Sunday, May 23, 2010

சவாலே சமாளி - கடைசிப் பகுதி

சம்பவத்தன்று மாலை 4:30 மணிக்கு

ப்பார்ட்மெண்டுக்கு நான்கு வீடுகள் முன்பாகவே பைக்கை நிறுத்தினான். தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை கழட்டி பைக்கின் ஹெல்மெட் ஸ்டாண்டில் பொருத்தினான். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நடையை எட்டிப் போட்டான். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்த அப்பார்ட்மெண்ட் பில்டிங்கின் கேட்டில் யாரும் இல்லாதது போல இருந்தது. இரண்டு இரண்டு எட்டாக எடுத்து வைத்து கேட்டை நெருங்கினான். கேட்டில் கை வைத்துத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான்.

“வாங்க சார்.. முரளி சார் இன்னும் வரலயே?” குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். வாட்ச்மேன் அசட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தார். இவன் முகத்தில் பதட்டத்தில் சட்டென்று வியர்த்தது.

“இல்ல... தெரியும்..” வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தன.

வாட்ச்மேன் அவன் வாயில் வார்த்தைகள் வந்து விழக் காத்திருப்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் நெற்றி சுருங்கக் காட்டினார்.

“ஒரு சின்ன வேலை இருக்கு. அதான் வந்தேன்” என்று சமாளித்து விட்டு கட்டிடத்தின் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான்.

********************************************

முரளியின் அப்பார்ட்மெண்ட் ஒரு பேச்சிலரின் அப்பார்ட்மெண்ட் போல இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது. தரையெல்லாம் வெள்ளை மார்பிள் மின்னியது. ஹாலில் அளவாக மூன்று பேர் உக்காரக்கூடிய ஒரு சோஃபாவும் அதற்கு சைடில் ஒரு ஆள் உட்காரக்கூடிய சோஃபாவும் இருந்தது. நேர் எதிரே ஒரு 32 இன்ச் டிவி. சோஃபாவின் முன்னால் இருந்த டீப்பாயில் ஆனந்த விகடனும் குமுதமும் இருந்தது. பெட் ரூமில் ஒரு டபுள் பெட் போடப்பட்டு படுக்கை சுத்தமாக விரிக்கப்பட்டிருந்தது. பெட் ரூமில் இருந்த கப்போர்டில் உடைகள் அயர்ன் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் ஒரு ஒழுங்காய் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.

மாடுலர் கிச்சனின் தரையில் முரளி விழுந்து கிடந்த இடம் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தது. கிச்சன் மேடைக்கும் நடுவில் இருந்த ஐ-லேண்ட்க்கும் நடுவில் விழுந்திருந்த கோணம் சற்று சங்கடமான கோணமாக இருந்தது. விழுந்து கிடந்த கோணத்தை வைத்துப் பார்த்தால் கேஸ் ஸ்டவுக்கும் ஐ-லேண்டுக்கும் இடையில் நின்றிருந்த முரளியை யாரோ அவனுக்கு எதிரில் இருந்து குத்தி யிருக்கிறார்கள். கீழே விழுந்து உடனே உயிர் போயிருக்கிறது என்று ஊகிக்க முடிந்தது.

கிச்சனின் தரையில் ரத்தம் காய்ந்து போயிருந்தது. கிச்சனின் நடுவில் இருந்த மேடையின் ஓரத்தில் ஒரு சிறு ரத்தக் கறை தெரிந்தது.

“நாராயணன். இதை நோட்டிஸ் பண்ணீங்களா?”

நாராயணனும் அதைப் பார்த்தார். “இல்லை சார். தலை இடிச்ச மாதிரி இருக்கு சார். இப்பிடி நின்னு குத்துப்பட்டிருந்தா தலை ஐலேண்ட் மேல இடிச்சிருக்க வாய்ப்பே இல்லையே சார்? முந்தி ஏற்பட்டதா இருக்குமோ?”

