Wednesday, February 20, 2013

இதுவும் ஒரு காதல் கதை - 23



எனக்குக் குழப்பம் அதிகமானது. ”இப்ப என்னதான் சொல்ல வர்ற?”

“நம்ம கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணனும். இன்னும் மூணு-ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம்”

"என்ன மாலா சொல்ற? ரெண்டு வீட்டு சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டே இருப்ப. இப்ப நீயே நாமா கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்ற?”

“ஏற்பாடு தாண்டா பண்ணனும்னு சொன்னேன். நாமளா கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்னு தெரிஞ்ச பிறகாவது இவங்க நாமே செஞ்சி வச்சிரலாம்னு இறங்கி வரலாம்ல?” பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உடைந்தது.
அவள் தாடையைப் பிடித்து முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் கண்களைச் சந்தித்ததும் என் தோளில் முகம் புதைத்தாள்.

சிறிது நேரம் அழட்டும் என விட்டேன். ஐந்து நிமிடம் கழித்து எழுந்து கர்ச்சீஃபால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். “நமக்கு ஏண்டா இப்பிடி நடக்குது? செந்தில் ஓமனாவைப் பாரு. வேற சாதி மட்டுமில்ல, வேற வேற மாநிலம், வேற வேற மொழி. அவங்க வீட்டுல எல்லாம் ஒத்துக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் செந்தில் அம்மால்லாம் படிக்காதவங்க. எங்க வீட்டுல பாரு ரெண்டு பேரும் படிச்சி ப்ரொஃபசர்ஸ் வேற”

“குட்டிம்மா, இதெல்லாம் நாம லவ் ப்ரபோஸ் செஞ்சிக்கிட்ட ஒடனே பேசினோமேடா. எதிர்பார்த்ததுதானே??”

“இல்ல தேவா. எனக்குள்ள ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. என்னதான் சாதி சம்பிரதாயம்னு பேசினாலும் ஒரே பொண்ணு, செல்லப் பொண்ணு என்னோட ஆசைக்கு இறங்கிடுவாங்கன்னு. ஆனா இப்பிடி” மறுபடியும் அழுதாள்.

பெங்களூர் போய்ச் சேரும் வரை அழுதுகொண்டும் தூங்கிக் கொண்டும் வந்தாள்.

அப்பார்ட்மெண்ட் போய்ச் சேர்ந்ததும் கேட்டேன் - “கல்யாணம்னு சொல்லிட்ட, எப்பிடி கல்யாணம்? ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லயா? இல்ல..”

“இங்க பாரு தேவா. எங்கப்பா அம்மா நடத்தி வச்சிருந்தா எவ்வளவு கிராண்டா நடத்துவாங்களோ அதே அளவுக்கு கிராண்டா இருக்கணும். நாளைக்கு யாரும் என்னையப் பார்த்து நீயா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதால இப்பிடி சிம்பிளா முடிஞ்சிருச்சி. இல்லைனா கிராண்டா நடத்தியிருப்போம்னு சொல்லிடக்கூடாது. சரியா?”

“சரிம்மா. நான் செந்தில்கூடப்பேசி என்ன செய்யலாம்னு பார்க்குறேன். நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. ஆஃபிஸ்க்கு லேட்டா போனாப் பரவாயில்லை”

கதவைத் திறந்து நுழைந்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு இடுப்பில் துண்டோடு வந்த செந்தில் என்னைப் பார்த்து சிரித்தான். சாமி கும்பிட்டுவிட்டு வருகிறேன் என்பதாக சைகை காட்டிவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு பால்கனியில் நின்றவாறு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பெங்களூருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிராண்டாக என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாள். எவ்வளவு கிராண்டாக? திண்டுக்கல் மாதிரி பட்டிக்காட்டில் விலையுயர்ந்த மண்டபமே ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை வராது. இந்த பெங்களூரில் பாடாவதி மண்டபமே அம்பதாயிரம் கேட்பார்களே. இவள் வேறு நாங்கள் திருமண ஏற்பாடு செய்வதைப் பார்த்து அவர்கள் வீட்டில் இறங்கிவரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பை வைத்திருக்கிறாள். ஒரு வேளை செலவு செய்து மண்டபம் எல்லாம் புக் செய்த பிறகு திண்டுக்கல்லில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால்? சரி காதலுக்காக செலவு செய்வோம்.

செந்தில் பூஜை முடித்துவிட்டு ட்ரெஸ் செய்துகொண்டு வந்து நின்றான்.

“என்னடா? என்ன ஆச்சு? எதுவும் பாசிடிவ் நியூஸா?”

அடுத்த பத்து நிமிடங்களீல் அங்கே நடந்த அனைத்தையும் அவனுக்கு விளக்கினேன்.

“என்னடா செய்யப் போறீங்க இப்ப?”

மாலாவின் முடிவையும் சொன்னேன்.

“நல்ல முடிவுதான். எங்க வச்சிக்கிறதுன்னு எதும் யோசிச்சியா?”

“இல்லடா. நீ தான் சொல்லணும்”

“சரி நான் டீம்ல விசாரிக்கிறேன். நீயும் விசாரி. நைட் பேசுவோம்”

*****************************************************

நான் யாரிடமும் விசாரிக்கவில்லை. சில மண்டபங்களின் வெப்சைட் போய் எவ்வளவு வாடகை என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியும் மொத்த செலவும் ஐந்து லட்சத்திற்கு வந்து நின்றுவிடும்போல இருந்தது. பேங்க் பேலன்ஸ் பார்த்தேன். திருமணம் முடிந்தாலும் முடியாவிட்டாலும் துடைத்துவிட்டாற்போலாகிவிடும். பரவாயில்லை.

மாலாவுடன் லஞ்ச் சாப்பிட்டேன். அவள் திட்டம் பற்றி எதுவுமே பேசவில்லை. செந்தில் சொன்னதைச் சொன்னேன். சரி என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.

*****************************************************

இரவு டின்னருக்கு இந்திரா நகர் நந்தினியில் சந்தித்தோம்.

சூப் ஆர்டர் செய்துவிட்டு செந்தில் ஆரம்பித்தான், “கைஸ். உங்க பிரச்சனைக்கு காஸ்ட் எஃபக்டிவா ஒரு வழி இருக்கு”

இருவரும் மௌனமாகப் பார்த்தோம். “கோரமங்களா கணேஷா டெம்பிள். அங்க காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு, ஈவினிங் ரிசப்ஷன் எங்கயாவது ஒரு ஹோட்டல்ல வச்சிக்கலாம். நம்ம ஆஃபிஸ் கொலீக்ஸ், உன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மாலாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்புடுடலாம். இன்விட்டேஷன் அடிக்கணும்னா என் கல்யாணத்துக்கு அடிச்சேனே அதே ப்ரஸ்ல அடிச்சிக்கலாம். இப்ப தேதி முடிவு பண்ணுங்க, பட்ஜெட் முடிவு பண்ணுங்க. முழு ப்ராசஸ்லயும் உங்க கூட நான் இருக்கேன்”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

No comments: