Wednesday, December 1, 2010

சாகுற நாள் தெரிஞ்சா...

காராஜில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். என் முகத்தைப் பார்த்ததும் கவிதாவுக்குப் புரிந்து விட்டது போலும்.

“என்ன மறுபடியும் டிப்ளாய்மெண்ட் ஃபெயில்டா?”

“ஆமா. எப்பிடிக் கண்டுபிடிச்ச?”

“அதான் மூஞ்சியிலயே எழுதி ஒட்டியிருக்கே”

கூடுதல் சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு காஃபி மேக்கரில் காஃபிப் பொடியைத்தட்டி காஃபி போட ஆரம்பித்தேன்.

“முதல்லயே இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா இப்பிடி லேட்டா ஆஃபீஸ்ல ஸ்டே பண்ணியிருக்க மாட்டியில்ல?” முகிலனுக்கு இட்டிலியைத் திணித்துக் கொண்டு கேள்வியை எனக்குத் திணித்த கவிதாவின் கடைவாயில் ஒரு ஏளனப் புன்னகை.

வெறுமையாகப் பார்த்தேன். டிவியில் கோபி மலர் மேடத்திடம் வழக்கம்போல சோகமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

“சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்னு தலைவர் சொல்லியிருக்கார்” நிகழ்வில் ரஜினியைத் துணைக்கழைத்தேன்.

“ம்க்கும்.. ரஜினி என்ன சொந்தமாவா சொன்னாரு. ஏற்கனவே மகாபாரதத்துல கண்ணன் சகாதேவன் கிட்ட சொன்னதுதான?”

“என்னது சகாதேவன்கிட்டயா இது என்ன புதுக்கதையா இருக்கு?” காபியின் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொண்டு கதை கேட்கும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.

“ஆமா.. முதல்ல சகாதேவன் யாருன்னு தெரியுமா?”

“தெரியுமே.. பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர்”

“கரெக்ட். அவர் ஒரு பெரிய ஜோசியக்காரன்ங்கிற விசயம் தெரியுமா?”

“ஓ.. டிவியில எல்லாம் ராசிபலன் சொல்வாரா?”

“ஜோசியக்காரங்கன்னாலே டிவியில ராசிபலன் சொல்றவங்கதானா?”

இடுப்பில் கை வைத்து முறைத்த கவிதாவைப் பார்த்தால் மிஷ்கினை முறைக்கும் டகேஷி கிட்டானோவைப் போல இருந்தது.

“சரி சரி முறைக்காத மேல சொல்லு”

“இந்த பாண்டு இருக்காரே..”

"யாரு இந்த மூஞ்சிய அஷ்டகோணலாக்கிக்கிட்டு ஆங்க்னு கத்துவாரே அவரா?”

“அவரு உனக்குத்தெரிஞ்ச பாண்டு. நான் சொல்றது பாண்டவர்களோட அப்பா பாண்டு”

“ஓ அவர் பேரும் பாண்டுதானா? ரைட்டு..”

மறுபடியும் முறைத்த கவிதாவை கண்டுகொள்ளாத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு, “மேல சொல்லு..”

“அவரு சாகுற தருவாயில தன்னோட புள்ளைங்களைக் கூப்பிட்டு ‘நான் செத்தப்புறம் என்னை எரிக்கவோ புதைக்கவோ செஞ்சிடாதீங்க. அதுக்கு பதிலா என் உடம்பை நீங்க அஞ்சு பேரும் தின்னுடுங்க’ன்னு கேட்டுக்கிட்டாரு”

“அடங்கொக்க மக்கா.. அந்தக் காலத்துல மனுசக்கறியெல்லாம் சாப்ட்டவிங்க தானா?”

“அது தெரியலை. ஆனா இது ஸ்பெசல் மீல்ஸ்”

“ம்ஹ்ம்.. இருக்கலாம். அப்புறம்?”

“அப்புறமென்ன, அவர் செத்ததும் வழக்கம்போல கண்ணன் வந்து ஏய் என்னப்பா எங்கயும் இல்லாத வழக்கமா பெத்த அப்பன் உடம்பையே திங்கிறது. அது தப்பு. பெத்த அப்பாவுக்கு இறுதிக்கடன்கள் செய்யறதுதான் பிள்ளைங்களோட கடமை அப்பிடின்னு சொல்லி அவங்களை இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு பண்ண சொன்னான்”

காபி குடித்த கப்பைக் கழுவிக்கொண்டே, “வந்துடுவானே இந்தக் கண்ணன். அவன் தடுக்கிறான்னா வேற எதோ மேட்டர் இருக்கு போலயே”

