Monday, February 7, 2011

என் பேரை மாத்த நீ யாரு மேன்?

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர் பலருக்கு இருக்கும் ஒரு சொல்லவொணாத் துயரம் பெயரை உச்சரிக்கச் சிரமப்படும் வெளிநாட்டினர். ரவியை ராவி என்றும், ஹரியை ஹேரி என்றும் கூசாமல் உச்சரிப்பார்கள்.

இதில் நம் ஆட்களையும் சொல்லவேண்டும். தன் அப்பா அம்மா வைத்த ஒரு பெயரைக் கொலை செய்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் திருஞானசம்மந்தம் என்ற அருமையான பெயரை திரு என்று சுருக்கி அழைக்க வைக்கக் கூட முயற்சிக்காமல் க்ரிஸ் என்று அழைத்தாலும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

என் நண்பர் ஒருவர் அவர் மகனின் விக்னேஷ் என்ற பெயரை vignesh என்று ஸ்பெல்லாமல் viknesh என்று ஸ்பெல்லியிருந்தார். ந்யூமராலஜியா என்று கேட்டதற்கு, இல்லை, இங்கெ பெயரைச் சுருக்கி அழைப்பது இவர்களின் வழக்கம். vig என்று அழைத்தால் நன்றாக இருக்காது, vik என்று அழைத்தால் பரவாயில்லை அல்லவா, அதான் என்றார். இன்னொரு குடும்பம் ஸ்ரீஹரி என்ற பெயரை பையனே ஸ்ரீஹாரி என்று சொல்லவும், ரிதன்யா என்ற பெயரைப் பெண்ணே ரிடான்யா என்று சொல்லவும் பழக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

நானெல்லாம் என் பெயரை சொல்லத் திணரும் போது பத்து நிமிடம் செலவழித்தாவது தினேஷ் என்று சொல்லவைத்துவிடுவேன். ஓரிருவர் உன்னை டின் என்று அழைக்கலாமா என்று கேட்கும்போதும் இல்லை தினேஷ் என்றே அழையுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர். அவர் பெயர் விஜயஹரன். புதிதாகச் சேர்ந்த அவரது மேனேஜர் ஒரு வெள்ளைக்காரன். அவன் பெயர் ஜான். அவன் இவரது பெயரை அழைக்க சிரமப் பட்டுக் கொண்டு “ஐ ஏம் கோயிங் டு ரீனேம் யு டு ஜோ டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். இவரும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.

டிஸ்கி 1: வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை என்று அறிக.

டிஸ்கி 2: இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக. 

Saturday, January 29, 2011

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.

இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.
பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா? 

சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?
இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?

அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்? 

இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது. 

மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். 

ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம். 

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).

கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம். 

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். 

இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம். 

இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம். 

இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும்.