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல தலைல அடிபட்டிருக்கானு பாருங்க” என்று அருண் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அலாரம் கிளாக் அடிக்கும் சத்தம் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்த போது கிச்சனுக்குள் இருந்துதான் கேட்டது. அதன் சத்தம் சினிமாக்களில் டைம் பாம் என்று காட்டும்போது கேட்கும் ஓசையை ஒத்திருந்தது.

“எங்கருந்து சத்தம் வருது சார்?” என்று நாராயணனும் அந்த டைம்பீஸைத் தேடத் தலைப்பட்டார். கிச்சன் மேடையின் மேலிருந்த கப்போர்டில் இருந்து அந்த சத்தம் வந்தது. கப்போர்டைத் திறந்தான் அருண். உள்ளே ஒரு சிறிய அலாரம் டைம்பீஸ் இருந்தது. மணி எட்டைக் காட்டிக்கொண்டிருந்தது.

“நாராயணன், கொலை செய்ய பயன்படுத்துன ஆயுதத்தைப் நான் பாக்கணுமே”

“ஸ்டேஷன்ல இருக்கு சார்”

“ஓக்கே நாராயணன். நாம கிளம்பலாம். இந்த டைம்பீஸை எடுத்து ஃபாரன்ஸிக் டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி கை ரேகைகளை எடுத்து வைக்கச் சொல்லுங்க” நாராயணன் கைக்குட்டையைப் போட்டு அந்த டைம்பீஸை எடுத்து பத்திரப்படுத்தினார்.

*******************************************

சம்பவத்தன்று இரவு 7:00 மணிக்கு

வன் டாஸ்மாக்கிலிருந்து வெளியே வந்தான். முகத்தில் இனம்புரியாத சந்தோசமும் பயமும் கவலையும் கலவையாகத் தெரிந்தது. பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு “ஆட்டோ” என்று சத்தம் போட்டு போய்க்கொண்டிருந்த ஆட்டோவை அழைத்தான்.

“எங்க சார் போவணும்?” ஆட்டோ டிரைவர் பதில் தேடி அவன் முகத்தைப் பார்த்தார்.

“சரவணபவன் போப்பா” பின் சீட்டில் சாய்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டான். வெளியே கடைகள் இரவை வண்ண விளக்குகள் போட்டு வரவேற்றுக்கொண்டிருந்தன. முரளி ஃபேன்ஸி ஸ்டோர் என்ற கடைப் பெயரைப் பார்த்ததும் தொண்டையில் கசந்தது. எச்சில் கூட்டி விழுங்கினான்.

ஆட்டோ சரவணபவன் வாசலில் நின்றது. திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்தாயிற்று. சரவணபவன் வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் இவனைப் பார்த்து ஒரு சல்யூட் ஒன்றைப் வைத்து விட்டு அசிங்கமாக வழிந்தார். இரண்டு கதவுகளையும் ஒரு சேரத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

ஏ.சி. ஹால் செல்லும் வழி என்ற போர்ட் மாடிப்படிகளைக்காட்டிக் கொண்டிருந்தது. படிகளை நோக்கிக் காலை வைத்தவன், ஏதோ யோசனை செய்துவிட்டு, கூட்டமாக இருந்த நான்-ஏசி ஹாலுக்குள் நுழைந்தான். சாப்பிட்டு முடித்துவிடுவார் போல இருந்த ஒருவரின் பின்னால் போய் நின்று கொண்டான்.

******************************************

ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது. நாராயணனும் அருணும் உள்ளே நுழைந்தனர். எஸ்.ஐ இவர்களுக்காகக் காத்திருந்தது போல இவர்கள் உள்ளே நுழைந்ததும் எழுந்தார்.

“என்ன முத்துவடிவு. சரவணபவன்ல விசாரிச்சீங்களா?”

“சார் சுந்தரம் ஃபோட்டோவை டிராவல்ஸ் ஆஃபீஸ்ல வாங்கிக்கிட்டு சரவணபவன் போய் விசாரிச்சேன் சார். கல்லாவுல உக்காந்திருந்த ஆள்கிட்ட ஃபோட்டோவைக் காட்டின உடனே அடையாளம் கண்டுக்கிட்டாரு சார். அன்னிக்கு சுந்தரம் மேல யாரோ காப்பியைக் கொட்டிட்டாங்கன்னு அடிச்சி கலாட்டா பண்ணிட்டானாம் சார். அங்க இருந்தது ஸ்ட்ராங் சாட்சி இருக்கு சார்”

“ஓக்கே முத்துவடிவு நீங்க போலாம். நாராயணன் அந்த கொலை செய்த கத்தி..”

