Tuesday, December 18, 2012

இதுவும் ஒரு காதல் கதை - 19


ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”

சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

‘சம்மதம் சம்மதம் சம்மதம்’ என்று உச்சக் குரலில் கத்த வேண்டும் போல இருந்தது. இந்த ஊருப்பக்கம் தலையே வைக்கக் கூடாது என்பதுதானே என் லட்சியம். அதை நிறைவேற்ற அப்பாவே துணை நிற்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளையின் கையப் பற்றிக் குலுக்கினேன். “மாப்ள நீங்க மட்டும் இல்லைன்னா இது வெட்டுக் குத்துன்னு வந்து நின்னிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் மாப்ள”

“அட விடுங்க மச்சான். சும்மா சும்மா தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. சரி தங்கச்சிக்கிட்ட மேட்டரை சொல்லலையா?”

“அது அவங்கம்மா அங்க இருக்காங்க. நினைச்ச நேரத்துக்குப் பேச முடியாது. இமெயில் தான் அடிக்கணும்”

“வாங்க டவுனுக்குப் போய் அனுப்பிட்டு வருவோம்”

இருவரும் வண்டியில் போய் மாலாவுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு டாஸ்மாக்கில் ஒரு ஆஃபை ஆளுக்கு ஒரு குவாட்டராக அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தங்கச்சியிடம் திட்டு வாங்கினோம்.

இரவு மாலா அழைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாக ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

********************************************

திங்கட்கிழமை காலை. ஒரு வருடத்தில் ரொம்பவே மாறியிருந்தது பெங்களூரு. ஆங்காங்கே ரோடு வேலை நடந்துகொண்டே இருந்தது. எத்தனை பாலம் கட்டினாலும் பெங்களூரு ட்ராஃபிக்கைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே ஆட்டோவில் சென்றிறங்கினேன். வாசலிலேயே காத்திருந்தான் செந்தில். ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆரத்தழுவிக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷம் டா. நீயும் மாலாவும் ஒரு வழியா ஒண்ணு சேர்ந்துட்டீங்க” கையில் இருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டே சொன்னான்.

“அடச் சும்மாருடா. முக்கால் கிணறு தான் தாண்டியிருக்கோம். இன்னும் மாலா வீட்டுல சம்மதிக்கல தெரியும்ல?”

“அதல்லாம் சம்மதிச்சுருவாங்கடே. நீ கவலைப் படாத” லிஃப்டில் ஏறி நானும் அவனும் தங்கியிருந்த ஃப்ளோரில் இறங்கி, அந்த அப்பார்ட்மெண்ட் கதவைத் தட்டினான். ஓமனா கதவைத் திறந்தாள். மேடிட்டிருந்த அவள் வயிறு ஒன்பது மாதம் என்று சொன்னது.

“டேய் சொல்லவே இல்ல. கங்க்ராட்ஸ்டா” என்று இருவருக்கும் கை கொடுத்தேன். “எப்ப டியூ”

இன்னும் ஃபோர் வீக்ஸ்லடா. புதன் கிழமை ஓமனாவோட அப்பா அம்மா வந்து கூட்டிட்டுப் போகப் போறாங்க”

“ஓ பிரசவம் உங்க ஊர்லயா?”

“ஆமா. இன்னைக்கு ராத்திரி அம்மா அப்பா வர்றாங்க”

“நல்லது”

“இன்னும் 4 மாசம் ஓமனா அங்க தான் இருப்பா. நீ இங்கயே என் கூட தங்கிக்கலாம். அதுக்குள்ள கல்யாணம் செஞ்சிக்கப் பாருங்க. என்ன?” செந்தில் கண்டிப்புடன்.

“கண்டிப்பாடா. அதுக்குதான போராடுறோம். இந்த அப்பார்ட்மெண்டை நீயே வாங்கிக்கப் போறதா சொன்னியே வாங்கிட்டியா?”

“அட்வான்ஸ் குடுத்துட்டேண்டா. இன்னமும் பத்திரம் பதியலை”

“மறுபடியும் ஒரு கங்க்ராட்ஸ்டா. எல்லாம் குழந்தை பிறக்கப் போற நேரம்”

அவர்களுக்காக யு.எஸ்ஸிலிருந்து வாங்கிவந்திருந்த ஐபேடையும் டிஜிட்டல் ஃபோட்டோ ஃப்ரேமையும் கொடுத்துவிட்டு குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினேன்.

