Wednesday, January 20, 2010

உறவுகள் - 06

05
04
03
02
01

சுசீலா ரமேஷும் மஞ்சுவும் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். யாரோ வீட்டுக்கு வருவதைப் பற்றி ரமேஷும் மஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“யாருப்பா வர்றா?”

“சுகுமார்மா”

சுகுமார் என்று சொன்னதுமே சுசிலாவுக்கு யார் என்று தெரிந்துவிட்டது. இதில் அவர் வேறு விருதுநகர் பையனா என்று கேட்டு உறுதி செய்துகொண்டார்.

சுகுமாரும் ரமேஷும் காலேஜ் படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ். இவர்கள் இருவருக்கும் மஞ்சுவும் விஜியும் ஃப்ரண்ட்ஸ். மூவரும் இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். விஜி, மஞ்சுவை விட நல்ல பெண். இவன் விஜியைக் கூட லவ் பண்ணியிருக்கலாம். ஒரே ஜாதியாகவாவது இருந்திருக்கும். இப்படிப்போய் மஞ்சுவை லவ் பண்ணித்தொலைந்து விட்டான்.

விஜியின் அப்பா அம்மா வருகிறார்களாம். மதியம் குழம்பு நன்றாக இருந்ததால் மிஞ்சவில்லை. அதனால் இரவுக்கு சோறு வைக்காமல், ரமேஷும் மஞ்சுவும் சமைத்துக்கொள்ளும் கோதுமை தோசை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். ரமேஷ் கரைத்து வைத்த கோதுமை மாவும் போதுமான அளவுக்கு இருந்தது. ரமேஷிடமும் கேட்டு உறுதி செய்து வைத்திருந்தாள். இப்போது இன்னும் நான்கு பேர் வந்தார்களானால் அவர்களுக்கு பத்துமா தெரியாது. எதையாவது சமைக்க சொல்லிவிடுவானோ என்று நினைத்தாள். அதனால் ரமேஷிடமே கேட்டும் விட்டாள்.

“ஏம்பா ரமேஷ் அவங்க சாப்புடுற மாதிரி வருவாங்களா?”

“தெரியலைமா. அரை மணி நேரத்துல வருவோம்னு சொன்னான்”

அரை மணி நேரத்துல என்றால்? மணி பார்த்தாள். 6:00 மணி. அரை மணி நேரத்தில் வந்தால் சாப்பிடுவது போல வருவார்கள். ஆனால் வந்த பிறகு கூட ஏதாவது செய்து விடலாம். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். ஆனால் எட்டு மணி வரை அவர்கள் வரவில்லை.

எட்டு மணிக்கு வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டது. ரமேஷும் மஞ்சுவும் கதவுக்குப் போனார்கள். சிறிது நேரத்தில் சுகுமார், விஜி, விஜியின் அம்மா அப்பாவோடு வந்தார்கள்.

மரியாதைக்காக டைனிங் டேபிள் சேரிலிருந்து எழுந்து “வாங்க” என்று சொன்னாள் சுசிலா. நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ரமேஷும், சுகுமாரும் வெளியே போனார்கள்.

விஜி, விஜியின் அம்மா, மஞ்சு மூன்று பேரும் என்னவோ பேசிக் கொண்டே இருந்தார்கள். சிறிது நேரத்தில் சுகுமாரும் விஜியும் கிளம்பிப் போய் விட்டார்கள்.

ரமேஷ் “எல்லோரும் உக்காருங்க, நான் தோசை ஊத்தித் தர்றேன்” என்று சொல்லி அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை போட்டான்.

ராகவன், மஞ்சு, விஜியின் அப்பா, அம்மா நாலு பேரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். சுசிலா ரமேஷின் அருகில் நின்று கொண்டாள். அவள் தோசை சுடாலாம்தான். ஆனால் நின்று கொண்டே ஐந்து பேருக்கு சுடுவது கால் வலியோடு கஷ்டம். அதனால், ரமேஷ் சுடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ராகவன், கொஞ்ச நேரம் கழித்து, “நீயும் சாப்புடும்மா” என்று சொல்ல, சுசிலா ஒரு தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

ரமேஷ் “அம்மா நீங்க வெயிட் பண்ணுங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு தோசையை மஞ்சுவுக்கு வைத்தான்.