“உள்ள இருக்கு சார் வாங்க” நாராயணன் நீட்டிய சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி லைட்டரைக் கிளிக்கிப் பற்ற வைத்துக்கொண்டு நாராயணனுக்கும் லைட்டரை நீட்டினான்.

“சுந்தரம் ஒருத்தனுக்குத் தான் மோட்டிவ் இருந்த மாதிரி இருந்தது. இப்போ அவனும் இல்லைன்னா வேற யாரா இருக்கும் சார்? ஒரு வேளை அந்த இன்னொரு டிரைவரா இருக்குமா?”

“இல்ல நாராயணன். இன்னொரு டிரைவரா இருக்காது. அந்த இன்னொரு டிரைவர் தான் முரளிக்கிட்ட சுந்தரத்தைப் பத்தி சொல்லியிருக்கணும். அதுனால முரளி அவரை மன்னிச்சி விட்டுருப்பான். அந்த ட்ரைவர் கொலை செய்திருக்க மோட்டிவ் இல்லை. இருந்தாலும் அவனையும் விசாரிக்க சொல்லுங்க”

மேஜையின் உள்ளிருந்து கத்தியை எடுத்துக் கொடுத்தார் நாராயணன். நல்ல வேலைப்பாடுள்ள கத்தி. ஒன்றரை அடி நீளமாவது இருக்கும். அதில் படிந்திருந்த ரத்தக்கறை 4 1/2 இன்ச் அளவிற்கு குத்தியிருக்க வேண்டும் என்று பட்டது. மேஜை மேலிருந்த க்ரைம் சீன் ஃபோட்டோக்களைப் பார்த்தான். சட்டை போடாமலிருந்த முரளியின் இதயத்தில் கத்தி குத்தப்பட்டு இருந்தது. இதயத்தில் குத்தியதால் உடனே உயிர் போய் விட்டது. வேறு எங்காவது பட்டிருந்தால் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

கத்தியின் கைப்பிடியில் சீன எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. கைப்பிடியின் முனையில் ஒரு ட்ராகனும் பாம்பும் பின்னிப் பிணைந்திருப்பது போல உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த டிராகனின் உடல் கைப்பிடி முழுவதும் பரவியிருந்தது.

டிராகனின் வாலுக்குச் சற்று கீழே வட்டமாக ஒரு புள்ளி இருந்தது. சட்டென பார்க்க அது கத்தியில் பொறிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் நன்கு உற்றுப் பார்த்தால் அது ஒரு பட்டன் போலத் தெரிந்தது.

“குச்சி மாதிரி எதாவது இருக்கா நாராயணன்?”. மேஜையின் மீதிருந்த டூத் பிக் டிஸ்பென்சரில் இருந்து ஒரு டூத் பிக் எடுத்து “இது போதுமா பாருங்க சார்”

குச்சியை வாங்கிய அருண் அந்த புள்ளியின் மீது வைத்து தள்ளினான். சிறிது உள்ளே போனதுபோல இருந்தது. ஆனால் வேறு ஒன்றும் நடக்கவில்லை.

கத்தியையே பார்த்துக்கொண்டு அந்த புள்ளியை அழுத்தி அழுத்திப் பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.

“நான் பாக்கறேன் சார்” என்று வாங்கிய நாராயணன் அந்தப் புள்ளியை அவரும் தள்ளிப்பார்த்தார். சிறிது தூரத்துக்கு மேல் அவராலும் தள்ள முடியவில்லை. கத்தியை நெட்டுக்குத்தலாக மேஜையின் மீது வைத்து இடது கையால் கைப்பிடியின் மேல் பாகத்தை அழுத்திக்கொண்டு புள்ளியை பலம் கொண்ட மட்டும் தள்ளிப் பார்த்தார். புள்ளி சிறிது உள்ளே போனதும் கத்தியின் உலோகப் பகுதி சட்டென்று கைப்பிடிக்குள் போனது. என்னவோ எதோவென்று கத்தியில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்தார் நாராயணன். கத்தி சட்டென்று எம்பிக் குதித்து மேஜையின் மீது விழுந்தது.

ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன் அந்தக் கத்தியை எடுத்த அருண் இடது கையால் கைப்பிடியைப் பிடித்து கத்தியை மேஜையின் மீது அழுத்திக்கொண்டு அந்தப் புள்ளியை அமுக்கினான். கத்தியின் பிளேட் ஸ்பிரிங் போல கைப்பிடிக்குள் போனது. ஸ்பிரிங் மிகுந்த அழுத்தத்துடன் இருந்ததால் விட்டால் பல அடிக்கு எழும்பும் போல இருந்தது.

அருணின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நாராயணனைப் பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகையை வெளியிட்டான். “நாராயணன். கேஸ் க்ளோஸ்ட். அந்த சுந்தரத்தை அள்ளிப் போட்டுட்டு வரச் சொல்லுங்க. அவன் தான் கொலைகாரன்”

**********************************
சம்பவம்

ரவணபவன் அன்று வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது. சாப்பிட வருபவர்களை டேபிளுக்கு அழைத்துச் சென்று அமர வைக்க ஆட்கள் யாரும் இல்லை. அதனால் ஒவ்வொரு டேபிளையும் நான்கு பேராவது சுற்றி “எப்படா எந்திரிப்பாய்ங்க” என்ற பார்வையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் தட்டில் இருந்த மசாலா தோசையின் கடைசி விள்ளலை மிச்சமிருந்த மசாலாவோடு வாய்க்குள் தள்ளினான். சர்வர் எதிரில் இருந்தவருக்கு பூரியையும் இவன் முன் ஒரு காப்பி டபராவையும் வைத்துவிட்டு விலகினார். சைடில் இருந்த டிஷ்யூ பேப்பரில் கையைத் துடைத்து விட்டு டம்ப்ளரில் இருந்த காப்பியை டபராவில் ஊற்றி ஆற்ற ஆரம்பித்தான்.

பின்னால் நின்றிருந்த அவன் கழுத்தில் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். ‘அப்பாடா. காப்பி வந்திருச்சி. குடிச்சிட்டு எந்திருச்சிருவாப்ல’ என்று நினைத்துக்கொண்டு கர்சீப்பை சுருட்டி மீண்டும் காலருக்கு கழுத்துக்கும் இடையில் சொருகி வைத்துக் கொண்டான்.

இடது கக்கத்தில் இருந்த பையை வலது கக்கத்துக்கு மாற்றிக் கொண்டு தாடையச் சொறிந்து கொண்டான்.

அவன் கிச்சனில் இருந்து பனிரெண்டாம் நம்பர் டேபிளில் ஆர்டர் செய்திருந்த பொங்கலையும் வடையையும் பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு கிளம்பினான். கூட்டத்தைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. ஓரமாகவும் நிற்க மாட்டார்கள். சர்வரும் மனுசன் தான் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. கேவலமாகப் பார்க்கிறார்கள். அடிமையைப் போல நடத்துகிறார்கள். நல்ல ஒரு வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

எதை எதையோ யோசித்துக்கொண்டே நடந்தவன் அங்கே நின்றுகொண்டிருந்தவன் மீது இடித்தான்.

பெரிய தட்டைக் கையில் கொண்டு போன அந்த சர்வர் இடித்ததும் நிலைகொள்ளாமல் முன்னால் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தன் மீது தடுமாறி விழுந்தான். அவன் கக்கத்தில் இருந்த கைப்பை தவறி முன்னால் இருந்தவன் மீது விழுந்தது.