மாலாவின் பல்சர் செந்தில் வீட்டு பார்க்கிங் லாட்டிலேயே நின்றது. அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

பாதி டீம் மாறிப் போயிருந்தது. பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் பேசியிருந்தாலும் அறிமுகமாயிருந்த பெயர்களுக்கு முகங்களை ஒட்டிக்கொள்ள முடிந்தது. மாட்யூல் லீடராகியிருந்ததால் பொறுப்பு கூடியிருந்தது. மானேஜரோடும் ப்ராஜக்ட் லீடரோடும் ஒரு மணி நேரம் மீட்டிங் போட்டுவிட்டு தம்மடிக்க வெளியே வந்தேன். என்னோடு ப்ராஜக்ட் லீடர் கிஷோரும்.

சிகரெட்டால் தீமைகள் அதிகம் என்றாலும் இது போன்ற நன்மைகளும் உண்டு. மிகவும் சுலபமாக நட்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். கிஷோரும் ஒட்டிக் கொண்டான். கலிஃபோர்னியாவில் நான்கு வருடங்கள் பணியாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறான். அதனால் யுஎஸ்ஸில் ஆரம்பித்து சினிமாவில் முடித்தோம் குட்டி அரட்டையை.

இரண்டு நாட்களில் மிகவும் நெருங்கிவிட்டான் கிஷோர். அவன் மாமனார் ஆந்திராவில் அமைச்சராக இருக்கிறார். அவன் திருமணத்துக்கு 5000 பேர் வந்தனராம். என் தங்கையின் திருமணத்துக்கு வந்த முந்நூத்திச் சொச்சம் பேருக்கே நாக்கு தள்ளிப்போனது நினைவுக்கு வந்து போனது. எனக்கும் மாலாவுக்கு இடையில் இருக்கும் லவ் எங்கள் டீமுக்கே பரிச்சயம் ஆனதால் இவனுக்கும் தெரிந்திருந்தது. எங்கள் திட்டம் பற்றி விசாரித்தான். உதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்க வேண்டாம் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தான். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறது என்று கொஞ்சம் தைரியம் வந்தது.

ஓமனாவை வழியனுப்பி விட்டு நானும் செந்திலும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். செந்தில் இருப்பது அதுவும் ஓமனா என்ற கமிட்மெண்ட் இல்லாமல் உடன் இருப்பது ஒரு தனி பலம் வந்தது போல இருந்தது.

***************************************
மாலாவும் வந்துவிட்டாள். அவள் கேட்ட படியே பெங்களூரு ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அவளை மாற்றியிருந்தார்கள். மாட்யூல் லீடர் பொசிஷனே கிடைத்திருந்தது. ஒரே காம்ப்ளக்ஸ் ஆனால் வேறு பில்டிங். எப்படியோ ஒரே டைம் ஜோன் என்பதால் இன்ஸ்டண்ட் மெசெஞ்சரிலும் தேவைப்பட்டால் இண்டர்காமிலும் பேசுக்கொள்ளும்படியான சந்தர்ப்பம். லஞ்சுக்கு சந்தித்தோம். மெரிடியனில் கம்பெனி அக்கமொடேஷனில் தங்கியிருக்கிறாள். உடன் அவள் அம்மாவும் அப்பாவும். இன்னும் கரையவில்லை அவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் மாலாவிடம் ஒரு தெளிவு இருந்தது. எங்கள் வீட்டில் க்ரீன் சிக்னல் காட்டியதாகக் கூட இருக்கலாம். பைக்கில் அவளை மெரிடியன் பின் வாசலில் இறக்கிவிட்டு வந்தேன்.

****************************
அடுத்த நாள் செந்திலுக்கு செகண்ட் ஷிஃப்ட் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தான். நான் கிளம்பி அலுவலகம் வந்திருந்தேன். மீட்டிங்குக்கு நோட்ஸ் ரெடி செய்து கொண்டிருக்கும்போது செல்ஃபோன் அழைத்தது. செந்தில்.

“என்னடா? தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன். என்ன விஷயம்? ஒரு மீட்டிங் இருக்கு சீக்கிரம் சொல்லுடா”

“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”

“என்னது?”

(தொடரும்)

அடுத்த பாகம் இங்கே

Monday, December 10, 2012

சில்வியா - இறுதி பாகம்

பாகம்-1 பாகம்-2 பாகம்-3




 Every detail is important



அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.


