Sunday, June 21, 2009

நண்பர் சக தமிழர்களுக்கு விடுத்த மடல்

Forward மின்னஞ்சல் அனுப்புவதும், கணிணி மென்பொருள் செய்வதும் தான் computer engineer-ன் உலகம் என்றிருந்தவர் நாம்.
சாலையில் அடிபட்டவனை தூக்கவும் நேரமில்லாமல் onsite telecon attend செய்ய ஓடியவர் நாம்.
அமெரிக்க டாலரின் exchange rate-ம், IPL match-ன் latest score-ம் தான் நம் முக்கிய செய்திகள்.
computer wire-களை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு உயிர்களை பற்றி தெரிந்ததில்லை.
இப்படியெல்லாம் அவமானத்தில் குன்றிப்போயிருந்த நாம் ஒரு நாள் விழித்துக்கொன்டோம்.
உண்மை செய்திகளை தேடி தேடி படித்தோம்.
வரலாற்றிலும் விற்பன்னரானோம்.
உறவுகள் அங்கே துடிக்கையில் நாம் உள்ளம் துடித்தோம்.
அங்கே சாவு நடந்தால், இங்கே இழவு கூட்டம் போட்டோம்.
கூடி அழுதோம், பேசி களைத்தோம். வியூகம் வகுத்தோம்..
திட்டம் தீட்டினோம்..பொருள் திரட்டினோம். படை திரட்டினோம்.
அங்கே போர் நடந்தது.. இங்கே போராட்டம் நடந்தது..
இந்த நாடே நம்மை திரும்பி பார்த்தது.
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் நமக்கு பின்னரே செய்திகள் தந்தன.
அரசியல்வாதிகளும், அறிஞர்களும், பேச்சாளர்களும் நாம் கொடுத்த செய்திகளையே மேற்கோள் காட்டினர்.
படித்த, வருமானமுள்ள, துடிப்புள்ள, துணிவுள்ள, logical-thinking எல்லாம் உள்ள இளைஞர்கள் போராட தொடங்கியதை ஆளும் வர்க்கம் பயத்துடன் பார்த்தது.
துப்புதுலக்கும் நாய்களின் நுகர்விற்கு புலப்படாத ஊடகங்கள் வழியாக, சராசரி படிப்பாளிகளுக்கு கொஞ்சமும் புரியாத computer என்னும் channel-ல் நாம் செய்த பிரசாரம் உளவுத்துறையை ரொம்பவே பதறவைத்தது.

எல்லாம் கூடிவந்த நாளில் நமக்கு திடீரென்று சலித்துப்போனது ஏன்? நமது பாதையிலும், பயணத்தில் ஏன் சந்தேகம் வந்தது?
"strong action" என்று சொன்னால் நம் காதில் மட்டும் "voilent action" என்று கேட்பதேன்?
சமுதாய புரட்சியை செய்பவர்கள் செல்வாவை நினைவில் கொள்க!
ஆயுத புரட்சி செய்பவர்கள் பிரபாவை நினைவில் கொள்க!
இந்த நூற்றாண்டின் தேவை இரண்டும் கலந்த அரசியல் புரட்சி!!மெலிந்தவனை யாரும் மனிதராய் கூட மதிப்பதில்லை. நீங்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டாம், ஆனால் போராடுபவர்களை தமிழர் என்றே அடையாளப்படுத்துங்கள்.
அவர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடாதீர்.
தனித்தனி வழியில் போராடினாலும், ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம்.ஆலோசனை வழங்குவோம்..
அங்கீகாரம் கேட்டு போராடுவோம்..
துப்பாக்கியை தொடாதே என்று தான் சிங்களன் நம் கையில் சூடு போட்டான். தூக்கியவனை எல்லாம் தூக்கில் போட்டான். அதற்கு நாம் படிந்து பலம் வாய்ந்த முறைகளை ஏன் கைவிட வேண்டும்? நாம் ஏன் பயந்து ஓடி ஒளிய வேண்டும்? ஒரு அணியில் நின்று போராடுவோம். நாம் துப்பாக்கி ஏந்த வேண்டாம்.. ஆனால் என் தம்பி நியாயத்திற்கு தான் போராடுகிறான் என்று உலகுக்கு சொல்லுவோம்.என் தம்பி நல்லவன், அவன் சொல்லுவதை கேளுங்கள் பிறகு நான் அவனை துப்பாக்கியை கீழே போட சொல்லுகிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.அதே நேரத்தில் "எக்காரணம் கொண்டும் அவனை நான் தடுக்கவோ, வெறுக்கவோ மாட்டேன்" என்று சொல்லுங்கள்.. அதுவே போதும்.எங்கேயும் ஓடி போகாதீர்.. எல்லா பக்கமும் எதிரிகள் தான்!!