திடீரென்று மேலே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியில் கையில் இருந்த காப்பி டம்ப்ளரை நழுவ விட்டான். காபி மொத்தமும் மடியில் கொட்டியது. சட்டென்று கோபம் வர எழுந்து மேலே வந்து விழுந்தவனை இடது கையால் ஒதுக்கி வலது கையால் அவன் கன்னத்தில் பலமாக ஒரு அறை விட்டான். “ஏண்டா ஒழுங்கா மனுசன சாப்புட விடமாட்டீங்க? பின்னாடியே வந்து வந்து நின்னுக்கிட்டு”

கன்னத்தில் அறை வாங்கியவன் அதிர்ச்சியில் பேச வார்த்தையின்றி இருந்தான். கன்னத்தில் கை விரல்கள் அச்சாகப் பதிந்துவிட்டிருந்தன. கீழே விழுந்த கைப்பையை எடுக்கக் கூட தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான்.

அடுத்த அடி அடிக்கக் கையை ஓங்கினான் அவன். குறுக்கில் பாய்ந்து தடுத்தான் சர்வர். “சார் அவர் மேல தப்பில்ல சார். நான் தான் சார் அவர்மேல இடிச்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்” என்று கத்திக்கொண்டே இருவருக்கும் இடையில் புகுந்தான்.

“நீ மட்டும் ஒழுங்கா?” என்று ஓங்கியக் கையை சர்வரின் முகத்தில் இறக்கினான். அவன் கையில் வைத்திருந்த பொங்கலும் வடையும் தரையில் சிதறியது. ஆட்கள் வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.

கல்லாவிலிருந்தவர் ஓடி வந்தார். “சார் சார் என்ன பிரச்சனை?”

“காப்பியத் தட்டி விட்டுட்டானுங்க. என்னான்னு கேளுங்க.” மேஜையின் மீதிருந்த டிஷ்யூவை எடுத்து சட்டையில் கொட்டியிருந்த காபியைத் துடைக்க ஆரம்பித்தான்.

“சார் நீங்க பாத்ரூம்ல போய் தண்ணி ஊத்தி க்ளீன் பண்ணுங்க சார். காப்பிக் கறை போவாது” யாரோ ஒருவர் யோசனை சொன்னார்.

அலுத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சர்வரை நோக்கித் திரும்பினார். “டேய் நீ எப்பப்பாரு இப்பிடி எதயாவது இழுத்து வச்சிக்கிட்டே இருக்க. நீ வேலை முடிஞ்சதும் முதலாளியப் போயி பாரு. இன்னியோட உன் வேலைக்கு வேட்டு வைக்கிறேன் பாரு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி நடந்தார்.

அவன் போகிறவரின் முதுகையே வெறித்தான். முதலில் அடிவாங்கியவரைப் பார்த்துத் திரும்பினான். “சார் மன்னிச்சுக்குங்க சார். நான் செஞ்சத் தப்புக்கு உங்கள அடிச்சிட்டாரு அந்த படிச்ச முட்டாள். தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க சார்”

“பரவாயில்லப்பா. மன்னிப்புக்கேக்க வேண்டிய ஆளு அங்க போயிட்டாரு. இதால உனக்கு வேலை போயிருமேன்னு நினைச்சாக் கஷ்டமா இருக்கு”

“பரவாயில்ல சார். நான் முதலாளி கையில கால்ல விழுந்து கேட்டுப் பாக்கிறேன். இல்லைன்னா வேற வேலை தேடிட்டுப் போறேன். வர்றேன் சார்” என்று கீழே கிடந்த பொங்கலையும் வடையையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

*************************************************

ப்பிடி சார் சொல்றீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் நாராயணன்.

“இந்த கத்தியைப் பாருங்க. இதோட கைப்பிடிக்குள்ள ஒரு ஹை டென்ஷன் ஸ்பிரிங் இருக்கு. கத்தியோட பிளேடை அதுக்குள்ள கஷ்டப்பட்டுத் திணிச்சி கப்போர்ட் கதவுல முட்டுக்குடுத்து வச்சிட்டா, கதவைத் திறந்ததும் ஸ்பிரிங் டென்ஷன் ரிலீஸாகி ஒரு புல்லட் மாதிரி பாயும். அப்பிடித்தான் முரளி நெஞ்சுல குத்தியிருக்கு.”

“சார் ஆனா முரளி கப்போர்டுக்கு சைட்லல்ல விழுந்து கிடந்தான்?”