சுசிலா பார்த்தாள், தோசை மாவு அதிகம் இல்லை. இரண்டு பேருக்கு வருமா என்றும் தெரியவில்லை. சட்னி வேறு காலியாகிக் கொண்டே வருகிறது. இவன் இப்படி இவர்களுக்கே வைத்துக் கொண்டு வந்தால், தனக்கு இருக்குமா என்று நினைத்தாள்.

அப்போது விஜியின் அம்மா - “எனக்குப் போதும். நீங்க சாப்புடுங்க” என்று சுசிலாவைப் பார்த்து சொன்னார். மஞ்சு அதற்கு - “பரவாயில்ல. நீங்க சாப்டுங்க ஆண்ட்டி, அவங்க ரமேஷோட சேந்து சாப்புடுவாங்க” என்று சொன்னாள். “அப்படியா” கேட்ட விஜியின் அம்மா, “அப்ப நீ சாப்புடு” என்று மஞ்சுவின் தட்டில் போட்டாள்.

பார்த்த சுசிலாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. விடுவிடுவென்று படி ஏறி மேலே போனாள்.

ராகவன் சிறிது நேரம் கழித்து மேலே வந்தார். சுசிலா படுக்கையில் படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

“என்னம்மா. எதுக்கு இப்பிடி மேல வந்துட்ட? எதுக்கு அழுகுற?”

“அப்புறம் என்னங்க அந்தம்மாவே தோசைய எனக்கு குடுக்குறாங்க. இவ வேணாம்னு சொல்றா. அவன் என்னடான்னா பொண்டாட்டிக்கு தோச சுட்டு சுட்டு போடுறான். என்ன சாப்புடச் சொல்ல மாட்டேங்குறான். என்ன நினைச்சிக்கிட்டிருக்கான். எல்லாத்துக்கும் அப்புறம் சாப்புட நான் வேலைக்காரியா?”

“அப்பிடி நெனச்சிருக்க மாட்டான். அப்பிடியே நெனச்சிருந்தாலும், நீ மத்தவங்க முன்னால இப்பிடி கோவிச்சிக்கிட்டு வர்றது சரியா? அவங்க என்ன நெனப்பாங்க?”

“என்ன நெனச்சா என்ன. அவளும் அவங்களும் அப்பதெ குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருந்தாங்க என்னயப் பத்தித் தான பேசியிருப்பாங்க?”

“சரி ரமேஷ் வர்ற சத்தம் கேக்குது. அவன் வந்தா சாப்பாட்டுக்காக எந்திரிச்சி வந்தேன்னு சொல்லாத. வேற எதாவது சொல்லு?”

ரமேஷ் ஒரு தட்டில் நான்கைந்து தோசை வைத்து சட்னி ஊற்றிக் கொண்டுவந்தான்.

“ஏம்மா, தோசை மாவு கொஞ்சமா இருக்கு வந்த கெஸ்ட் சாப்டப்பறம் மிச்சமிருக்கறத நாம சாப்டுக்கலாம்னுதான நான் லேட்டா சாப்டலாம்னு சொன்னேன். நீங்க அவங்க முன்னாடி கோவிச்சிக்கிட்டு வர்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா? அவங்க என்ன நெனப்பாங்க?”

“நான் ஒன்னும் அதுக்காக வரல?”

“அப்புறம்? அவளும் விஜியோட அம்மாவும் என்னப் பத்தி எதோ குசு குசுன்னு பேசுறாங்க. என்னப் பத்தி குறை தான சொல்லிட்டு இருப்பா? ஒரு மருமகளே மாமியாரப் பத்தி தப்பா பேசுனா, அவங்க என்ன மதிப்பாங்களா?”

“அப்பிடியெல்லாம் பேசி இருக்க மாட்டாம்மா?”

“இல்ல நான் கேட்டேன். இல்லைன்னா நான் எதுக்கு கோவிக்கப் போறேன்? தோச மாவு கொஞ்சமா இருக்குன்னு எனக்குத் தெரியாதா?”

“நீங்க அதுக்குத் தான் வந்திருக்கிங்க. தோச காலியாயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு.”

“அப்பிடியெல்லாம் இல்லப்பா. உங்கம்மா அப்பிடி வருவாளா? “ ராகவன்.