அன்புடன்,சூரியா

Sunday, May 24, 2009

தோள் கொடு தோழா

தமிழீழத் தலைவர் உயிரோடிருக்கிறாரோ இல்லையோ, அவர் ஈழத்தில் இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவரும் அவரது தளபதிகளும் களமாடிய போதே தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் இப்போது என்ன செய்யும் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை. தொப்புள் கோடி உறவுகளாகிய நம் உதவியும் ஆறுதலும் முன்பு எப்போதையும் விட இப்போது தான் ஈழத்தமிழர்களுக்கு தேவை. இவ்வளவு நாள் ராஜீவ் காந்தியைக் கொன்றதற்கு பழி தீர்த்து பாவம் தேடிக் கொண்டோம். இனியாவது ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராடுவோம்.

நடந்து முடிந்த "தீவிரவாதத்துக்கு" எதிரான இந்த போரில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் பலி ஆகியுள்ளனர். இந்த போரில் நடந்த மனித உரிமை மீறலை விசாரணை செய்ய ஐரோப்பிய நாடுகள் செய்யும் முயற்சிக்கு தடை போட இலங்கை அரசு முயன்று வருகிறது.

முதலில் மக்கள் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் புலிகளே என்று இராணுவம் சொல்லி வந்தது. பின் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியேறும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்வதாக தெரிவித்தது. இந்த இரண்டு செய்திகளில் எது உண்மையாக இருந்தாலும் எதற்காக ஐ.நா வின் முயற்சிக்கு தடை போட வேண்டும்? உன் முதுகில் அழுக்கு இல்லை என்றால் எதற்காக கவலை படுகிறாய்? வந்து பார் என்று சொல்ல வேண்டியது தானே?

இலங்கை அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது. ஆயுதம் வழங்கினார்கள், தொழில் நுட்பம் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பின் ஆள் பலமும் வழங்கினார்கள். அதை எல்லாம் பொறுத்து போனோம். இப்போது இந்த விசாரணையை தடுக்க கூடவா உதவி புரிய வேண்டும்?

நாம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வோட்டு போட்டதன் மூலம் நம் கைகளில் தேர்தல் மைக்கு பதிலாக ஈழத் தமிழர்களின் ரத்தத்தை வைத்துக் கொண்டோம். அந்த கரையை இப்போது வடுவாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.. கரையை போக்கி விடலாம் நண்பர்களே. வடு மாறாது.

முத்தமிழ் அறிஞர் "தமிழின காவலன்" கலைஞருக்கு இப்போது அவர் கட்சி எம்.பி களுக்கு மந்திரி பதவி வாங்கி தரும் "பாரிய" கடமை இருக்கிறது. அதை முடித்த பிறகாவது ஈழத்தமிழனைப் பற்றி சிந்திப்பாரா தெரியவில்லை? அனைவரும் போன பின்னால் இரங்கற்பா எழுதி புண்ணியமில்லை தலைவரே.

பல வலை மனைகளில் ஈழத் தமிழர் பற்றி வரும் செய்திகளுக்கு மனம் புண்படும்படி பின்னூட்டம் போடும் தோழர்களே. அழுகின்ற மனிதனுக்கு தோள் கொடுங்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். எங்களைக் காப்பாற்று என்று வரும் மனிதனிடம் நியாய அநியாயம் பேசுவதால் அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.