************************


ஃப்ரிட்ஜில் இருந்த ஹெய்னெக்கன் ஒன்றைத் திறந்து வாய்க்குள் கொஞ்சம் சரித்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தான். எதிரே முழங்கால் வரை நீண்ட கூந்தலுடன் குளித்துவிட்டு அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்த மலையாள அழகியை அழகாக வரைந்திருந்த ரவி வர்மாவின் ஓவியம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. ரவி வர்மாவே வரைந்த ஓவியமாக இருக்காது. அதன் பிரதியாக இருக்கும். பிரதியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே ஒரிஜினல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே பியரைக் காலி செய்து கொண்டிருந்தான்.


சட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது. சௌந்தருக்கு ஃபோன் போட்டான்.


“சௌந்தர், சில்வியாவோட பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?”


“எதுக்கு மாமா கேக்குற?”


“ஒரு சின்ன தியரி. அவங்களை ஷானோட கேலரிக்குக் கூட்டிட்டுப் போய் அந்த படத்தை எங்கயாச்சும் பார்த்திருக்காங்களான்னு கேக்கணும்”


“என்ன மாமா உளர்ற? அவங்க எங்க பார்த்திருக்கப் போறாங்க?”


“இல்லடா என்னோட தியரி ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்க்கத்தான். ப்ளீஸ் அவங்களைக் கூட்டிட்டு வாயேன்”


“சரி. நான் அவங்களைக் கால் பண்ணி வரச் சொல்றேன். நீயும் கூட வர்றியா?”


“ஆமா நானும் வர்றேன்”


இந்தத் தியரி ஒர்க்கவுட் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனாலும் எதுவுமே கிடைக்காமல் முட்டி நிற்பதற்கு இது முயற்சியாகப் பட்டது அருணுக்கு. ஒரு வேளை தான் நினைப்பது தவறோ? ஜான் தற்கொலை தான் செய்திருப்பானோ? சோஃபாவிலேயே படுத்துத் தூங்கியிருந்தான் அருண்.


**************************


அடுத்த நாள், சில்வியாவின் பெற்றோரைச் சந்திக்க காரை தானே ஓட்டிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்தான்.


“வா மாமா. இப்பத்தான் ஜானோட அடாப்ஸி ரிப்போர்ட் வந்திச்சி. நீ நினைச்சது சரிதான். அவன் உடம்புல பாய்ஸன் ரெஸிட்யூ இருக்கு. பாய்ஸன் குடுத்துத்தான் தண்ணியில தள்ளி விட்டிருக்காங்க. நீ ஏதோ தியரின்னு இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்க. அதாவது ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்ப்போம்”


நான்கு பேரும் போலிஸ் வாகனத்திலேயே ஷானின் காலரிக்கு வந்தோம். கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காலியாகி டா வின்ஸியின் லாஸ்ட் பெயிண்டிங்கும் பேக் செய்யப்பட்டு இருந்தது.


“ஷான், மே வீ சீ திஸ் பெயிண்டிங்?”


“சாரி டிடெக்டிக். ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்ன மாதிரி இந்த பெயிண்டிங் வித்துட்டேன்”


“ஜென்யூனிட்டி செக் ரிசல்ட் வந்துடுச்சா?”


“இன்னும் இல்லை. ஆனா வித்ததை எதுக்கு டிஸ்ப்ளே வைக்கணும்?”


“சரிதான். பட் நாங்க அதைப் பார்க்கணும். திறங்க”


ஷான் மெதுவாக படத்துக்கு வலிக்குமோ என்பது போல பாக்கேஜைத் திறந்தான். படத்தை எடுத்துக் காட்டினான்.


படத்தைப் பார்த்ததுமே சில்வியாவின் அம்மாவின் கண்களில் ஒளி. “இது எங்கம்மா வைச்சிருந்த படம். இறக்க முன்னாடி சில்வியாவுக்குக் குடுத்தாங்க. சில்வியாவும் பாட்டி நினைவுல இதை வச்சிருந்தா”


அருண் முகத்திலும் பிரகாசம். தன் தியரி ஒர்க் அவுட் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான்.