“இதே டவுட்டுதான் சகாதேவனுக்கும் வந்துச்சி. எல்லா ப்ரதர்ஸும் ஆளுக்கு ஒரு வேலையா போயிட, அப்பாவோட பிணத்தைக் காவல் காக்குற பொறுப்பு சகாதேவனுக்கு. தனியா இருந்த சகாதேவனுக்கு பெரிய டவுட். அப்பாவே தன் உடம்பை சாப்பிடச் சொன்ன பிற்பாடும் இந்த கண்ணன் வந்து தடுக்கிறான்னா அதுல ஏதோ பெரிய விசயம் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாம பாண்டுவோட கால் கட்டை விரலை மட்டும் கடிச்சித் தின்னுட்டான்”

சின்க்கில் இருந்த மற்றப் பாத்திரங்களையும் என்னை அறியாமல் கழுவிக்கொண்டே, “அடங்கொன்னியா? கட்டை விரலையா? அதுல அவ்வளவா சதை இருக்காதே? எப்பிடி தின்னான்?”

“ரொம்ப முக்கியமான கவலை பாரு..எப்பிடியோ தின்னுட்டான். தின்னதும் அவனுக்கு முக்காலமும் உணர்ற ஞானம் வந்திடுச்சி. பாண்டவர்களுக்கு வரப்போற ஆபத்தைத் தெரிஞ்சிக்கிட்டான்”

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதுனால தான் கண்ணன் தடுக்கப் பாத்திருக்கான்”

“திரும்பி வந்ததும் கட்டை விரல் மிஸ்ஸானதைப் பார்த்து என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிக்கிட்டான் கண்ணன். சகாதேவனைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயி, இங்க பாரு நீ கட்டை விரலைத் தின்னுட்டன்னு தெரியுது. உனக்கு என்ன நடக்கப் போவுதுங்கிறதும் தெரிஞ்சிருக்கும். ஆனா வெளிய சொல்லாத. எல்லாம் விதிப்படி நடக்கத்தான் வேணும். நீ இதையும் மீறி வெளிய சொன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு சொல்லிட்டான். சகாதேவனும் பதிலுக்கு, எனக்கும் என் சகோதரங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாம நீ காப்பாத்தனும். இல்லைன்னா உன் தலை வெடிச்சிரும் அப்பிடின்னு பதிலுக்கு சாபம் விட்டுட்டான்”

“ஓஹோ.. இதைத்தான் தலைவர் ஸ்லைட்டா மாத்தி சாகிற நாள் தெரிஞ்சான்னு பஞ்ச் அடிச்சிட்டாரா?”

“ஆமா”

பாத்திரம் எல்லாம் கழுவி முடிந்ததும், “ஆமா வழக்கமா இந்த மாதிரி கதை சொல்லும்போது நீ தான மெசேஜ் சொல்லுவ? ஆனா இந்தத் தடவை நான் தான மெசேஜ் சொன்னேன்? அப்புறம் எதுக்கு இந்தக் கதை?”

சின்க்குக்கு முன்னால் நின்றிருந்த என்னை லேசாக இடித்துத் தள்ளிவிட்டு கையைக் கழுவிய கவிதா, “அது ஒண்ணுமில்லை. கொஞ்ச நாளா, ப்ளாக்ல எழுத சரக்கில்லாம பஸ்ல எழுதினதையெல்லாம் கூட்டிப் பெருக்கிப் போட்டு கல்லாக்கட்டிக்கிட்டு இருந்தியில்ல, அதான் எழுதுறதுக்கு எதையாவது குடுக்கலாம்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

“யேய்... அப்பிடியெல்லாம் இல்லை. ஆஃபீஸ்ல ஒரே ஆணி. அதான் ப்ளாக் பக்கம் போக நேரமேயில்ல..” என்று காற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

15 comments:

பிரபாகர் said...

லைக்கி ஓட்டிட்டேன்... சுவராஸ்யமாதான் இருக்கு!... சகா ஜோஸ்யர்னு தெரியும்... மத்த தகவல்கள் (விரலைக் கடிச்சது) புதுசு...

பிரபாகர்...

Chitra said...

new to me. :-)

VELU.G said...

நானும் புதுசாப் படிக்கிற கதை இது


நல்லாயிருக்குங்க

rajasundararajan said...

மிஸ்கினை எல்லாம் வம்புக்குள்ள இழுத்திருக்கீங்க, நல்ல நகைச்சுவை எழுத்தாளரா இருப்பீங்க போலிருக்கே?

சகாதேவன் தின்னுறது கட்டை விரல் இல்ல, சுண்டு விரல். சுண்டு விரலைத் தின்னவனுக்கே அவ்வளவு ஞானம்னா, முழு உடம்பையும் தின்னவனுக்கு எவ்வளவு ஞானம் இருக்கும்? கிருஷ்ணன் அப்படித்தான் ஞானத்துல மிஞ்சுனவரா ஆகிறாரு.