“அப்பா இங்க பாருங்க. உங்கள இங்க நான் வர வழைச்சதே மஞ்சுவுக்கும் எனக்கும் இந்த டைம்ல ஹெல்ப்பா இருப்பிங்கன்னு தான். ஆனா நீங்க என்னடான்னா உங்கள கவனிக்க சொல்றீங்க. உங்களப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் நான் கூப்பிட்டுட்டு வந்தது என்னோட தப்பு”

“என்னடா நாங்க உங்கள கவனிக்கலை?”

“மஞ்சுவுக்கு என்னம்மா தர்றீங்க? நேரா நேரத்துக்கு சாப்பாடு தர்றீங்களா?”

”நான் தான் சாப்பாடு சமைக்கிரேன்ல?”

“அது மட்டும் போதுமா? ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது சாப்புட குடுக்க வேணாமா? ஜூஸோ இல்லை சூப்போ?”

ராகவன் “இங்க பாருப்பா. வேணும்னா கேக்கணும். கேட்டா போட்டுத் தருவோம்.”

“அப்பா. அவ எப்பிடி கேப்பா? உங்களுக்குத் தெரியாதா? இந்த நேரத்துல சாப்புட அப்பப்ப எதாவது குடுக்கணும்னு?”

“தெரியாதுப்பா”

“என்னம்மா இப்பிடி சொல்றீங்க? அக்கா நம்ம வீட்டுல இருந்து தான புள்ள பெத்துக்கிட்டா? அவளுக்குக் கூடவா நீங்க செய்யலை?”

“செய்யலப்பா. நாங்க என்ன சாப்டோமோ அதைத் தான் அவளுக்கும் செஞ்சோம்”

“சரி. அவளுக்கு அப்பிடி செஞ்சிட்டிங்க. மஞ்சு ரொம்ப வீக்கா இருக்குறதுனால, நீங்க அப்பப்ப எதாவது குடுங்க.”

“என்ன செய்யனும்னு சொல்லிட்டா நான் செஞ்சி குடுப்பேன்”

”சூப் வைக்கத் தெரியுமா?”

“தெரியாது.”

“சரி. நான் மொத்தமா வச்சிடுறேன். அப்பப்ப சூடு பண்ணி அவளுக்குக் குடுங்க.”

“சரி”

“இப்ப சாப்டுங்க. நீங்க கீழ வர வேணாம். நான் சமாளிச்சிக்கிறேன்.”

“சரி”

“அப்புறம். இந்த மத்தியான நேரத்துல சன் டிவி பாக்காதீங்க. அழுகாச்சி நாடகம் பாத்தா இந்த டைம்ல நல்லா இருக்காது.”

“அது தவிர எங்களுக்கு வேற பொழுது போக்கு இல்லயே?”

“கே டிவி பாருங்க”

“அதுல எப்பப்பாத்தாலும் படம் தான போடுரான். அதுவும் போட்ட படத்தையே?”

“இங்க பாருங்க. பொழுது போக்கத்தான் டிவி. பொழுதன்னிக்கும் அழுதுதீக்க இல்லை. நீங்க திருந்தலைன்னா நான் சன் டிவி-கே டிவியை டிஸ்கனெக்ட் பண்ணிடுவேன்”

தீர்க்கமாகச் சொல்லிவிட்டு கீழே போனான். அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுசிலா.

7 comments:

vasu balaji said...

சின்ன சின்ன ஊகங்கள் பெரிய பெரிய கோபங்கள்..நுணுக்கமா போகுது..குட்.

பின்னோக்கி said...

மெகா சீரியல் ரேஞ்சுக்கு டீடெய்ல சண்டைக் காட்சிய எழுதுறீங்க :). உங்க எழுத்து நடை சூப்பர்.

Anonymous said...

TV சீரியல் பாத்தே சண்டை எப்படி போடறதுன்னு தெரிஞ்சுக்கலாம். :)

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன்.. அப்புறமா பொறுமையா படிக்கிறேன்

கலகலப்ரியா said...

:( romba due vaikka vendi irukku..

Unknown said...

@வானம்பாடி - நன்றி
@பின்னோக்கி - நன்றி
@சின்ன அம்மிணி - தொழில் ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லாதீங்க
@நசரேயன் - வாங்க
@கலகலப்ரியா - தேறி வாங்க முதல்ல

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:) மெகா சீரியலே தான்.. பேரு கூட பொருத்தமா இருக்கு.. நிறைய வீட்டுல நடந்துட்டுதான் இருக்கும் இந்தக் கதை..