சௌந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அருணின் முகத்தை ‘ஏதாவது சொல்லு மாமா’ என்பது போல பார்த்தான்


“சௌந்தர். என்ன பாக்குற. கேஸ் சால்வ்ட்”


“புரியல மாமா. விவரமா சொல்லு”


“சில்வியா வச்சிருந்த படம் விலையுயர்ந்ததுன்னு அவங்க பாட்டிக்கும் தெரியலை, அவளுக்கும் தெரியலை. ஆனா ஜான் ப்ரோடியோட எம்ப்ளாயரான ஷானுக்குப் பார்த்ததும் புரிஞ்சிட்டது. சில்வியாகிட்ட கேட்டு வாங்கி வித்துக் குடுத்தா ஷானுக்கு வெறும் கமிஷன் தான் கிடைச்சிருக்கும். அதையே திருடி வித்தா? மொத்தப் பணத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க இவனும் ஜானும்”


“திஸ் இஸ் ரிட்டிகுலஸ். நான் எவிடென்சியல் அக்யூசேஷன்ஸ்” பேச விடாமல் குரலை உயர்த்தினான் ஷான்.


“ஒன் மினிட் மிஸ்டர். லெட் ஹிம் ஃபினிஷ்” என்று அவனை அடக்கினான் சௌந்தர்.


“திட்டப்படி சில்வியாவைக் கொன்னு தற்கொலை மாதிரி செட்டப் செஞ்சிட்டு படத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க. வந்த பிறகு எதுக்காக ஜானுக்கு ஒரு பங்கு குடுக்கணும்னு யோசிச்சி அவனையும் தீர்த்துட்டான் இந்த ஷான். இப்ப 20 மில்லியனும் இவன் பாக்கெட்ல. பணம் கைக்கு வந்ததும் பராகுவேக்கு ஓடிப் போகப் போறான். ஏன் பராகுவேன்னு தெரியுமா?”


“எக்ஸ்ட்ராடிக்‌ஷன் செய்ய முடியாத நாடு பராகுவே”


“கரெக்ட். அதான் அந்த நாட்டை சூஸ் பண்ணியிருக்கான். ஒரு வேளை கொலைக் கேஸ் பின்னாடி சால்வ் ஆகி இவன் மாட்டினா கூட அங்க இருந்து எக்ஸ்ட்ராடிக்ட் செய்ய முடியாதுங்கிறதால இவன் சேஃப். அரெஸ்ட் பண்ணு சௌந்தர் இவன”


“வெயிட் வெயிட். இந்தப் படம் இவங்களோடதுதாங்கிறதுக்கு என்ன ப்ரூஃப்? நான் என்னோட சோர்ஸ் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கினேங்கிறதுக்கு நான் ப்ரூஃப் வச்சிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்தி தைரியமாகச் சொன்னான் ஷான்.


“ம்ம்.. இதுவே எங்க ஊரா இருந்தா அள்ளிட்டுப் போய் நாலு மிதி மிதிச்சிருப்போம். சாணியோட உண்மையும் வெளிய வந்திருக்கும். அமெரிக்காவாப் போச்சி. வாரண்ட் இல்லாம கைது கூட செய்ய முடியாது” தமிழில் சௌந்தரிடம் சொன்னான்.


ஷான் ஒன்றும் புரியாது, “வாட்” என்று குரைத்தான்.


சௌந்தர், “ஹி இஸ் ரைட். வீ டோண்ட் ஹேவ் அ ப்ரூஃப்” என்று கையைப் பிசைந்தான்.


சில்வியாவின் பெற்றோரைப் பார்த்து, “இந்த பெயிண்டிங் இருக்கிற மாதிரி எதுவும் ஃபோட்டோ இருக்கா உங்க வீட்டுல?”


“தெரியலையே வீட்டுல போய் தான் பார்க்கணும்”


“சரி நீங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லுங்க. இவனை சும்மா விடக்கூடாது” சௌந்தர் கோபத்தை காரில் காட்டினான்.


*******************************************


காலை எழுந்து கிச்சனில் இருந்த காஃபி மேக்கரில் ஒரு காஃபி ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான் அருண். சௌமியா மேக்கை வைத்துக்கொண்டு என்னவோ நோண்டிக்கொண்டிருந்தவள் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்


“என்ன டிடெக்டிவ் சார். கேஸ் சால்வ் பண்ணிட்டீங்களா?”


“ம்ப்ச்” உதட்டைப் பிதுக்கிவிட்டு அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து காலை டீப்பாயின் மீது போட்டான்.