பாண்டு கேட்டுக்கிட்டா மாதிரி பிள்ளைங்க அவரு உடலைத் தின்கப் போறப்போ, கிருஷ்ணருக்கு இது தெரிய வர அங்கெ வந்து அவங்களெத் தடுத்திடுறாரு. இதுல ஏதோ விஷயம் இருக்குன்னு யோசிக்கிற சகாதேவன், காவலுக்கு இருக்கிறப்போ, ஆர்வத்தெ அடக்க முடியாம பாண்டுவோட சுண்டு விரலைக் கடிச்சுத் தின்னுடுறான்.

சகாதேவனை வெளியில நிறுத்திட்டு, தான் மற்ற ஏற்பாடுகளெப் பார்குறதாகச் சொல்லி உள்ளெ போயிக் கதவடைச்சுக்கிற கிருஷ்ணன், பாண்டுவோட மொத்த உடலையும் கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுக்கிட்டு இருக்காரு.

கதவுக்கு வெளியில இருந்தாலும், சுண்டு விரலைத் தின்னதுனால, சகாதேவனுக்கு கிருஷ்ணன் என்ன செய்யுறாருன்னு தெருஞ்சு போகுது. கூப்பாடு போடுறான். கிருஷ்ணன் அடிச்சுப் பொரண்டு வெளியில ஓடி வர்றாரு. தான் செஞ்சதெ வெளியில சொன்னா தலை சுக்கு நூறாயிடும்னு சாபம் கொடுத்திடுறாரு.

சகாதேவன் கூச்சல் போட்டப்போ, கிருஷ்ணன் பாண்டுவோட கால் கட்டைவிரலைத் தின்னாமலே விட்டுட்டு ஓடி வந்திட்டாரு. அதனாலதான் வேடன் விட்ட அம்பு கிருஷ்ணனோட கால் கட்ட விரல்ல பட்டப்போ அவரோட உசிரெப் பறிச்சிடுது.

இது ஒரு நாட்டுப்பாடல் கதை. ஜைமினி எழுதின மகாபாரத்துல உள்ளதுன்னும் சொல்லப் படுது.

சைவகொத்துப்பரோட்டா said...

சுவராசியம்!

a said...

புதிய சுவாரசிய விசயம்.........

எப்படியோ உங்கள அறியாம எல்லா பாத்திரத்தயும் கழுவிட்டீங்க போல.......

ராஜ நடராஜன் said...

பாஸ்!நீங்க கதை உட்டாலும் உடுவீங்க!முன்னாடியே சூடா பால் குடிச்ச பூனை நான்:)அதனால் படிக்காமலே அதென்னமோ எஸ்ன்னு ஒண்ணு புதுசா சுத்துதே அது!.

Philosophy Prabhakaran said...

என்னாச்சு... எப்போவாவது தான் தலையை காட்டுறீங்க...

Paleo God said...

ஓ மகாஅமெரிக்கம்! :))

துளசி கோபால் said...

பாத்திரங்களையும். மகாபாரதப் பாத்திரங்களின் செயலையும் நல்லாவே விளக்கிட்டீங்க!!!!!

இது எனக்குப் புதுக்கதை!

சாந்தி மாரியப்பன் said...

நல்லா விளக்கிட்டீங்க :-)))

ILA (a) இளா said...

கழுவி கமுத்திட்டீங்க போங்க

Unknown said...

நன்றி பிரபா

நன்றி சித்ரா

நன்றி வேலு.ஜி

நன்றி ராஜசுந்தரராஜன் சார், இது நான் எங்கயோ படிச்சது. கண்ணன் பாண்டுவோட ஒடம்பைச் சாப்பிட்டது புது தகவல்.

நன்றி சைவகொத்துப்பரோட்டா

நன்றி வழிப்போக்கன்

நன்றி ராஜநடராஜன் - இந்தத் தடவை படிக்காமலே பல்பா?

நன்றி பிரபாகரன் - ஆணி அதிகம்..

நன்றி ஷங்கர்

நன்றி துளசி டீச்சர்

நன்றி அமைதிச்சாரல்

நன்றி இளா

நன்றி நசரேயன்

Anisha Yunus said...

//“யேய்... அப்பிடியெல்லாம் இல்லை. ஆஃபீஸ்ல ஒரே ஆணி. அதான் ப்ளாக் பக்கம் போக நேரமேயில்ல..” என்று காற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.//

சரி சரி, விடுங்கண்ணா... இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்ண்ணா... :)) வாழ்க அண்ணி !! :)

அது சரி(18185106603874041862) said...

அப்போ பாண்டு ஒடம்பு என்னதான்யா ஆச்சு? எரிச்சாய்ங்களா பொதைச்சாய்ங்களா? ஒரு என்கொயரி கமிஷன் போடணும் போலருக்கே :))))