது வருடங்கள் ஒரு பணியில் இருப்பது பெரிய விசயமில்லை. ஆனால் அப்பணி விளையாட்டுத் துறையில் விளையாட்டு வீரராக என்றால்? பெரிய விசயம் தான் இல்லையா? அதுவே இருபது வருடங்களாக தலை சிறந்த விளையாட்டு வீரராக? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

சச்சின் ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும் போதும் நூறு கோடி இந்தியர்களும் அவர் மீது வைக்கும் எதிர்பார்ப்பு? அவர் அவுட்டாகிவிட்டால் உடைந்து போகும் இந்திய அணியைப் பின்பற்றுபவர்களும், கூத்தாடும் எதிர் அணியைப் பின்பற்றுபவர்களும் இருபது வருடங்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்? அன்று முதல் இன்று வரை இந்திய அணியின் மதிப்பு வாய்ந்த விக்கெட்டாகக் கருதப்படுவது சச்சினின் விக்கெட் தானே?

அவரின் திறமைக்குச் சான்றாக எத்தனையோ ஆட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். வயதாகிவிட்டலும் தன் திறமை சற்றும் மங்கவில்லை என்பதைக் காட்டும் வண்ணம் ஹைதராபாத்தில் 175 ரன் எடுத்தாரே? மறக்க முடியுமா?

இந்திய கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுளாக விளங்கும் சச்சின் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பது என் விருப்பம் தான் ஆனால் அதற்கு அவர் உடல் ஒத்துக் கொள்ளுமா என்று தெரியாததால், 2011 உலகக் கோப்பைப் போட்டிகள் வரையாவது அவர் விளையாடி இந்தியாவுக்கு கோப்பையைப் பெற்றுத் தர வேண்டும்.

இன்று இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சச்சினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.