“பின்னாடி விழுந்து ஐ லேண்ட் மேல இடிச்சி சைட்ல மடங்கி விழுந்திருக்கான். அதுனாலதான் அவன் ஒரு மாதிரி வித்தியாசமான ஆங்கிள்ல விழுந்து கிடந்தான்”

“இதை எப்பிடி சுந்தரம் தான் செஞ்சிருப்பான்னு சொல்றீங்க?”

“முரளி வீட்டுல இல்லாத சமயம் சுந்த்ரம் தான் முரளி வீட்டுக்குள்ள போய் கத்தியை செட் பண்ணியிருக்கான். ஒரு வேளை முரளி கதவைத் திறக்காமப் போயிரக்கூடாதுன்னு உள்ள ஒரு அலாரத்தை 8 மணிக்கு செட் பண்ணி வச்சிருக்கான். முரளி வீட்டைப் பாத்தீங்கள்ல. எல்லாத்தையும் ஒழுங்கா வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தார். அவரு எதுக்காக கிச்சன் கப்போர்டுக்குள்ள வைக்கணும் சொல்லுங்க? அப்பிடி எட்டு மணிக்கு வச்சிட்டு அலிபிக்காக சரவணபவனுக்குப் போய் சீன் கிரியேட் பண்ணியிருக்கான். குற்றப்புலனாய்வுல ஃபர்ஸ்ட் லெஸ்ஸன், டவுட் த பெர்சன் வித் எ ஸ்ட்ராங் அலிபி”

“லாஜிக் ஒர்க் அவுட்டாகுது சார்.”

“அந்த அப்பார்ட்மெண்ட் ஃப்ரண்ட் எண்ட்ரன்ஸ்ல ஒரு CC கேமிரா வச்சிருந்தாங்க. அந்தக் கேசட்டையும் வாங்கிப் பாருங்க. டைம்பீஸ்லயும் அவன் கை ரேகை இருக்க வழியிருக்கு. அதையும் பாருங்க”

“சார் ப்யூட்டிஃபுல் சார். இப்பவே அந்த சுந்தரத்தை இழுத்துப்போட்டு விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா அவனே கக்கிருவான். கேஸை நான் பாத்துக்கிறேன் சார்”

“ஓக்கே நாராயணன். நான் வித்யாதரன் சாருக்கு ஃபோன் பண்ணி விசயத்தைச் சொல்லிடுறேன். அந்த டிரைவருங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்காமப் பாத்துக்குங்க.”

“ஓக்கே சார்”

அருண் எழுந்து தன் கார் சாவியை விரலில் சுற்றிக்கொண்டே வெளியேறினான். “அடுத்த கேஸ்ல பாக்கலாம் சார்” நாராயணனின் வார்த்தைகள் அவன் முதுகில் பட்டுத் தெறித்தன.

(முற்றும்)

10 comments:

Chitra said...

“லாஜிக் ஒர்க் அவுட்டாகுது சார்.”

..... logic நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்குதுங்க... :-)

Paleo God said...

Super! நானும் முடிச்சிட்டேன்.

http://palaapattarai.blogspot.com/2010/05/2.html

vasu balaji said...

ஏன் இந்தக் கொலவெறி:))

நாடோடி said...

சவாலை சாம‌ர்த்திய‌மா எழுதி முடிச்சிட்டீங்க‌.. ந‌ல்லா இருந்த‌து.

Anonymous said...

நல்ல முயற்சி முகிலன்

க.பாலாசி said...

அய்யோ சாமீ அளவிடுங்க...

KUTTI said...

HAI MUGILAN,


THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS.

MANO

ஜெய்லானி said...

தமிழ்வாணன் கதையில வர்ர மாதிரியில்ல இருக்கு.. அசத்திட்டீங்க!!!!!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கொஞ்சம் குழம்பித் தான் போயிட்டோம் :) கடைசியா தெளிய வச்சுட்டீங்க..

சரி, அவன் அந்தப் பொண்ணு கிட்ட என்ன கேட்டான்னு கடைசியில சொல்லாம விட்டுட்டீங்களே??