“அருண், இந்த ஃபோட்டோ நினைவிருக்கா?” மேக்கை அவனை நோக்கித் திருப்பினாள். சிறுவயதில் அவள் இந்தியா வந்திருந்த போது எடுத்த படங்கள். எம்.ஜி.எம் வந்த புதிது. அங்கே இருந்த ஒரு ராட்டினத்தில் ஏறி தலை சுற்றிக் கீழே இறங்கி வாந்தியெடுத்த கையோடு கொடுத்த போஸ். கிறக்கமும், சோர்வும் கண்களில் தெரிந்தது. “இந்த ஃபோட்டோ இன்னமுமா இருக்கு?”


“நேத்து நைட் தான் பழைய ஆல்பத்துல இருந்து எடுத்து ஸ்கேன் செஞ்சிப் போட்டேன். ஃபேஸ்புக்ல ஷேர் செய்யலாம்னு”


“ஹேய் அதெல்லாம் வேண்டாம். ஆமா நாம நயகரா போன ஃபோட்டோஸ் எல்லாம் சிஸ்டத்துல ஏத்திட்டியா?”


“ஓ. எப்பவோ”


“பாக்கலாமா?”


“ம்ம்.” ஃபோட்டோஸ் இருக்கும் ஃபோல்டரை ஓப்பன் செய்து மேக்கை என் மடியில் வைத்துவிட்டு எழுந்தாள். “பாத்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துர்றேன்”


வரிசையாக எல்லா ஃபோட்டோக்களையும் பார்த்துவிட்டு விண்டோவை மினிமைஸ் செய்தான். பேக்ரவுண்டில் இருந்த படத்தில் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டு இரண்டு பக்கமும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு அவைகளைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தாள் சௌமியா. ஃபோட்டோஷாப் வேலையெல்லாம் செய்யப்பட்டு நன்றாக இருந்தது படம். சிறிது நேரம் அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மேக்கை மூடினான். டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இரண்டாவது பஃப் இழுக்கும்போது, ப்ளாஷ் அடித்தது. சிகரெட்டை அணைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, உள்ளே வந்து ஃபோனை எடுத்து சௌந்தரை அழைத்தான்.


“சௌந்தர்..”


“சொல்லு மாமா. இப்பத்தான் சில்வியா அப்பா பேசினாரு. அவங்ககிட்ட ஆதாரம் எதுவுமே இல்லையாம்”


“அவங்க ஆதாரம் தேவையே இல்லை சௌந்தர். உங்க ஆஃபிஸ்லயே ஆதாரம் இருக்கு. கேஸ் சால்வ்ட். அந்த ஷானை அரெஸ்ட் பண்ண வாரண்ட் ரெடி பண்ணு”


“என்ன மாமா சொல்ற?”


நீங்கள் சொல்லுங்களேன், அருண் எப்படி கேஸை சால்வ் செய்தான் என்று?


“ஆமா சௌந்தர். சில்வியா வீட்டுல இருந்த பி.சி இப்ப உங்க ஆஃபிஸ்ல தானே இருக்கு?”


“ஆமா எவிடென்ஸ் ரூம்ல இருக்கு. அதுல என்ன இருக்கு?”


“நான் அந்த பெயிண்டிங்கை எங்கயோ பார்த்தேன்னு சொன்னேன்ல. அது அந்த கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பேக்ரவுண்ட்லதான். கொலை செஞ்ச ஜானோ இல்ல ஷானோ அதுல இருந்த மத்த ஃபோட்டோஸ் எல்லாம் கண்டிப்பா அழிச்சிருப்பான். ஆனா சில்வியா டெஸ்க் டாப்ல போட்டு வச்சிருக்கிற ஃபோட்டோவை விட்டிருப்பான். நீ செக் பண்ணிட்டு சொல்லு”


அன்று மாலை சௌந்தர் வந்தான்.


“என்ன சௌந்தர் என்னாச்சுன்னு அப்டேட் பண்ணவே இல்லையே?”


“நீ சொன்ன மாதிரி டெஸ்க்டாப்ல தான் இருந்திச்சி. டிஏ கிட்ட காட்டி வாரண்ட் வாங்கி ஷானை உள்ள தூக்கிப் போட்டாச்சி. இன்னைக்கு ராத்திரி பராகுவேக்கு ஃப்ளைட் ஏறியிருப்பான் படுபாவி. நல்ல வேளையா அரெஸ்ட் பண்ணிட்டோம்”


”சூப்பர்”


“அப்புறம் எங்க சீஃப் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்”


“எதுக்கு?”


“பர்சனலா தேங்க் பண்ணனும்னார். ”


(முற்றும்)